Friday, December 25, 2020

கண்ணனும் கர்த்தரும் - யோகிகளின் வரிசை

 

கண்ணனைப் போலவே மீட்பருக்கான அனைத்து குறியீடுகளோடும் நிகழ்ந்தது ஏசுவின் பிறப்பு.

இறுக்கமானதொரு காலகட்டத்தில் கொண்டாட்டங்களை மையப் படுத்தி உருவானது கிருஷ்ணம்.

அதுபோலவே கீழ்மைகளின் எக்களிப்புகளின் நடுவே இருக்கமும், ஒழுங்கும் விடுதலையும் வேண்டுவதாக எழும்பியது இயேசு வழி வந்த கிருஸ்துவம்.

அஹம் பிரம்மாஸ்மி எனும் அத்வைத இந்துத்துவத்தின் மகா வாக்கியமும், " நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" எனும் இயேசுவின் வார்த்தைகளுக்கும் வித்யாசம் ஏதுமில்லை.

நிறம் மாறிப்போன சைவ, வைணவ, பௌத்த, சன்மார்க்க மார்க்கங்களைப் போலவே பின்னாளில் கிருஸ்துவமும் "என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்."" பிதா குமாரன் பரிசுத்த ஆவி" என மாறிப்போனது.

ஒப்புமைகளைக் கொண்டு நிறுவப்படுவதற்காக அல்ல கிருஷ்ணா,புத்தா, மஹாவீரர், வள்ளலார் எனும் முழுவதும் உணர்ந்த பிரபஞ்சத்துளியான (fully conscious universal particle) யுக புருஷர்கள் வரிசையில் ஏசுவும் ஒருவர் என்று சொல்வதற்கான பிரயத்தனங்களே இவைகள்.

இது போன்ற எந்த புரிதலுமின்றியே கல்லூரிக் காலங்களில் கிருஸ்துவத்தை மனமுவந்து உள்வாங்க முடிந்த சூழல் அமைந்தற்குப் பின்னும் சில காரணங்கள் இருக்கலாம்.



திருப்பாவையும் - திருமந்திரமும் - தூமணி மாடத்து

 

நீங்க ஐயங்காரா? இப்படி என்னிடம் கேள்வி எழும்பொழுதெல்லாம் என் பதில்   நான் ஐயர், ஆனா எங்காத்துக்காரர் ஐயங்கார். அதனால  முறைன்னு பார்த்தா ஐய்யங்கார் முறைதான் ஆனா பழக்க வழக்கத்துக்கு ரெண்டும் உண்டு என்பதே.  

இதில் நான் அடைந்த நன்மை என்னவென்றால் அத்வைதம் பேசுவதை ஆழ்ந்து புரிந்து கொண்டபின் விசிஷ்டாத்வைதம் சொல்வதின் ஆழத்திலிருக்கும் அத்வைதக் கூறுகளை மனம் தேடி  கிரஹிதுக் கொள்வது சுலபமானதாயிற்று. .

ஆதி காலத்தில் நம் பெரியவர்கள்  அத்வைதமென  சைவத்தையும், விசிஷ்டாத்வைதம்மென வைணவத்தையும் பகுத்து வைத்திருந்தாலும், இரண்டும் பேசும் தளம் ஒன்றுதான் இன்னும் சொல்லப் போனால் இரண்டுமே ஒன்றுக்குள் ஒன்றுதான்.

இந்த முன்னுரையோடு இன்றைய திருப்பாவை சொல்லும் பொருளை ஆதி வேதமான திருமந்திரத்தைக் கொண்டு புரிந்து கொள்ள முயலாலம்.  நான் தினமும் அடையும் இந்த ஆனந்தத்தை இன்று உங்களுடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

#திருமந்திரம் பாடல் எண் 2272

அஞ்சொடு நான்கும் கடந்து அகமே புக்கு
பஞ்சணி காலத்து பள்ளி துயில் நின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லியலாளோடு
நஞ்சுற நாதி நயம் செய்யுமாறே

ஐந்து எதுவென்றால், பஞ்சேந்திரியம் என்று சொல்லப்படும், மெய், வாய், கண் மூக்கு, செவி. நான்கு என்பதோ அந்தக்காரணங்களான மனம், புத்தி, சித்தம் அகங்காரம்

இந்த இரண்டும் அவரவர் செயல்கள் ஏதுமின்றி அடங்கி இருக்குமாம், எப்போது என்றால் விஞ்சையர் வேந்தன், விஞ்சை என்றால் அறிவு, அதாவது அறிவின் வேந்தனான ஆன்மா நீல ஒளியில்  (நஞ்சு என்பதற்கு நீலம் என்ற பொருளுண்டு - இதையே “நீலாங்க மேனியள் நேரிழையாள்” என்று மற்றொரு பாடலில் திருமூல தேவ நாயனார் கூறுகிறார்) ஆழ்ந்து இருக்கையில் ஆன்மாவின் சிற்சக்தியும் தொழில் படாது நின்று சீவனும் சிவமும் ஒன்றாகி நிற்கும் இன்பத்தை அடையும் என்பதாம் பொருள். 

 

சுருக்கமாகச் சொன்னால் சத் சித் ஆனந்தத்தில் மனம் சமாதி நிலை எய்தும் தருணம் பற்றிக் கூறுகிறார்.   

 

இப்போது இன்றைய திருப்பாவை சொல்லும் அத்வைதத்தை மேலே சொன்ன திருமந்திர பொருளின் அடிப்படையில் பொருத்திப் பாருங்கள்.

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கு எரியத்
      
தூமம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக் கதவம் தாள் திறவாய்
      
மாமீர் அவளை எழுப்பீரோ? உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
      
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று
      
நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய்      

 

#தூமணி – என்பதற்கு பிடரிக்கண் என்றொரு பொருள் உண்டு, அக்கண்ணிருந்தும் ஒளிரும் ஒளியே ஆன்மாவின் தூய ஒளி, அந்த ஒளியில் ஆழ்ந்து, தானிருக்கும் இடத்திலிருந்து முகிழ்ந்து வரும் நறுமணத்தைக் கூட அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு, தனது, மெய், வாய், கண், செவி மூக்கு எதுவும் தொழிற்படாது  அவள் ஊமையாகவும், செவிடாகவும், #அனந்தலாகவும், அதாவது தனது மனம், சித்தம், புத்தி, அகங்காரமான அந்தகரணங்கள் ஏதும் இயங்காத மயக்க நிலையில், #மந்திரமான பிரணவத்தில் (மந்திரப் பட்டாளோ) ஆழ்ந்து ஏமப் பெருந்துயிலில் அதாவது யோக நித்திரையில் ஆழ்ந்து இருக்கிறாளாம்.

அப்படியாக யோக நித்திரையில் ஆழ்ந்திருக்கும் வேளையில்  ஆன்மாவானத்து மாமாயன், மாதவன், வைகுந்தன் என பல நாமங்களில் உறையும் அந்த சிவத்தோடு ஒன்றி, சீவமும் சிவமும் பிரிவின்றி ஐக்கியமாகும் என்றும் அத்வைதத்தின் அடிப்படையை சொல்லும் பாடலாகவும் பொருள் கொள்ளலாம்.

 

Friday, September 21, 2018

கங்காள நாதர் - அயனீஸ்வரம் - பிரம்மதேசம்

கங்காளநாதர் சந்நிதிக்கு போயிட்டு போங்கோ” என்று உத்தரவு போலுமல்லாது செய்தியாகவுமல்லாது பிரஹன் நாயகி அம்மையின் சந்நிதி அர்ச்சகர் சொன்ன பொது எனக்கு அந்தக் குரல் தனித்து தெரிந்தது. ஏனெனில் எங்களை #அம்பாசமுத்திரத்திற்கு அருகில் இருக்கும் #பிரம்மதேசம்(#அயனீஸ்வரம்) கோவிலுக்கு அழைத்துச் சென்றவர்கள் அந்தக் கோவிலோடு குறைந்த பட்சம் 30 வருட தொடர்புள்ளவர்கள். அங்கு அருட்கொடையும் அருட்பணியும் செய்பவர்கள். அவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் அந்த சந்நிதியின் மகத்துவம் பற்றி அப்படியானால் இந்த சொல் எனக்கானது என்று எண்ணி முடிக்கும் தருணம். அந்த சந்நிதியை சென்றடைந்திருந்தோம். மூடிய அழிக்கதவுகளுக்கிடையே பிரம்மாண்டாமாகத் தெரிந்த அவரது திருமேனியை உள்வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது எவரோ அருகில் பிட்சாடனர் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். குருடன் தடவிக் கண்ட யானையாக அழிகளின் இடையே அவரை காண முயற்சித்துக் கொண்டிருக்கையில் அதே அர்ச்சகர் வந்து கதவைத்திறந்து 2 அடி தூரத்தில் கொண்டு நிறுத்தினார்.
எனக்கும் அவரது திருமேனிக்கும் இடையில் எவருமில்லாது வெளி மட்டுமே நிரம்பியிருந்த தருணம் அது.. குறைந்தபட்சம் 7 அடி உயரம் நீண்ட கைகளும் கால்களும். பீடம் ஏதுமின்றி தேர்ந்த வேடுவனைப் போல் நிற்கிறார். இடது கையில் கங்காளம் எனப்படும் உடுக்கை போன்றதொரு வாத்தியம், வலது கையில் எலும்பைப் போன்றதொரு தண்டம். இடைக்கால் பூமியில் அழுந்தப் பதிந்திருக்க வலக்கால் சற்றே வளைந்து நடந்து செல்வதைப் போன்ற தோற்றம். மலரும் பிறையும், சர்ப்பமும் சூடிய ஜடா மகுடம். பெருக்கிய காதுகளில் ஒரு காதில் மிகப்பெரிய குண்டலம். இடையில் புலிக்கச்சையாக இருக்கலாம் வஸ்திரம் தரித்திருந்ததால் தெரியவில்லை. புன்னகையும், கருணையும், அருளும் ததும்பும் கண்களை உடைய திருமுகம். நான்கு கரங்களில் பின்னிரு கரங்களில் ஒரு கையில் பாணமும் மறுகையில் முத்திரையும்.
அவரைச் சுற்றி இசைக்கருவிகளோடு அவரது முழங்கால் உயரத்திற்கு 5 பூத கணங்களின் நின்ற திருக்கோலம். உச்சிக்கு மேலே சுவற்றில் புடைப்புச் சிற்பமாக இந்திராதி தேவர்கள், விஷ்ணு, ரிஷி புங்கவர்கள், கின்னரர், கிம்புருடர், குதிரை, யானை, அப்சரஸ்கள் இதில் சில அப்ஸ்ரச்களின் உருவங்கள் சுதை சிற்பமாக செய்யப்பட்டு வஸ்திரமும் வர்ண கலாபமும் கொண்டு அழகு செய்யபட்டவை மிகவும் பழமையானவை.
அந்த இடத்தில் நிற்க நிற்க சந்நதியின் வெம்மையும் அவரின் ஆகர்ஷ்ணமும் நம்மை இழுக்க நம்முள் கங்காளத்தின் ஒலி இயல்பாக கேட்கத்துவங்குகிறது. உடலும் உயிரும் ஒரு புள்ளியில் சேர சில கணங்களில் நாம் அந்த சிவ கணங்களில் ஒன்றென மெய்மறந்து போகிறோம் என்பதே உண்மை.
கண்டு வந்து இத்தனை நாட்களாகியும் அப்படியே கண்ணுள் நிற்கும் அந்தக் காட்சியை என்னவென்று சொல்ல. பொதுவாக இந்த தருணங்களில் புகைப்படம் எடுக்கத் தோன்றுவதே இல்லை. இணையத்தில் எங்காவது இருக்கும் தேடிக்கொள்ளலாம் என்று வந்து விட்டேன். அதன்படி இணையத்தில் கிடைத்த சில படங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.
மற்றபடி கோவிலின் அம்மையும் அப்பனும் அத்தனை அழகு. அம்மையைக் காண்கையில் எங்கள் ஊர் அம்மன் #ஆத்தூர்சோமசுந்தரியைக் .கண்டது போல் இருந்தது. நெல்லை காந்திமதியை ஒத்த உயரம். மடிசார் உடுத்திய பாங்கில் அருள் பொழிகையில் எங்கள் ஊருக்குச் சென்று வந்த உணர்வு கிடைத்தது. அழகிய வேலைப்பட்டுகள் அமைந்த மிகப் பெரிய இரண்டு மண்டபங்கள் என்று கோவிலின் பிரம்மாண்டத்தைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.
திருநெல்வேலியைச் சுற்றியுள்ள நவகைலாய கோவில்களில் முதன்மையாக #சூர்ய_ஸ்தலமாக இதுவே விளங்குகிறது என்பதுதான் உண்மை. ஆனால் தற்போது மக்கள் பாபநாசம் கோவிலையும் சூர்யஸ்தலமாக வணங்கி வருகிறார்கள்.
நான் தேடி அறிந்து கொண்டவரை #கங்காளநாதருக்கும்#பிட்சாடனருக்கும் கிழே கண்ட வித்தியாசங்கள் உள்ளது. நினைத்த மாத்திரத்தில் உள்ளே ஆழ அமிழ்த்தும் கங்காளரை வாழ்வில் ஒருமுறையாவது கண்டு மீள வேண்டும்.


 

Sunday, February 25, 2018

எண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3

கடந்த பதிவில் தன்னை கட்டுப்படுத்தும், அல்லது தன்னை அச்சம் கொள்ள வைக்கும் சக்தியை மீறும் பொருட்டே மனிதனது அறிவு சார் பயணம் துவங்கியது என்பதைக் குறித்து பேசியிருந்தோம்.
ஒன்றை கையாளும் பொருட்டு நாம் கற்றுக் கொள்ளும் அறிவு வளர்ச்சியானது பின் அதை ஆளும் எண்ணத்தைத் தருகிறது. அங்கு நாம் உணர்ந்து கொள்ளத் தவறும் ஒரு சிறு புள்ளி ஒன்றுள்ளது, அது அதை கையாளக் கற்றுக் கொள்கையில் நாம் நம் அறிவுக்கு புலப் படக்கூடிய அதன் பரிமாணத்தையே அணுகுகிறோம். அதை நோக்கி அதைக் கையாளும் பொருட்டு, அல்லது ஆளும் பொருட்டு நமது பரிணாமத்தை வளர்த்துக் கொள்கிறோம். மேலும் அதன் பன்முகத் தன்மையை நாம் அறியும் தோறும் அது விரிந்து கொண்டே செல்கிறது.
எடுத்துக் காட்டாக மீண்டும் இங்கு நெருப்பையே பேசு பொருளாகக் கொள்ளலாம். முதலில் சிக்கி முக்கி கற்களின் மூலம் ஒளியை உருவாக்கப் பயன்பட்ட நெருப்பானது இன்று உலகின் அதி முக்கியமான எனர்ஜி சோர்சாக அதாவது சக்தியின் மூலக் கூறாகத் திகழ்கிறது. நெருப்பின் தன்மைகளையும் அதன் ஆக்கக் கூறுகளையும் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது மிக நுண்ணிய இம்மூலக் கூறுகளை மேலும் மேலும் பகுப்பதன் மூலம் அதன் ஆற்றலை பல்வேறு விதமாக பிரித்தும் சேர்ந்தும் புதிய விஷயங்களை நாம் அடைந்து கொண்டேயிருக்கிறோம்.
அதாவது அதன் பரிமாணங்களை நாம் பல்வேறு ஆராய்ச்சியின் மூலம் அறிந்து கொள்கிறோம். இன்னும் எத்தனை தூரம் இதை விரிக்க முடியும் என்ற கேள்விக்கு நாம் இன்னமும் எத்தனை தூரம் நம் பரிணாமங்களை பெருக்கிக் கொள்கிறோமோ அத்தனை தூரம் என்பது தானே பதிலாக இருக்க முடியும்.
இதில் பிரம்மாண்டம் என்பது விரிந்து கொண்டே செல்லும் நம் அறிவா இல்லை அந்த அறிவைக் கொண்டு அறியும் தோறும் விளங்கும் அந்த அறிபடு பொருளின் பரிமானங்களா??
எந்த அறிபடு பொருளின் தன்மைகள் குறித்த நம்பிக்கைகளை மறுத்து நாம் நம் அறிவை வளர்த்துக் கொள்கிறோமோ அதை நிராகரிப்பதா?? இல்லை நம் அறியும் திறனை நிராகரிப்பதா?? இரண்டுமே சாத்தியமா? இல்லை இரண்டில் எதுவுமே சாத்தியமில்லையா?
இதை பற்றி மேலும் பேச நாம் பல நூற்றாண்டுகள் பின்னே செல்ல வேண்டியிருக்கலாம்.. லாமா???

எண்ண அலைகள்- ஆன்ம அரசியல் - - 2

இறை சார்பு, மறுப்பு இந்த இரண்டில் எது சரி, தவறு, இல்லை இரண்டுமே தவறா என்று விவாதிப்பதற்கு முன்பு நம்முடைய பரிணாம வளர்ச்சி உடல் மற்றும் மனம் சார்ந்து இத்தனை காலங்களாக எதன் அடிப்படையில் நடை பெற்றுள்ளது என்பதைக் குறித்த ஒரு பார்வை அவசியம். ஏனென்றால் இன்றைய கட்டமைப்பின் அடித்தளம் அது.
ஒரு வசதி படைத்த பெரும் தொழிலதிபரின் வாரிசுக்கு தன்னுடைய குடும்ப தொழிலை தொடரவோ அல்லது புதியதாக தொழில் தொடங்கவோ இயல்வது எளிதானது. ஏனெனில் அவர் வளர்ந்து வந்த சூழல் அவருக்கு அந்த பொருளாதார, அறிவு சார் பின்புலன்களை அமைத்து கொடுத்துவிட்டது.
அதாவது நாம் கட்டிடத்தின் தரை தளத்தில் இருந்து கொண்டு மேல் மாடியை எவ்வாறு கட்டுவது என்று யோசிப்பது எப்படியோ அப்படி. ஏனெனில் அந்த தரை தளத்திற்கான அடிக்கல் மிகவும் ஆரோக்கியமாக அமைக்கப் பட்டு விட்டது. இதற்கு மேல் நாம் எப்படி வேண்டுமானாலும் திட்டமிட்டுக் கொள்ளலாம்.
அது போல மனித வாழ்வின் பரிணாம வளர்ச்சி சில நூறு வருடங்களுக்கு முன்பு வரை ஏதோ ஒரு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே நிகழ்ந்துள்ளது. அது இயற்கையாக இருக்கலாம், கடவுள் எனும் உணர்வாக இருக்கலாம், ஆனாலும் தனக்கு புறம்பான ஒரு பெரும் சக்தி குறித்த எண்ணமே அதற்கு அடிப்படையாக அமைந்திருந்தது. அதுவே மனித மனங்களின் கீழ்மைகளில் இருந்து பாதுகாக்கும் ஒரு தடுப்பாக அமைந்தது. ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் தீமையில் இருந்து மக்கள் நன்மையை நோக்கி பயணிக்க, தன்னுடைய உள்ளார்ந்த நல்ல குணங்களை பெருக்கிக் கொள்ள இந்த கட்டமைப்பு பயன் பட்டது.
இன்னமும் சொல்லப் போனால் இந்த சக்தியை மீறும் பொருட்டே தனது அறிவுப் பயணத்தைக் கூடத் துவக்கினான். நெருப்பைக் கையாள்வதின் மூலம் நெருப்பு குறித்த அச்சத்தில் இருந்து வெளி வர முயன்றான். இது போலவே நமது ஒவ்வொரு அறிவு சார் பரிணாமத்துக்கான அடிப்படையும் தனக்கு அப்பாற்பட்ட அந்த பெரும் சக்தி குறித்தான விழிப்புணர்வும் அச்சமுமே காரணம்.
அவ்வாறான ஒரு அடிப்படையாக திகழும் ஒன்றை முற்றிலும் எவ்வாறு நிராகரிக்க முடியும், கட்டிடத்தின் தரை தளத்தில் நின்று கொண்டு அதற்கான அஸ்திவாரத்தை நிராகரிப்பது போலாகாதா.
அப்படியானால் அந்த அஸ்திவாரத்தின் அடிப்படையில்தான் நாம் மேற்கொண்டு சென்றாக வேண்டுமா???
இன்னும் யோசிக்கலாம்.

எண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 1

பொதுவாக இன்றைய உலகில் நாம் இரண்டு அடிப்படைகளுக்குள் ஆட்பட்டு விடுகிறோம். அது ஆத்திகம், நாத்திகம்.
ஆத்தீகம் என்பது இறை நம்பிக்கையை அடிப்படையாகவும், நாத்தீகம் என்பதை இறை மறுப்பு கொள்கையை அடிப்படையாகவும் கொண்டு நாம் கையாள்கிறோம்.
ஆத்திகம் பற்றி பேசுகையில் கடவுள் எனும் தன்மையின் முழு அதிகாரத்தையும், ஆளுமையையும் ஒப்புக் கொண்டு இயங்க முற்படுகிறோம்.
நாத்திகத்தைப் பற்றிப் பேசும் பொழுது இங்கு கடவுள் எனும் தன்மையை முழுவதுமாக புறக்கணித்து விட்டு நமது அறிவுசார்ந்தும், சிந்தனா வாதத்தின், அடிப்படையிலும் விஷயங்களை புரிந்து கொள்ள அல்லது செயல்படுத்த முனைகிறோம்.
இரண்டுமே சரியா, இல்லை இரண்டுமே தவறா, மாற்றுப் பார்வை என்ன?? இதன் பல்வேறு கோணங்கள் என்ன?? என்பதைப் பற்றி ஆராய வேண்டியது இன்றைய கால கட்டத்தின் மிக முக்கியமான அடிப்படை தேவை.
இதைப் பற்றி மேலும் பேசுவோம்

ஆசீவகம் - ஆதி தமிழரின் தொன்ம மெய்யியல் - வெண்காயபர் - ஆசீவக சித்தர்

சாலை ஓரத்தில்  கண்ட காட்சியால் காலுக்கு ப்ரேக் போட வேண்டி வந்தது. அது “மாறுகால் தலை” சமணர் சின்னம் என்ற வழி காட்டியபடி நின்றிருந்த அறிவுப்பலகை. பக்கத்து பெட்டிக்கடையில் கேட்டதில் 13 கிலோ மீட்டர் உள்ளே செல்ல வேண்டும் என்று சொல்ல ஸ்ரீயிடம் 10 கிலோ மீட்டர் தானாம் ரோடு நன்றாக இருக்குமாம். என்று எக்ஸ்ட்ரா பிட் போட சரி என்று கிளம்பி வயல்காடுகளின் நடுவே செல்லத்துவங்கினோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித வாடையே இல்லை. எங்கோ ஓர் இடத்தில் ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருக்க கேட்டதும் இப்படி போங்க சீவலப் பேரி வரும் அங்கபோய் மலக்கோவில்னு கேளுங்க சொல்லுவாங்கன்னு சொல்ல. மேலும் பயணித்தோம்.
இதற்கிடையில் நான் நெட்டில் அது என்ன இடம் என்று தேட ஆர்வம் அதிகம் பற்றிக் கொண்டது ஏனெனில் அது சமணருக்கும் முன்னறேயான ஆசீவகம் என்னும் தொல் மரபு சார்ந்த மதத்தின் மிக முக்கியமான மூவரில் ஒருவரான “வெண் காயபர்” வாழ்ந்து மறைந்த இடம். வாழ்வியல் முறையில் சமணருக்கு ஒத்து இருப்பதால் சமணப் படுகை என்றே அழைக்கப் படுகிறது.











யார் இவர்கள் இவர்களுக்கு என்ன பெயர்.. தேடத் தேட நம் மெய்யியல் மரபின் ஆணிவேரைச் சென்று சேர்க்கிறது தகவல்கள்.
இப்பொழுது இது எவ்வாறு உள்ளது? அதன் பரிமாணங்கள் எவ்வாறு வளர்ந்துள்ளது பார்க்க பார்க்க கண்ணைக் கட்டுகிறதுமலையடிவாரம் சென்றதும் விதம் விதமான கிராம தேவதைகளின் சந்நிதிகள்
அங்கிருந்த சிவனனைந்த பெருமாள் சந்நிதியில் இருந்த பெரியவரிடம் சமணர் படுகை எங்கே என்று கேட்க அதா... பின்னா....ஆ...டி இருக்கு இடக்க திரும்பி மலைக்குப் பின்னாடி போனா வரும் என்று சொல்ல அட எப்படி போவது என்று ஒரு நிமிஷம் குழப்பம் வந்ததும். பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது ஆள் பக்கத்துல தான் மேடம் போகலாம் என்று சொல்லவும் லபக் என்று தாவிப் பிடித்துக் கொண்டேன். கொஞ்சம் கூட்டிடுப் போகறீங்களா என்று கேட்க சரி என்று தலை ஆட்டிவிட்டு கூட வர பின்னாடி யார் வருகிறார்கள் என்று கூட பார்க்காது நான் உடன் நடந்தேன். தலையெழுத்தே என்று நவீன் தொடர ஸ்ரீ யும் நித்தாவும் தயங்கி தயங்கி கிளம்பினார்கள்.
கரடுமுரடான மலைப்பாதையில் நடக்க அவர் பேசிக் கொண்டே போனார். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் நம்மால் உள்ளே செல்ல முடியும் பார்க்கலாம். என்பதைத் தாண்டி மேலதிக விபரங்கள் இல்லை. பங்குனி உத்திரத்திற்கு அந்த கோவிலில் விசேஷம் அதிக மக்கள் வருவார்கள். மேல உள்ள சாமி சைவம், ஆனா கீழ உள்ள சாமி, சிவனனைந்த பெருமாள் நீங்கலாக மற்ற அனைவரும் அசைவ சாமி. அவங்களுக்கு அசைவம் படைக்கலாம் அதனால மேல போய் பூலுடையார் சாஸ்தாவைப் பார்த்துட்டு வந்து கீழ வந்து படையல் போடுவாங்க.
இத்தனை விஷயம் பேசிக்கொண்டே நடக்க அந்த இடம் வந்தது. பார்வைக்கு ஒரு பெரும் பாறை அதனடியில் ஓராள் உயரத்திற்கு ஒதுங்கக் கூடிய அளவுக்கு இடம் அதனடியில் ஐந்து சமணர் படுக்கை, கூடவே ஒரு முடியாத நிலையில் ஒரு படுக்கை.
அத்தனை இடங்களிலும் ஒராள் அகலத்திற்கு உயரத்திற்கு ஒரு சின்ன பள்ளம், தலை மாட்டில் கொஞ்சம் உயரமாக சின்னதாக செதுக்கப்பட்ட தலையணை போன்ற அமைப்பு. கூடவே இடமெங்கும் கோலம் போன்ற கோடுகள், கட்டங்கள், அதை சித்திரம் என்றோ, அல்லது அல்லது சக்கரம் என்றோ வகைப் படுத்த முடியாத கோடுகள். அவர்கள் காலத்தில் ஏற்படுத்தியதா இல்லை பின்னாளில் ஆடு மேய்க்கும் ஆட்கள் வரைந்து ஆடுபுலி கட்டம் விளையாடியாத என்று தெரியவில்லை. ஆனால் அங்கிருந்த பழமையான மற்ற எழுத்துக்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பழமை வாய்ந்தது என்றே தோன்றியது. ஆனால் அதைக் குறித்த குறிப்புகள் ஏதுமில்லை.
பாறையின் மேலே “வெண் காசிபன் கொடுப்பித்த கஞ்ச்சனம்” என்று பிரம்மி எழுத்துக்களாலும், “சுவாமி அழகிய அம” என்று எட்டாம் நூற்றாண்டு தமிழ் எழுத்துக்களிலும் எழுதிள்ளதாக மட்டுமே தொல்லியல் துறை குறிப்புகள் சொல்கிறது.
அந்த பாறையின் கீழ் உள்ள இடம் சிறிதாக இருந்தாலும் மழை நீர் அங்கு விழாதவாறு குடையின் அமைப்பில் அந்தப் பாறை சிறிதே செதுக்கப் பட்டிருப்பதைக் காண முடிந்தது. பார்க்கப் பார்க்க வியப்பு மேலிட்டது.
சுட்டெரிக்கும் வெயிலையும் தாண்டி அங்கு அமர்ந்து தியானிக்க மனம் சொல்ல கண்மூடி அமர தலையில் வெள்ளை ஒற்றை ஆடையோடு வெள்ளை வெட்டி சகிதம் ஒரு பெரிசு பக்கத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த உணர்வு. உள்ளே உள்ளே என அமிழ்த்தியது. அது மிகையுணர்வு அல்ல என்பது தெள்ளத் தெளிவான உணர்தல்.
எங்களை அழைத்து வந்த ஆளும் சிவனே என்று காத்திருக்கக் கண்டு நவீன் மெல்ல தோள் தொட்டு போலாமா என்று கேட்க மீண்டும் மலை அடிவாரத்துக்கு வந்தோம்.