Sunday, December 27, 2009

பெண்பால் கவிதைகள் - 4


மிகப்பிரியமான இசையைப்போலவோ
ஆழ்ந்த வாசிப்பானுபவத்தைப்போலவோ
நிரம்பித்ததும்பும் கோப்பையின்
பொன்னிறத்திரவத்தைப்போலவோ
முகத்தில் மோதி விலகும் எதிர்காற்றின்
குளிர்வாடையை போலவோ
எப்போதோ தொலைபேசும்
உற்ற தோழமையை போலவோ
வசீகரத்துடனும் வாதையுடனும்
என்னுள் உன் ஞாபகங்கள்

எப்போதும் சுமக்க வழியோ மனமோ
இல்லையென்றபோதும்
ஏதோ ஓர் மூலையில்
சுகந்தமாய் மணம் வீசும்
குடும்பமாய குதூகலிக்கையிலும்...

Sunday, December 13, 2009

கொற்றவை - ஒரு பகிர்தல் - பகுதி 2

இயற்கையை கடவுளாக்கியது ஒரு காலம்,
இறையை இயற்கையாக்கியது மற்றொரு காலம்
ஆனால் இறையை மூதாதையாக்கினால் சிவனையோ, சக்தியையோ, திருமாலையோ, தன் குடி மூத்தோராய்க் கொண்டால். அதையும் தீந்தமிழில் தோய்த்துத்தந்தால் அதை எங்கணம் அனுபவிப்பது. எவ்வாறு வார்த்தையால் வருணிப்பது. குருடன் யானையைக்கண்டது போலாகுமா அல்லது தேனென்று எழுத்தில் சொன்னால் தேனின் சுவை அறியக்கிட்டுமோ எனவே அந்த வரிகளையே உங்கள் அனுபவித்திற்காக இங்கு பதிவிட்டிருக்கிறேன்..

படைப்பாளியின் உலகை விட வாசக மனம் சென்றடையும் இலக்குகள் அதிகமல்லவா...

கொற்றவையிலிருந்து சில வரிகள்....


"அறியமுடியாமையின் நிறம் நீலம் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். நிலத்தின் எல்லையின்மை வானம். நீலத்தின் அலைகளே கடல். நீலம் ஒரு புன்னகை கருருமைக்குள் ஒளி பரவுவதன் வண்ணம் அது. கருமையோ வெளியை முழுக்கத் தன்னுள் அடக்கிக் கொண்ட பெருவெளி. கருமையில் இருந்தே ஒவ்வொன்றும் பரு திரட்டி வருகின்றன. கருமையை அஞ்சினார்கள் அதன் முடிவற்ற வல்லமையை வணங்கவும் செய்தார்கள் ஆகவே அவர்களுக்கு நீலமே உகந்த நிறமாயிற்று. புன்னைகைக்கும் கருமையே நீலம்."

அ, இ, உ என்ற மூன்று அடிப்படை ஒலிகளை மட்டுமே மொழியாக கொண்டிருந்த அம்மக்களுக்கு தலைமுறைகள் தோறும் கைமாறிச்செல்லவேண்டிய பெரும் செல்வமென ஒரு சொல் மட்டும் இருந்தது. அம்மா என்ற அச்சொல்லை அவர்கள் குடி பாலூட்டும் விலங்கொன்றிலிருந்து கற்றுக்கொண்டது. மின்னலில் இருந்து தீயை அடைந்தது போல மூன்று ஒலிகள் கூடிய அடுப்பினுள் அச்சொல் அணையாது எரிந்துகொண்டிருந்தது. பின்பு அழகுக்கும் சிறப்புக்கும் அதுவே சொல்லாயிற்று அவர்களுக்கு உடை இருக்கவில்லை ஏனெனில் அவர்கள் ஒருவர் பிறரென உணரவில்லை. எனவே வேறு ஒரு சொல்லுக்கு அவர்கள் உல்ளம் தாவவும் இல்லை"

முழுநிலவு நாள்களில் ஒன்றில் ஏதோ ஆழத்து ஆணை ஒன்று தென்கடலில் இருந்து ஏறி வந்தது போல அவர்களில் ஒரு சிறுமி சன்னதம் கொண்டெழுந்து கைகளை விரித்து வெறிக்குரலெழுப்பி ஆடும்போது அவள் வாயிலிருந்து அதுவரை கேட்டிராத எண்ணற்ற சொற்களைக் கேட்டு அவர்கள் அஞ்சி மண்ணில் குப்புற விழுந்து பணிவார்கள்..... அலைகளுக்கும் அவளுக்கும் இடையே ஓர் உரையாடல் நடந்து கொண்டிருப்பது போல, தென்கடலாழத்தில் இருந்து எவரெவரோ அவளுடன் மொழியொன்றால் உரையாடுதல் போல"....

இடியொலித்து வல்லிரைச்சலுடன் வானாறுகள் மண்ணில் விழுந்தன. பேருருவ அன்னையும் தந்தையும் கூடி முயங்கும் உயிர்நாடகத்தை குமரிக்கோட்டின் பன்மலை அடுக்கத்துக் குகை ஒன்றில் அமர்ந்து பார்த்திருந்தான் ஒருவன் புலித்தோலாடை அணிந்து குளிருக்கு யானைத்தோல் உரியை போர்த்திருந்தான். ஒரு கையில் தன் ஆயுதமான கல்மழுவும் மறுகையில் குடி அடையாளமான மான்குறியும் வைத்திருந்தான் ஒளி கண்ட இடம் நோக்கி பருப்புகையென படையெடுக்கும் பூச்சிகளில் இருந்து தப்ப உடம்பெங்கும் சாம்பல் பூசியிருந்தான். அவனது கனத்த சடைமயிர் தோளில் விழுந்து கிடந்தது. கருநிற இமைகளும் வெண்ணிறப் படலத்தில் நீல மையவிழியுமாக வரையப்பட்ட ஒரு பொய்விழி நெற்றியில். அது அப்பழங்குடியின் தொன்மையான வேட்டை உத்தி பிறகு அது வழக்கமும் அடையாளமும் ஆயிற்று. அவனது எதிரிகள் மனிதர்களாயினும் விலங்குகளாயினும் அவன் தூங்குவதேயில்லை என்று எண்ணினார்கள். அவர்களின் உடல் தூங்கும்போதெல்லாம் அந்த வரைகண்கள் உலகை உறுத்துப்பார்த்துக் காவலிருந்தன. தூங்கிய பிறகு வேறு உலகம் விழித்துக்கொள்வதை அக்கண்மூலம் அவர்கள் கண்டார்கள்.."

"கொடுமுடியொன்றில் மேல் ஏறி அவன்வாழ்வில் முதன் முறையாக முழுத்தனிமையில் நின்றான். ஆனால் அந்த தனிமையை எல்லா உறவும் ஒக்க இருக்கையிலும் அறிந்ததுண்டு என்றும் ஓவ்வொரு இயல்பு நிலையிலும் அத்தனிமையிலேயே இருந்திருக்கிறான் என்றும் அப்போது அறிந்தான்....."

அவனுக்கு என்ன ஆயிற்று என்று குடி மூத்தோர் வினவினர் அக்கேள்வியில் ஒரு கணம் அதிர்ந்து பின்பு ஏதோ சொல்ல முயன்றான் சொல்லின்மையில் சில கணங்கள் ததும்பி பிறகு அவ்விருக்கையில் ஏறித்துள்ளி இடக்கால் வீசி வெளியை அளைய விரல்கள் காற்றில் வடிவங்களை சமைத்துச் சமைத்து அழிக்க சுழற்காற்று போலச்சுற்றி நடமிட்டு தான் கண்டதென்ன என்று அவர்களுக்கு சொல்லத்தொடங்கினான்"

யாரைக்குறித்து கூறப்படும் வார்த்தைகள், இந்த உருவகங்களுக்கு சொந்தமானவர் யார் உன்னிலா, என்னிலா, ந்ம்மிலா இல்லை யாவருள்ளும் உறைந்து நிறைந்திருக்கும் உள்ளுணர்வா... கேள்விகளுக்கான பதிலை நோக்கிய தேடலை துவக்கி வைப்பது தான் உன்னதமான படைப்பிலக்கியமோ....


தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் ஆர்வமுண்டு வருகிறேன்....