Wednesday, November 10, 2010

ரொம்ப நாளாச்சு

ரொம்ப நாளாச்சு ஏதாச்சும் எழுதி என்று தோன்ற ஆரம்பித்து விட்டது காரணம் தற்போது நான் படித்துக்கொண்டிருக்கும் பிரபஞ்சனின் சிறுகதை தொகுப்பாயிருக்குமோ.....

தெரியவில்லலை...... பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன்....

Saturday, July 3, 2010

விடைபெறுதல் குறித்தான வார்த்தைகள்

விடைபெறுதல் குறித்தான வார்த்தைகளை
விதம்விதமாய்
படைக்கத்துவங்கினேன்
கூர்தீட்டியும் மழுக்கியும்
வளைக்கவும் செய்தேன்
குயவன் கை மண்பானை என
வடிவம் கூடி வந்தன வார்த்தைகள்
மிருதுவாய், தூறலாய், மிடுக்காய்
அடுக்கடுக்காய் மலர்ந்து விழுந்தன
தேன் தடவிய வார்த்த்தைகள்
ஒவ்வொன்றாய் கையளிக்கையில்
பொருத்தமாய் சென்று சேர்ந்த்தது

உன்முறை வந்தபோது
உனக்கான ஓர் வார்த்தை
என்னோடு இல்லாது போயிற்று
தொலைந்த வார்த்தைகளை
தேடும் திராணியற்று
சிறிதே நிம்மதியோடு
விடைபெறாமலே போகிறேன்.


எந்த ஒரு கட்டுக்குள்ளும் அடங்காது, எழுதத்தூண்டும் நாட்களில் எழுத நினைப்பதை சமரசங்களற்று எழுதிக்கொள்வதற்கும் அசை போடவேண்டியவற்றிலிருந்து சிலவற்றை உரக்க அசைபோட்டுக்கொள்வதற்கும் மட்டுமே நான் பயன்படுத்திய என் வலைப்பக்கத்தில் தமிழ்மணத்திற்காக நான் எழுத நேர்ந்த இந்த ஒரு வார காலங்கள் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை வியப்போடு நானே வேடிக்கை பார்க்க கிடைத்த சந்தர்ப்பம் என்று தான் சொல்ல வேண்டும்.

உற்சாகத்தோடு கூட வந்த தோழமைக்கும் அங்கீகரித்த தமிழ்மணத்திற்கும் நன்றி


Friday, July 2, 2010

வாசிப்பின் வடிகால் - சிறுபத்திரிகைகள்



பள்ளி முடிந்து வரும் மாலை வேளைகளுக்காக மிகவும் காத்திருந்த நாட்களுண்டு. மிகவும் கண்டிப்பான அம்மா 6 மணி விளக்கு வைப்பதற்குள் வீட்டிற்கு வரவேண்டும், ஒருவரது வீட்டிற்குள்ளும் சென்று விளையாடக்கூடாது, யார் வீட்டு வாசலிலும் அவர்களைக்கூப்பிட என்று மற்றொரு தோழியோடு காத்திருக்க கூடாது இப்படி பல பல நிபந்தனைகள் உண்டு, பெரும்பாலும் என் தோழிகள் என்னை விளையாடக்கூப்பிட வரத்தயங்குவார்கள் "உங்க அம்மா திட்டுவாங்க" "நீ பாதில போயிடுவ" "யாரையும் கூப்பிட வரமாட்டே" இப்படி அவர்களுக்கென காரணங்களும் இருந்தது.

இவைகளிலிருந்து தப்பிக்கும் நோக்கமா இல்லை தந்தையுடனான நெருக்கமா என காரணம் புரியாமலே மாலை வேளைகளில் அவரோடு எங்களூரில் இருந்த நூலகத்திற்கு சென்று விடுவேன். அந்த நூலகம் மிக வித்யாசமாக இருக்கும். மிக உயர்ந்த மேட்டில் மிகப்பெரிய மண்டபம், திருவிழா காலங்களில் சாமி வந்து இறங்கும் ஏழாம் திருநாள் மண்டபம் ஆகிவிடும், பின் எட்டாம் திருநாள் பச்சைசாத்தி கூட அங்கிருந்து தான் கிளம்பும். ஏழாம் திருநாள் நள்ளிரவில் ஒரு பக்கம் கச்சேரி நடக்கும் பந்தலடியில் மணிகள் குலுங்க குலுங்க மாலையில் சூட்டியிருந்த பூக்கள் பாதி வாடியிருக்க தீப்பந்த வெளிச்சத்தில் சாமி சப்பரம் அந்த உயர்ந்த மண்டப முகப்பில் நிற்கும் காட்சி இப்போது நினைத்தாலும் மனதிலிருந்து அகல மறுக்கிறது. ஆனால் அதுவே மறுநாள் முன் மதிய வேளையில் பச்சை சாத்தி அலங்காரத்திற்கு முன் போய் பார்க்கும் வேளயில் மனிதர்களின் அடர்த்தியை விட பூக்களின் மணத்தை விட, கால்கள் நசநசக்கும் நீரின் ஈரத்தைவிட மண்டபத்தின் ஒரு மூலையறையில் பூட்டி வைத்திருக்கும் புத்தகங்களே மிகப்பிரியமானதாய்த்தோன்றும். திருவிழா முடியும் வரை நூலகத்திற்கு விடுமுறை மீண்டும் திறக்கும் நாளுக்காக ஆவலோடு காத்திருப்போம்.

அந்த பால்ய காலங்களில் நான் கண்ட பத்திரிகைகளில் சிலவற்றைக்கூட இன்று என்னால் காண முடிவதில்லை. இரஷ்ய எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியது அந்த நூலகம் தான். "சோவியத் யூனியன்" என்றொரு பத்திரிகை அதில் மாதம் ஒரு கதைதான் வரும் மற்றபடி பெரும் பாலும் பத்தி எழுத்துக்களும் செய்திகளுமே இருக்கும் ஆனாலும் அந்தப்புத்தகத்தின் வசீகரம் அதீதமாயிருக்கும். கூடவே மஞ்சரி, கல்கண்டு, அந்தக்கால கலைமகள், இன்னும் தனிச்சுற்றுக்கென வந்த பல பத்திரிகைகளின் பெயர் மறந்து போயிற்று. ஆனாலும் அந்த பத்திரிகைகள் தந்த நெருக்கத்தை இடைப்பட்ட சில காலங்கள் இழந்திருந்தேன். வேலை, திருமணம், குழந்தைகள் என்று நகர் நோக்கி வந்த போது பொது இதழ்கள் மட்டுமே பத்திரிகைகள் என்றாயிற்று.

ஆனால் கடந்த 6 வருடங்களாக சிற்றிதழ்களின் அறிமுகம் என்னை என் பால்யத்திற்கு கொண்டு செல்கிறது என்று சொல்வதில் பிழையொன்றும் இல்லை. அதிலும் கடந்த 6 மாதங்களாக எனை மிகவும் கவர்ந்த "அகநாழிகை" குறித்த என் எண்ணங்ளை ஒரு தோழமையுடன் பகிர்ந்து கொள்வதைப்போலவே இங்கு பேச முற்படுகிறேன்.

மிகச்சிறந்த படைப்புக்களின் மிகச்சரியான கலவை. அதிகம் பொது இதழ்பரப்பில் அறியப்படாத ஆனால் காத்திரமான படைப்புக்களைத்தரும் கலைஞர்களின் படைப்புக்கள். தொடராய் வரும் ஒரு பகுதி, சமாதனத்தின் இசை - சுபின் மேத்தா ஒரு இசைக்கலைஞனின் பரிணாமத்தின் அகமும் புறமுமாய் கண்முன் நிறுத்தும் பகுதி
உள்ளும் புறமுமாய் மனதைப் புரட்டிப்போடவைக்கும் பாத்திரங்களையும் மொழிக்கட்டமைப்புக்களையும் கொண்ட கதைகள் (இருளில் தொலைந்தவர்களின் துர்க்கனவுகள் - கே பாலமுருகன்) தேர்ந்தெடுத்த நேர்காணல்கள், அதிகம் அடைத்துக்கொள்ளாத விளம்பரங்கள், எல்வற்றிலும் மேலாக மிகவும் எளிமையான தலையங்கங்கள்.

சாதரணணின் நியாயங்களை எழுதிப்பார்க்கும் உத்திகளைக்கொண்ட அகநாழிகை வாசுதேவனின் எழுத்து இது வரை வந்த அத்தனை இதழ்களிலும் இடம் பிடித்திருக்கும் நேர்த்தியான அட்டைப்படச்சித்திரங்கள் என எல்லாவிதத்திலும் ஒரு சாமானியனின் முயற்சியை அசாதாரணமாக்கிகாட்டுகிறது.

ஆசிரியர் கவனத்துக்கு கொண்டு வரவேண்டிய விஷயம் ஒன்றும் உண்டு அது மிகச்சிறிய எழுத்துக்கள் பயணத்தின் போது படிக்க முடிவதில்லை (வயதாகிவிட்டதோ) அது போக என் குற்ற உணர்ச்சியும் ஒன்றுண்டு இந்த இதழுக்காக எனக்கும் சேர்த்து சந்தா செலுத்திய ஜ்யோவ்ராம் சுந்தருக்கு இன்னும் நான் திருப்பித்தராத பாக்கி.

வாழ்த்துக்கள் வாசுதேவனுக்கும் அகநாழிகைக்கும்.


Tuesday, June 29, 2010

இசையெனும் இன்பவெள்ளம்

சில சமயம் சில பாடல்கள் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டுவிடும் மீண்டும் மீண்டும் எத்தனை முறை கேட்டபொழுதும் இன்னும் இன்னும் என கேட்கத்தூண்டும்

சமீபத்தில் கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக என்னை அலைக்கழித்த இரண்டு பாடல்களுண்டு.




படம் - இருவர் - பாடியவர்கள் - உன்னிக்கிருஷ்ணண், பாம்பே ஜெயஸ்ரீ.

நருமுகையே நருமுகையே நீயொரு நாழிகை நில்லாய், செங்கனி ஊரிய வாய் திரந்து நீயொரு திருமொழி சொல்லாய், அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரல நீர்வடிய கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா? திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய் வென்னிரப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய், அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில் ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா

மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன பாண்டினாடனைக் கண்டு என்மனம் பசலை கொண்டதென்ன, நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும், இளைத்தேன் துடித்தேன் பொருக்கவில்லை இடையினில் மேகலை இருக்கவில்லை.

யாயும் யாயும் யாராகியரோனென்ரு நேர்ந்ததென்ன யானும் நீயும் எவ்வழியரிதும் உரவு சேர்ந்ததென்ன ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன,
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன.

கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு முன்புவந்த பாடல்தானென்றாலும் அதை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பது அதன் மொழிக்கட்டு எத்தனை முறை கேட்டபோதும் "யாயும் யாயும் யாரகியரும்" என்று பாம்பே ஜெயஸ்ரீ குரலில் கேட்கும் பொழுது நமையறியாமல் உள்ளே ஒரு விசும்பலும் காரணமில்லாமலே அவ்வைக்கிழவியும் கூடவே பாரதியும் உள்ளே தோன்றுவதை ஒவ்வொருமுறையும் தவிர்க்க முடியவில்லை.

அடுத்த பாடல் படம் - என்னைத்தெரியுமா- பாடியவர்கள் - கார்த்திக், பாம்பே ஜெயஸ்ரீ
என்ன மாற்றமோ, நம்ப வில்லையே, ஆனலும் என் நெஞ்சம் இதனை நம்ப சொல்லுதே, அவளை பார் என்றதே, அழகாய் ஆபத்தில் அது மாடிக் கொண்டதே, இது என்ன சந்தோஷமோ இருந்தாலும் சந்தேகமோ.

உன்னை முன்பே தெரியுமென்று மனது சொல்வதும் யேனோ, உனை நானும் பார்த்து நொடியில நெஞ்சோட்ய் கலவரமோ, எந்தன் விழியில் நுழைந்து புது வழியை காட்டி
பல கனவை கொடுத்து நீ போகிராய். வரும் காலை ஒளி அதனை மாலை இருள் தடுத்து நிறுத்த முடிந்ததில் நியாயம் ஏதுமல்லையே.

காலம் நதியை போல கடந்து போக கல்லென கிடந்தனே எந்தன் பாதை போவாய் கேட்கையில் என் கையில் விடைகள் இல்லை நீ விழுந்த இடத்தை விட்டு
எழுந்து நடந்து செல்ல அந்த இடத்தில் ஏன் நிற்கிறாய்

கடும் புயலில் மாட்டிக் கோன்டு படகு தத்தளிக்கும் வழியை காட்டி விடு கரயில் ஏற்றி விட வா. அடியடி நீ யே உந்தன் கேள்வியாய் ஏன் உனக்குள் தேடிப் போகிராய்
உன் தனிமை உனக்கு புடிக்குதா என்னிடம் பகிர்ந்து கோள் தொடு வானம் சொந்தமின்றி கரையும் சொந்தமின்றி குழம்பும் மலை போல மனதில் குழப்பம் ஏனோ


இந்தப்பாடலின் தனித்தன்மைக்கு காரணம் பல உண்டு. முதன்மையாய் வரிகளை ஆங்கில மொழியின் அசைவுகளைக்கொண்டு கட்டமைத்திருந்தாலும் தமிழின் இனிமை கொஞ்சமும் குறையாமல் சிறு முனை கூட முறியாமல் கொண்டு வந்து தந்திருக்கும் பாடகியின் ஆழமான குரலசைவு,. எந்த வரிகளும் ஒரு முறைக்கு மேல் மீண்டு வராத கட்டமைப்பு, வாத்தியக்கருவிகளின் இசையைக்கொண்டே பல்லவி சரணம் இவைகளை மிக நேர்த்தியாக இணைத்திருக்கும் பாங்கு இவையெல்லாவற்றையும் தாண்டி ஏதோ ஒரு நொடியில் சட்டென் முடியும் பாடல் இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்தப் பாடல் முடியும் தருவாயில் மனமெங்கும் ஒற்றை ஆர்மோனியத்தோடும் ஓங்கிய குரலோடும் அமர்ந்து கொண்டிருப்பார் மெல்லிசை மன்னர். ஏன் என்ற கேள்விக்கு என்னிடம் விடையேதும் இல்லை. சில நல்ல உணர்வுகளை இனம் பிரிக்க கற்றுக்கொள்ளாது அப்படியே அனுபவித்துக்கொள்வதுகூட வாழ்வின் இனிமையை கூட்டத்தான் செய்கிறது.

அடையாளங்களைத்தொலைத்தவர்கள் - பெயர்களிலும்


அடையாளங்களுக்கென உருவான பெயர்களுக்கென்றதோர் அடையாளங்கள் உண்டென்பெதில் ஒத்த கருத்துடையவர்கள் பலருண்டு.

ஒலி கொண்டுணர்ந்து வாழ்வை கடந்த பொழுதுகளில் நம் ஆதி குடிகளுக்கென பெயர்களெதுவும் இருந்திருக்குமா என்பது சந்தேகம தான்.
நிலம் விட்டு குலம் விட்டு வாழ்வின் வெம்மையை உணர்ந்தோ இல்லை நாமதனை பரிணாமமென்றோ அழைத்த பொழுதுகளில் தான் அவரவருக்கான பெயர்கள் தோன்றியிருக்க முடியுமல்லவா அது கூட ஒரு குடியின் பெயராகவோ, நிலத்தின் பெயராகவோ அல்லது அவரறிந்த பொருட்களின் பெயராகவோதான் இருந்திருக்க முடியும்.

பின்வந்த நாட்களில் பெயர் என்பது அவர் பிறந்த நிலம் குலம் சார்ந்தோ சிலசமயம் கொள்கை சார்ந்தோ இருப்பது என்றாயிற்று
என் பள்ளிக்காலங்களில் எங்கள் தமிழாசிரியர் குடும்பப்பெயர்கள் எல்லாமே தேசப்பற்று மிக்க பெயர்களாயிருக்கும் (சுதந்திர தேவி, விடுதலை, குருநாதன்....) காரணம் கேட்ட பொழுது தந்தையார் விடுதலைப்போராட்ட காலகட்டங்களில் மிகவும் தீவிரமாக போராட்டாங்களில் ஈடுபட்ட காரணத்தினால் நாடு சுதந்திரம் அடைந்த ஆனந்தில் அங்கணம் பெயர்சூட்டினார் என்று சொல்வதுண்டு.

பிறகு வந்த காலங்களில் மிக அழகான தமிழ்பெயர்கள் பழக்கத்தில் வந்தது அதில் என்னை மிகவும் கவர்ந்த பெயர் இளம்பிறை, இதை ஒரு பெயராக வைக்கத்தோன்றுவதற்குண்டான காரணம் என்னாவாயிருக்கும் என்று இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த வேளைகளில் கூட கேள்வி எழுகிறது. அதற்கான பதில் வழக்கம் போல பலவந்து விலகிச்செல்லும் போதும் அந்தப்பெயரில் இருக்கும் நளினமும் கம்பீரமும் கலந்த கலவை என்னை வசீகரிக்கத்தான் செய்கிறது.

பின் சில பெயர்கள் மிகவும் பொதுவாக செல்லப்பிராணிகளுக்கென வைக்கத்தான் என்பது போலவும் உண்டாயிற்று. இவையெல்லாவற்றையும் தாண்டி
இப்பொழுதுள்ள பெயர்களுக்கென தனித்த அடையாளமோ,கொள்கை சார்ந்த விழிப்புணர்வோ, நிலம், குலம், குடும்பம் சார்ந்த பின்புலமோ இருப்பதாக தெரியவில்லை.
மிக எளிதாக சினிம கலைஞர்கள் பெயர் பழக்கத்தில் வந்து விட்டது. அதையும் தாண்டி வடமாநிலப்பெயர்கள் பெரிய அளவில் மக்களின் மனதை ஆக்கிரமிக்கத்துவங்கி விட்டது. அதுதான் நாகரீகம் என்பது பொலவும் ஒரு உணர்வும் தோன்றிவிட்டது.

பொதுவில் அலுவலகத்தில் புழங்கு மொழி என்பது பெரும்பாலும் ஆங்கிலமாய் போனதால் பெயர்களென்பது தன் அடையாளங்களை முற்றிலும் அழித்துக்கொண்டது.

இப்பொழுதெல்லாம் பெயர்கள் வெறும் உடல்களின் அடையாளமாய் தானுள்ளது பின் நம் பண்டைய நாகரீகத்தின், தொலைத்துக்கொண்டிருக்கும் மானுடத்தின், அடையாளம் என்பது என்னவாயிருக்கும்?

Monday, June 28, 2010

முகமூடிக்கவிதைகள் - 12


கவிதை யெழுதவென தனியான
நேரமென்றெதுவும் இல்லாது போனது
நீ என்னோடுடனான நாட்களில்

பேனாவின் மசிகளில்
எப்போதும் ஒளிந்துகொண்டேயிருந்தது
கவிதைக்கான வரிகள்
என்னுள் ஒளிர்ந்துகொண்டிருக்கும்
உணர்வின் வாசல்களில்
தோரணமாடிக்கொண்டிருந்தது
தமிழின் சில வரிகள்

முகமூடிகளுக்குப்புறம்பான
இவ்வுலகில்
இதற்கென பெயரெதுவும் இடாது போனாலும்
இட்ட பல பெயர்களில்
பொருந்திக்கொண்ட உன் வடிவங்களுக்கு
நாங்கள்
இரசனை, ஆர்வம், உறவு, உணர்வு, காதலென
அடையாளமளித்துக்கொண்டோம்.

சிறு பூவின் வாசத்தில்
பனியின் ஸ்பரிசத்தில்
நேசத்தின் பிணைப்பில்
அழகின் ஆக்ரமிப்பில்
நரம்புகளில் வழிந்தோடும்
இசையின் லயத்தில்
என்னை உயிர்ப்பித்துக்கொண்டிருக்கும்
மொழியின் கரங்களுக்குள்
நான் எனைப்புதைத்து கொண்டேயிருக்கிறேன்

ஓசையின்றி ஒளிரும் நிலவின்
குளுமையைப்போல்
எனை நிரப்பும்
உன் நினைவுகளுக்கும்
நானிடும் கடிவாளமென
என் முகமூடியின் நிறம்மட்டும்
மாறிக்கொண்டேயிருக்கிறது.





Sunday, June 27, 2010

காத்திருத்தல், கடந்து போதல் மற்றும் வாழ்க்கை


காத்திருத்தல் என்பதும் கடந்து போதல் என்பதும் வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வுகள். சில சமயம் உறவுகளுக்காகவும் நிகழ்வுகளுக்காகவும் காத்திருத்தல் தாண்டி வாழ்விற்கான காத்திருத்தலை உணர்ந்து கொள்ளும் தருணத்தில் தான் வாழ்க்கை தன் வான வேடிக்கையை நிகழ்த்தத்துவங்குகிறது. தெளிந்து தவழும் நீரோடை குறுகி இறங்கும் பொழுது பொங்கி வரும் பேரருவியென வீழுகின்ற அற்புதம் போலத்தான் வாழ்வும். பல சமயம் தெளிந்து தவழ்ந்து வந்துகொண்டிருக்கும் வாழ்வு காலமெனும் சமவெளியின் பாறைகளில் எங்கோ ஒன்று தாழ்ந்தும் மற்றது உயர்ந்தும் இருக்க அதில் நாமறியாமலே நம்மை கொண்டு செல்கிறது. குமுறி பொங்கி விழும் காட்டருவியென நிகழ்வுகள் நமையிழுத்துச்செல்லுகிறது உயர்வும் தாழ்வுமான வாழ்க்கைப்பாறைகளில் ஒரு நாள் சரிந்து கலந்து மண்ணோடு உறவாடுவோம் என்ற நினைப்பேதுமின்றி நாம் அருவி மட்டுமேயெனவும், வீழுதலோடு வாழ்வு முடிந்ததெனவும் கொண்டால் மீண்டு வரும் பொழுதில் நமெக்கான வாழ்விற்கான காத்திருத்தல் தான் அதுவென்ற உணர்வேதுமிண்றி வீணே கலங்கிச் சேறாகவும் கூடும். அதுவன்றி இதுவும் இருத்தலுக்கான இயல்பென்ற உணர்வோடு கடந்து போக முற்படுகையில் மட்டுமே நமக்கான கடலைச்சென்று சேரும் வரை வாழ்வின் பல்வேறு உருசிகளை உணர்ந்தும் உருவேற்றியும் செல்ல முடிகிறது.

உறவுகளுக்கான காத்திருத்தல் தரும் ஏமாற்றத்தையும் நிகழ்வுகளுக்கான காத்திருத்தல் தரும் எதிர்பார்ப்பையும் மீறிய பார்வையை கற்றுத்தருகிறது வாழ்வெனும் புத்தகம். இதைக்கற்றுக்கொள்வதற்கு திறந்த கண்களும் மனதும் மட்டுமின்றி நம்பிக்கையெனும் வெளிச்சமும் இருந்தால் மட்டுமே காத்திருத்தலையும் கடந்து போதலையும் அனுபவமாக்கிக்கொள்ளமுடிகிறது.

கற்றுக்கொள்வதற்கான விழைதல்


எத்தனை சொல்லியும் மாளாது இன்னும் இன்னும் என என்னுள் தாகித்துக்கொல்கிறது. மைதானத்தில் உருண்டும் சொல்லும் கால்பந்தின் விசையைப்போல் எல்லாப்பக்கத்திலும் அலைக்கழிக்கப்படுகிற்து மனது. எந்த ஒரு வேலையின் முடிவிலும் ஆரம்பத்திலும் ஏற்படும் ஆசுவாசம் ஏதும் இதில் இல்லை, முடிவின்மையின் மிகத்தெளிவான உருவாக எந்த ஒரு வியூகத்திலும் அடங்காது எல்லா இடங்களிலும் நீக்கமற வியாபித்து நின்று தன் ஆளுமையை உணர்த்திக்கொண்டேயிருக்கிறது கற்றுக்கொள்வதற்கான விழைதல்.


காலை வேளையில் பளீரெனத்துலங்கும் வெள்ளை புள்ளிகளில் துவங்கி முடியும் கோலத்தில் துவங்கி, சமயலறையில் ஏதோ ஒரு சுவையில் ஒளிந்து கொள்கிறது. புதியதென எதையொ வட்டிலில் இட்டு உண்ணக்காத்திருக்கும் மகன்களுக்குத்தரும் வேளையில் ஓங்கி நிற்கிறது, இன்றென்ன உடையென்று எடுத்து காதில் தோடும் கூடச்சேர்ந்த வர்ணங்களில் வளைகளும் இட்டு நறுவி உடுத்தி உதட்டுச்சாயம் இட்டு நெற்றியில் திலகமிடும் வேளயில் கேள்வியாய் நின்று இதை மாற்றி இட்டால் எவ்வாறு இருக்குமென புதியதொரு முயற்சியில் தலை நீட்டிப்பார்க்கிறது.


எப்போதும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் அலைபேசியின் பேச்சினூடே அன்றைய வேலையின் ஆரம்பத்தில் காலூன்றி நிற்கிறது கற்றுக்கொண்டே ஆக வேண்டிய பல ஆகம விதிகள், வீழ்ந்தெழுந்தும், சில சமயம் வீழ்த்தவும் வேண்டியிருக்கும் இந்த உலகமயமாக்கலுக்குள்ளான உலகில் இதுவன்றி தப்பித்தல் இல்லை என்ற முடிவின் விளிம்பில் நம்மை சிறை வைத்துவிடுகிறது.


தாளமும் ராகமும் லயமும் கண்மூடி கிறங்க வைக்கும் குரலும் அதிகம் அறிந்து கொள்ளாத உலகின் வாயில்களை திறந்து வைத்து பாடச்சொல்கிறது, இசையின் வால்பிடித்து மனதை ஆடச்செய்கிறது. வாசிப்பின் வாசனைகளை உணர்த்தும் சஞ்சிகைகள் ஒவ்வொரு நொடியிலும் ஏற்படுத்தும் இரசாயன மாற்றங்கள் நமக்கு காணக்கிடைக்காத ஒர் பேருலகின் இருப்பை உணரச்செய்கிறது அடுத்தது என்னவெண்று புத்தகங்களை தேடச்சொல்கிறது, பகிர்ந்துகொள்வதற்கென தோழமைகளை உருவாக்கிக்கொள்ளச்செய்கிறது.

உறவுகள் அவரவர் உலகங்களை பகிர்ந்து கொள்ளும் வேளையில் மாற்றுலகில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்கள் நாம் கற்றுக்கொள்வதற்கான வரிசைகளில் கற்களை நட்டுக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது.


இத்தனையும் தாண்டி வந்து அன்றைய நாளின் முடிவில் கண்மூடி கணக்கெடுத்தால் ஒவ்வொரு நொடியிலும் காத்திருந்த நமக்கான பாடங்களை வரிசைப்படுத்தக்கூட முடிகிறது ஆனால் வடித்து வைப்பதற்கான வார்த்தைகளின்றி எத்தனை சொல்லியும் மாளாது இன்னும் இன்னும் என என்னுள் தாகித்துக்கொல்கிறது கற்றுக்கொள்வதற்கான விழைதல்.

Tuesday, May 11, 2010

வாசிப்பு - சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு - மொழியாக்கம்


மிகவும் குற்ற உணர்ச்சிகளோடேயே எழுதிய கவிதைகளை இடம் மாற்றி வைத்துக்கொண்டிருக்கிறேன். கவிதைகள் எழுதுவதென்பது எளிதென்பதைக்காட்டிலும் உணர்வுகளை உடனே சொல்ல முடிந்த சவுகரியங்கள் மட்டுமே காரணமாயிருக்க முடியும்.


ஆராய்ந்து பார்த்தால் அடுத்தடுத்த பதிவுகளாய் கவிதைகளை இடுவதை தவிர்த்து வந்ததின் பிண்ணணி எனக்கு நானே இட்டுக்கொண்ட வேலியென இப்போது தான் புரிகிறது. ஆனாலும் கவிதையெழுதுவதின் போதை எழுதுபவரை எப்போதும் ஒரு போதத்தில் ஆழ்த்துவதென்பதும் உண்மைதானே..


மிகச்சமீபமாய் இத்தகைய போதம் தரும் புத்தகமொன்றை படிக்க நேர்ந்தது. சிதம்பர நினைவுகள் என்று பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதி ஷைலாஜா அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட அந்தப்புத்தகம் என் கைகளில் மொத்தம் இரண்டு நாட்களுக்கும் குறைவாகவே இருந்தது. பொதுவில் மிகவும் ஆழமான விரும்பத்தக்க எழுத்துக்களை மீள் வாசிப்பிற்கென எடுத்து வைத்தும் சில சமயம் மீண்டும் உடனே வாசித்தும் பழகிய எனக்கு மறுமுறை வாசிக்க வேண்டும் என்ற தேவையற்று வாசித்த வரிகள் தொடர்ந்து கண்களிலும் மனதிலும் நீர்வீழ்ச்சியின் பாதத்தில் தேங்கியிருக்கும் நீர்நிலையென கலங்கலற்றுத் தங்கிவிட்டது.

மிக எளிமையான தினப்படி நிகழ்வுகள் தந்த அவதானிப்புக்களை மிகவும் சரளமாகவும் எந்த ஒரு தாழ்வுணர்ச்சியோ இல்லை அதி உன்னத மிகப்படுத்தல்களோ இல்லாது எவருக்கோ நிகழ்ந்ததென படைக்கும் ஆற்றல் பெற்ற அந்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரரை எந்த மொழிகொண்டும் விவரிக்க இயலாது.

என்றோ இளமைக்குறும்பில் வாங்கிய முத்தத்தை நடு வயதில் மிகவும் நிதானாமாய் திருப்பித்தந்த நெகிழ்வான நிகழ்விலாகட்டும், நடுவயதில் தவறிய நிதானத்தை குற்ற உணர்வுகளோடு மீட்டெடுத்து உடனே செயல்படுத்தியதை சொல்லும் பொழுதிலாகட்டும் தன் மேதாவித்தனங்களை எந்த விதத்திலும் வெளிப்படுத்திக்கொள்ளாத எளிமை நம் எல்லோராலும் கைக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

மிகவும் வயதான தம்பதியரின் அந்நியோன்யம் கண்டு அதிசயத்த அதே மனது மற்றொரு சம்பவத்தில் தனது துணைவியாரின் சகிப்புத்தன்மையைப்பற்றி சொல்லும் பொழுது எதையெல்லாமோ எனக்காக சகித்துக்கொண்ட விஜயலெஷ்மி எனக்காக இதையும் சகித்துக்கொண்டாள்என்ற வார்த்தைகள் தரும் அழுத்தம் அபாரமானது. (படைப்புகளுக்குள்ளே படைப்பாளியை பொறுத்திப்பார்க்கும் இந்த பொது புத்தியினை எத்தனை முயன்றும் தவிர்க்கமுடிவதில்லை)

எப்பொழுதும் ஊசாலாடிக்கொண்டிருக்கும் ஆண்மனதின் அடி நாதத்தை எடுத்துக்காட்டும் இடங்களில் தான் கண்டு இரசித்த பெண்மணியின் இறப்பும் அது குறித்த குற்ற உணர்வு தரும் வலியைக் குறிக்கும் இடங்களில் வானாளாவி நிற்பது படைப்பின் உன்னதம் மட்டுமே. இதில் எடுத்துச்சொல்லாமல் விட்ட எத்தனையோ இடங்கள் இனிமேல் வாசிப்பவர்களின் அனுபவத்திற்கு விட்டுச்சென்றதேயன்றி வேறெதும் இல்லை

முன்னுரையில் ஷைலாஜா கூறியிருப்பதைப்போல் மலையாள மொழியினைக் கற்றுத்தேர்ந்தேயாகவேண்டும் என்ற முனைப்பு எழுந்துதான் உள்ளது. இடயே சிலகாலம் மறந்து போயிருந்த அந்த முனைப்பு இப்போது மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளது. தேடத்துவங்கியுள்ளேன் அரிச்சுவடிப்புத்தகங்களை.

மொழிபெயர்ப்பு என்ற எந்த நெருடல்களும் இல்லாது இந்த புத்தகத்தை படைத்துள்ள ஷைலாஜாவும் ஒரு படைப்பாளியின் அந்தஸ்த்திற்கு இணையானவர் என்று சொன்னால் அது மிகையாகது.


வாழ்வில் ஒரு முறையாவது வாசித்தேயாகவேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று என்று சொல்வதோடு ஒரு சிலருக்கு தன்னை செதுக்கிக்கொள்ளும் உளியாகவும் கூட ஆகிவிடலாம்.

Thursday, May 6, 2010

மிக நீண்ட கவிதையொன்று.....


மிக நீண்ட கவிதையொன்று

எழுதப்பெறாமாலே முற்றுப்பெற்றது


நான் வரும் வழியில்

எப்பொழுதும் எரிந்து கொண்டோ

புகைந்து கொண்டோயிருக்கும்

மின்மயாணப்புகை போக்கி உணர்த்தும்

வாழ்வின் முடிவின்மையைச்

சொல்லியிருக்கலாம்


சூழலில் கலந்து வரும்

நிண வாடை கலந்த

சுவாசமுணர்த்தும்

நித்யத்தை சொல்லியிருக்கலாம்


மரத்தினடியில் சரிந்து விழுந்திருக்கும்

நாகலிங்கப்பூவின் குவியலை

கூட்டி வாரி குப்பையிலிடுவைதை

காணும் பொழுதுணர்த்தும்

வாழ்வின் அபத்தத்தை சொல்லியிருக்கலாம்


கண்கலங்கி சிரித்து

நா வரண்ட பொழுதும்

உள்ளே உறைந்து போயிருக்கும்

எத்தனையோ ரணங்களின்

இருப்பு உணர்த்தும்

வாழ்வின் இருமையை சொல்லியிருக்கலாம்


மிக நீண்ட இருப்புப்பாதைகளில்

வளைந்தும் நெளிந்தும் செல்லும்

புகைவண்டியின் ………..மற்றும்

குறுகிய சாலைகளில் குவிந்திருக்கும்

மக்களை மாக்களை

லாவகமாய்க்கடந்து செல்லும்

பேருந்துகளின்

சாயலுணர்த்தும் நீர்மையைச்

சொல்லியிருக்கலாம்


இவையத்தனையையும் தாண்டி

என் உள்ளுணர்வும் உணர்த்தும்

உன்னிருப்பை மட்டுமே

எழுத முற்பட்ட

மிக நீண்ட கவிதை

எழுதப்பெறாமலே முற்றுப்பெற்றது

வாழ்வின் எல்லா ருசிகளையும் போல.


Saturday, April 10, 2010

மனவெளியில் சில வார்த்தைகள்

ஊரெங்கும் பூத்திருக்கும்

மின்விளக்குகளை விட

எங்கோ ஓர் மூலையில்

மினு மினுக்கும்

ஒற்றை சிம்மினியின் ஒளி

மிக நெருக்கமாய்

உணர்த்துகிறது

தனிமையை

நிராகரிப்பை

மற்றும்

உன்னிருப்பை

**************************************

சொற்களில் வழிந்தோடுகிறது

களிப்பு, காமம் காதல் மற்றும் கடமை

சர்ப்பம் உரித்த சட்டை போல்

உள்ளே கேட்பாரற்றுக்கிடக்கிறது மனது

Saturday, April 3, 2010

நாடோடிகளின் வெயில்


எதையும் பற்றிக்கொள்ளாததோர் அடர் வெளியில் மனம் எளிதில் புகுந்து கொள்கிறது. கூடவே கனம் சேர்க்கிறது சுட்டெரிக்கத்துவங்கியிருக்கும் வெயிலும் அதோனோடு சேர்ந்து துவங்கும் வழமையான பழக்க வழக்கங்களிலிருந்து மாறுபடும் பண்பும்.

உடையும், உணவும், கூடவே உறங்கும் பொழுதுகளும் தன்மைகளும் கூட இந்த வேனலின் பொருட்டு மாறிக்கொண்டிருக்கிறது. மிகவும் உற்றுநோக்கினால் ஒரு மெலிதான வன்முறையும் தனிமையும் எல்லோரிடமும் படர்வதைக்கூட உணர முடிகிறது. உள்ளும் புறமும் வியர்வையோடு ஒரு சிறு அலுப்பும் கூடவே ஒரு எதிர்ப்புணர்வும் ஒட்டிக்கொள்கிறது,

இத்தனையும் கொண்டு வரும் வேனல், எல்லோர்க்கும் ஒன்றேயான மனநிலையைத்தானா தருகிறது? குளிர்சாதன, காற்றாடி வசதிகளற்று நடைமேடைகளிலுறங்கும் அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வில் வேனல் எத்தகைய மாற்றங்களைக் கொணர்கிறது. அதைவிடவும் நாடோடிகளின் வெயில் எங்கணமிருக்கும். இந்தக்கேள்வி என்னுள் எழும் வேளையில் நானும் ஒரு குளிர்சாதனப்பெட்டிக்கு மிக அருகாமையிலிருந்தாலும் கூட நாடோடி வாழ்வுக்கான விழைதலை தவிர்க்க முடியவில்லை.

ஒரு மாற்று உடையும், சிறிதளவு பணமும் வாழ்வதற்குண்டான மனநிலையையும் மட்டும் கைக்கொண்டு ஊர்களைக்கடந்து செல்லும் நாடோடியின் வாழ்வில் வெயிலும் மழையும் குளிரும் செய்யும் மாற்றங்கள் என்னவாயிருக்கும். கையளவு சிலேட்டில் கல்குச்சி கொண்டு சிறு வீடு கட்டி கற்பனையில் பொங்கலிட்டு திருவிழா முதல் திருமணம் வரை செய்து முடிக்கும் குழந்தமையின் மனநிலையில் மட்டுமே யோசிக்க முடிகிறது இருப்பை விட்டு அதிக பட்சம் 50 மைல்கள் கூட தனித்து நடந்திராத கால்களுக்கு.

பறவைகளின் இடமாற்றம் போலும் ஒரு நாடோடியினால் குளிர் வெய்யில் பிரதேசங்களை இந்தந்த காலகட்டங்களில் தான் கடந்து செல்ல வேண்டுமெனும் கணக்குகளை உண்டாக்கிக்கொள்ள இயலுமா? அல்லது எதையும் எதிர்கொள்ளும் மனநிலைக்குச்சென்ற பின்பான பிரயாணங்களில் இத்தகைய முன்னேற்பாடுகளைச் செய்யும் எண்ணம் தோன்றாது போகுமா?

இதை இப்படித்தான் செய்யவேண்டும், இந்தந்த வார்த்தைகளைத்தான் பயன்படுத்த வேண்டும், இங்கு சென்றால் அந்த வழியை அடையலாம், இப்படிப்போட்டால் அப்படி எடுக்கலாம், இவரைப்பிடித்தால் அவரோடு நெருங்கலாம், அதை அடைய இதைப்பற்றிக்கொள்ளலாம என்ற எந்த ஒரு செயல்திட்டங்களும் அன்றி அன்றன்றைய நாட்களோடும், நிமிடங்களோடு வாழும் மனநிலையைக்கொள்வது கூட நாடோடியின் வெயிலாகத்தான் இருக்க முடியுமல்லவா?

நடந்து செல்வதென்பதும் கடந்து செல்வதென்பதும் வெறும் வழிகளையும் தூரங்களையும் மட்டுமல்லாது வாழ்க்கையையும் அதைச்சார்ந்த மனித மனங்களையும் தானே, நாடோடியின் வெயிலைப்போல...

Thursday, March 25, 2010

முகமூடிக்கவிதைகள் -11


சில சமயம் எதுவும் வேண்டாமென
ஓடிவிடத்தான் தோன்றுகிறது
பிறகெங்கே என்ற கேள்விகளுக்கான
பதிலொன்றும் தெரியாததால் மட்டுமே
இருப்பு என்பது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

கேள்விகள் தொலைந்துபோவதின்
நிகழ்வுக்களுக்கான நாளை
எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம்
மீளமுடியாது தொலைந்து போகாலமென
நாட்களை தள்ளிக்கொண்டும் இருக்கிறோம்
தெரிந்தும் தெரியாமலும்...

மீளவும் மறந்து போவதின் உண்டான
சௌகர்ய அசௌகர்யங்களுக்குள்
புதைத்துக்கொள்கிறோம்
அன்றன்றைய ஏமாற்றங்களையும்
நேற்றைய சந்தோஷங்களையும்


இருந்தும் ஏதோவொன்று எடுத்துச்செல்கிறது
அலையோடு புரண்டெழும் நுரையென

எப்போதும் நம்மோடு இருக்கும்
முகமூடிகளுக்குப்பின்னான
நாளைய நம்பிக்கைகள்.



Thursday, March 18, 2010

நினைவோடையின் சில வரிகள்



மிகப்பெரியதாய் உணரும் சில கணங்களை
தலைகீழாய் உருட்டித் தள்ளிவிடுகிறதுன் ஞாபகங்கள்

சிறு மணல் வீடு கட்டும் குழந்தையென
அலைவருமுன்னே ஆர்ப்பரிக்கின்றதென் மனது
உனக்காக உருவகிக்கும் கணங்களுக்கென.

நின்று துடிக்கும் இதயத்தை
ஓசையின்றி அடக்கிவைக்க
இயலாததின் இயலாமையில்
தினமும் கழிகிறதென் நாட்கள்

என்றேனும் ஒரு நாள் நிறைவேறக்கூடும்
நீ என்னவென்று நானுனக்கு சொல்லும் நாள்
அன்று தான் நான் மீண்டு வருவேன்
எனக்கான என்னை நோக்கி.

பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகளின் சுகம்
தேக்கிவைத்துக்கொள்வதில் இல்லைதானே...

Saturday, March 6, 2010

தொலைந்து போகச்செய்யும் ஓசைகள்

சப்தங்களை வெறும் ஒலிகளாய் உணர்வைதைக்காட்டிலும் அதனோடுடனான உருவங்களோடு உருவகப்படுத்திக்கொள்வது பால்யத்திலிருந்து நாம் கற்றுக்கொண்டவைதானே. தோத்தோ சொல்லு, காக்கா சொல்லு, ம்ம்மே.. எது கத்தும், ம்ம்ம்மாஆஆ எது கத்தும் இப்படி ஆரம்பித்தது தானே நம் ஒலிவாங்கியின் பயன்பாடுகள்.

மதியம் பள்ளி இடைவேளையை உணர்த்தும் மணிச்சத்தமும், அதனிடையே ஒலிக்கும் ஐஸ் வண்டிக்காரனின் சத்தமும் உணர்த்தியது பெரும் விடுதலையை அல்லவா.

மாலை வேளைகளை உணர்த்தும் சோன்பப்டிக்காரனின் வண்டிச்சத்தமும் கூடவே ஒலிக்கும் கோவில் மணிச்சத்தமும் உணர்த்துவது அன்றைய வீட்டுப்பாடங்களையோ அல்லது அம்மாவின் கட்டளைக்கு பயந்து நாம் கூட்டில் அடையவேண்டிய நேரத்தை உணர்த்தும் கட்டுப்பாட்டின் சரடுகளை அல்லவா.

அதுவே பதின்மங்களில் நமக்கு மிகவும் நெருக்கமாய் உணர்ந்தவர்களின் சைக்கிள் மணிச்சத்தமோ இல்லை பெரும் அதிர்வோடு கடந்து செல்லும் இரு சக்கர வாகனங்களின் இரைச்சலோ நம்முள் விதைத்து சென்றது அவரவர் முகங்களைத்தானே.

பேருந்தில் பள்ளி செல்லும் நாடகளில் பள்ளியின் ஏதோ ஓர் மூலையில் இருந்தாலும் பெவின் வண்டி பட்ணம் முக்கு தாண்டிட்டான் சீக்கிரம் ஓடு என்று பேருந்தை ஓடிப்பிடித்த நாட்களுண்டு. பெவின் வரான் என்று சொன்ன பின்னும் தயங்கித்தயங்கி நடக்கும் தோழியின் நடை கண்டு நமட்டு சிரிப்போடு சரி இன்னக்கு ரெண்டாம் நம்பர்ல போலாம் என்று சொன்னதும் கூடவே வரும் தோழிகள் ஏண்டி என்று வினவ, ஆமா இவளோட ஆளைப்பார்த்து ரெண்டு மூணு நாளாயிடுச்சு இல்லை அதான் அம்மா அன்ன நடை பாடறாங்க பாவம் இன்னக்கி ரெண்டாம் நம்பர்தான் என்று சிரிக்க அவளோ, ஆமா உனக்கென்ன உன் ஆளு நீ வரயான்னு பார்த்து பார்த்து வண்டியோட முன்வாசலுக்கும் பின்வாசலுக்கும் நடக்கறது எனக்குத்தானே தெரியும், எங்களை மாதிரி எங்கருந்தோவா வரனும் இங்கயே இருக்கப்பல என்று கிண்டலும் கேலியுமாக கழிந்த நாட்களில் கூட ஒலி என்பதை உணர்வுகளாகவும் மனிதர்களாகவும் தான் புரிந்து கொண்டதுண்டு.

உள்ளே உருவாகும் சிறு அசைவின் ஒலி கூட சுமந்து கொண்டிருக்கும் குழவியின் முகத்தையும் ஸ்பரிசத்தையுமல்லவா நினைவிறுத்தும். வழக்கமான எண்ணிக்கையில் ஒலிக்கும் பிரஷர் குக்கரின் ஒலி தீர்மானிக்கும் அன்றைய உணவின் தரத்தை. வெளியே ஒலிக்கும் குப்பை வண்டிக்காரனின் மணிச்சத்தம் நிர்ணயிக்கும் காலை நேர வேலையின் கடைசி இழையை, எல்லாவற்றையுன் தாண்டி கூடவே பின்காதில் இறைந்து கொண்டே வரும் சக பயணியின் வண்டிச்சத்தம் உருவகிக்கும் தலைமேல் அமர்ந்து கொள்ள காத்திருக்கும் மேலதிகாரியின் முகத்தையோ அல்லது கோபமான வாடிக்கையாளரின் முகத்தையோ.

ஒலிகளை அதன் உருக்களோடே உணர்ந்து கொண்டு கழிந்து கொண்டிருக்கும் வாழ்க்கை சக்கரத்தின் பல் எங்கே இடறிற்று என்று புரியவில்லை. இசையை உருவகங்களாய் உள்வாங்கிய நாட்கள் மெல்லத்தொலைந்து போகத்துவங்கியது சில காலங்களுக்கு முன்புதான். அன்பும் காதலும் பக்தியும் தெறிக்க தாளக்கட்டுக்களோடு இணைந்த ஓ.எஸ் அருணின் பாடல்கள் என்னை உருவகங்கள் இல்லாமலே ஈர்க்கத்துவங்கியது.

"ஷாந்தி நஹி பினா க்ருஷ்ண தருஷனுகோ ஷாந்தி நஹி என்றாலும்"

"ஆசை முகம் மறந்து போச்சே அதை யாரிடம் சொல்வேனடி தோழி"என்று கேட்டாலும் உள்ளே கனகுதூகலமாய் பொங்கிய உவகை வடிக்க உருவகங்களே இல்லாது போயிற்று.


பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் தொட்டு தொட்டு பேஷ வரான்... கண்ணண் தொட்டு தொட்டு பேஷ வரான்.. என்று பாடும்போதும் சரி,
எங்கு நான் செல்வனோ நீ தள்ளினால் என்று கேட்கும் போதோ ஒலிநாடாக்களின் இழைகளில் கால்களை நுழைத்துக்கொண்டு எடுக்க மனதின்று சிரித்திருக்கும் குழந்தையின் ம்ன் நிலையே மேலோங்கியது.

"எப்படி மனம் துணிந்தாரோ சுவாமி, வனம் போய் வருகிறேன் என்றார்"....என்ற அருணாச்சல கவிராயரின் வார்த்தைகளுக்கும் வடிவங்களற்று போயிற்று அந்த ஆழமான குரலின் மாயத்தால்.

வார்த்தைகளும், தாளக்கட்டுக்களும், இசையின் கோர்வைகளும் தளும்பி நிற்கும் நிலைக்கு வடிவங்கள் தேவையற்றதானது. அங்கு மொழியும் வார்த்தைகளும் தன் நிலைமறந்து நமையும் மறக்கச்செய்யிகின்ற இந்த மந்திர வித்தைகளில் கட்டுண்டு கிடப்பதிலும் ஓர் உன்னத சுகம் உள்ளது தானே.

ஏதோ ஓர் போதை நம்முள் எப்போதும் ஊறிக்கொண்டிருக்கும் நாமெனும் அகந்தையை தொலைந்து போகச்செய்ய.....அவை புத்த்கங்கள்... இசை... இன்னும் என்னவெல்லாம்..???

Tuesday, January 12, 2010

வார்த்தைகளின் வசீகரம்

வார்த்தையெனும் வடிவங்களுக்குள் அடைக்கமுடியாத உணர்வுகளை எந்தப்பெயரிட்டு அழைப்பது அழைத்தும் தான் என்ன பயன்? வார்த்தைகளை நேசிப்பதைக்காட்டிலும் சுவாசிப்பது அதீத சுவாரஸ்யமானது. அதிக கவனமெடுத்து அச்சுக்கோர்த்து பல வித வர்ணங்களுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் அச்சிட்ட புத்தகங்களைக்காண நேரும் போது கூட வார்த்தைகளின் தோரணமென்று எண்ணும் போது எண்ணங்களில் வர்ணம் கூடுகிறது. திறந்து கிடக்கும் புத்தகத்தை காண நேர்கையில் சிறு குழந்தையின் கைவழியே இறைந்து கிடக்கும் அரிசிப்பொறியென மடியெங்கும் சிதறிக்கிடக்கின்றன வார்த்தைகள்

உறவுகளின் தொடர்ச்சியாய் எவரேனும் உரையாடலைத்தொடரும் வேளையில் அவர்களின் நாவினின்று வரும் மொழியில் வார்த்தைகளே எஞ்சி நிற்கின்றன. வாக்கியங்களின் பின்னிருக்கும் செய்திகளைக்காட்டிலும் அதினுள்ளிருக்கும் வார்த்தைகளே கையிலிருந்து உருண்டு செல்லும் கண்ணாடிக்குண்டுகளென உள்ளெங்கும் வழிந்து உருண்டு செல்கிறது. முதல் கேள்விக்கான பதில்களை அவர்களின் மூன்றாவது கேள்வியின் போது மட்டுமே கூட்டுச்சேர்க்க முடிகிறது. அப்போதும் அந்த வார்த்தைகளின் வசீகரங்களில் அமிழ்ந்து தொலைந்து மீண்டு வரும் வேளையில் உரையாடலின் சங்கிலி அறுந்து போயிருக்கும். எதிராளியின் பார்வையில் நானொரு ஊமையாகவோ இல்லை கவனமற்றவளாகவோ இல்லை செவியற்றவளாக உருக்கொண்டிருக்கும் வேளையில் நான் வெளித்தள்ள வேண்டிய வார்த்தைகளை பூக்களைத்தொடுப்பது போல தொடுத்து மெதுவாக உச்சரிக்கத்துவங்குவேன். சில சமயம் வார்த்தைகளின் கனம் தாங்க முடியாமல் மிக மெதுவாகவோ அல்லது வேகமாகவோ உதிர்க்கத்துவங்குகையில் பொங்கும் பிரிவாற்றாமையின் துக்கம் தாங்க முடியாததாயுள்ளது.

ஒரு வாக்கியத்தில் தனித்தனியே நின்று உறவாடும் வார்த்தைகளுக்குண்டான வாசனை எந்த ஒரு முழுமையான வாக்கியத்திற்கும் இல்லாமல் போகிறது.
ஒரே வாக்கியதின் சில வார்த்தைகள் அணுக்கமாகவும் சில வார்த்தைகள் விலகியும் செல்ல நேர்கையில் விலகும் வார்த்தைகளை துரத்திப்பிடிப்பதிலுண்டான ஆனந்தத்தில் எதிராளியின் மனதில் நான் என்னவாவேன் என்று கூட எண்ணத்தோன்றுவதில்லை.

எதையேனும் எழுதி முடித்து பின் மீண்டும் வாசித்துப்பார்க்கையில், அதிகாலையில் உதிர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருக்கும் பவழமல்லியின் வாசனையோடு வார்த்தைகள் கண்முன்னே பரந்து விரிந்திருக்கும். பின்னெப்படி நானந்த வனத்தை விட்டு மீள்வதாம் அந்த மணத்தை விட்டு விலகுவதாம்.

வார்த்தைகளுக்கும் எனக்குமுண்டான நேசம் எங்கு தொடங்கியதென்ற கெள்வியைக்காட்டிலும் தொடங்கிய காலமுதலான அதன் ஆக்ரமிப்பின் வசீகரம் மீண்டுவரமுடியாததாயுள்ளது.

பொங்கிப்பிரவகிக்கும் ஆற்றின் கரையில் நான் அமர்ந்திருக்கிறேன்... வர்ண பேதமற்று இறைந்திருக்கும் வார்த்தைகளை வாரி வாரி விழுங்குவதற்காக.

Wednesday, January 6, 2010

முகமூடிக்கவிதைகள் - 10

மெல்லிய திரையொன்று
இருவருக்குமிடையே
தொட்டுப்பார்த்தால்
சில்லிடத்துவங்க
பேணி வளர்த்தோம்
பேரிரைச்சலோடு
பெருகி வழிந்தது அருவி

நீர்மைதானே
நீர்மை
தானே பனிக்கத்துவங்கியது
படர்ந்து இருகியது
பெரும் பனித்திரையாய்
உடைக்க மனதின்றி
பார்த்திருந்த வேளையில்
இருமை புகுந்து உள்ளே
உழலத்துவங்கியது

ஒரு நாள் பலநாள்
பகலவன் செய்ய
ஏதுமில்லாத போதும்
அசையாது நின்ற திரையை
அகத்திரை விலக்கி
உறுத்துபார்த்தில்
அறுந்து, சிதைந்து போனது

சுற்றிலும் நீர்க்கோலம்
நீர்க்கோளம்
சுகமாய் கால் தழுவ
நின்று சிரித்தது
சிலிர்த்தது
உள்ளும் புறமும்.