Saturday, January 15, 2011

பிரபஞ்சனின் சிறுகதைத்தொகுப்பு - ஒரு பகிர்வு

மூளையைவிட்டு அகலமறுக்கிறது அந்த இரண்டு வரிகள் அடுத்த முறை போவு்ம்போது முதல்லியே பணத்தை வாங்கிடுங்க - நிகழ் உலகத்தின் நாயகன் கிருஷ்ணமூர்த்தியைப்போலவே நம்மையும் புரட்டிப்போட்டும் வரிகள்

மிகவும் எளிமையான மனிதர்கள், பிரச்சனைகள், நிகழ்வுகள் அதைச்சுற்றி ஓடும் எண்ண ஓட்டங்கள் படிக்க நேர்ந்த 90 கதைகளிலும் விரவிக்கிடந்த விதம் விதமான உணர்வுகள் படித்து முடிந்த இத்தனை நாட்களுக்குப்பிறகும் இதை எழுத முனையும் இந்த நேரத்தில் என்னுள் எழும்பி அலையடித்துக்கொண்டேயிருக்கிறது.

மனுஷி அம்மா வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து அழுதாள், நிச்சயமாகச் செத்து போன தங்கைக்காக அல்ல அந்த அழுகை என்று முடிக்கும் போது பெண்மனதின் பல பரிணமங்களை அதை வெளிப்படுத்த அவர்கள் தேர்ந்தெடுக்கும் உத்திகளை அதைச்சுற்றி நிகழும் மாற்றங்களை அது ஏற்படுத்தும் உணர்வுகளை படம் பிடித்துக்காட்டுகிறது.

அப்பாவு கணக்கில் 35 ருபாய் - இப்படித்தான் முடியும் என்று கதையோட்டத்தை ஆரம்பத்திலேயே யூகிக்க முடிந்தாலும் கடைசியில் கதையின் நாயகன் எழுந்து நடக்க ஆரம்பித்த நேரத்தில் நம் மனதிலும் வந்து அமர்ந்து கொள்ளும் அந்த உணர்ச்சிக்கு வார்த்தைகளில்லை.

சைக்கிள் - கதையில் நம்மை மிகச்சுலபமாக தனிமனித தன்மானதிற்கும் அவரது அபிலாஷைகளுக்குமான இடைவெளியை உணரச்செய்யும் வேளையில் வெகு நேர்த்தியாக நம்மை எந்த ஒரு விளிம்புகளுக்கும் ஒட்டாது வெளித்தள்ளிவிடுகிறார்.

பொதுவில சிறு்கதைத்தொகுப்புகளை படிக்க நேர்கையில் ஏற்படும் உணர்வுக்குழப்பங்கள் இந்த முறை என்னை பீடிக்கவில்லை. எல்லாக்கதைகளும் ஒன்றோடொன்று மிக மெல்லிய சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதை போன்றதோர் உணர்வுதான் எஞ்சியது. அதன் காரணம் பெரும்பாலும் நம்மைச்சுற்றி நிகழும் பதிவுகளை எந்த ஒரு தொடர்புமற்று கண்டுகொண்டிருக்கும் வெறும் வெளிப்பார்வைகளுக்குள் ஊடுருவியிருக்கும் காண்தன்மையின் வெளிபாடாகக்கூட இருக்கலாம்.

ஒவ்வொரு கதையாக விவரிக்க இன்னும் பாக்கியுள்ள 86 கதைகளை தனித்தனியாக எழுத முயலாததற்கான காரணம் கூட இதுவாக இருக்கலாம்.

படித்துப் பாருங்கள் தவறவிடக்கூடாத தொகுப்புகளில் இதுவும் ஒன்று என்பது என் எண்ணம்.