Tuesday, May 19, 2015

ஆன்மீகம் - வியாபரம்

நாங்கள் இருக்கும் வீட்டிற்கு அருகாமையில் அருகிருக்கும் ஒரு சிறிய மலையை பச்சை மலை என்று சொல்வார்கள். அந்த மலையை கொஞ்ச காலமாக தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளப் போவதாகவும் ஏதோ அரியவகை முதுமக்கள் தாழி போன்ற ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சான்று இருப்பதாகவும் செவி வழிச் செய்திகள் இருந்து வந்தது.
தற்போது அது உண்மையெனச் சொல்லி பல்லாவரம் ஏரியாவில் உள்ள ஒரு சில இடங்களையும் இந்த மலையையும் தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் இருப்பதாக உறுதி செய்து அதைச் சுற்றியுள்ள ஒரு கு...றிப்பிட்ட தூரத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்ட முடியாத படி கட்டுமானத்துறையில் விதிகளை புகுத்தி கண்காணித்து வருகிறார்கள்.
இது வல்ல நான் சொல்ல வந்த விஷயம்.
அந்த மலையில் திறந்த வெளியில் ஒரு எல்லை பெண் தெய்வமும் சில சுற்று தேவதை சிலைகளும் இருக்கும். மலையேறிபோனால் கேட்பாரற்று இருக்கும் அந்த இடம் ஹோ வென காற்று சூழ மிக்க அதிர்வோடும் ஒரு சூட்சுமத்தோடும் மிகவும் அமைதியாய் நமக்கு மட்டுமேயான நம் வீட்டு பெருங்கிழவி போன்று மனதோடு பேசும் வல்லமை கொண்டவள் அந்த அன்னை.

வருடத்தில் ஆடி அம்மாவாசை அன்று மட்டுமெ சாரி சாரியாக எங்கிருந்தோ மக்கள் வந்து அவளுக்கும் அந்த சுற்று தெய்வங்களுக்கும் பொங்கலிட்டு பூசை செய்வர். மற்ற நாட்களில் என் போன்ற ஏகாந்திகளிக்கும் ஒரு சில கஞ்சா சாராய பிரியர்களுக்குமானவள் அவள்.

கடந்த சிவராத்திரி அன்று ஒரு இந்து அமைப்பு அங்கு வந்து மிகப்பெரும் அளவில் பூசை ஏற்பாடு செய்தது. இப்போது சித்ரா பெளர்ணமி அன்று மிகப்பெரும் பூசை நடைபெறப்போவதாகவும் அன்று இரவு அங்கு தங்கி வழிபடுவது மிகச்சிறப்பானது என்றும் விளம்பரம் செய்து அங்கங்கே போஸ்டர் ஒட்டியுள்ளார்கள்.

அதில் இந்த தேவிக்கு ஏதோதோ பெயர் சூட்டி உலகத்திலேயே இதுவே இது போன்றதொரு முதல் தெய்வம் என்றும் இந்த பூசை காலம் காலமாக நடந்து வருவது போலவும் எழுதி அதற்கு ஒரு தக்கார் சாமியாரும் சாமியாரிணி பெயரையும் பொறுப்பாளார்கள் எனவும் விளம்பரம் செய்துள்ளனர்.
மேலும் பச்சை மலை என்ற பெயரையும் மந்தர கிரி என்று மாற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.

இது வரலாற்று உண்மையா இல்லை வணிக விளையாட்டா ஒன்றும் புரியாது என் போன்றவர்கள் என்ன ஆகுமோ என்று கவலையோடு பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

யார் கண்டார்கள் கூடியவிரைவில் கிரிவலம் கூட ஆரம்பித்தாலும் ஆரம்பித்து அதற்கும் சில நூற்றாண்டு கதைகளைச் சொல்லிவிடுவார்கள்.

No comments: