Monday, January 22, 2018

ஐயா வைகுந்தர் - சுவாமித்தொப்பு - ஆதி மூலத்தின் தரிசனத்தை நோக்கிய பயணம் - 20 - Jan-2018

அகவழிப் பயணங்களில் முதன்மையானது ஒப்புக் கொடுப்பது அதன் மூலமாகவே நாம் ஆற்றின் கரையில் இருந்து அதன் மைய நீரோட்டத்திற்கு இழுத்துச் செல்லப் படுகிறோம். பின் ஆற்றின் ஒழுக்கினோடே இயைந்து பயணம் செய்வதொன்றே வழி. நீரின் ஓட்டத்திற்கு எதிராகவோ, குறுக்கு மறுக்காகவோ அல்லது அந்த ஒழுக்கின் திசையோடோ நாம் முனைந்து நீந்த முற்படும் பொழுது விளைவுகள் எனும் வினைகளை சந்திக்க நேருகிறோம்.

அதுபோலவே 2016 துவக்கத்தில் இருந்தே மைய நீரோட்டத்தின் ஒழுக்கினோடே பயணிப்பதே வாழ்வென்றானது. குறிப்பாக பக்தி, மெய்யியல், மெய்ஞானம் சார்ந்த விஷயங்களில் தினசரி வாழ்வில் ஊடுபாவு போல ஒரு தனி இழையோடு பயணம் நடந்து கொண்டே இருக்கிறது.

அந்த தரிசன நீட்சியில் இந்த பயணத்தில் நான் சென்று நின்றது “ஐயா வைகுந்தரின்” வாசல். ஏகத்தை வலியிருத்தும் மற்றொரு மாற்று இந்து மதக் கோட்பாடுகளை உடைய மரபு. தந்தையின் பாதை, என்று பொருள் தரக்கூடிய “ஐயா வழி”.  My father blesses My father blesses  என்று சொன்ன யோகி ராம்சுரத்குமாரின் மாற்று வடிவம். எல்லா மாற்றுக் கோட்பாடுகளுக்கும் நேரும் சமூக ஒழுக்குகள் இந்த மரபிற்குள்ளும் நிகழ்வதைக் கண்கூட காண நேர்ந்தாலும் எவரோ சிலரின் உணர்தலுக்காக சாட்சியாக நிற்பதாக உணர்கிறேன் “சுவாமித் தோப்பில்” முதல் பதி என்றழைக்கபடும் இந்தப்  புனிதத்தலம்.

ஆதி உண்மையின் பரிணாமங்களைப் பேசும் எல்லா மாற்று இந்து மரபுகளையும் போல இங்கும் வருணாஸ்ரம நிராகரிப்பு, அத்வைதம், அகம்பிரம்மாஸ்மி, சமூக அக்கறை என்ற ஸ்ரத்தைகளை உள்ளடக்கி ஆதியில் உருவாக்கப் பட்டிருந்தாலும் காலப் போக்கில் பக்தி மரபின் ஒரு வாசலாக மாறியிருப்பதை உள்ளங்கை நெல்லிக் கனியாக காண முடிகிறது. இது சரியா தவறா என்று எழுந்த கேள்விக்கான விடையையும் மறு புலரியில் அருணனின் வரவுக்காக காத்திருந்த பொழுதுகளில் கிடைக்கச் செய்ததும் அதை மேலும் பேசிப் பேசி விரித்துக் கொள்ளும் சக உயிரினை தந்தற்குமான இந்தப் பிரபஞ்ச்சத்தின் உள் நோக்கத்தில் இருக்கிறது என் ஸ்வதர்மாவிற்கான பதில் என்று உள்ளுணர்வு சொல்கிறது.

வடக்கு வாசல் அவர் தவம் இருந்த இடமாக போற்றப் படுகிறது அங்கு ஒரு மர இருக்கையும் அதன் மேல் அமையப் பெற்ற கண்ணாடியும் உத்திராட்சமும். கண்டு அமர்கையில் உள்ளே எழும் ஓசையின் அளவுகள் தனித்து வேறு எதனோடோ லயிக்கிறது. பின் கிழக்கு வாசல் சென்றால் பள்ளியறை என்று அழைக்கபடும் ஐயாவின் சமாதி அறை உள்ளது அங்கு உள்ளே நுழையுமுன் அவரது தொண்டர்களின் அனுமதி பெற்று நெற்றியில் செங்குத்தாக ஒற்றை பட்டை தரித்து உள்ளே செல்ல வேண்டியுள்ளது.
அங்கும் அமர்ந்து தியானத்தில் ஒன்ற,  காணும் தரிசனங்கள் இன்னும் மைய நீரோட்டத்திற்கு அழகாக இட்டுச் செல்கிறது.



Tuesday, January 2, 2018

திருப்பெருந்துறை Vs திருப்பெருந்துறை (பாண்டியநாடு Vs சோழநாடு ) – நிறைவு

ஒரு நிமித்தம் போலும் சென்ற மே மாதத்தில் துவங்கிய மாணிக்கவாசகர் குறித்த ஒரு தேடலில் மிகவும் முக்கியமானதொரு ஒரு கட்டத்தில் தாளா மன உந்துதலில் துவங்கியது தான் திருப்பெருந்துறை Vs திருப்பெருந்துறை (பாண்டியநாடு Vs சோழநாடு ) என்று ஆறு பகுதிகளாக நான் எழுதிய ஒரு பதிவு.
அதன் முற்றுருவாக அமைந்தது இந்த முறை மேற்கொண்ட ஆவுடையார் கோவில் தரிசனம்.
ஆவுடையார் கோவில் அற்புதங்கள் என ஏராளமான விஷயங்கள் உள்ளது. அவைகளை நினைவில் இருந்தவரை தொகுத்து அளித்துள்ளேன்.
கருவைரையில் லிங்கம் கிடையாது, அங்கு சதுர வடிவ ஆவுடையும் அதன் நடுவில் அகண்ட குவளை வடிவக் குழியுமே உள்ளது. இது அவுடையே உடலாகவும் அதன் நடுவில் அமைந்துள்ள குவளை வடிவ குழியே ஆத்மாவாகவும் உருவகப் படுத்தப்படுகிறது. அதனாலேயே இறையனார் ஆத்மநாதர் என்று பெயர் கொள்கிறார்.
இறையனாரின் சந்நதியில் உள்ள திருவாச்சியின் விளக்கில் இருக்கும் விளக்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு அவை 27 நட்சத்திரங்கள், ஜீவாத்மா, பரமாத்மா தத்துவங்கள், பஞ்ச பூதங்கள், 36 தத்துவங்கள், 51 பஞ்சாக்கர எழுத்துகள், 224 வார்த்தை பிரிவுகள் போன்றவற்றை குறிப்பதாக செய்திகள் கூருகிறது.
இங்கு இறையனாருக்கு காட்டப்படும் ஆரத்தியை பக்தர்களுக்கு கண்களில் ஒற்றிக் கொள்ள கொண்டு வருவதில்லை. ஏனெனில் அங்கு இறைவனே ஜோதிஸ்வருபம் என்ற தத்துவத்தினால்.
கருவறையில் சந்திரன், சூர்யன், அக்னியைக் குறிக்கும் வண்ணம் சிவப்பு, வெள்ளை, பச்சை நிறங்களில் விளக்கு ஏற்றப்பட்டுள்ளது.
அம்பிகைக்கும் திருவுருவம் இல்லை. அவரது பாதங்களே முதன்மை தெய்வமாக சந்நிதியில் வணங்கப் படுகிறது. அதுவும் அங்கு அமைக்கப் பட்டுள்ள கல் அழிகள் போன்ற அமைப்பில் மனதை ஒருமித்து கண்டால் மட்டுமே முழுவதுமாக தரிசிக்க முடிகிறது. அம்பிகை அங்கு யோகாம்பிகை என்று நாமம் கொண்டிருக்கிறாள்.
இறையனாருக்கு நெய்வைத்தியமாக புழுங்கல் அரிசி சாதமும், பாகற்காயும், கீரையும் அமுதாகப் படைக்கப் படுகிறது. அது அங்குள்ள 3 அடி உயரம் 7 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட ஒரே பாறையால் ஆன படிக்கல்லில் தான் படைக்கப் படுகிறது. ஆவி போங்க படைக்கப்படும் இவற்றின் ஆவியே நிவேதனம் என்று சொல்லப் படுகிறது.
இந்தக் கோவிலில் நந்தி, கொடிமரம், மற்றும் பலி பீடம் இல்லை.
இங்கு மாணிக்கவாசகரும் சிவனின் மறு பிறப்பாகக் கொண்டாடப் பட்டு தனி சந்நிதியில் போற்றப் படுகிறார். ஆனாலும் குருவின் முன் அமர்ந்திருத்தல் முறையல்ல என்பதால் இங்கு, விநாயகர், முருகர், வீரபத்திரர் உட்பட அனைவரும் நின்ற திருக்கொலத்திலேயே அருள் பாலிக்கிறார்கள்.
இக்கோவிலின் சிற்பக்கலைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்தக் கோவிலில் அமைந்த கொடுங்கைகள் சிற்பக்கலையின் சிகரம் என்றே போற்றப் படுகிறது. ஒவ்வொரு சிலையும் உயிரோட்டமிக்க காவியங்கள். நரியை பரியாக்கிய மாணிக்க வாசகர் திருத்தலம் என்பதானால் முன் மண்டபத்தில் விதம் விதமான பல நாட்டு குதிரைச் சிற்பங்களும் அந்தந்த நாட்டு தனித்துவத்தை விளக்குவது போன்ற உடை நகை அலங்காரங்களோடு அதன் மேல் அமர்ந்திருக்கும் வீரர்களும் கண்கொள்ளா காட்சி.
உள் பிரகாரத்தில் சிவனும் உமையும் அர்ச்சுனனுக்கு பாசுபதாச்ரம் வழங்குவதாக வடிக்கப்ட்டிருக்கும் சிற்பம் சொல்லும் கதை என அவர்கள் சொல்லும் விளக்கம் அருமை. அம்மையின் அணிகள் பஞ்சாட்சர மந்திர பெருமையை குறிப்பதாகவும் சொல்லப் படுகிறது. கல்லாலான சங்கிலியில் பினைந்திருக்கும் நாகம், இசை எழுப்பக் கூடிய தூண்கள், நளினம் மிகுந்த நாட்டிய மாதுகளின் சிற்பங்கள் என அனைத்தும் புகைப் படக் கலைஞர்களுக்கு பெருவிருந்து.
இந்தக் கோவிலில் நவக்கிரக சந்நிதி இல்லை.
தெற்கு நோக்கி தென்னனாகக் காட்சி தரும்
கோவில் இது. தெற்கு என்பது முக்தியின் திசை என்பதும் நாம் அறிந்ததே.
திருவாசகத்தின் ஆதி ஓலை அங்கு இருப்பதாகவும் ஆருத்திரா தரிசனத்தன்று மட்டுமே அதைக் காண முடியும் என்பதும் சேதி.
இவை அனைத்துமே சென்ற முறை நாங்கள் அங்கு சென்று காத்திருந்த பொழுதுகளில் கோவில் வாசலில் எங்களோடு அமர்ந்திருந்த வீர பத்திரர் கோவில் உடையவர் சொன்ன சேதிகள். ஆனால் சென்ற முறை கோவிலைச் சார்ந்த ஒருவர் இறந்து விட்டதால் கோவில் திறக்கவில்லை. எனவே இந்த முறையே இத்தனை அதிசயங்களையும் கண்ணாரக் கண்டு அனுபவிக்க முடிந்தது.
இத்தனை ஆவணப் படுத்துதல்களில் இருந்த மெனக்கெடல் மீண்டும் சோழ நாட்டு திருப் பெருந்துறையே மாணிக்க வாசகருக்கு ஆத்ம போதம் வழங்கிய இடமாக இருக்கக் கூடும் என்ற செய்தி என்னுள் இன்னமும் பலமாக ஆழப்பதிந்து போனதும் ஒரு அதிசயமே. ஒரு வேளை நன் சென்ற முறை அந்தக் கோவிலில் உணர்ந்த உணர்வுகளின் தாக்கம் அதிகம் போலும் என்றும் எண்ணிக் கொண்டேன்.
பெருமிழலைப் பிரானை மிழலை நாட்டு திருப் பெருந்துறையில் கண்டதை மற்றொரு பதிவில் எழுதுகிறேன்