வார்த்தையெனும் வடிவங்களுக்குள் அடைக்கமுடியாத உணர்வுகளை எந்தப்பெயரிட்டு அழைப்பது அழைத்தும் தான் என்ன பயன்? வார்த்தைகளை நேசிப்பதைக்காட்டிலும் சுவாசிப்பது அதீத சுவாரஸ்யமானது. அதிக கவனமெடுத்து அச்சுக்கோர்த்து பல வித வர்ணங்களுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் அச்சிட்ட புத்தகங்களைக்காண நேரும் போது கூட வார்த்தைகளின் தோரணமென்று எண்ணும் போது எண்ணங்களில் வர்ணம் கூடுகிறது. திறந்து கிடக்கும் புத்தகத்தை காண நேர்கையில் சிறு குழந்தையின் கைவழியே இறைந்து கிடக்கும் அரிசிப்பொறியென மடியெங்கும் சிதறிக்கிடக்கின்றன வார்த்தைகள்
உறவுகளின் தொடர்ச்சியாய் எவரேனும் உரையாடலைத்தொடரும் வேளையில் அவர்களின் நாவினின்று வரும் மொழியில் வார்த்தைகளே எஞ்சி நிற்கின்றன. வாக்கியங்களின் பின்னிருக்கும் செய்திகளைக்காட்டிலும் அதினுள்ளிருக்கும் வார்த்தைகளே கையிலிருந்து உருண்டு செல்லும் கண்ணாடிக்குண்டுகளென உள்ளெங்கும் வழிந்து உருண்டு செல்கிறது. முதல் கேள்விக்கான பதில்களை அவர்களின் மூன்றாவது கேள்வியின் போது மட்டுமே கூட்டுச்சேர்க்க முடிகிறது. அப்போதும் அந்த வார்த்தைகளின் வசீகரங்களில் அமிழ்ந்து தொலைந்து மீண்டு வரும் வேளையில் உரையாடலின் சங்கிலி அறுந்து போயிருக்கும். எதிராளியின் பார்வையில் நானொரு ஊமையாகவோ இல்லை கவனமற்றவளாகவோ இல்லை செவியற்றவளாக உருக்கொண்டிருக்கும் வேளையில் நான் வெளித்தள்ள வேண்டிய வார்த்தைகளை பூக்களைத்தொடுப்பது போல தொடுத்து மெதுவாக உச்சரிக்கத்துவங்குவேன். சில சமயம் வார்த்தைகளின் கனம் தாங்க முடியாமல் மிக மெதுவாகவோ அல்லது வேகமாகவோ உதிர்க்கத்துவங்குகையில் பொங்கும் பிரிவாற்றாமையின் துக்கம் தாங்க முடியாததாயுள்ளது.
ஒரு வாக்கியத்தில் தனித்தனியே நின்று உறவாடும் வார்த்தைகளுக்குண்டான வாசனை எந்த ஒரு முழுமையான வாக்கியத்திற்கும் இல்லாமல் போகிறது.
ஒரே வாக்கியதின் சில வார்த்தைகள் அணுக்கமாகவும் சில வார்த்தைகள் விலகியும் செல்ல நேர்கையில் விலகும் வார்த்தைகளை துரத்திப்பிடிப்பதிலுண்டான ஆனந்தத்தில் எதிராளியின் மனதில் நான் என்னவாவேன் என்று கூட எண்ணத்தோன்றுவதில்லை.
எதையேனும் எழுதி முடித்து பின் மீண்டும் வாசித்துப்பார்க்கையில், அதிகாலையில் உதிர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருக்கும் பவழமல்லியின் வாசனையோடு வார்த்தைகள் கண்முன்னே பரந்து விரிந்திருக்கும். பின்னெப்படி நானந்த வனத்தை விட்டு மீள்வதாம் அந்த மணத்தை விட்டு விலகுவதாம்.
வார்த்தைகளுக்கும் எனக்குமுண்டான நேசம் எங்கு தொடங்கியதென்ற கெள்வியைக்காட்டிலும் தொடங்கிய காலமுதலான அதன் ஆக்ரமிப்பின் வசீகரம் மீண்டுவரமுடியாததாயுள்ளது.
பொங்கிப்பிரவகிக்கும் ஆற்றின் கரையில் நான் அமர்ந்திருக்கிறேன்... வர்ண பேதமற்று இறைந்திருக்கும் வார்த்தைகளை வாரி வாரி விழுங்குவதற்காக.
வார்த்தைகளின் வசீகரம்
முகமூடிக்கவிதைகள் - 10
மெல்லிய திரையொன்று
இருவருக்குமிடையே
தொட்டுப்பார்த்தால்
சில்லிடத்துவங்க
பேணி வளர்த்தோம்
பேரிரைச்சலோடு
பெருகி வழிந்தது அருவி
நீர்மைதானே
நீர்மை
தானே பனிக்கத்துவங்கியது
படர்ந்து இருகியது
பெரும் பனித்திரையாய்
உடைக்க மனதின்றி
பார்த்திருந்த வேளையில்
இருமை புகுந்து உள்ளே
உழலத்துவங்கியது
ஒரு நாள் பலநாள்
பகலவன் செய்ய
ஏதுமில்லாத போதும்
அசையாது நின்ற திரையை
அகத்திரை விலக்கி
உறுத்துபார்த்தில்
அறுந்து, சிதைந்து போனது
சுற்றிலும் நீர்க்கோலம்
நீர்க்கோளம்
சுகமாய் கால் தழுவ
நின்று சிரித்தது
சிலிர்த்தது
உள்ளும் புறமும்.
பெண்பால் கவிதைகள் - 4
மிகப்பிரியமான இசையைப்போலவோ
ஆழ்ந்த வாசிப்பானுபவத்தைப்போலவோ
நிரம்பித்ததும்பும் கோப்பையின்
பொன்னிறத்திரவத்தைப்போலவோ
முகத்தில் மோதி விலகும் எதிர்காற்றின்
குளிர்வாடையை போலவோ
எப்போதோ தொலைபேசும்
உற்ற தோழமையை போலவோ
வசீகரத்துடனும் வாதையுடனும்
என்னுள் உன் ஞாபகங்கள்
எப்போதும் சுமக்க வழியோ மனமோ
இல்லையென்றபோதும்
ஏதோ ஓர் மூலையில்
சுகந்தமாய் மணம் வீசும்
குடும்பமாய குதூகலிக்கையிலும்...
Links to this post Labels: கவிதை , கவிதை பெண்பால்கவிதை , பெண்பால்கவிதைகள்
கொற்றவை - ஒரு பகிர்தல் - பகுதி 2
இயற்கையை கடவுளாக்கியது ஒரு காலம்,
இறையை இயற்கையாக்கியது மற்றொரு காலம்
ஆனால் இறையை மூதாதையாக்கினால் சிவனையோ, சக்தியையோ, திருமாலையோ, தன் குடி மூத்தோராய்க் கொண்டால். அதையும் தீந்தமிழில் தோய்த்துத்தந்தால் அதை எங்கணம் அனுபவிப்பது. எவ்வாறு வார்த்தையால் வருணிப்பது. குருடன் யானையைக்கண்டது போலாகுமா அல்லது தேனென்று எழுத்தில் சொன்னால் தேனின் சுவை அறியக்கிட்டுமோ எனவே அந்த வரிகளையே உங்கள் அனுபவித்திற்காக இங்கு பதிவிட்டிருக்கிறேன்..
படைப்பாளியின் உலகை விட வாசக மனம் சென்றடையும் இலக்குகள் அதிகமல்லவா...
கொற்றவையிலிருந்து சில வரிகள்....
"அறியமுடியாமையின் நிறம் நீலம் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். நிலத்தின் எல்லையின்மை வானம். நீலத்தின் அலைகளே கடல். நீலம் ஒரு புன்னகை கருருமைக்குள் ஒளி பரவுவதன் வண்ணம் அது. கருமையோ வெளியை முழுக்கத் தன்னுள் அடக்கிக் கொண்ட பெருவெளி. கருமையில் இருந்தே ஒவ்வொன்றும் பரு திரட்டி வருகின்றன. கருமையை அஞ்சினார்கள் அதன் முடிவற்ற வல்லமையை வணங்கவும் செய்தார்கள் ஆகவே அவர்களுக்கு நீலமே உகந்த நிறமாயிற்று. புன்னைகைக்கும் கருமையே நீலம்."
அ, இ, உ என்ற மூன்று அடிப்படை ஒலிகளை மட்டுமே மொழியாக கொண்டிருந்த அம்மக்களுக்கு தலைமுறைகள் தோறும் கைமாறிச்செல்லவேண்டிய பெரும் செல்வமென ஒரு சொல் மட்டும் இருந்தது. அம்மா என்ற அச்சொல்லை அவர்கள் குடி பாலூட்டும் விலங்கொன்றிலிருந்து கற்றுக்கொண்டது. மின்னலில் இருந்து தீயை அடைந்தது போல மூன்று ஒலிகள் கூடிய அடுப்பினுள் அச்சொல் அணையாது எரிந்துகொண்டிருந்தது. பின்பு அழகுக்கும் சிறப்புக்கும் அதுவே சொல்லாயிற்று அவர்களுக்கு உடை இருக்கவில்லை ஏனெனில் அவர்கள் ஒருவர் பிறரென உணரவில்லை. எனவே வேறு ஒரு சொல்லுக்கு அவர்கள் உல்ளம் தாவவும் இல்லை"
முழுநிலவு நாள்களில் ஒன்றில் ஏதோ ஆழத்து ஆணை ஒன்று தென்கடலில் இருந்து ஏறி வந்தது போல அவர்களில் ஒரு சிறுமி சன்னதம் கொண்டெழுந்து கைகளை விரித்து வெறிக்குரலெழுப்பி ஆடும்போது அவள் வாயிலிருந்து அதுவரை கேட்டிராத எண்ணற்ற சொற்களைக் கேட்டு அவர்கள் அஞ்சி மண்ணில் குப்புற விழுந்து பணிவார்கள்..... அலைகளுக்கும் அவளுக்கும் இடையே ஓர் உரையாடல் நடந்து கொண்டிருப்பது போல, தென்கடலாழத்தில் இருந்து எவரெவரோ அவளுடன் மொழியொன்றால் உரையாடுதல் போல"....
இடியொலித்து வல்லிரைச்சலுடன் வானாறுகள் மண்ணில் விழுந்தன. பேருருவ அன்னையும் தந்தையும் கூடி முயங்கும் உயிர்நாடகத்தை குமரிக்கோட்டின் பன்மலை அடுக்கத்துக் குகை ஒன்றில் அமர்ந்து பார்த்திருந்தான் ஒருவன் புலித்தோலாடை அணிந்து குளிருக்கு யானைத்தோல் உரியை போர்த்திருந்தான். ஒரு கையில் தன் ஆயுதமான கல்மழுவும் மறுகையில் குடி அடையாளமான மான்குறியும் வைத்திருந்தான் ஒளி கண்ட இடம் நோக்கி பருப்புகையென படையெடுக்கும் பூச்சிகளில் இருந்து தப்ப உடம்பெங்கும் சாம்பல் பூசியிருந்தான். அவனது கனத்த சடைமயிர் தோளில் விழுந்து கிடந்தது. கருநிற இமைகளும் வெண்ணிறப் படலத்தில் நீல மையவிழியுமாக வரையப்பட்ட ஒரு பொய்விழி நெற்றியில். அது அப்பழங்குடியின் தொன்மையான வேட்டை உத்தி பிறகு அது வழக்கமும் அடையாளமும் ஆயிற்று. அவனது எதிரிகள் மனிதர்களாயினும் விலங்குகளாயினும் அவன் தூங்குவதேயில்லை என்று எண்ணினார்கள். அவர்களின் உடல் தூங்கும்போதெல்லாம் அந்த வரைகண்கள் உலகை உறுத்துப்பார்த்துக் காவலிருந்தன. தூங்கிய பிறகு வேறு உலகம் விழித்துக்கொள்வதை அக்கண்மூலம் அவர்கள் கண்டார்கள்.."
"கொடுமுடியொன்றில் மேல் ஏறி அவன்வாழ்வில் முதன் முறையாக முழுத்தனிமையில் நின்றான். ஆனால் அந்த தனிமையை எல்லா உறவும் ஒக்க இருக்கையிலும் அறிந்ததுண்டு என்றும் ஓவ்வொரு இயல்பு நிலையிலும் அத்தனிமையிலேயே இருந்திருக்கிறான் என்றும் அப்போது அறிந்தான்....."
அவனுக்கு என்ன ஆயிற்று என்று குடி மூத்தோர் வினவினர் அக்கேள்வியில் ஒரு கணம் அதிர்ந்து பின்பு ஏதோ சொல்ல முயன்றான்। சொல்லின்மையில் சில கணங்கள் ததும்பி பிறகு அவ்விருக்கையில் ஏறித்துள்ளி இடக்கால் வீசி வெளியை அளைய விரல்கள் காற்றில் வடிவங்களை சமைத்துச் சமைத்து அழிக்க சுழற்காற்று போலச்சுற்றி நடமிட்டு தான் கண்டதென்ன என்று அவர்களுக்கு சொல்லத்தொடங்கினான்"
யாரைக்குறித்து கூறப்படும் வார்த்தைகள், இந்த உருவகங்களுக்கு சொந்தமானவர் யார் உன்னிலா, என்னிலா, ந்ம்மிலா இல்லை யாவருள்ளும் உறைந்து நிறைந்திருக்கும் உள்ளுணர்வா... கேள்விகளுக்கான பதிலை நோக்கிய தேடலை துவக்கி வைப்பது தான் உன்னதமான படைப்பிலக்கியமோ....
தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் ஆர்வமுண்டு வருகிறேன்....
Links to this post Labels: கொற்றவை , புத்தகம் , வாசிப்பு
பெண்பால் கவிதைகள் - 3
உள்ளே கனன்று வரும்
பெரு நெருப்பை
அவ்வப்போது விசிறிவிடும்
ஏதோ ஒரு நிகழ்வின்
அடையாளம் தெரியாத
அல்லது
அறிந்து கொள்ள விரும்பாத
அறியாமையின் கணத்தில்
வாழ்கிறது
"பெண்ணென்னும் மாயப்பிசாசு"
**********************
நீவி உடுத்தி
அதரச்சாயமிட்டு
அடர்ந்து
மையெழுதியோ எழுதாமலோ
கண்ணாடி முன்நின்று
அழகிதானடி நீயென
ஒரு முறை பலமுறை
தனக்குள் சொல்லி
பின்
படர்கையில் யாரேனும்
பகர்கையில்
விழியால் செவியுறும்
"பெண்மையின் அழகு"
கொற்றவை - ஒரு பகிர்தல் - பகுதி 1
"பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே எங்கள் பாவங்களை மன்னித்தருள்வீராக"
சொற்களில் உறைந்திருக்கும் இறைஞ்சுதல்கள் வெளிப்படுத்தும் பாவனைகள் கண்கூடாக இப்பிரயோகத்தில் காணக்கிடைப்பது போல்
உள்ளே உணர்ந்து உறைந்து கிடைக்கும் எண்ணங்களை முழுவதும் காட்சிப்படுத்தும் ஆவலோடுதான் இந்தப்பதிவை
எழுதத்துவங்கியுள்ளேன்.
கடந்த வருட ஆரம்பத்தின் புத்தகத்திருவிழாவில் வாங்கிய கொற்றவையை உடனே படிக்க வேண்டும் என்ற ஆவலற்று அடுத்து இதைப்படிக்கலாமா அதைப்படிக்கலாமா என்ற எந்த அலம்பலகளும் இல்லது ஆர அமர இருந்த வெற்று மனநிலையின் ஒரு பொழுதில் வாசிக்கத்துவங்கினேன்
பொதுவாக எந்த முன்மதிப்பீடுகளுமற்று படைப்புகளை அணுகுவதே மிகச்சிறந்த வழியென்று அறிந்திருந்தும், பல சமயம் உணர்ந்திருந்தும், ஏனோ "கொற்றவை" யைக்குறித்த நன்பர்களின் விமர்சனங்களும், பொதுவில் எனக்கு அறியக்கிடைத்திருந்த அந்த புத்தகத்தின் மொழி வழக்கு பற்றிய எச்சரிக்கையும் என்னுள் சிறிய இனந்தெரியாத எதிர்பார்ப்புக் கொப்புளங்களை உருவாக்கித்தான் விட்டிருந்தது। கூடவே அப்படி என்ன சொல்லிவிட முடியும் சிலம்பைப்பற்றி? எத்தனை புத்தகங்களைப்படித்திருப்போம், மிகப்பிரியமான என் தமிழாசிரியர்கள் பாடத்திட்டத்தையும் தாண்டி எங்கள் தனிப்பட்ட விருப்பத்திற்கென விதம்விதாமய் எத்தனை சொல்லியிருக்கிறார்கள் இதைத்தாண்டி என்ன இருக்கப்போகிறது? என்ற எண்ணத்தோடும், ஏற்கனவே பார்த்திருந்த ஒரு திரைப்படத்தை மீண்டும் பார்க்கும் ஒரு மனோநிலையோடும் தான் வாசிக்க ஆரம்பித்தேன்
ஆனால் நடந்தது முற்றிலும் வேறுபட்ட அனுபவம். எதைப்பற்றியும் சிந்திக்கவொட்டாது படிக்கும் புத்தகத்தைப்பற்றி மட்டுமே காதலோடு யோசித்த நாட்களுண்டு, இதை இந்தக்கணம் சொல்லியே ஆகவேண்டும் என்ற தவிப்போடு பகிர்ந்து கொண்ட புத்தகங்களுண்டு, மனிதத்தின் மேன்மைகளை மென்மையாய் வருடி விட்டு கவித்துவமான சிந்தனைகளை கிளர்ந்தெழுத்திய புத்தகங்களுண்டு, இப்படிக்கூட சில சாதராண நடைமுறைகளை வெகு சுவாரசியமாக வடிக்கமுடியுமென்று கற்றுக்கொடுத்த புத்தகங்களுண்டு, சில புத்தகங்களை படித்து முடித்ததும் செய்யவேண்டியது இதுவென சில பட்டியல்களை இட வைத்த எழுத்துக்களுண்டு, சில புத்தகங்கள் அடுத்து எந்த புத்தகத்தையும் உடனே படிக்கவொட்டாது அசைபோட வைத்ததுண்டு.. ஆனால் இந்தபுத்தகம் என்ன செய்தது...
சொல்வதற்காகாத்தான் இந்த ஆரம்பம்...
ஏதேனும் எழுதி நாட்களாகிறது
பிரசவத்திற்கென
சுமந்திருக்கும் கருவென
உள்ளே ஊறிக்கிடக்கிறது
வார்த்தைகள்....
மீண்டும் வருகிறேன்...
Links to this post Labels: கொற்றவை , புத்தகம்.
முகமூடிக்கவிதைகள் - 9
உடுப்பிட்ட வார்த்தைகளை
உப்பிட்டு நீர் வார்த்து வைத்தேன்
என்றேனும்
நிஜமுணர்த்தக்கூடுமென்று.
***********
யாரோடும் பேசவியலாத
வார்த்தைகளை
மௌனக்கரைசலில்
கரைக்கத்துவங்கினேன்
நீர்த்துப்போன கரைசலின்
நிறம் மட்டும்
மாறியபடியே உள்ளது.
***********
ஓடி ஒளிந்து
கண்ணாமூச்சியாடும்
வார்த்தைகளின்
களியாட்டத்தின்
முடிவில் நின்றிருக்கும்
உண்மை



