Sunday, December 28, 2008

எப்படி இருக்கும்? எப்படி இருக்கும்?


ஊருக்கே ஏசி போட்டா எப்படி இருக்கும்?
தமிழ் நாட்டுல கலப்படமில்லாத நல்ல சாட் ஐட்டம் கிடைச்சா எப்படி இருக்கும்?
3 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 30 ரூபால வாடகை டாக்ஸில கடக்க முடிஞ்சா எப்படி இருக்கும்?
அப்பப்ப சூடா ரசகுல்லா சாப்பிட்டா எப்படி இருக்கும்?
இஷ்டத்துக்கு மீட்டா தை என்று சொல்லப்படும் இனிப்பு தயிர் சாப்பிட்டா எப்படி இருக்கும்?
இதோடு கூட இலக்கிய + தெய்வீகமான அனுபவமும் கிடைச்சா எப்படி இருக்கும்?
இத்தனைக்கும் மேல உக்கார வைச்சு மூணு வேளையும் விதம் விதமா சாப்பாடு போட்டா எப்படி இருக்கும்?

சரி ரொம்ப நான ரொம்ப மொக்கல..(அதாவது மொக்கை போடல)

நான் இப்ப
கொல்கத்தால இருக்கேன்.....

சென்னைல கடும் வெயில் இல்லாட்டா மழைன்னு இருக்கற நம்ம மாதிரி பாவப்பட்ட ஜனங்களுக்கு எப்பவும் கம்பளி சட்டை போட்டு கால்ல சாக்ஸ்னு சொல்லப்படும் காலுறை போட்டுகிட்டு மிதம்/அதிகமான குளிர்ல ரோட்டுல நடக்கனும்னா எவ்ளோ சந்தோஷமா இருக்கும்னு சொல்லித்தான் தெரியனுமா???

கொஞ்ச நேரம் தலையில் மறைப்பின்றி வாசலில் நின்றால் போதும் உள்ள வந்து தும்மி கிட்டே இருக்கலாம்(என் பெரிய பையன் அனுபவம் அவனுக்கு சைனஸ் தொந்தரவு) உடம்பெல்லாம் சில்லுனு, நடந்து கிட்டே இருந்தா தப்பிச்சோம்। (அதாவது தொடர்ந்து ஆக்டிவா இருந்து கிட்டே இருக்கனும்) கொஞ்சம் சோம்பேறி, தூக்கம் வருதேன்னு தூங்கிப்போயிட்டோமின்னா எழுந்திருக்கும் போது கூடவே காய்ச்சல் வந்த மாதிரி ஒரு உணர்வு॥ அப்பப்பா வார்த்தைல சொல்ல முடியல அந்த உணர்வை। ரொம்ப சுகமா நல்ல அனுபவமா இருக்கு. இதுல கொடுமை என்னான்னா என் சின்னப்பையனுக்கு இங்கயும் ராத்திரி தூங்கறதுக்கு ஃபேன் வேண்டியிருக்கு (???)

அக்கா ரொம்ப அருமையா உக்கார வைச்சி சாப்பாடு போடறாங்க கூடவே சின்ன சின்ன ஷாப்பிங், அங்க நடக்கற ஆன்மீக, இலக்கிய கூட்டங்களுக்கு போற வாய்ப்பு இப்படியாகத்தானே என் 2008 வருஷக்கடைசி போயிட்டு இருக்கு.

போட்டா இல்லாத பதிவு போட முடியுமா அதனால அங்க நடந்த ஐய்யப்பா சமூகத்திலேர்ந்து நடத்திய சாஸ்தா பிரதி முடிவு அன்னிக்கு நடந்த கோலகலத்திலேர்ந்து சில போட்டோ. நாம இருக்கறது தமிழ்நாடா, கேரளாவா இல்லை மேற்கு வங்கமான தெரியாத அளவுக்கு நம்மை மறக்கடிச்சிட்டாங்க ரொம்ப இனிமையான அனுபவம். தன் வயது மறந்து, வேலை மறந்து, சொந்த இன்ப துன்பங்களை மறந்து எல்லோரும் ஒன்று கூடி இருந்த அந்த இனிமையான உணர்வுகளோட சங்கமத்தை பார்க்கும் போது நாமெல்லாம் சொந்த ஊரு மாநிலத்தை விட்டு போனத்தான் இத்தனை ஒற்றுமையா இருப்போமோன்னு தோன்றியது.

வாழ்க மானுடம்.

அப்ப வருஷக்கடைசிக்கு ஒரு பதிவு போட்டாச்சு.... அடுத்த வருஷம் சந்திக்கலாம் நன்பர்களே..... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

Thursday, December 4, 2008

பெண்பால் கவிதைகள் - 2

நட்பு

எப்போதும் போலுணர்ந்தேன்
இரு பத்து வருடங்கள்
பின்பும்
அம்மா
மனைவி,
அதிகாரி
ஏதுமின்றி
நானாய்
நன்பனின் எதிரில்

சுயநலம்

நல்லவேளை
எனை வசீகரிக்கும்
பித்தனோ
ஞானியோ
பைத்தியக்காரனோ
என்
கணவரோ
மகனோ
மருமகனோ
சோதரனோ
இல்லை

காதல்

இருமகவோடு
இரவு கதைசொல்லும் நேரம்
நாம் காதலித்த பொழுதுகளின்
கதைகளை
சொல்லவா என்றேன்
புன்சிரித்துக்கேட்டான்
இறந்தகாலமென்று
எப்படி முடிவுசெய்தாய்???

Wednesday, November 19, 2008

முகமூடிக்கவிதைகள் - 5

ஜன்னல் கம்பிகளில்
சொருகிய
தீரைச்சீலையாய்
மனது சிக்கிக்கொள்கிறது
ஏதேனும் ஆழத்தில்

வார்த்தைகளை
உதைத்து உதைத்து
வெளிவருகிறது
மனம்



***********************

தவறாகப்புரிந்துகொள்ளப்படுமென்று
விழுங்கிய வார்த்தைகள்
விருட்சமானது

காய்களோ கனிகளோ
ஏன்
பூக்களோ இல்லாத
விருட்சத்திற்கு
நிழலுமில்லை.


*******************************


Tuesday, November 18, 2008

இரயில் சிநேகிதம் - இல்லை விரோதம்.


அவர் ஏதாவது பள்ளி தலமை ஆசிரியராய் இருக்கலாம், இல்லை ஏதாவது நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி அதிகாரியாக இருக்கலாம், இல்லை அரசு அலுவலகங்களில் இருக்கும் ஒரு நேர்மையான அரசு அதிகாரியாக இருக்கலாம். மேலும் பெண்குழந்தைகளற்ற தகப்பனாய் இருக்கலாம். நெற்றியில் சிறியதாய் வைத்திருந்த குங்குமப்பொட்டும், சிறிதே நரைத்திருந்த மெல்லிய மீசையும், சிறிய கண்களும், முழுக்கை வெளிர்நீலச்சட்டையும், அடர் நீலத்தில் அணிந்திருந்த முழு கால்சராயும் எனக்கு இதைத்தான் உணர்த்திக்கொண்டிருந்தன.

எனக்கு நேர் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த மஞ்சளும் நீலமும் கலந்த, கழுத்தில் கருகமணியிட்டிருந்த அந்த சுரிதார் பெண்மணி உரத்த குரலில் ஆட்சேபித்துக்கொண்டிருக்கும் போதுதான் நான் அந்த மனிதரை இத்தனை தீவிரமாகப் பார்த்தேன்.

அவள் மனம் வெகுண்டெழுந்தவளாக தீவிரமாக குரலெழுப்பி கூறிக்கொண்டிருந்தாள். " டோண்ட் லுக் அட் லைக் திஸ், நான் பார்த்ததில் எந்த தவறும் இல்லை, அதற்காக நீங்கள் அவ்வாறு பார்க்க வேண்டிய தேவை இல்லை, முதல் வகுப்பில் பெண்களுக்கென்ற தனி இருக்கையும், அடுத்தது பொதுவான இருக்கையும் தான். இடமிருந்தால் நாங்கள் எங்கு வேண்டுமானாலும் உட்காரலாம், ஆனால் பெண்கள் என்று எழுதியிருக்கும் இருக்கைகளில் வேறு இடமில்லாதபோது ஆண்கள் அமர்ந்திருப்பது தவறுதான் அதுவும் ஒரு பெண் இடமின்றி நின்று கொண்டு வர அந்த இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்து வருவது தவறுதான் அதனால் தான் நான் அவ்வாறு பார்த்தேன் அதற்காக நான் இந்த இருக்கையில் அமர்ந்ததும் நீங்கள் இப்படி பார்க்கவேண்டிய தேவையில்லை. ஆண்களின் இருக்கை என்று குறிப்பிட்டிருந்தால் நாங்கள் இவ்வாறு ஆக்கிரமித்துக்கொண்டிருக்க மாட்டோம்" என்று கூறிவிட்டு கையிலிருந்த புத்தகத்தில் தன்னை அமிழ்த்திக்கொள்வேதே போன்று அமைதியானாள்.

அன்றென்னவோ அந்த மின்சார வண்டியின் முதல் வகுப்பில் கூட்டம் அதிகம் இல்லைதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கைகள் காலியாகத்தான் இருந்தது. அந்த பெண்மணி இத்தனை உணர்ச்சிவசப்பட்டதில் உடன் பாடு இல்லையென்றாலும் யாரை நோக்கி இங்கணம் பேசுகிறாள் என்பதைக்காணவே நான் அவரை சிறிது ஊன்றிப்பார்த்தேன்.

இந்த நேரடித்தாக்குதலை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை போலும், மிகவும் தர்ம சங்கடத்துடனும் ஒப்புமையற்றும் உடனே அந்த பெண்கள் எனக்குறிப்பிட்டிருந்த இருக்கையை விட்டு எழுந்திருக்கவில்லையென்றாலும் அதில் முள்மேல் அமர்வது போல் அமர்ந்திருந்தார். மிகவும் தாழ்ந்த குரலில் அடிபட்ட மனோபாவத்துடன் அருகிருப்பவரிடம் ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தார். இத்தனையையும் நான் மவுனமாக கவனித்துக்கொண்டே இருந்தேன்.

அடுத்த நிலையம் வந்தது மீண்டும் வண்டி கிளம்பியதும் அந்த இருக்கை காலியாக இருந்தது. நானும் அவர் இறங்கி விட்டாரோ என எண்ணி சுற்றும் முற்றும் பார்க்க அவரோ வாயிலுக்கு மிகவும் பக்கத்தில் சென்று நின்றுகொண்டே என்னையே நோக்கிக்கொண்டிருந்தார். நான் சிறிதே துணுக்குற்றேன். பின் கையில் இருந்த புத்தகத்துள் ஆழ்ந்து போனேன். மேலும் பல இருக்கைகள் காலியாகிக்கொண்டே போனது ஆனால் அவர் மட்டும் எந்த இருக்கையிலும் அமராமல் நின்றுகொண்டே வந்தார். நான் சிலசமயம் ஏன் இவ்வாறு என எண்ணி அவரைப்பார்த்துவிட்டு என் புத்தகத்தில் மூழ்கிக்கொண்டே இருந்தேன்.

நான் இறங்கும் நிறுத்தத்திற்கு ஒரு நிறுத்தம் முன்பாக அவர் இறங்கிக்கொண்டார். சன்னல் ஓரம் எனைக்கடந்து சென்றபோது பார்த்த பார்வையில் கொஞ்சமும் தோழைமையில்லை மாறாக வெகு விரோதமான கண்களூடே கடந்து போனார்.

அந்தப்பெண்மணியின் பேச்சை விட என் பார்வையே அவருக்கு மிகவும் தர்மசங்கடத்தை தந்திருக்கும் போல.....

Wednesday, November 12, 2008

டெங்கு காய்ச்சலும்- விழிப்புணர்வும்.

ரொம்ப பொறுப்பா பதிவுகள்ள கவனம் செலுத்தி எழுத ஆரம்பிச்சிருந்தேன். ஆனா என்னோட அத்தனை நேரத்தையும் ,கவனத்தையும், முக்கியமா உணர்வுகளையும் கடந்த பத்து நாட்களாக களவெடுத்துக்கொண்டு போனது என் மகனின் சுகவீனம். இது எதுக்கு இந்த டைரி குறிப்புன்னு? கேக்கலாம் ஆனாலும் மத்தவங்களுக்கு இது உபயோகப்படுமேங்கறது தான் முக்கிய காரணம். இரண்டாவது வழக்கம் போல மக்களை நிம்மதியா எவ்ளோ நாளைக்குத்தான் விட்டுவைக்கிறது அதான்.

போன வாரத்துல இரண்டாவது நாள் சின்னவன் பள்ளியில் இருந்து வரும்போது காய்ச்சல் என்று வந்தான் சரி எல்லா இடத்துலேயும் தான் இப்போ வருதேன்னு வழக்கமா குடுக்கற குரோசின், இத்யாதி இத்யாதி மருந்துகளை குடுத்து தூங்க வைச்சா இரவு ஒரு மணிக்கு மேல 103 டிகிரிக்கு காய்ச்சல் பொரிய ஆரம்பிச்சது குறையவே இல்லை. சரின்னு பக்கத்துல இருக்கற ஒரு பெரிய மருத்துவமனையை நோக்கி காலை ஆறு மணிக்கே படையெடுத்தாச்சு அங்க உள்ள அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் பார்த்துட்டு டோலோ 250 யும் இன்னும் சில மருந்து களும் கொடுத்து அனுப்பிச்சார். அந்த டோஸ் குடுத்தும் மூணு மணி நேரம் கழிச்சும் எந்த முன்னேற்றமும் இல்லை, எனக்கு எங்கயோ தப்புன்னு புரிய ஆரம்பிச்சது அதனால அதே மருத்துவமனையோட புறநோயாளிகள் பிரிவின் குழந்தைகள் மருத்துவ பகுதிக்கு போனா
முதல் தவறு புரிஞ்சது. கொடுத்திருந்த மாத்திரையின் அளவு பத்தாது அவனுடைய எடையை கணக்கில் கொண்டு குறைந்த 650வாது கொடுத்திருக்க வேண்டுமாம். அனுபவம் மிக்க அந்த மருத்துவர் அவர்கள் மருத்துவமனையின் தவறுக்காக வருந்தியபடி அளவை மாற்றிக்கொடுத்தார். எங்களுக்கு ஒரு சமாதானம் சரி இதைக்கொடுத்தால் சரியாகிவிடும் என்று, ஆனாலும் அவர் ரொம்ப தீவிரமாய் பரிசோதித்து விட்டு எதற்கும் இரத்தம் மற்றும் மூத்திரம் பரிசோதனைக்கு கொடுத்து விட்டுச்செல்லுங்கள் என்றும், நாங்கள் கொடுத்த மருந்து தவிர்த்து வேறு ஏதும் கொடுக்க வேண்டாம் என்றும் கண்டிப்பாய்ச்சொன்னார் (ஒரு வேளை அவர் சொல்லுமுன்னே என்னிடம் இருந்து மருந்து பட்டியலை சொன்னதால் இருக்கலாம் என்றும் எனக்கு தோன்றியது) ஆனாலும் ஏன் அப்படி என்று கேட்டதால் அறிகுறிகளைக்கண்டால் டெங்கு காய்ச்சல் போல் உள்ளது அதனால் டோலோ வைத்தவிர வேறு ஏதும் கொடுத்தால் அதன் வீர்யம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் ஆனால் அதுதானா என்று தெரிய ஐந்து நாட்கள் ஆகும் என்றும் அதனால அதுவரை மிக கவனாமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கூறினார். (வழக்கமாக எல்லா மருத்துவர்களும் பயப்படுத்தும் வகைதானே இது என்று எண்ணிக்கொண்டு வீட்டுக்கு அழைத்து வந்து விட்டேன்)

ஆனாலும் காய்ச்சல் 103ஐ விட்டு குறையவே இல்லை முகம் வேறு மிகவும் சிவந்து குழந்தை தவிக்க ஆரம்பித்து விட்டான். அதன் காரணமாய் மறுநாள் காலையிலேயே கொண்டுபோய் மருத்துவமனையில் அனுமத்தித்து விட்டோம். தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சல் 103ஐ விட்டு குறையவே இல்லை எனக்கு கொஞ்சம் கொஞ்சமாய மருத்துவமனையைக்குறித்த சந்தேகம் வர ஆரம்பித்தது. ஆனால் அவர்கள் தினமும் இரத்தப்பரிசோதனை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக சனிக்கிழமையன்று காய்ச்சல் நிதானத்திற்கு வர ஆரம்பித்தது எங்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சி, ஆனால் மருத்துவர்கள் பரபரக்க ஆரம்பித்தார்கள் உடனே ஒரு இரத்த பரிசோதனைக்கு ஆணையிட்டார்கள் முடிவுகளைப்பார்த்ததும் தான் அந்த விபரீதம் புரிந்தது.

இரத்தின் வெள்ளை அனுக்களில் பிளேட்லட் கவுண்ட் குறந்திருந்தது முந்தைய நாள 2லட்சம் அனுக்கள் இருந்த நிலையில் மறுநாள் 1லட்சத்து 52ஆயிரம் மட்டுமே இருந்தது. அடுத்த 7மணி நேரத்தில் மறுபடியும் சோதிக்க வேண்டும் என்றும் குறைந்திருந்தால் ப்ளேட்லட் டிரான்ஸ்பார்ம் பண்ண வேண்டும் என்றும் அந்த வசதி இந்த மருத்துவமனையில் இல்லை என்றும் சென்னையில் மூன்று மருத்துவமனைகளே இந்த துறையில் சிறந்தது அதனால் அங்கு மாற்ற வேண்டியிருக்கும் என்றும் சொன்னார்கள், அப்போது ஆரம்பித்தது எங்கள் மன அழுத்தம்.

இரவு 10மணி சோதனையில் எண்ணிக்கை 82ஆயிரமாக குறைந்திருந்தது. 50ஆயிரத்துக்கும் குறைந்தால் அதன் விளைவுகள் மிகக்கடினம் என்றும், இரத்தம் உறையும் குணம் அதை விட்டுச்சென்று விடும் என்றும், அடி ஏதும் படாமலேயே இரத்தம் உடம்புகளில் கசிய ஆரம்பிக்கும் என்றும் கூறி அந்த மூன்று மருத்துவ மனைகளையும் தொடர்பு கொண்டார்கள் அதில் இரண்டில் இடமில்லை என்று சொல்லி மூன்றாவதில் அனுமதி கொடுத்தார்கள். இரவு 12.30மணிக்கு அந்த மருத்தவ மனையில் இருந்து விடுபட்டு மற்றொரு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தோம் ஆனால் அந்த இடைப்பட்ட 2மணி நேரத்திலேயே 10ஆயிரம் எண்ணிக்கை குறைந்து 72ஆயிரத்து வந்து விட்டது.

உடனே பையனை ஐ.சி.யூ (தீவிர சிகிச்சை பிரிவா)வில் வைத்து வைத்தியம் செய்ய ஆரம்பித்தார்கள் இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் அவனது ப்ளேட்லட் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பித்தது. கூடவே வாந்தி பேதியும் கட்டுக்குள் வந்தது.

இப்போது வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டோம் ஆனாலும் மருத்து மாத்திரைகளும் கட்டுபாடானா சாப்பாடு முறைகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சென்னையில் பல இடங்களில் இது போன்ற டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாகவும் தமிழகத்தின் மற்ற இடங்களில் இது பரவுவதாகவும் மருத்துவர்கள் சொன்னார்கள்.

காரணம் - கொசுக்கடி

அறிகுறி
1. தொடர்ந்து அதிக அளவில் காய்ச்சல்
2. உடலில் சிகப்பு தடிமன்களோ அல்லது நிறமாற்றமோ (ரேஷஸ்)
3. இரண்டாவது மூன்றாவது நாளுக்குப்பிறகு வாந்தி பேதி

இது போன்ற அறிகுறிகளைக்காண நேரிட்டால் உடனே மருத்துவரை அணுகி விடவும். தொடர்ந்து டிரிப்ஸ் கொடுப்பதும் உரிய மருந்துகள் கொடுப்பதோடு மட்டுமின்றி இரத்தப்பரிசோதனையும் மிகவும் இன்றியமையாதது. காய்ச்சல் குறைந்து விட்டது என்று நாங்கள் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை நினைத்துப்பார்க்க கூட மனம் அஞ்சுகிறது.

எனவே கவனத்தில் கொள்ளவும் தெரிந்தவர் அறிந்தவர்களுக்கு விழிப்புணர்வை கொடுக்கவும்.

Saturday, November 1, 2008

மௌனியின் கதை உலகம் - ஒரு பகிர்வு


நம்மை சுற்றிலும் இருந்த கதை சொல்லிகளின் கதைகளைக்கேட்டே வளர்ந்த பால்யங்களைக் கொண்டிருந்ததாலோ என்னவோ, கதை கேட்பதைக்குறித்தான அலுப்பேதுமின்றியே நான் வளர்ந்திருக்கிறேன்.

தாட் தாட் என குதிரையில் சென்ற இராஜகுமாரன் முதல் பள்ளியின் நான்கு வாசல்களில் எந்த வாசல் வழியே மகன் வந்தாலும் ஏறிச்செல்வதற்கு ஏற்றாவாறு அத்தனை வாசல்களிலும் சாரட் வைத்து காத்திருந்த நேருவின் கதை வரை தந்தை சொல்ல கேட்டதுண்டு, இப்போதும் கதை சொல்லும் என் மகவுகளின் வார்த்தை சரிவிலேயே என் இரவு எப்போதும் கரை தட்டும்.

ஆனாலும் முன் முடிவுகளைத்தராத கதைகளையெதையும் நான் அதிகம் கண்டதில்லை. பல சமயம் சம்பவங்களின் கோர்ப்பு முடிவுகளின், கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல்களை தானாக ஈன்றெடுத்து விடும். சிலசமயம் தத்துவ விசாரங்கள் முன் சொன்ன, படித்திருந்த, கேட்டிருந்த, நம் மனம் யோசித்திருந்த தளங்களை கண்முன்னே காட்டிச்செல்லும்.

வாசிப்புகளின் தேர்வு குறித்தான கர்வம் எப்போதும் எந்த வாசகனுக்கும் இருக்காமலிருந்ததில்லை. என்னுள்ளும் எத்தனையோ கர்வங்களை விதைத்துச்சென்றிருந்த புத்தக வரிசைகளுண்டு ஆனாலும், வாசிப்பு முடிந்தும் அடுத்திப்போது என்ன செய்ய வேண்டுமென்ற எந்த யோசனையையும் கொண்டு தராது மின் விளக்குகள் போன நொடியில் ஏற்படும் மையிருட்டுக்கு கண்கள் பழகுவதற்கு முன் ஏற்படும் ஒரு அமைதியையும், குளுமையையும், அதே சமயம் குழப்பத்தையும் ஏற்படுத்தியது மௌனியின் கதைகள்.

மொத்தம் 24 கதைகளோடு சிறு பத்திகளும் சேர்ந்து மொத்தம் 336 பக்கங்கள் நம் அகவெளியின் எத்தனையோ அடுக்குகளில் இது வரை புதைந்திருந்த காதலை, குழப்பத்தை, பயத்தை, நகைச்சுவையை, தேடலை, வாழ்க்கை குறித்த முன் முடிவுகளை, மிகவும் நுண்ணிய உணர்வுகளை எந்த ஒப்பனைகளுமற்று என் முன் நடமாட வைத்தது. அடுத்து இது தான் என்ற எந்த ஒரு முடிவுகளையும் எடுக்க வொட்டாது வெறுமே பார்வையாளனாக நம்மை இருக்க வைத்து கதைகள் தானே நகர்ந்து செல்கிறது என்று சொல்லலாம்.

அவரது கதைகள் வெளிக்கிட முடியாத மனோ உணர்வுகளின் அணிவகுப்பு. நிராகரிப்பும், காதலும், சாவும், வாழ்வும் ஒரே நோக்கில் எந்த பாகுபாடுகளுமின்றி காட்சிப்படுத்தப்படுகிறது. அக்காலத்தில் புனிதப்படுத்தப்பட்ட எத்தனையோ உறவுகளை, நிலைகளை கேள்விக்குறியாக்கும் அவரது பார்வைகள் எத்தனையோ வருடங்களுக்குப் பின்பும் விகசிக்கவைக்கிறது. வாழ்க்கை குறித்த சாமானியனின் பார்வையோடு அகத்தேடல்கள் நிறைந்த ஒரு ஞானியின் பார்வையும் இணைந்த நாயகபாவம் அவரின் கதைகளில் கண்கூடாக காணமுடிகிறது. பெரும்பாலான படைப்பாளிகளின் படைப்பில் தொக்கி நிற்கும் பால் வேறுபாட்டை மௌனியின் எழுத்துக்களில் நம்மால் தேடினாலும் உணரமுடிவதில்லை. பெண்களைக்குறித்தான அவரது பார்வைகள் அசாதராணமானது. மிகுந்த நிதானமான சிந்தனை மிகுந்த கதா நாயகிகள் இவரது எழுத்துக்களில் பளிச்சிடுகிறார்கள்.

மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்த கதைகள் எத்தனையோ உண்டு. எப்போது வாசித்தாலும் அப்போது புதியதாய் புரிந்து கொள்ள அடுக்கடுக்கடுக்காய் இரகசியங்களை தன்னுள் பொதிந்து வைத்துள்ளது அவ்வெழுத்துக்கள்.

ஒரு நாயகனின் வாழ்வின் பல்வேறு சம்பவங்களின் தனித்தனி வெளிப்பாடாகவும் இக்கதைகளைக் கொள்ளலாம். முடிவில் ஒவ்வொரு கதைக்கும் உண்டான தொடர்பான சம்பவங்களைக்கொண்டு மற்றொரு கதையை கோர்க்க முயன்றால் அத்தனை கதைகளும் ஒரே சங்கிலியில் வந்து சேரும். நகுலனின் எழுத்துக்களிலும், கோபி கிருஷ்ணணின் எழுத்துக்களிலும் இத்தகைய தன்மையை கண்டிருந்தாலும் மௌனியின் கதைகள் சொல்லும் அகவெளி நமக்கு மிகவும் நெருக்கமாயிருப்பதாகவே படுகிறது. சாமானியனின் மன ஓட்டங்களை பதிவித்து சென்றுள்ளத்ய் இவ்வெழுத்துக்கள்.

ஒவ்வொரு கதைகளும் பிரசுரமாயிருக்கும் ஆண்டுகளின் குறிப்புகளும் இருப்பது நமக்கு அந்தக்கதை நிகழ்வுகளின் கால ஓட்டத்தை உணர்ந்து கொள்ள வெகு எளிதில் ஏதுவாகிறது. அத்தனை கதைகளைப்பற்றியும் எழுதும் ஆசையிருந்தாலும், ஒரு சில கதைகளை குறித்து மட்டுமாவது விரிவாக எழுதும் எண்ணமிருக்கிறது பார்ப்போம்.. எவ்வளவு தூரம் முடிகிறதென்று...

Tuesday, October 21, 2008

அப்பாவின் நினைவும் - கைச்சோறும்


அப்பாவைப்பற்றி பிறிதொருநாளில் எழுத வேண்டுமென்றிருந்த என் எண்ணத்தை இன்றே என மாற்றியமைத்தது நேற்றய நாள்.

கவளம் கவளாமாய் சுடுசோறு உருட்டித்தந்து கைச்சோறு நான் ஊதி ஊதி உண்ணக்கண்டு மறு கை தருமுன்னே தான் ஊதி தந்தவர் அவர்.
கூடவே அம்மா " அப்படியே வாயிலும் ஊட்டி விடவேண்டியதுதானே என்றால் " "ஊட்டினா ஒரு வாய் தான் இருக்கும் இதில் கூட ரெண்டு வாயிருக்கும் குழந்தை ரெண்டு கை வாங்கிண்டா போறும்" என்று சொல்வார்.

சிறு பிராயத்தின் விடுமுறை நாட்களில் குளித்து விட்டு வந்தால் மட்டுமே காலை உணவு கிட்டும் என்பது என் தாயாரின் கண்டிப்பான கட்டளை. விடுமுறைநாட்களுக்கேயுண்டான பெருந்தூக்கம், சோம்பல், எண்ணைக்குளியல், வீட்டுசுத்தீகரிப்பு, வாய்க்காலில் ஓடும் புதுத்தண்ணீர், இத்தனையும் இல்லையென்றால் கரைதொட்டு ஓடும் அகலமான தாமிரபரணி கூடவே கும்மியடிக்க தோழிகள் என்று எத்தனையோ காரணிகள் எங்கள் காலை உணவிற்கான நேரத்தை தள்ளிப்போடும். ஆனாலும், சுடச்சுட இறக்கிவைக்கும் சமையல் மணம் பசியின் நரம்புகளை மீட்டத்தான் செய்யும். இருந்தும் அம்மாவின் கண்டிப்பை மீற முடியாது.

இதற்கிடையில் இதற்கான மாற்றுவழிதான் அப்பா தரும் கைச்சோறு. அவர் சாப்பிட உட்கார்ந்த பின் தட்டிலிருக்கும் சுடச்சுட சாப்பாட்டில் பெரும் கையாய் இரண்டோ மூன்று கைச்சோறு என் உண்டி நிறைக்கும். எனக்கான உணவு நேரம் வரும்வரை என் பசி தாங்கி நிற்கும் அவர் கொடுக்கும் அந்த கைச்சோறு.

திருப்பி நான் அவர் கையில் கொடுத்திராத கைச்சோற்றை என்னால் அவருக்கு வைக்கவே நேர்ந்தது. ஒரு பிடி சோறும் நெய்யும், பருப்பும் இட்டு மதில் மேல் வைத்துவிட்டு பட்ஷி ரூபத்தில் வந்து உண்ணும் தந்தைக்காக கடந்த சில வருடங்களாக காத்து நிற்கும் தருணங்களின் தவிப்பு எப்போதும் வாய்விட்டு பகிர்ந்து கொள்ள முடியாத பெரும் வலியைக்கொண்டிருக்கும். காலம் மாற்றாத அந்த உணர்வுகளை இன்னும் ஈரமாகவே வைத்திருப்பதில் எனக்கெப்போதும் அலுப்பில்லை.

அவருக்குப்பிடிக்குமென ஏதேதோ சமைத்துவிட்டு அவராக எண்ணி ஏதோ இருவருக்கு உணவிட்டு நிமிர்ந்தாலும் தாளமுடியாத உணர்வின் பெருக்கில் என் அன்றைய உணவு இறங்க மறுக்கிறது.

எனக்கும் ஒரு நாள் பிடிசோறு வைக்க நேரும் ஆனால் என் அப்பாவைப்போல் நல்லதொரு அன்னையாய் என் தாக்கத்தை விட்டுச்சென்றிருப்பேனா?????

இந்தக்கேள்வியையே என்னுள் விதைத்துச்சென்றது இந்த வருடத்திய என் தந்தையின் நினைவு நாள்.

Friday, October 17, 2008

பெண்பால் கவிதைகள் - 1

பெண்ணியம்
என்
போதையின்
முகச்சாயைகளை
வெளிக்கிட வைத்தது

என் புகழ் போதை
என்னை
எல்லாவற்றையும்
எழுதவைத்தது
காதல், காமம்
மற்றும் என்
தூமை உட்பட.


**************

Thursday, October 16, 2008

முகமூடிக்கவிதைகள் - 4



இயலாமை

பரிதாபங்களை யாசித்தல்
கழிவிரக்கத்தை தறுவதாயிருக்கிறது.

இயலாமைகளை உரத்துச்சொல்வதை
தடுக்கிறது சுயமரியாதை

நடப்பின் இருப்புகளை
உதறவோ உடைக்கவோ முடியாத
இயல்பின் மனநிலையில்
கரம்நீட்டித்தரும்
உதவியின் கோப்பைகளை
உடைத்தெறியத்துடிக்கிறது மனது

ஏனெனில்
யாசித்தலின் எதிர்மறையாய்
இதையேனும் செய்வதில்
நிம்மதிக்கிறது "இயலாமை."

Monday, October 13, 2008

இது ஒரு மழைக்காலம்

எல்லா மழைக்காலங்களும் தனக்குள் வசீகரத்தை புதைத்துக் கொண்டிருப்பவைதான். எல்லா வயதினருக்கும் தரக்கூடிய ஆச்சர்யத்தை அதிசயத்தை மட்டுமின்றி ஆயசத்தையும் தன்னுள் கொண்டிருக்கிறது மழைக்காலம்.

பால்ய வயதுகளின் மழை நேரங்களில் வாசல் திண்ணைகளை ஒட்டிய கதவருகில் நின்றுகொண்டு கம்பி அழிகளின் வழியே வெளியே வைர ஊசியாய் தரையிரங்கிக் கொண்டிருக்கும் மழையை வேடிக்கை பார்ப்பதுண்டு. மட்டப்பா வீடுகளின் திண்ணை விளிம்புகளில் முத்து முத்தாய் தெறித்தோடும் மழை, சாய்ந்த மலபார் ஓடுவேய்ந்த வீடுகளின் திண்ணைகளின் கம்பி அழிகளுக்கு இணையாக வெள்ளிக் கம்பிகள் போன்றே தரையிரங்கும். தெருவின் ஏதோ ஓரங்களில் இருந்து கொணரும் வண்டல் மண் படுகைகள் ஒரு சிறிய நீரோடைகளை சிருஷ்டிக்கும். அந்தப்படுகைகளின் முடிவில் தெரியும் சரளைக்கற்கள் என்றோ இந்த தெருவில் போட்டிருந்த செம்மண் பாதையை நினைவுற்த்தும்.

ஓடிவரும் சிற்றோடையில் விடுவதற்கென கப்பலோ, கத்திக்கப்பலோ செய்து தர தனையன் இல்லாதபோதும், தந்தை செய்து தரும் கப்பல்களின் அளவும் வசீகரமும் மற்றெந்த தோழர்களின் கப்பலை விட விஸ்தீரணமாயிருக்கும். கரைதட்டும் கப்பலை எடுத்துவிடும் நோக்கில் சிறுமழையை தலையில் வாங்கிவந்த நாட்களில் மழை இன்னும் நெருக்கமாய் உடனமர்ந்து கொள்ளும். தெருவின் கடைசியில் வழிந்தோடும் சிற்றோடை அடுத்திருக்கும் வெற்றிலைக்கொடிக்காலுக்கோ இல்லை தென்னந்தோப்பிற்கோ சென்று விழும். தெருவின் மற்றொரு கோடியில் இருக்கும் பெருங்குளத்துள் வந்து விழும் மழைத்தண்ணீரின் உபயத்தில் குளம் நிறந்து தளும்பும் செங்கழுநீர் நிறத்தில். மூழ்கியோ, வெளித்தெரிந்தோ இருக்கும் படிகள் மட்டுமே சொல்லும் மழையின் அளவெதுன்று. எப்போது பார்த்தாலும் சலிக்காதா அந்தக்குளக்கரையில் தான் எங்கள் வீடுவிட்ட பாதங்கள் அடுத்து நிற்கும். யார் முதலில் குளம் பார்த்தனர் என்பதில் கிடைத்த சந்தோஷத்தை இப்போதும் ஏதேதோ வழிகளில் தேடிக்கொண்டுதானிருக்கிறோம்.

கல்யாணம் வரை உடன் வந்த கிராமத்து மழையின் முகம் மாறித்தான் போனது பட்டனத்தில். அடுக்குமாடி குடியிருப்புகளின் அடுத்ததடுத்த மதில்சுவர்கள் வெளிச்சத்தை மட்டுமல்ல மழையையும் கண்காணாமல் மறைக்கத்தான் செய்தது. வெளிச்சத்தை ஈடுகட்டும் வெண்குழல் விளக்குகள் போல் மழைக்கேதும் இல்லாது போனதில் யாருக்கும் வருத்தமில்லை. கான்கிரீட் சுவர்களுக்குப்பின்னிருந்து மழையின் சப்தத்தை கேட்டுக்கொண்டிருக்க மட்டுமே முடிந்தது. அப்படியும் பிடிவாதமாய் வாயிற்கதவு திறந்து மழைபார்க்க வந்தமர்ந்தால் திறந்திருக்கும் கதவுகளினூடே சுதந்திரமாய் நுழைந்து எங்கும் வியாபித்துவிடும் மழையின் பதியன்கள். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் மழைக்கும் உண்டான நிரந்தர விரோதங்களில் மனம் வெதும்பித்தான் போனது. ஈர நமுப்போடு எப்போதும் இருக்கும் துணிகள் மட்டுமே சொல்லிக்கொள்ளத்துவங்கியது மழை காலத்தை.

மாடியும் கீழுமாய் சற்றே விரிந்திருக்கும் இந்த தனித்த வீடெனுக்கு என் கிராமத்து மழையின் நினைப்பை அதிகம் கொண்டுவருகிறது. சாய்ந்திருக்கும் மலபார் ஓடுகள் வழியே மழை இங்கு வெள்ளிக்கம்பியாய் தரை இறங்குகிறது. கீழ் வீட்டின் மட்டப்பாவில் இருந்து முத்தாய் தெறிக்கிறது ம்ழை. வீட்டின் எப்புறமும் தெறிகிறது சிறு தூரலும். தணுத்த தரைகள் கால்களின் கீழ் குளீரூட்டி கிசுகிசுக்கிறது இன்று ஒரு மழை நாள் என்று. மழைநாளின் துணி உணர்த்த தனித்த கொடி ஒன்று மேல்மாடியின் மறைவில் கட்டி அதன் முணுமுணுத்த புலம்பல்களுக்கு முற்றுப்புள்ளியும் வைத்தாயிற்று. மழை மீண்டும் என்னுள் நெருக்காமாய் அமர்ந்து என் பால்ய கதைகளை மீ்ட்டெடுக்கிறது.

இப்போது கப்பலோ கத்திக்கப்பலோ செய்து தந்தாலும் ஓடிவரும் நீரோடையில் விட்டு விளையாட ஆர்வமில்லை பிள்ளைகளுக்கு அவர்கள் பட்டணத்து மழையை பழகிக்கொண்டார்கள்। நான் இப்போதுதான் சொல்ல ஆரம்பிக்கிறேன் என் கிராமத்து மழையை இருவரும் அப்போதுதான் மழையை கண்ணுயர்த்தி காண்கின்றனர். மழை ஒரு கனிந்த காதலி யாரையும் விட்டு வைக்க மாட்டாள் தானே...



Friday, October 10, 2008

முகமூடிக்கவிதைகள் - 3



நடைமேடை தூண்களுக்கு

இடயே

தெரியும்

விரைத்த கால்களும்

அதை சுற்றி நின்ற

கால்களில் இருந்த

தயக்கங்களூம்

தரும்

அச்சத்தை

தாண்டியும்

மனம்

நிம்மதித்தது

அவர்

நமக்கு

தெரிந்தவரில்லை

என்பதில்


*******


வாழ்க்கை

மிகவும்

சிக்கலாகித்தான் போனது

வாழ்த்துக்களின்

தடமும்

புரிந்தபோது.




Wednesday, October 8, 2008

50 வது பதிவு - நட்பின் பதிவு

நம்மில் பலரும் எண்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள். எதிலும் முதலாவதாய் இருப்பதில் இருக்கும் சுகம், பெருமை, இருவராய் இணைந்து இருப்பதில் உள்ள நம்பிக்கை... இப்படி எத்தனையோ எண்களில் நமக்கு ஈடுபாடு.

அது போல் இந்த ஐம்பதாவது பதிவையும் கொண்டாடித்தான் பார்ப்போமே என்று முடிவு செய்துவிட்டேன்.

ஏதும் புதியதாய் செய்யவில்லை என்ற பெரிய புலம்பல்கள் ஏதுமின்றி எல்லா பதிவுகளுமே மிக்க மனநிறைவோடு நான் எழுதிய பதிவுகள் என்றமகிழ்ச்சி ஒன்று எஞ்சிநிற்கிறது.

அதனாலேயே எனக்கு இன்னும் நிறைவு தரும் ஒரு நன்பரின் எழுத்தை என் ஐம்பதாவது பதிவாக பதிவேற்ற விழைகிறேன். எனக்காக எழுதப்பட்ட ஒரு நட்பின் பதிவிது. நட்பைப்பற்றிய பதிவிது.

நட்பு எனப்படுவது யாதெனில்?...
--- விஜி
கடற்கரையில் காந்தி சிலை அருகே கூடியிருந்தோம். ஒவ்வொரு வாரமும் நடக்கிறது தான் இது. வெள்ளிக்கிழமை மாலை என்றால் தப்பாது இந்தக் கூட்டம் எங்கள் குழுவுக்கு ஞாபகம் வந்து விடும் ஜிலுஜிலுவென்று கடற்காற்று வீசிக்கொண்டிருந்தது பேராசிரியர் நஞ்சுண்டராவ் சொல்லிக் கொண்டிருந்தார்: "நட்பெனப்படுவது யாதெனில்_____"

உணர்வு சம்பந்தப்பட்ட எதுக்கும் இப்படி ஃப்ரேம் போட்டமாதிரி வரையறைகள் வகுப்பது எனக்குப் பிடிக்காத சமாச்சாரம். ஆகவே அவர் சொல்வதில் மனம் பதியாது கண்கள் அவர் முகம் பார்த்திருந்தாலும், நினைவலைகள் எங்கெங்கோ நீந்திக் கொண்டிருந்தன.. 'நட்பென்றால் என்ன? உம்?...' என்று என்னையே கேட்டுக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தேன்.

வாழ்க்கை எனும் வேள்வியில் எத்தனையோ பேர் நம்மிடம் இனிமையாகப் பழகுகின்றனர். அவ்வளவும் நட்பாகி விடுமா? 'வசந்தா வெரைட்டி' என்பது எங்கள் பக்கத்தில் பிரபலமான சூப்பர் மார்க்கெட். இங்கு மேலாளராகப் பணியாற்றும் கோபால், நான் அங்கு நுழைந்தாலே ஓடிவந்து அன்பைப் பொழிவார். எதுவாவது வாங்கப்போனால், முதலில் "என்ன சாப்பிடுகிறீர்கள்?.. அதைச் சொல்லுங்கள்; அப்புறம் தான் எல்லாம்!" என்பார். அங்கு வருவோர் எல்லோரிடமும் அவர் அப்படித்தான் பழகுகிறாரா என்றால், 'இல்லை' என்று தான் சொல்ல வேண்டும். என்னிடம் அவருக்குப் பிடிக்கும் ஏதோ குணநலன் தான் இந்த அன்புக்குக் காரணம் என்றாலும் வியாபார நிமித்தம் தான் இந்த உறவு என்பது எனக்குப் புரியும். நான் இந்த சூப்பர் மார்க்கெட்டை விட்டு வேறொன்றுக்குத் தாவினால், இந்த அன்பு முறிந்து விடும் என்கிற நிச்சய உணர்வு எனக்குண்டு

எதுதான் நட்பு என்று மேலும் யோசிக்கலானேன்:

நட்பு ஏமாற்றங்களை உருவாக்கக் கூடாது; அது சந்தேகங்களையும் தாண்டிய ஒன்று.

தோழமை வேறு; நட்பு வேறு அதனால் நண்பர்கள் இருவர் ஒரே கொள்கையையோ, கருத்தையோ கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை. நட்பு என்பது உதட்டு உறவல்ல; இன்றைக்கு இருக்கும் நாளை காணாமல் போகும் என்கிற விஷயமும் அல்ல. உண்மையான நட்பினில் முறிவு என்பதே கிடையாது. இறப்பு ஒன்றாலேயே இருவரையும் பிரிக்க முடியும்.

இளம் வயசில் இருவர் கொள்ளும் நட்புக்கு பலம் ஜாஸ்தி அது எஃகு போன்று உறுதி குலையாது இறுதி வரை இருக்கும் 'இன்னாருக்கு இன்னார்' என்று நண்பர் கிடைப்பது கணவன் - மனைவிக்கு மட்டுமல்ல; நண்பர்களுக்கும் பொருந்தும்। இன்னும் சொல்லப் போனால், திருமணத்திற்கு முன்னேயே, மனைவி அமைவதற்கு முன்னேயே ஏற்படக்கூடிய உறவு இந்த ஆத்மார்த்த நட்பு என்கிற உறவு. இந்த நட்பின் ஆரம்ப காலங்களில் இருவராலும் ஒருநாள் கூட சந்திக்காமல் இருக்க முடியாது. ஆண்- பெண் காதலுக்கு சற்றும் மாற்றுக் குறைந்ததில்லை, இந்த நட்பின் மேன்மை. அந்தியந்த நட்பு என்று சொல்லக்கூடியவர் ஒருவருக்கு ஒருவரே இருக்க முடியும்

ஆழ்ந்த இருவரின் நட்பு அவரவர் கணவன் மனைவிமார்கள் கூடப் பொறாமைப்பட வைக்கும் ஒன்று. அதனால் அந்தியந்த நட்பை பிறர் அங்கீகரிக்க வேண்டிய அவசியமும் கிடையாது

உண்மையான நட்புக்கு 'பிரிவு' கூட ஒரு பொருட்டல்ல; நீண்ட நெடியகாலம் இருவரும் சந்திக்காமல் கூட இருக்கலாம். இந்த 'சந்திப்பின்மை'.'கால இடைவெளி' இதெல்லாம் நட்பை ஒன்றும் செய்யும் முடியாது எவ்வளவு ஆண்டுகள் கழித்து சந்தித்தால் என்ன, நேற்று பார்த்துப் பிரிந்தது போல், பச்சை பசேலென்று பசுமையாக இருக்கும். அப்படிப்பட்ட சந்திப்புகள் 'பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ' என்கிற நிலைதான். அதனால் தான் தெய்வப்புலவர், 'அகம் நக நட்பது நட்பு' என்றார். கணவனோமனைவியோ அறியாததைக் கூட நட்பு அறியும். அதனால் தான், கல்யாணங்களில் 'மாப்பிள்ளைத் தோழன்' என்று தனி மரியாதையே நண்பனுக்கு உண்டு.
ஆதலின் கோபாலுக்கும் எனக்கும் உண்டான பழக்கம் நட்பல்ல; அது ஒவ்வொருவருக்கொருவர் புரிந்து கொண்ட இனிமையான பழக்கம். அவ்வளவு தான்.

* நண்பன் குசேலன் கிழிசல் துணியில் கட்டிவந்த அவலை ஆசையோடு அள்ளி உண்ட கண்ண பெருமான் --
* சொக்கட்டான் விளையாட்டின் பாதியில் எழுந்த தன் மனைவி பானுமதியின் துகிலை நண்பன் பற்றி இழுக்க, துகிலில் கோர்த்திருந்த மணிகள் அறுந்து கீழே கொட்ட, "இந்த மணிகளை எடுக்கவோ, அன்றி கோக்கவோ" என்று கேட்ட துரியோதனன் - கர்ணனின் நட்பு --
* மன்னன் கோப்பெருஞ்சோழனுக்காக வடக்கிருந்து உயிர் துறந்த பெரும் புலவர் பிசிராந்தையாரின் தூய நட்பு --
* தகடூர் அதியமான் - ஒளவையாரின் அதிசயத்தக்க அருந்நட்பு --
* நண்பன் வள்ளல் பாரி இறந்து விட, நண்பனின் மணமாகா புதல்வியருக்கு நல்ல இடத்தில் மணம் முடிக்க அலைந்து திரிந்து பெறாத தந்தையாய்ப் பொறுப்பேற்றுக் கொண்டு நண்பன் உயிருடன் இருந்தால் என்ன செய்வானோ அதைச் செய்த புலவர் கபிலரின் போற்றி மகிழத்தக்க நட்பு ---


இத்தகைய மாட்சிமைப் பெற்ற நண்பர்களின் கூட்டம் இறந்து பட்டாலும், இத்தனை நுற்றாண்டுகளுக்குப் பின்னும் காலத்தின் இவ்வளவு மாற்றங்களுக்குப் பின்னும் இவர்
கள் நெஞ்சில் அழியாமல் இன்னும் நம் நினைவிருக்கிறார்கள் என்றால்,

இத்தகைய உன்னத நட்பின் மேன்மையை என்ன பெயரிட்டு அழைப்பது என்று தான் தெரியவில்லை।


Friday, October 3, 2008

சாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான் - வாசிப்பானுபவம்

சில புத்தகங்கள் நம்மை அதனோடே கட்டிப்போடும், சில ஏங்கவைக்கும், சில மறுகவைக்கும், சில உருகவைக்கும், சில நாம் தொலைத்த சந்தோஷங்களை, துக்கங்களை அசைபோடவைக்கும்.

ஆனால் ஒரு புத்தகம் வாசக அனுபவத்தை மீறி கதாசிரியன் காட்டிச்சென்ற உலகத்தில் நம்மை வாழ்ந்திடச்செய்தல் சாத்தியமென்று இதுவரை யாரேனும் கூறியிருந்தால் நான் நம்பியிருக்கமாட்டேன். ஆனால் தோப்பில் முஹம்மது மீரானின் "சாய்வு நாற்காலி" (கசேர்) என்னை அவ்வாறு வாழ்ச்செய்தது.

சுற்றம் மறந்து, தன் இருப்பு மறந்து, நான் என்பதும் மறந்து தென்பத்தன் கிராமத்தில் ஒருத்தியாய், சவ்தா மன்ஸிலின் ஒரு குடியிருப்பாய் நான்கு நாட்கள் என்னால் வாழ முடிந்தது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

கசேர், மய்யத், பவுரீன் பிள்ளக்கா வம்சம், எக்க வாப்பா, வாப்பும்மா, பரக்கத், அவுலியாக்கள், ஜின்னு, தங்களுமார், சாயா, வலிய அங்கத்தை, செந்தரையம்மா, ராத்திபு, .....

சவ்தா அவருக்கெ உம்மா, மன்ஸில் ஆருக்கெ உம்மா???........ மன்ஸில் எண்ணு சொன்னா அரபியெலெ ஊடு எண்ணாக்கும் அர்த்தம்"... இப்படியாக புன்னகைக்க வைக்கும் வரிகள்

இப்படி எத்தனையோ வார்த்தைகள் என்னுள் இன்னும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது. பால்யவயதில் கண்டிருந்த ஐஸ்வர்யம் அழிந்த எத்தனையோ மாளிகைகளின் கதைகளை நமக்கு மீட்டுத்தருகிறது சவ்தாமன்ஸில்.

தென்பத்தன் கிராமத்தின் அரபிக்காற்றும், திருவிதாங்கூர் இராஜியத்தின் அரசியல் ஆளுமைகளும் நம்மை கிறுகிறுக்க வைக்கிறது. கடந்த காலமும் நிகழ்காலமும் எந்த முன்னறிவிப்பும் இன்றி சுற்றிச்சுற்றி வந்தாலும் வாசிப்பிற்கு அது எந்த குந்தகத்தையும் விளைவிக்கவில்லை. முஸ்தாபகண்ணின் மன ஓட்டத்தோடு நாமும் அந்த கேரளக்கரைகளில் மிக எளிதாக பயணம் செய்து மீளமுடிகிறது.

உண்மையின் முகத்தை கண்டுணரமுடியாத ஒரு பழம்பெருமை பேசி அதன் இன்பத்திலேயே இன்றும் வாழ்ந்திருக்கும் முஸ்தபாகண்ணு இன்றைய நிலை தெரிந்தும் அதிலிருந்து மீளுவதற்குண்டான மனத்தைரியம் அற்ற ஆசியா, இவை எல்லாம் கண்டுணர்ந்தும் ஏதும் செய்ய வழியற்று அன்பை மட்டுமே சுமந்து கொண்டு வாழும் மரியம்தாத்தா,
இந்த இறந்த காலத்திலிருந்து தப்பித்துச்சென்று விடும் சாகுல் ஹமீது, எரிந்த வீட்டில் பிடிங்கியது ஆதாரம் என்று இந்த சூழலை தனக்கு சாதகமாக்கிக்கொள்ளும் இஸ்ராயில் ஆனாலும் கடைசி சில பத்திகளில் தன்முக அடையாளத்தை மாற்றிக்காட்டக்கூடிய ஒரு படைப்பு, இதனிடையே கண்ணுக்குத்தெரியாமல் பொங்கிவழியும் காமம், தறவாட்டுப்பெருமை காக்கும் சந்தன அலமாரி, பட்டு உறுமால், பப்புவர்மனின் வாள், வெள்ளித்தட்டு, வீட்டின் ஒவ்வொரு சன்னலின் விஜாவரிகள், இப்படி ஒவ்வொரு சேதன அசேதனப்பொருட்களும் இந்த நாவலில் பாத்திரமாக நம்மோடு வாழ்கிறது.

காமமும் காமம் சார்ந்த விழைவுகளும் ஒரு பழம்பெரும் தறவாட்டின் பெருமையை எங்கணம் புரட்டிப்போடுகிறதென்பதையும், "கிணற்று நீரில் மிதந்து கழியும் எத்தனை கன்னிமாரின்" சாபங்களின் வடிகாலாக சவ்தாமன்ஸில் உருக்குலைகிறதென்பதையும், இத்தனைக்கும் சாட்சியான அந்த கசேரின் கதையும், கதியும் உணர்த்தும் உன்னதமும் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதவை.

இஸ்ராயிலின் நாவிலிருந்து வரும் கடைசி நேர சொற்றொடர்கள் இன்றைய வகுப்பும் வர்க்கமும் சாரா வாழ்வியல் நடைமுறையை சுட்டுக்காட்டுவதில் மட்டுமே படைப்பாளியின் வெளிப்பாடு தெறிகிறது அதுவரை கதைசொல்லி மட்டுமே கதைசொல்லாடல் மட்டுமே நிகழ்கிறது.

எதனால இந்தப்புத்தகம் நம்மை அதோடு வாழ்வைக்கிறது என்று சற்றே தெளிந்த மனதோடு ஆராயமுற்பட்டோமானல் அங்கு ஒங்கியர்ந்து நிற்கிறது வட்டாரவழக்கு। எந்த சமரசங்களுமற்ற நெடுந்தீர்க்கமான வட்டார வழக்கில் தொடர்ந்து ஒலிக்கும் மொழி நடை, பாசாங்குகளற்ற கதைப்பாங்கு இவைகள் மட்டுமா காரணம் அதையும் மீறிய ஏதோ ஒன்று.

எல்லா உள்ளுணர்வுகளுக்கும் காரணமறிய முடியுமானால் நாம் ஏன் இன்னும் எழுத்தோடும் புத்தகங்களோடும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க வேண்டும்। நம் தேடுதல்களுக்கு ஒரு காரணியாய் நம்மை உந்திச்செல்லும் சக்தியாய் நல்ல வாசிப்புகள் மட்டுமே துணையாக முடியுமென்பது உண்மையானால் இப்புத்தகமும் ஒரு காரணிதான்.

எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் வெளிவந்துள்ள புத்தகமானாலும் எனக்கு படிக்ககிடைத்ததென்னவோ இப்போதுதான்.. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

முகமூடிக்கவிதைகள் - 2

01. சமாதனங்கள்
ஆசுவாசங்கள்
இடைவெளிகள்
பிறப்பு
இறப்பு
கண்ணீர்
கவலை
இவைகளின் இடையே
இன்றைய சந்தோஷம்

02. இலக்கியம் புடலங்காய்
கவிதை கத்தரிக்காய்
கதை அவரைக்காய்
கட்டுரை வெண்டைக்காய்
இவையெதையும்
செய்தது நானில்லை
பின்னெப்படி
உப்புக்கும் சுவைக்கும்
நான் பொறுப்பு???


03. சில
உணர்வுகள்
வார்த்தைகள்
எப்போதும் உடனிருக்கும்
அன்பு
காதல்
துரோகம்
இடைவெளி
சாவு
கோபி
சம்பத்
நிழல்கள்
நவீனன் போல

Thursday, September 25, 2008

முகமூடிக்கவிதைகள் – முகமூடியின் கவிதைகள்

01. குறுக்கும் நெடுக்கும்

கோடுகள் ஏதுமின்றி

நீண்டு செல்கிறது

நெடுஞ்சாலையின்

மஞ்சள் கோடு

வாழ்க்கை

அதுபோலில்லை

அது போலியில்லை




02. நாய்களோ

பூனைகளோ

குதிரைகளோ

எனக்கு நெருக்கமில்லை

உருவகப்படுத்த

விலங்கினம் தேடினேன்

என்னுள்ளிருக்கும்

தாழ்திறவா

ஆரண்ய கதவுகளில்

இடமில்லை அட்டைகள்



03. பயணங்கள்

தன் இலக்குகளை

இன்றில்லாவிடினும்

நாளை அடையலாம்

சமரசங்களற்றபோது

Tuesday, September 23, 2008

பறவைகள் -இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், முதுகெலும்புள்ள (முள்ளந்தண்டுள்ள) புள் என்றும் குரீஇ எனும் வகையைச் சேர்ந்த, முட்டையிடும் விலங்குள்

அந்த அலுவலக அறையின் சன்னலை ஒட்டிய என் இருக்கையே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அதன் சன்னல் கதவுகளுக்குப்பால் தாழ்ந்து வளைந்திருந்த மரக்கிளையில் பறைவைகள் வந்து அமர்வது முதலில் எனக்கு ஆச்சர்யமாய் இருக்கும். இந்த செல்போன் டவர் காடுகளில் இப்போதெல்லாம் பறவைகளைப்பபர்ப்பதே அபூர்வமாகிப்போனது. ஆனாலும் தினமும் நான் வந்து அமர்ந்ததும் அந்த தாழ்ந்த கிளைகளில் குறைந்தது ஐந்து அல்லது ஆறு பறவைகளாவது வந்து அமர்ந்து கொள்ளும்.வெகு நாள் கவனித்தலுக்குப்பின் தான் நான் உணர்ந்தேன் அத்தனையும் வெவ்வேறு விதமான பறவைகள் அதனாலேயே ஆர்வமானேன்.


கொஞ்சம் கொஞ்சமாய் நன்பர்களுடனான அரட்டை குறைந்தது . பொட்டி தட்டும் நேரம் போக மற்ற நேரங்களை ஆக்ரமித்துக்கொண்டிருந்த தமிழ்மணமும், பதிவுலகமும் மெல்ல மெல்ல கண்முன் தேய்ந்து மறைந்து பறவைகளைப்பற்றிய தேடல் தொடங்கியது.

இதனிடையில் அம்மாவின் சுகவீனம் என்னை இரண்டு வார கட்டாய விடுமுறையில் வீட்டில் இருக்கவைத்தது. இணையம் இல்லாத கணணிபோல் மனமெல்லாம் பறவைகளைக்காண மெல்ல ஏங்கியது. காலை வேளைக்கான மருந்துகளை கொடுத்துவிட்டு அவளை மெல்ல தூங்கச்செய்துவிட்டு பலகனிக்கு வந்து வெகுநாட்கள் முன்பு விட்டுப்போன புத்தகத்தை வாசிக்கத்துவங்கியபொழுதில் தான் கவனித்தேன் எதிர்வீட்டு பலகனியில் அமர்ந்திருந்த அந்தப்பறவைகளை. புரண்டு வரும் வெள்ளி அலையென ஓட்டமாய் ஓடிப்போய் அம்மாவிடம் சொன்னேன் அம்மா அந்தப்பறவைகளைப்பார் என அவள் என்னைத்தான் பார்த்தாள் வித்யாசமாய்.


பின்னெப்போதும் கூடு திரும்பும் வேளைவரை சில பறவைகள் என்னோடு இருப்பதையும். சாலைகளில் வாகனக்கூட்டங்களுக்கு நடுவிலும் பறவைகள் கண்களுக்கு தனித்து தெரிவதையும் உணரத்துவங்கினேன்.


மொட்டை மாடியில் பறவைகளுக்கென நீர் கிண்ணங்கள் வைத்தாலும் வராத பறவைகள் இப்போதெல்லாம் என்னோடு நெருங்கிவந்து சம்பாஷிக்கத்துவங்கியது.


அப்போது சொன்னது ஒரு பறவை உன்னால் பறக்க முடியுமென, நகைத்து திரும்பிய நான் சொன்னேன் உன்போல் நானொன்றும் பறவையல்ல மனிதவர்க்கம் என்று. மீண்டும் சொன்னது அந்தப்பறவை உன் பூர்வீகம் பறவைதான் உனக்கும் இறக்கைகள் உண்டு உன் தோள்களுக்கு கீழே கூர்ந்து பாரென்றது. பயந்து போன நான் சன்னலை மூடிவிட்டு படுக்கைக்கு வந்தேன்.


ஆனாலும் ஆர்வம் யாரை விட்டது, மெல்ல உடைவிலக்கி தடவிப்பார்க்கையில் மெலிதாய் விரிந்தது அந்த சவ்வுப்படலம். திகிலில் ஓவெனக்கத்தி ஓய்ந்தேன். சன்னல் திறந்து பறவை தேட இப்போது புரிந்ததா நீ எங்கள் கூட்டமென்று ஒரு பறவைகூறும் மொழியுணர்ந்தேன். வடிவங்களற்ற வார்த்தைகளற்ற மொழியும் அன்று முதல் புரியலாயிற்று.


என் வீடே எனக்கு அந்நியமாயனது. எனக்கான இடம் இதுவெல்ல என ஒவ்வோரு நாளும் ஒதுங்கிப்போனேன். உணவும் பழக்கமும் மாறிப்போனது, வடிவோடு கூடிய எந்த மொழிகளும் செவியில் மரத்துப்போனது.


என்னவர் என்னை எங்கோ கட்டிடக்காட்டுக்குள்ளும், இயந்திரக்குப்பைகளுக்குள் அழைத்துச்சென்றார். ஏதேதோ மனிதர்கள் எதையெதையோ கேட்டனர், சோதனை சாலைகளில் என் ரத்தமும் மலமும் சோதிக்கப்பட்டது ஆனாலும் என்னுள் ஏதும் மாற்றமில்லை


எங்கு சென்றாலும் என் கூட்டத்தை தேடத்துவங்கினேன் அவைகளும் என்னோடு இடைவிடாது தொடர்பிலிருந்தது.


வசந்த காலம் முடியப்போகிறதென்றும் வேறு நீர்நிலை தேடிச்செல்லவேண்டும் என்றும் என்னோடு முடிவெடுத்து சொன்ன நாள், நான் என் தோள்களுக்கு கீழே இருந்த இறக்கைகளை விரித்து அந்த கட்டிடத்தின் 11 வது மாடியில் இருந்து பறந்து போனேன் மிகவும் சந்தோஷமாய் ஆனாலும் கட்டிடத்தின் கீழே மட்டும் இரத்தச்சகதியாய் யாரோவும் கூடவே அழுகையும் புலம்பலுமாய் ஒரு கூட்டமும்.



Wednesday, August 20, 2008

இளம் பிராயத்தின் மொழி



பேசும் மொழியின் பல சாத்தியக்கூறுகளை நமக்கு முன் கடை பரப்பிச்சென்றதான இளம் பருவங்கள் இப்போதைய நகரத்து இளம் தலை முறைகளுக்கு ஆட்பட்டுள்ளதா என்பது மிகப்பெரிய கேள்வி.

மொழி என்பதனை சம்பாஷானைகளுக்குண்டான கருவி என்று எடுத்துக்கொண்டால், உடல் மொழியும், அந்நிய பாஷைகளும் அதனதன் ஆதிக்கத்தை இளசுகளிடையே பதித்து வைத்திருந்தாலும் நாம் சிறு வயதில் கிராமப்புறங்களின் குளக்கரைகளில், தண்ணீர் தொட்டி அருகில், கோவில் வாசல்களில், பந்தடிகளில், பேசித்திரிந்த தமிழ் மொழியின் பல் வேறு பட்ட சாத்தியங்களை இவர்கள் அறிந்திருக்கவில்லைதான். அதற்கான ஆர்வங்கள் கூட அற்று இருப்பதும் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய அவலம்.

சிறு வயதில் பேசிப்பழகிய சில தமிழ் மொழியின் வடிவங்கள்.


லானா பஷை

நீ எங்க போற

நில் நீ எல் எங்க பொல் போற

நான் உன் கூட வரேன்

நல் நான் உல் உன் குல் கூட வல் வரேன்

அந்தப் புத்தகம் படித்தாயா

அல் அந்தப் புல் புத்தகம் பல் படித்தாயா


இது போன்ற வார்த்தை பிரயோகங்களை யார் உருவாக்கினார்கள், எங்களுக்கு கற்றுத்தந்தது யார், இன்று வரை யோசித்ததில்லை ஆனால் இப்போது கார்டூனும் நாட்ஜியோவும் பார்க்க சிறு பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கத்தேவையில்லாதது போலவே இது நமக்கு வழிவந்துள்ளது.


கானா பாஷை

நீ எங்க போற

கநீ கஎகங்கக கபோகற

நான் உன் கூட வரேன்

நாகன் கஉகன் ககூகட கவகரேகன்

அந்தப் புத்தகம் படித்தாயா

கஅகந்கதகப் கபுகத்கதகககம் கபகடிகத்கதாகயா


மிக வேகமாக வந்து விழக்கூடிய இந்தச்சொற்கள் தரும் இன்பம் அன்றும் இன்றும் விவரிக்க முடியாததாகவே இருக்கிறது.

இது போன்ற மற்றுமொரு வழக்கமும் இருந்தது


திருப்பி

நீ எங்க போற

றபோ கங்எ நீ / நீ கங்எ றபோ

நான் உன் கூட வரேன்

ன்ரேவ டகூ ன்உ ன்நா / ன்நா ன்உ டகூ ன்ரேவ

அந்தப் புத்தகம் படித்தாயா

யாதாத்டிப ம்கதத்பு ப்தந்அ / ப்தந்அ ம்கதத்பு யாதாத்டிப


இப்படி பேசுவது பெரும்பாலும் ஆண் பெண் இரு பாலருக்கும் பொதுவாகவே இருந்தாலும், பெரும்பாலும் பெண்குழந்தைகளே இதை அதிகம் பிரயோகித்து பார்த்திருக்கிறோம். என் வீட்டில் இருவருமே பெண் பிள்ளைகள் என்ற காரணத்தில் ஆண்கள் உலகமும் அவர்கள் பிரத்யோக பாஷயும் எங்களுக்கு மிகவும் அந்நியமாகவே இருந்து வந்ததும் கூட ஒரு காரணமாயிருக்கலாம். இந்த வியப்பு இன்னும் என் இரு மகன்களின் சம்பாஷனையே கேட்க கேட்க விரிவடைந்து கொண்டே செல்கிறது. இப்போதைய பெண் பிள்ளைகளின் பேச்சும் இப்படித்தான் இருக்குமோ இதை அறிந்து கொள்வதற்காகான சாத்தியக்கூறும் இல்லாமல் போனதில் வருத்தம் தான்.

இப்போது இது போன்ற வார்த்தை பிரயோகங்கள் இன்னும் நம்முள் வாழ்ந்து கொண்டிருக்கிறதா, வார்த்தைகளை வேகமாக கையாளும் சாகித்யத்தை நாம் இன்னும் கொண்டிருக்கிறோமா என்று சோதித்துப்பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது. அதற்காக நம் சிறு வயது தோழி தோழியர்களை சந்தித்து உரையாடவேண்டும் என்று ஊர் ஆசைகளையும் தோற்றுவிக்கிறது. பிறந்த கிராமங்களை குறித்த காதலுக்கு வெவ்வேறு வடிவங்கள்.


இந்த சிந்தனை என்னுள் எழும்ப காரணமான எஸ்.ராவின் கதைக்கான சுட்டி. இல்மொழி

Saturday, August 16, 2008

கதை சொல்லிக்கு புரிந்த கதை


இரண்டு பேரை மட்டும் வைத்து கதை சொல்ல முடியுமா, முடியும் என்று தான் தோன்றுகிறது ஏனெனில் என்னுடைய இந்த கதையில் சியாமளியும் அவள் அம்மாவும் மட்டும் தான் கதை மாந்தர்கள். அவள் கணவனோ, இல்லை குழந்தைகளை கதைக்குள் வரத்தேவையில்லை என முடிவு செய்திருக்கிறேன்.. கதை சொல்லியின் முடிவுகளாலாயே எல்லா கதைகளும் கட்டமைக்கப்படுகின்றனவா இல்லை படைப்பு அவனை மீறி படைத்துக்கொள்கிறதா முடிவை முடிவில் பார்த்துக்கொள்ளலாம். இப்போது கதைக்குள் செல்வோம்.

எல்லோராலும் மாதத்தில் எந்தெந்த தேதியை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளமுடியும், 1ம் தேதி, சம்பளநாள் என்பதால், 7 தேதி வேலைக்காரி, பேப்பர்க்காரன் பில் கொடுக்க வேண்டும் என்பதால், 10ம் தேதி ஆவின் பாலுக்கு பணம் கொடுத்து கூப்பன் வாங்க வேண்டும் என்பதால், 15ம் தேதி மின்சார கட்டணம் கட்ட வேண்டும் என்பதால், அப்புறம் ஒரு பத்து நாட்கள் விச்ராந்தியாக இருந்து விட்டு 25 தேதிக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாகத் தீர்ந்து போகும் மளிகை சாமன்களை வாங்கி நிரப்ப வேண்டியிருப்பதால் அடுத்த 5 நாட்களும் மொத்தமாக மாத கடைசி என்ற ஞாபகம் இருக்கும். 30 அல்லது 31ம் தேதி மாதாந்திர இலக்கை கணக்கு பார்த்து முடிக்க வேண்டியிருப்பதால் ஞாபகம் இருக்கும். ஆனால் சியாமளிக்கு 13ம் தேதியும் ஞாபகம் இருக்க வேண்டும், ஏனெனில் அவள் அம்மாவை மருத்துவரிடம் அழைத்துச்செல்லவேண்டிய நாள் அது. அன்று அவளுக்கு இரண்டே இரண்டு சாய்ஸ்தான் ஒன்று ஞாபகமாக அம்மாவை மருத்துவரிடம் அழைத்துப் போய்விட்டு அம்மா மருந்து மாத்திரை வாங்கி வரும் வரை மருந்து கடை வாசலில் கால் மாற்றி நின்று அழைத்து வரவேண்டும். இல்லையேல் சுத்தமாக மறந்து விட்டு அலுவலகத்தில் இருந்து தாமதாக வரவேண்டும், இத்யாதி இத்யாதி பிரச்சனைகளால் வரும் போதே மருத்துவரிடம் டோக்கன் எடுத்து வைக்க மறந்து வந்து விட்டு அதனால மருத்துவரிடம் பத்து மணி வரைக்கும் காத்திருக்க வேண்டுமே என்ற கடுப்பு தரும் பயத்தினால்
மருத்துவரிடம் போகமல் இருக்க ஏதோதோ உபாயம் செய்யவேண்டும். இதில் பிரச்சனை என்னவென்றால் இரண்டாவது பிரயோகத்தினால் கூடுதலாக அம்மாவின் அதிருப்திக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதன் விளைவுகளைச்சொல்வதிற்கில்லை இந்தக்கதை.

இப்படி மாசா மாசாம் மருத்துவரிடம் காட்டி மருந்து வாங்கிவந்தாலும் ஒவ்வொரு மாதமும் சில இடைப்பட்ட ஆஸ்பத்திரி தேவைகளும் இருக்கும், ஆனால் ஒன்றுதான் சியாமளிக்கு புரிந்து கொள்ள முடியாததாய் இருந்தது. அவ்வப்போது அம்மா மருந்து கடைக்குச்சென்று சில மருந்துகளை திருப்பிக்கொடுத்தும் சில மருந்துகளை அதற்குப்பதிலாய் வாங்கிக்கொள்வதும் எதற்கென்று அவளுக்கு புரிந்ததேயில்லை. மருத்துவரிடம் காட்டி அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை வாங்கிய பின் எதற்காக அதை திருப்பிக்கொடுக்க வேண்டும்??? வேறு மாத்திரைகளை ஏன் வாங்க வேண்டு, அவள் அம்மாவிடம் கேட்டதற்கு அந்த டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்து எதுவும் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை அதனால் நான் பழைய டாக்டர் (சுமார் 10 வருடங்களுக்கு முந்தி) கொடுத்த மாத்திரையையே வாங்கிக்கொண்டேன் என்பாள். ஆனால் அடுத்த 13ம் தேதி மருத்துவரை சென்று பார்த்தேயாகவேண்டும்… இது எதற்கு? அவர் மேல், அவர் தரும் மருந்தின் மேல் நம்பிக்கை இல்லையென்றால் எதற்கு அவரிடம் செல்ல வேண்டும்?. ஆனால் அம்மாவோ உற்சாகமாக சில புதிய மாத்திரை பட்டைகளை வாங்கிக்கொண்டு வருவாள். 3 அல்லது 4 நாட்களுக்கு பிரச்சனை ஏதும் இல்லாமல் இருக்கும் பிறகு வழக்கம் போல அந்த டாக்டர் மருந்து எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை நான் ஒரு மாதத்திற்கு மாத்திரை வாங்கி வந்துவிட்டேன் என்று சொல்லி மாத்திரை மாற்றவேண்டிய படலம் ஆரம்பிக்கும். இதன் ஆணிவேர் என்ன என்பது சியாமளிக்கு புரியாமலே பல சமயம் குழந்தைகளிடம் அந்தக் கோபத்தை காமித்திருக்கிறாள். (இதுல மாத்திரையை கொஞ்ச நாளைக்கு மாத்திரம் வாங்கிட்டு அது ஒத்து வந்தா மீதம் வாங்கிக்கலாமே, வேற டாக்டரைப்பார்க்கலாமா, (எந்த டாக்டர் கிட்ட போனாலும் இது தான் கதைங்கறது வேற விஷயம்) போன்ற ஆலோசனைகளை எல்லாம் சியாமளியால் சொல்ல முடியாது சொன்னால் என்னால உன்னை இன்னோருதரம் தொந்தரவு பண்ணமுடியாது, நீயே பாவம் தினைக்கும் அலையறே அதனால நான் ஒட்டு மொத்தமா வாங்கிக்கறேன் இந்த தடவை ஒன்னும் பண்ணாதுன்னு டாக்டரே சொல்லியிருக்கார் போன்ற சமாதானமோ இல்லை வேறு சில எதிர்வினைகளோ வரும் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியதில்லை)

இந்த சூழ்நிலையில் தான் கதை சொல்லி அவளை சந்தித்தான் பிரச்சனையின் அடிவேரைத்தேடும் ஆர்வம் அவனுக்கும் வந்தது இலக்கியவாதியாயிற்றே!!!

மண்டையை முட்டி மோதி விடை காண எல்லா முயற்சிகளும் செய்துகொண்டிருந்தான் கிட்டத்தட்ட ஒரு மாதமாகியும் ஒன்றும் புலப்பட்டாதியில்லை। இதில் மற்றுமொறு 13ம் வந்து விட்டு போனது। வேறு கதையோ, கவிதையோ எழுதும் எந்த முயற்சியையும் செய்ய விடாது சதா இதுவே அவன் மனதுக்குள் குடைந்து கொண்டிருந்தது। அப்போதுதான் அவன்
இரு குழந்தைகளுக்கும் இடையேயான் சம்பாஷனையை கேட்க நேர்ந்தது

பையன் - ஏண்டி அப்பாகிட்ட நேத்திக்கு தானே பென்சில் வாங்கின இன்னக்கே எல்லாத்தியும் சீவிட்டு இப்ப பென்சில் இல்லன்னா என்ன அர்த்தம்

பெண் - போடா எனக்கிந்த பென்சில் பிடிக்கல ஒரே பட்டையா எழுதுது, அதனாலதான் வேற பென்சில் வாங்கனும்.

பையன் - ஏண்டி போன தடவை இதே பென்சில் தானே வாங்கினே நல்லாருக்குன்னு சொன்னியே.

பெண் - ஆமாம் இந்த தடவை நல்லாயில்ல அதுக்கென்ன இப்போ,

பையன் - ஏய் நீ ஏதோ திருட்டுத்தனம் பண்ற என்ன சொல்லிடு இல்லேன்னா இன்னிக்கு நாட்ஜியோ பார்க்கும் போது டீவியை அணைச்சுடுவேன்

பெண் - டேய் டேய் வேண்டாண்டா, பின்ன என்ன அப்பா உனக்கு மட்டும் இங் காலியாக காலியாக பேனா வாங்கி கொடுத்துட்டே இருக்காங்க, நான் வேற பென்சில் கேக்கலேன்னா இது முடியறமட்டும் எனக்கு வாங்கித்தரமாட்டாங்க நீ மத்திரம் புதுசு புதுசா பேனா வாங்கிப்பயாக்கும் அப்பா கூட இதுக்காக வண்டில உக்காந்து கடைக்கு போயிட்டேயிருப்பயாக்கும் நானும் அப்பா கூட கடைக்கு போகனும் அதாண்டா.. பிளீஸ்டா அப்பா கிட்ட சொல்லிடாதடா.


கதை சொல்லிக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது… என்ன உங்களுக்கும் புரிஞ்சுதா கொஞ்சம் சியாமளிக்கும் புரிய வையுங்களேன்.

(குறிப்பு, கதை சொல்லி நினைத்தபடி இரண்டு பேரை மட்டும் வைத்து கதை முடியவில்லை, கடைசியில் அவனும் அவன் பிள்ளைகளும் கூட அவனறியாமலே பாத்திரமாகிப்போனார்கள்… இதனால் யாவருக்கும் சொல்லவருவது என்ன வென்றால்……..)

Wednesday, August 13, 2008

போதை


பிரஞ்ஞையற்று கிடக்குது

உலகம்

விழுந்து கிடக்கும்

குடிகாரனைப்போல

சுற்றிலும்

குப்பை கூளம்

அவமானம் ஆக்ரமிப்பு

அன்பு அலட்சியம்

துரோகம் நட்பு

மற்றும்

காமம்.


Tuesday, August 12, 2008

சில கவிதை முயற்சிகள்




















பெரும் வனப்புக்களை

காட்டி கூட்டி

கூட்டி காட்டியும்

செய்யும் மதர்ப்புகள்

ஏதும் அறியாமலே

செல்கிறது வாழ்க்கை

மிகத்தெளிவாக.


*******************


நோய் வந்துணர்த்தியது

ஒவ்வொருவரும்

தனித்

தனி

என


*******************

திறந்து கிடக்கு

உலகம்

நம்

முன் அனுமானங்கள்

எல்லாம்

சாவித்துவாரத்தின்

வழியாக.

Thursday, July 31, 2008

அடுத்தவர் உலகம் பற்றிய ஆர்வக்கோளாறு
















அந்த மின்சார தொடர்வண்டியின் கூட்ட நெரிசலில் அவள் எனக்கு வித்யாசமாய் தெரிந்த காரணத்தை யோசித்துக்கொண்டிருக்கும்போதே நான் இறங்குவதற்கான நிறுத்தம் வந்துவிட்டது. நான் இறங்கும் போதும் அவளை மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டுத்தான் இறங்கினேன், அவள் முகத்திலும் ஒரு குழப்பம். ஒரு வேளை நான் ஏன் மீண்டும் மீண்டும் அவளை உற்றுப்பார்க்கிறேன் என்று நினைத்து குழம்பியிருக்ககூடும் ஆனாலும் அவள் வெகு இயல்பாய்த்தானிந்திருந்தாள்.


வழி நெடுக யோசித்துக்கொண்டே வந்தேன் எதனால் அவளெனக்கு வித்யாசமாய்த் தெரிந்தாள்.

பொது மக்கள் ஏறி இறங்கும் பாதைக்கு மறு புரத்தில் உட்கார்ந்திருந்ததாலா.. இல்லை எல்லோரும் தான் உட்கார்ந்திருந்தார்கள்

உடை ஏதாவது வித்யாசமாய் அணிந்திருந்தாளா இல்லை சொல்லப்போனால் மிகச்சாதரணமாய் மஞ்சள் சிவப்பு பார்டர் பாலியிஸ்டர் பட்டுப்புடவைதான் கட்டியிருந்தாள்.

ஏதாவது புதியதாய் கையில் வைத்திருந்தாளா - இல்லை ஒரு சிலரைப்போல் அவளும் பூக்கட்டிக்கொண்டுதான் இருந்தாள்.

ஆங்க்க்க்க் புரிந்து விட்டது துடைத்தெடுத்தார் போல் பிளீச்சிங் செய்யப்பட்ட அவள் முகம், அதில் இருந்த கொஞ்சம் கீரீம் கலந்த முகப்பூச்சு, மெல்லியதாய் இட்டிருந்த உதட்டுச்சாயம். நாகரீகமான கைப்பை, அதிலிருந்து எடுத்து தன் உதட்டுச்சாயத்தை துடைத்துக்கொள்ள பயன்படுத்திய வெட் டிஷ்யூ பேப்பர். இப்போது புரிகிறது இத்தனை அலங்காரங்களோடும் கையில் பூக்கட்டிக்கொண்டும் தரையில் அமர்ந்து அவள் பயணம் செய்த விதம் தான் எனக்கு அவளை வித்யாசமாய் காட்டியிருக்க வேண்டும்.

பெரும் தலைவலி தீர்ந்தது போல் ஒரு நிம்மதி.

ஆனால் அடுத்த நிமிடம் மற்றொரு கேள்வி குடைய ஆரம்பித்தது, அப்படியானல் அவள் யார? பூக்கட்டி வியாபாரம் செய்பவள் இல்லையா, ஆம் என்றால் இத்தனை ஒப்பனை எதற்கு? ஆசைதான் என்று கொண்டால் பிறகு ஏன் அதை எல்லாம் துடைத்து எடுத்தாள்?…(இப்படி மனது கேட்டுக்கொண்டிருந்தாலும் என்னை நானே கடிந்தும் கொண்டேன் இதென்ன பூர்வாஷா சிந்தனை, பூக்காரி ஒப்பனை செய்து கொள்ளக்கூடாதா!).

ஒரு வேளை செல்லுலாய்ட் உலகில் ஏதாவது சின்ன சின்ன வேடங்கள் செய்து வாழ்பவராய் இருக்குமோ பின் ஏன் இந்த பூக்கட்டும் வேலை - ஓய்வு நேரத்தில் செய்யும் இரண்டாவது வேலையாயிருக்கும்,

இப்போதெல்லாம் கல்யாண மண்டபங்களில் ஒப்பந்த அடிப்படையில் வரவேற்பாளர்களைக்கூட நியமிக்கிறார்களே அது போன்ற வேலையாய் இருக்குமோ இல்லை சிறிதே வயதானவர் போன்ற தோற்றம் உள்ளதே

ஏதாவது காஸ்மெட்டிக் கம்பெனிகளின் விற்பனை பிரதிநிதியாய் இருக்குமோ அப்படியானல் அந்தப்புடவை ஒத்து வரவில்லை

இப்படி கேள்விகள் பலநாட்கள் அவ்வப்போது தலை தூக்கினாலும் மீண்டும் அவளை காணசந்தர்ப்பம் அமையாததினால் அது மெதுவாக மூளையின் வழக்கமான ஞாபகக்குவியல்களில் ஒன்றாகிப்போனது மீண்டும் ஒரு நாள் அவளைக்காணும் வரை.

இந்த முறையும் அப்படியே ஆனால் அவள் சட்டென்று என்னை அடையாளம் கண்டுகொண்டாள் புன்னகைக்கவும் செய்தாள் எனக்கு மிகவும் கஷ்டமாகிப்போனது. என் உள் மன ஓட்டங்களை அவள் அறிந்து கொள்வாளோ என்று மிகவும் பயமாய் போனது வலுக்கட்டாயமாய் நெரிசலுக்குள் என்னைத்திணித்தபடி அவள் பார்வையில் இருந்து என்னை மறைத்துக்கொண்டேன்.. ஆனால் கேள்விகள் முன்னெப்போதையும் விட மிக வேகமாக அதுவும் விடைகிடைக்கூடிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளாத ஆதங்கத்தோடே எழ த்துவங்கியது..

அடுத்த முறை என்ன செய்வேன்..

Wednesday, July 30, 2008

கடவுளும் - "அவனும்."






















வெள்ளிக்கிழமை தோறும் அவன் செல்லும் கோயில்களின் படிகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போனது. கூடவே அவன் வாழ்வின் சுபிட்சங்களும். பெட்டிநிறைய நிரம்பி வழியத்தொடங்கியது சந்தோஷமும், காசும், பணமும்.


செல்வம் சேரச்சேர அவன் மிகுந்த பக்திமானான், எல்லா பூஜைகளையும் சந்துஷ்டியோடும் ஆரவாரத்தோடும் செய்யத்தொடங்கினான், எல்லா கோவில்களுக்கும் மிகுந்த ஆர்வத்தோடு நாள்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் என கணக்கிட்டுச் செல்லத்துவங்கினான். செல்வத்தோடு கூடவே அவன் கர்வமும் வளரத்துவங்கியது.

ஆனால் அப்போது தான் அது நடந்தது. தேர்ந்த பக்தியோடும் மிகுந்த மனக்கிலேசத்தோடும் ஒரு விஷயத்திற்காக அவன் இவ்வாறு கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தான்..தெய்வமே.. எனக்கிந்த தடையை நிவர்த்தி செய்து தாரும், நான் கேட்பதெல்லாம் எனக்காக மட்டுமல்ல, ஊருக்காகவும் மற்றும் உமக்காகவும் தான். நீர் எனக்குத்தரும் செல்வங்களை ஏழை எளியவர்களுக்காக நான் செலவு செய்துகொண்டிருப்பதும் இன்னும் எத்தனையோ உதவிகளை செய்யக்காத்திருப்பதும் நீர் அறிந்தது தானே எனவே இந்த காரியத்தை எனக்கு வெற்றிகரமாக முடித்துத்தாரும.

அந்த சமயத்தில் அவன் காதுகளில் மட்டும் ஒலித்த அந்தக்குரலை அவனால் சட்டென்று இனம் கண்டுகொள்ள இயலவில்லை ஆனாலும் ஒலி தொடர்ந்து கொண்டே இருந்தது அதன் சாரம்சாம் இது தான். பக்தனே நீயும், சமூகத்தை குறித்த உன் பேரன்பும் எனக்கு மிகவும் விருப்பமானதாய் உள்ளது. உனக்காகவும், ஊருக்காகவும், பின் எனக்காகவும் நீ சேர்க்கும் செல்வங்களும் அதற்காக நீ செய்யும் பூஜைகளும் எனக்கு மிகுந்த திருப்தியை தருகிறது இதனாலேயே நீ கேட்கும் இந்த உதவியை நான் உனக்கு செய்ய சித்தமாயிருக்கிறேன், மேலும் நான் உன்மூலமாகவே இந்த உலகத்திற்கு மிகுந்த நன்மைகளையும் செய்ய விழைகிறேன் எனக்கூறினார். பின் இதுகாரும் பேசியதாலோ என்னவோ நா வரண்டுபோய் குடிக்கத்தண்ணீர் கேட்டார், பின் அவன் பூஜையில் நெய்வேத்யத்திற்காக வைத்திருந்த பானகத்தை ஒரே மடக்கில் குடித்துவிட்டு மவுனமானார்.


இதுவரை தன் காதில் விழுந்த சப்தங்களை தன் பிரமையென்று எண்ணியிருந்த அவனுக்கு பானகம் காணாமல் போனதும் தான் வந்தது கடவுளென்று முழுவதும் உரைத்தது. சொல்லொண்ணா சந்தோஷம் அடைந்தான், தனக்கொரு புதுவாழ்வையும், வழியையும் காட்டித்தந்த கடவுளுக்கு அனந்த கோடி நன்றி கூறினான். கடவுளும் உலகத்திற்கு நன்மை செய்ய தனக்கோர் உபாயமும் உருவமும் கிடைத்ததென்றெண்ணி அவனோடு மிகவும் நெருக்கமாகத்துவங்கினார், அதன் பின் கடவுள் அடிக்கடி அவனுக்கு கேட்கத்துவங்கினார். அவன் சந்ததி கூட சந்தோஷமாய் வாழும் அளவிற்கு பெருமளவு செல்வம் சேர்ந்து போனது.

அங்கேதான் அவனுக்கு பெரும் நெருக்கடி துவங்கியது. எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று உதட்டளவில் சொன்னாலும் இந்த செல்வங்களை உண்டாக்க தான் செய்த முயற்சிகளை அவன் மறக்கத்தயாரயில்லை. கண் விழித்த இரவுகளை அலைந்து திரிந்த நேரங்களின் வியர்வைகளை அவன் கடவுளுக்கு மட்டுமே சொந்தமான வெற்றியாக முழுவதும் விட்டுத்தர முடியவில்லை. ஆனால் கடவுளோ இயல்பிலேயே அத்தனையும் தனக்குச்சொந்தமானது என்பதினால் வெகு இயல்பாக உரிமை கொண்டாடிக்கொள்கையில் அவன் மனம் வெதும்பித்தான் போனான்.


மற்றெவரையும் அண்டவிடாது கடவுள் அவனோடு கூடவே சதா பேசத்தொடங்கியதும் அவனின் அன்றாட அலுவல்கள் அவரின் ஆணைப்படியே நடக்கத்துவங்கியது. ஆனாலும் அதில் அவனின் தானெனும் ஆளுமைக்கு சிறிதும் விருப்பமற்று போனது. அவன் நினைத்ததை விட பெருமளவு நேரத்தையும், செல்வத்தையும் கடவுளின் கட்டளைக்கிணங்கி செலவிட வேண்டி வந்தது. அதனால் சிலசமயம் கடவுளின் குரலை செவிமடுக்காதவன் போல் தவிர்க்கத்துவங்கினான். அதைக்கண்ட கடவுள் உரத்த குரலோடும் சிலசமயம் தடித்த வார்த்தைகளோடும் அவனோடு சம்பாஷிக்கத்துவங்கினார்.


அப்போதுதான் அவன் முடிவு செய்தான், தான் ஒரு மருத்துவரை ஆலோசிப்பதென்றும் அவரின் அறிவுரைப்படி சிகிச்சை மேற்கொள்வதென்றும். மருத்துவரை சந்தித்த அவனைப்பார்த்த மருத்துவர் தங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டார். அப்போது அவன்
எனக்கு காதில் குரல்கள் பேசுவது போல் எப்போதும் ஒரு பிரமை தோன்றிக்கொண்டேயிருக்கிறது, இதிலிருந்து என்னை மீட்டெடுங்கள்" என்று கூறினான். அப்போது அவனோடு பேச வந்த கடவுள் விக்கித்துப்போனார்.

Wednesday, July 16, 2008

கற்றுக்கொள்ளவும் சிலவுண்டு – நெருப்பிடமிருந்தும்















நெருப்பின் வசீகரம் என்றும் தவிர்க்கவும் தாங்கவும் முடியாததாய், அத்தனையும் கபளீகரிக்கும் அதன் நாவின் பெரும்பசி. திரைச்சீலை, புத்தகங்கள், நிழல்படங்கள், சன்னல் கம்பிகள், கண்ணாடி சட்டங்கள், சில சமயம் எதிராளியின் சந்தோஷங்கள் இவையனைத்தையும் உண்டு விட்டு களைப்பின்றி இன்னும் இன்னும் எனப்பரவும் தீயின் ஆக்கிரமிப்பை ஆச்சர்யத்தோடும் ஆதங்கத்தோடும் நம்மால் பார்க்க மட்டுமே முடியும்.

நாமதை அடித்து துரத்தியபின்னும் விட்டுச்செல்கின்ற அதன் சுவடுகளை காணமுடியாததாய் நம்கண்களை எப்போதும் மறைத்துக்கொண்டேயிருக்கும் நம் துக்கத்தின் கதவுகள். ஏனைனில் அதன் பெரும்பசியின் உணவு நம் சில வருட சேமிப்புக்களாயிருக்கும்.

பிடிவாதமாய் நாமறியமால் பற்றியிழுக்கும் மூர்க்கனின் இறுகிய கரமாய் கனமான ஆக்ரிதியோடு ஆளுயரத்திற்கு எழுந்து நிற்கும் தீயின் கனபரிமானம் கார்த்திகை பண்டிகையன்று கனன்று எரியும் கோயில் பனையடியின் சொக்கபானையையோ, எத்தனையோ ஒளிப்பேழைகளில் கண்டிருக்கும் தீயின் தாண்டவத்தையோ இல்லை இதுவரை நாம் கண்டிருக்கும் எந்த ஒரு முன்நினைவோடும் ஒப்புமை படுத்த முடியாததான தனித்துவமானது.


பலசமயம் பெரும்பாலான நிகழ்வுகளை வெறும் வாசித்தோ, கேட்டோ பழக்கப்பட்ட நம் உள்ளத்திற்கு நிதர்சனமாய் நம்முன் பரவும் உண்மையின் நிகழ்வு பல சமயம் நம் உள்முகத்தை காட்டிச்செல்ல மட்டுமின்றி நாம் கற்றுக்கொள்ளவும் சில தடயங்களை விட்டுச்செல்கிறது.

நெருப்பின் நாவிற்கு ருசி அருசி என்றேதுமில்லை அனைத்தும் ஒன்றுதான் மானுடம் கற்றுக்கொள்ளுமா இந்த பேதமற்ற தன்மையை…….