Thursday, March 25, 2010

முகமூடிக்கவிதைகள் -11


சில சமயம் எதுவும் வேண்டாமென
ஓடிவிடத்தான் தோன்றுகிறது
பிறகெங்கே என்ற கேள்விகளுக்கான
பதிலொன்றும் தெரியாததால் மட்டுமே
இருப்பு என்பது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

கேள்விகள் தொலைந்துபோவதின்
நிகழ்வுக்களுக்கான நாளை
எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம்
மீளமுடியாது தொலைந்து போகாலமென
நாட்களை தள்ளிக்கொண்டும் இருக்கிறோம்
தெரிந்தும் தெரியாமலும்...

மீளவும் மறந்து போவதின் உண்டான
சௌகர்ய அசௌகர்யங்களுக்குள்
புதைத்துக்கொள்கிறோம்
அன்றன்றைய ஏமாற்றங்களையும்
நேற்றைய சந்தோஷங்களையும்


இருந்தும் ஏதோவொன்று எடுத்துச்செல்கிறது
அலையோடு புரண்டெழும் நுரையென

எப்போதும் நம்மோடு இருக்கும்
முகமூடிகளுக்குப்பின்னான
நாளைய நம்பிக்கைகள்.



Thursday, March 18, 2010

நினைவோடையின் சில வரிகள்



மிகப்பெரியதாய் உணரும் சில கணங்களை
தலைகீழாய் உருட்டித் தள்ளிவிடுகிறதுன் ஞாபகங்கள்

சிறு மணல் வீடு கட்டும் குழந்தையென
அலைவருமுன்னே ஆர்ப்பரிக்கின்றதென் மனது
உனக்காக உருவகிக்கும் கணங்களுக்கென.

நின்று துடிக்கும் இதயத்தை
ஓசையின்றி அடக்கிவைக்க
இயலாததின் இயலாமையில்
தினமும் கழிகிறதென் நாட்கள்

என்றேனும் ஒரு நாள் நிறைவேறக்கூடும்
நீ என்னவென்று நானுனக்கு சொல்லும் நாள்
அன்று தான் நான் மீண்டு வருவேன்
எனக்கான என்னை நோக்கி.

பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகளின் சுகம்
தேக்கிவைத்துக்கொள்வதில் இல்லைதானே...

Saturday, March 6, 2010

தொலைந்து போகச்செய்யும் ஓசைகள்

சப்தங்களை வெறும் ஒலிகளாய் உணர்வைதைக்காட்டிலும் அதனோடுடனான உருவங்களோடு உருவகப்படுத்திக்கொள்வது பால்யத்திலிருந்து நாம் கற்றுக்கொண்டவைதானே. தோத்தோ சொல்லு, காக்கா சொல்லு, ம்ம்மே.. எது கத்தும், ம்ம்ம்மாஆஆ எது கத்தும் இப்படி ஆரம்பித்தது தானே நம் ஒலிவாங்கியின் பயன்பாடுகள்.

மதியம் பள்ளி இடைவேளையை உணர்த்தும் மணிச்சத்தமும், அதனிடையே ஒலிக்கும் ஐஸ் வண்டிக்காரனின் சத்தமும் உணர்த்தியது பெரும் விடுதலையை அல்லவா.

மாலை வேளைகளை உணர்த்தும் சோன்பப்டிக்காரனின் வண்டிச்சத்தமும் கூடவே ஒலிக்கும் கோவில் மணிச்சத்தமும் உணர்த்துவது அன்றைய வீட்டுப்பாடங்களையோ அல்லது அம்மாவின் கட்டளைக்கு பயந்து நாம் கூட்டில் அடையவேண்டிய நேரத்தை உணர்த்தும் கட்டுப்பாட்டின் சரடுகளை அல்லவா.

அதுவே பதின்மங்களில் நமக்கு மிகவும் நெருக்கமாய் உணர்ந்தவர்களின் சைக்கிள் மணிச்சத்தமோ இல்லை பெரும் அதிர்வோடு கடந்து செல்லும் இரு சக்கர வாகனங்களின் இரைச்சலோ நம்முள் விதைத்து சென்றது அவரவர் முகங்களைத்தானே.

பேருந்தில் பள்ளி செல்லும் நாடகளில் பள்ளியின் ஏதோ ஓர் மூலையில் இருந்தாலும் பெவின் வண்டி பட்ணம் முக்கு தாண்டிட்டான் சீக்கிரம் ஓடு என்று பேருந்தை ஓடிப்பிடித்த நாட்களுண்டு. பெவின் வரான் என்று சொன்ன பின்னும் தயங்கித்தயங்கி நடக்கும் தோழியின் நடை கண்டு நமட்டு சிரிப்போடு சரி இன்னக்கு ரெண்டாம் நம்பர்ல போலாம் என்று சொன்னதும் கூடவே வரும் தோழிகள் ஏண்டி என்று வினவ, ஆமா இவளோட ஆளைப்பார்த்து ரெண்டு மூணு நாளாயிடுச்சு இல்லை அதான் அம்மா அன்ன நடை பாடறாங்க பாவம் இன்னக்கி ரெண்டாம் நம்பர்தான் என்று சிரிக்க அவளோ, ஆமா உனக்கென்ன உன் ஆளு நீ வரயான்னு பார்த்து பார்த்து வண்டியோட முன்வாசலுக்கும் பின்வாசலுக்கும் நடக்கறது எனக்குத்தானே தெரியும், எங்களை மாதிரி எங்கருந்தோவா வரனும் இங்கயே இருக்கப்பல என்று கிண்டலும் கேலியுமாக கழிந்த நாட்களில் கூட ஒலி என்பதை உணர்வுகளாகவும் மனிதர்களாகவும் தான் புரிந்து கொண்டதுண்டு.

உள்ளே உருவாகும் சிறு அசைவின் ஒலி கூட சுமந்து கொண்டிருக்கும் குழவியின் முகத்தையும் ஸ்பரிசத்தையுமல்லவா நினைவிறுத்தும். வழக்கமான எண்ணிக்கையில் ஒலிக்கும் பிரஷர் குக்கரின் ஒலி தீர்மானிக்கும் அன்றைய உணவின் தரத்தை. வெளியே ஒலிக்கும் குப்பை வண்டிக்காரனின் மணிச்சத்தம் நிர்ணயிக்கும் காலை நேர வேலையின் கடைசி இழையை, எல்லாவற்றையுன் தாண்டி கூடவே பின்காதில் இறைந்து கொண்டே வரும் சக பயணியின் வண்டிச்சத்தம் உருவகிக்கும் தலைமேல் அமர்ந்து கொள்ள காத்திருக்கும் மேலதிகாரியின் முகத்தையோ அல்லது கோபமான வாடிக்கையாளரின் முகத்தையோ.

ஒலிகளை அதன் உருக்களோடே உணர்ந்து கொண்டு கழிந்து கொண்டிருக்கும் வாழ்க்கை சக்கரத்தின் பல் எங்கே இடறிற்று என்று புரியவில்லை. இசையை உருவகங்களாய் உள்வாங்கிய நாட்கள் மெல்லத்தொலைந்து போகத்துவங்கியது சில காலங்களுக்கு முன்புதான். அன்பும் காதலும் பக்தியும் தெறிக்க தாளக்கட்டுக்களோடு இணைந்த ஓ.எஸ் அருணின் பாடல்கள் என்னை உருவகங்கள் இல்லாமலே ஈர்க்கத்துவங்கியது.

"ஷாந்தி நஹி பினா க்ருஷ்ண தருஷனுகோ ஷாந்தி நஹி என்றாலும்"

"ஆசை முகம் மறந்து போச்சே அதை யாரிடம் சொல்வேனடி தோழி"என்று கேட்டாலும் உள்ளே கனகுதூகலமாய் பொங்கிய உவகை வடிக்க உருவகங்களே இல்லாது போயிற்று.


பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் தொட்டு தொட்டு பேஷ வரான்... கண்ணண் தொட்டு தொட்டு பேஷ வரான்.. என்று பாடும்போதும் சரி,
எங்கு நான் செல்வனோ நீ தள்ளினால் என்று கேட்கும் போதோ ஒலிநாடாக்களின் இழைகளில் கால்களை நுழைத்துக்கொண்டு எடுக்க மனதின்று சிரித்திருக்கும் குழந்தையின் ம்ன் நிலையே மேலோங்கியது.

"எப்படி மனம் துணிந்தாரோ சுவாமி, வனம் போய் வருகிறேன் என்றார்"....என்ற அருணாச்சல கவிராயரின் வார்த்தைகளுக்கும் வடிவங்களற்று போயிற்று அந்த ஆழமான குரலின் மாயத்தால்.

வார்த்தைகளும், தாளக்கட்டுக்களும், இசையின் கோர்வைகளும் தளும்பி நிற்கும் நிலைக்கு வடிவங்கள் தேவையற்றதானது. அங்கு மொழியும் வார்த்தைகளும் தன் நிலைமறந்து நமையும் மறக்கச்செய்யிகின்ற இந்த மந்திர வித்தைகளில் கட்டுண்டு கிடப்பதிலும் ஓர் உன்னத சுகம் உள்ளது தானே.

ஏதோ ஓர் போதை நம்முள் எப்போதும் ஊறிக்கொண்டிருக்கும் நாமெனும் அகந்தையை தொலைந்து போகச்செய்ய.....அவை புத்த்கங்கள்... இசை... இன்னும் என்னவெல்லாம்..???