Saturday, December 20, 2014

அஷ்டபதி – 2 – ஸ்ரித கமலாகுச – யது குல நாயகன்

śrita-kamalā-kuca-maṇḍala dhta-kuṇḍala e
kalita-lalita-vana-m
āla
jaya jaya deva hare

மலர்ந்த தாமரை போன்ற பாதங்களை கொண்டவனே, அழகிய அணியாக காதில் குண்டலங்களை அணிந்திருப்பவனே, வனத்தில்  அன்றலார்ந்த நறுமணமிக்க மலர்களை மார்பினில் மாலையாக சூடி இருப்பவனே – கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்.

dina-mai-maṇḍala-maṇḍana
bhava-kha
ṇḍana e
muni-jana-m
ānasa-hasa
jaya jaya deva hare ||1|
சூரியனைபோன்ற பிராகசமான வதனத்துடன் உன் அன்பான பார்வை கொண்டு பாலையும் நீரையும் தெளிந்தறியும் திறனுள்ள அன்னத்தைபோன்ற வாழ்வை கொண்டிருக்கும் ஞானியர்க்கு உய்விக்கும் வழியை நல்குபவனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்  

kāliya-via-dhara-gañjana
jana-ra
ñjana e
yadukula-nalina-dine
śa
jaya jaya deva hare
கொடிய விஷமுள்ள சர்ப்பமான காளிங்கனை சம்ஹரித்தவனே, எல்லா மனிதர்களுக்கும் உவப்பானவனே, யதுகுலத்து நாயகனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

madhu-mura-naraka-vināśana
garu
āsana e
sura-kula-keli-nid
āna
jaya jaya deva hare ||3||
மது, முரா, நரகாசுரா ஆகிய அரக்கர்களை அழித்தவனே, கம்பீரமான கருட வாகனத்திலமர்ந்தவனே, உலகின் எல்லா உன்னதமான சந்தோஷங்களையும் தருபவனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

amala-kamala-dala-locana
bhava-mocana e
tribhuvana-bhuvana-nidhāna
jaya jaya deva hare ||4||
மலர்ந்த தாமரை இதழ்களை ஒத்த கண்களை உடையவனே, கண்ட மாத்திரத்தில் சகல பாவங்கலிளிருந்தும் முக்தி அடையச் செய்பவனே மூவுலகங்களையும் ஆள்பவனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

janaka-sutā-kta-bhūaa
jita-d
ūaa e
samara-
śamita-daśa-kaṇṭha
jaya jaya deva hare ||5||
தசமுகனான இராவணனை வென்ற ஒப்பற்ற ஜனக குமாரனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

abhinava-jala-dhara-sundara
dh
ta-mandara e
śrī-mukha-candra-cakora
jaya jaya deva hare ||6||
கார்மேக வர்ணனே, மந்தர மலையை தாங்கியவனே, சந்திர வதனனே - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

tava caraa praatā vayam
iti bh
āvaya e
kuru ku
śala praateu
jaya jaya deva hare ||7||
குரு குலத்தோன்றலே, உன் காலடிகளில் என்னை சமர்ப்பிக்கிறேன் கருணை கொண்டு எனை எடுத்தாளு - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

śrī-jayadeva-kaver ida
kurute mudam e
ma
galam ujjvala-gīta
jaya jaya deva hare ||8||
இந்த ஜெயதேவன் இயற்றிய அன்பால் ஒளிர்கின்ற பாமாலையை உனக்கு அர்ப்பணிக்கிறேன் ஏற்றுக்கொள்வாய் - கிருஷ்ணா தேவாதி தேவனே ஹரி உனைப் போற்றுகிறேன்

 

Wednesday, December 17, 2014

அஷ்டபதி - 1 - பிரளய பயோதிஜலே - அண்டத்தை ஆள்பவன்


 
Pralaya-payodhi-jale dhruta vanasi vedam
Vihita-vahitra-charitramakhedam
Keshava dhruta-meena-sarira jaya jagadisa hare 1
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே, மச்சமாக (மீனமாக) உருவெடுத்து வந்து வேதங்களை பிரளய காலத்தில் ஊழியில் இருந்து படகைக் கொண்டு மீட்பதுபோல் காத்தவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்.

Kshitirathi vipulatare tisthtati tava prushte
Dharani-dharana-kina-chakra-garishte ,
Keshava dhruta-kachapa-sarira jaya jagadisa hare 2
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே வாசுகியை கயிறாக்கி  வடகரையை மத்தாக்கி இந்த உலக நன்மைக்காக அமிர்தம் கடையும் பொழுது அந்த மிகப்பெரும் மலை அமிழ்ந்து போகாது கூர்மமாக (ஆமையாகவந்து) வந்து அந்த மாபெரும் மலையை ஒரு சக்கரத்தைப் போல சுழலச்செய்தவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்.

Vasati dasana-sikhare dharani thava lagna
Sasini kalanka-kaleva nimagna
Keshava dhruta-sukara-rupa jaya jagadisa hare 3
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே வராகமாக வந்து இந்த பூமி உருண்டையை உன் தந்தத்தினால் தாங்கி நிலவுக்குள் இருக்கும் நிழலைப் போல காத்தவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்.

Thava kara-kamala-vare nakha madbhuta-srngam
Dalita-hiranyakasipu-thanu-bhrngam
Keshava dhruta-narahari-rupa jaya jagadisa hare 4
கேசவா, இந்த மிகப்பெரும் பால்வெளியை ஆள்பவனே நரசிம்ஹமாக வந்து உன் தாமரை போன்ற கைகளில் உள்ள கூர்மையான நகங்களையே கொடூரமான ஆயுதமாக்கி ஹிரண்யகசிபுவை கிழித்து எறிந்தவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்

Chalayasi vikramane balimadbhuta-vamana
Pada-nakha-nira-janita-jana-pavana
Keshava dhruta-vamana-rupa jaya jagadisa hare 5
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே வாமனனாக வந்து உன் பெரும் புண்ணிய பாதங்களின் மூன்றடி மூலமாக மஹாபலியை சாமர்த்தியமாக வீழ்த்தியவனே இந்த உலகினரின் அனைத்து பாவங்களையும் கழுவும் வல்லமை படைத்த கங்கையை உன் கால் நகங்களிலிருந்து தந்தவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்

Kshatriya-rudhira-maye jagad-apagata-papam
Snapayasi payasi samita-bhava-tapam
Keshava dhruta-bhrgupati-rupa jaya jagadisa hare 6
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே பரசுராமனாக அவதரித்து இந்த உலகோரின் பாவங்களை உன் ஷத்ரிய இரத்தத்தினைச்சிந்தி துடைத்து வாழும் வழிசெய்து தந்தவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்

Vitarasi dikshu rane dik-pati-kamaniyam
Dasa-mukha-mauli-balim ramaniyam
Keshava dhruta-rama-sarira jaya jagadisa hare 7
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே ராமனாக அவதரித்து  தசமுக இராவணனை அழித்ததின் மூலம் இந்த உலகிற்கு நன்மை தீமைகளை வழிகாட்டித் தந்தவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்

Vahasi vapusi visade vasanam jaladabham
Hala-hati-bhiti-milita-yamunabham
Keshava dhruta-haladhara-rupa jaya jagadisa hare 8
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே பலராமனாக அவதரித்தா போது யமுனை உன் பராக்கிரமம் அறியாது உனது ஆணைக்கு கீழ் படிய மறுத்து  பின் உனை உணர்ந்து உன் ஆயுதத்தின் மகிமையுனர்ந்து தன்னை சரணாகதி செய்து உனக்கு நீல நிற துகிலை அளிக்கச் செய்தவனே ,  அந்த துகிலை உன்னுடைய வெண்ணிற உடலில் அணிந்து தேவலோக வெள்ளை யானையைப் போல் ஒளிவிட்டவனே உனக்கே வெற்றி உண்டாகட்டும்

Nindasi yajna-vidher ahaha shruti-jatam
Sadaya-hrdaya darsita-pasu-ghatham
Keshava dhruta-buddha-sarira jaya jagadisa hare 9
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே பூத உடம்பெடுத்து  கிருஷ்ணனாக அவதரித்து ஜீவ உயிர்களை பலியாக்குவதிலிருந்து காத்து சகல உயிர்களையும் இரட்சித்தவனே  உனக்கே வெற்றி உண்டாகட்டும்

Mleccha-nivaha-nidhane kalayasi karavalam
Dhumaketum iva kim api karalam
Keshava dhruta-kalki-sarira jaya jagadisa hare 10
கேசவா, இந்த மிகப்பெரும் அண்டத்தை ஆள்பவனே கலியுகத்தின் முடிவில் உன்னுடைய கூர் வாள் கொண்டு உலகின் சகல அசுத்தங்களையும் எரிதழல் போன்ற உன் சொருபத்துடன் அழிப்பவனே  உனக்கே வெற்றி உண்டாகட்டும்

Sri-jayadeva-kaver idam uditam udaaram
Srunu sukha-dam subha-dam bhava-saram
Keshava dhruta-dasa-vidha-rupa jaya jagadisa hare 11

இவ்வாறு இந்த ஜெயதேவனுக்கு உன் மேலான தசாவதார மகிமைகளை உணரச்செய்தவனே நீயே இந்த உலகை வெற்றி கொள்பவன்..
 
 இந்த இசை காணொளியை இணையத்தில் பதிந்திருக்கும்  திரு ராமசந்திரன் - எஸ்  அவர்களுக்கு என் நன்றி.

Tuesday, December 16, 2014

மார்கழியும் – ஆத்தூரும் - ஜெயதேவரின் அஷ்டபதியும் – ராதையும்



சிறு வயதில் மார்கழி மாதம் படு கொண்டாட்டமான மாதம். அதிக விடுமுறைநாட்கள், சாஸ்தா கோவிலில் ஐய்யப்ப மண்டல பூஜை, காலை வீதி பஜனை, சிவனுக்கு திருவாதிரைத் திருநாள், பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி, கூடவே கிருஸ்துமஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் என்று மிகவும் சந்துஷ்டியான மாதங்களில் ஒன்று மார்கழி.

இதையெல்லாம் தாண்டி அநேகமாக அனைவரும் காலையில் கோவிலுக்குப் போகும் பழக்கமும் உண்டு. ஒரு சிலர் கோவிலுக்குப் போகுமுன் வீட்டில் பூஜை முடித்து விட்டு செல்வதும் உண்டு. அம்மா கண்டிப்பாக பூஜை முடித்துவிட்டுத் தான் கோவிலுக்கு செல்லவேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பார்கள். எனவே எல்லா நாளும் காலையில் குறைந்தது நாலு மணிக்கு எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு (அக்காவின் வேலை)  வீடு துடைத்து மெழுகி கோலமிட்டு (என் வேலை), குளித்த பின் விளக்கேற்றி விட்டு நான் அக்கா அம்மா மூவரும் திருப்பாவையும், அஷ்டபதியும் பாடி பூஜை செய்து விட்டு கோவிலுக்கு செல்வோம். இருபத்து நாலு அஷ்டபதியும் முடிந்தவுடன் ராதா கல்யாணமும் உண்டு. சில சமயம் கிராமத்தில்  பலர் சேர்ந்தும் செய்வதுண்டு இல்லையென்றால்  தனித்து எங்கள் வீட்டு மட்டத்தில் செய்வதும் உண்டு. மொத்தத்தில் மார்கழி எங்களுக்கு கீத கோவிந்த மாதம்.

அஷ்டபதி பாடுவதில் பல பாணி உண்டு, அம்மா கற்றுக்கொண்டது மிகவும் எளிமையாக இருக்கும். இதனால் அம்மாவிடம் எங்கள் கிராமத்தில் இருந்து அனேகம் பேர் வந்து கற்றுக்கொள்வதுண்டு.  நானும் அக்காவும் எந்த ஸ்லோகமும் அம்மாவிடம் நேரடியாக கற்றுக்கொண்டது கிடையாது ஆனால் அம்மா பாடப்பாட எங்களுக்கும் பாடமாகிவிட்டது. அது மிகப்பெரும் கொடை. அதில் ஜெயதேவரின் அஷ்டபதி சிறு வயதிலிருந்தே மனதிற்கு மிகவும் நெருக்கமானது.

திருமணத்திற்கு பின் இந்த மாதத்தில் ஸ்ரீ வீட்டு வழக்கப்படி திருப்பாவையும் கீதையும் உரையுடன் ஸ்ரீ வாசிப்பதுண்டு. அஷ்டபதி நின்று போனது. கடந்த சில வருடங்களாக (நமக்கும் வயசாகிவிட்டதில்லையா) இது ஒரு குறையாகத் தோன்றத் துவங்கவே பாடம் மறந்து போகாமலிருக்க அவ்வப்பொழுது பாடிப் பார்ப்பதுண்டு.

இன்று அதிர்ஷ்டவசமாக நாங்கள் கற்றுக்கொண்ட பாணியில் இணையத்தில் காணொளி கிடக்கவும் ஒரு சிறு முயற்சி செய்தால் என்ன என்று தோன்றியது.

இன்றிலிருந்து ஒவ்வொரு அஷ்டபதியாக வரிகளோடும் தமிழ் அர்த்தத்தோடும் இசையோடும் பதிய முயற்சிக்கின்றேன் பெருங்கருணையின் துணைகொண்டு எப்பொழுது முடிக்க முடிகிறதோ பார்க்கலாம்.

கோவிந்தா, கிருஷ்ணா வாசுதேவா, ரிஷிகேசா பத்மநாபா, தாமோதரா  ஜெயதேவருக்கு அருளியது போல் என்னோடும் இரும்.

- எனக்குள்  எப்பொழுதும் ஒளிந்திருக்கும் ராதை இப்போது அதிகம் ஆக்கிரமிக்கிறாள்.

Thursday, December 11, 2014

அய்யா பாரதி


அன்னையர் தினம், தந்தையர் தினம், குழந்தைகள் தினம், தீபாவளி, பொங்கல், புது வருஷம், இவற்றிற்கெல்லாம் தனித்து நினைவுறுத்தும் பதிவுகளை போடுவதில் பொதுவில் எனக்கு ஒப்புமை இல்லை. எனவே கூடியவரை தவிர்த்து விடுவதுண்டு.

ஆனால் இன்று பாரதியை நினைக்காமலிருக்க முடியாது, மனதை ஆக்கரமிக்கும் எதையும் என்னால் எழுதாமலிருக்க முடியாது.

பாரதி எனும் தீ என்னை பற்றிக்கொண்டது மிகச்சிறிய வயதிலானாலும், என் பதின்மங்களில் என்னை கனன்று எ றியச் செய்தவரும் இவர்தான். என் திருமணப்பரிசாக என் உற்ற தோழன் எனக்களித்ததும் பாரதியையே. அந்த சிலை இருபத்திநாலு ஆண்டிற்குப்பின்னும் இன்றும் என் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருக்கும்.( நவீன் பெங்களூர் சென்ற போது எனக்குத் தெரியாமல் தூக்கிச் சென்றதை மீட்டெடுத்து கொண்டுவந்து விட்டேன். ) அந்த அளவு என்னை உருவாக்கிய சிற்பி.

அன்று என்னை ஆட்கொண்டது அவருடைய கோபமும் ரௌத்திரமும், தமிழும், இன்று எண்ணி எண்ணி நான் வியந்து மயங்குவது அவரது ஆத்ம தரிசனத்தை. அன்று புரிந்த பால பாடல்களின் மீள் பரிமாணம் இன்று என்னை வியப்பிலாழ்த்துகிறது. என் மூத்த குடி இவரென கொண்டாட வைக்கிறது. 

பாரதி... பாரதி.. இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய்...

என்ன சொல்ல வருகிறாய். இந்த வரிகளில்..

அக்னி குஞ்சொன்று கண்டேன்....
அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு - தழல்

வீரதிற்குஞ்சென்று மூப்பென்றுமுண்டோ 

எது அக்னிகுஞ்சு, இருப்பின் ஒரு துளியா? பொந்தென்பது என்ன இந்த உடம்பா? எப்படி இது வெந்து தணியும் நம்மை அறிதலின் மூலமா? பிறப்பும் மூப்பும் இல்லா வெளி எது?

விகசிக்க வைக்கிரதய்யா உன் பார்வை...

உங்களுக்காக அவரது மதுரமானதொரு பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாம்பே ஜெயஸ்ரியின் குரலில்.
 

Tuesday, December 9, 2014

நேர்பட பேசலாம்

முகநூலில் நான் அதிகம் பார்த்து வியப்பது நட்பு வட்டங்கள் புழங்கும் தன்மையை குறித்துத்தான்.

ஒரூ சாரார் தான் சொல்வது மட்டுமே சரியெனத் தோன்றும் வண்ணம் எழுதுவதும். அதற்கு மாற்று கருத்தென ஒன்று வருமென்றால் அதைக் குறித்து விவாதிக்க மனமின்றி பொது வெளியில் அவர்களை மிகவும் எளிதாக அநாயசமாக அவமதித்து விடுகின்றனர். அப்போது இது அவர்கள் அறிந்து ஏற்றுக் கொண்ட நட்பு என்பதையும் அந்த மனிதர்களுக்கு என ஒரு பொது வெளி உண்டு என்பதையும் மறந்து ஏதோ அவரவர்கள் வீட்டு வரவேற்ப்பரையில் அந்த இருவர் மட்டுமே இருந்து விவாதிக்கும் பொழுது கருத்து சொல்வதைப் போல பதிலளித்து விடுகின்றனர். அந்த சமயத்தில் கூட மற்றவர் முகமும் மனதும் கோணும் அளவிற்கு நாம் பேசுவதற்கு முன் யோசிக்கத்தானே செய்வோம்?

மறு சாரார் அது ஆணாகட்டும் இல்லை பெண்ணாகட்டும் ஒரு மிகச்சாதாரண கருத்துக்கு கூட, பத்திக்கு கூட ஆஹா ஓஹோ என்று ஒரு மிகப்பெரும் இலக்கிய படைப்பிற்கு நிகராக புகழ்வதும் பொது வெளி என்பதையும் மறந்து வெளிப்படையான முகஸ்துதி பாடுவதும் மிகுந்த நாடகமாகப் படுகிறது. சரி இவர்கள் மிகவும் திறந்த மனதுடையவர்கள் மிகச்சிறிய விஷயத்தையும் ஸ்லாகித்து பாராட்டி ஊக்குவிக்கும் குணமுடையவர்கள் என்று எடுத்துகொண்டால் இதை தங்கள் சொந்த வாழ்விலும் செய்கிறார்களா? என்ற கேள்விக்கு பெரும்பாலும் பதில் இல்லை என்பதாகவே வருகிறது. அப்போது பொது வெளியில் அவர்கள்  முகமூடிகளுக்கு கிடைக்கும் மலின வெளிச்சம் பற்றிய விழிப்பு உணர்வு கூட இல்லாதவர்கள் உடனா நம் நட்பு பாராட்டுகிறோம். என்ற கேள்வியும்  எழுகிறது.அடுத்த வகை, தான் சொல்ல நினைக்கும் கருத்தை மிகவும் வேகமாக சொல்கிறேன் என்று நாலாம் தர குணமுடையவர் தெருவில் நடைபெறும் சண்டையின் பொது உபயோகிக்கும் சில தரம்குறைந்த எடுத்துக்காட்டுக்களை கையாள்வது போல வெகு இயல்பாக வார்த்தைகளை சேற்றை இறைப்பதைப் போல இறைத்துவிடுகிறார்கள் அது இன்னும் ஆச்சர்யமாக உள்ளது. இரு பாலரும் எதிர் பாலினங்களின் கற்பு மற்றும் ஒழுக்க நிலைகள் குறித்து மிக எளிதாக பேசுவதும் ஒரு பெண்ணே மற்றொரு பெண்னின் ஒழுக்க விகிதாசாரங்களை குறித்து எழுத/பேச முடியுமானால் நாம் என்ன விதமான கலாச்சாரத்தில் சிக்கியிருக்கிறோம். “Call a Spade is a spade” but we also should be careful how this is being addressed by us. இதில் நமது கண்ணியமும் அடங்கியிருக்கிறது என்ற எண்ணம் தோன்றுவதில
அடுத்த வகை, தான் சொல்ல நினைக்கும் கருத்தை மிகவும் வேகமாக சொல்கிறேன் என்று நாலாம் தர குணமுடையவர் தெருவில் நடைபெறும் சண்டையின் பொது உபயோகிக்கும் சில தரம்குறைந்த எடுத்துக்காட்டுக்களை கையாள்வது போல வெகு இயல்பாக வார்த்தைகளை சேற்றை இறைப்பதைப் போல இறைத்துவிடுகிறார்கள்  அது இன்னும் ஆச்சர்யமாக உள்ளது.  இரு பாலரும் எதிர் பாலினங்களின் கற்பு மற்றும் ஒழுக்க நிலைகள் குறித்து மிக எளிதாக பேசுவதும் ஒரு பெண்ணே மற்றொரு பெண்னின் இரு பாலரும் எதிர் பாலினங்களின் கற்பு மற்றும் ஒழுக்க நிலைகள் குறித்து மிக எளிதாக பேசுவதும் ஒரு பெண்ணே மற்றொரு பெண்னின் ஒரு ஆண் ஒரு பெண்ணின் கற்பு மற்றும் ஒழுக்க நிலைகள் குறித்து பேசுவதை விட தாழ்வாக ஒரு பெண்ணால் மற்றொரு பெண்ணைக் குறித்து எழுத/பேச முடியுமானால் நாம் என்ன விதமான கலாச்சாரத்தில் சிக்கியிருக்கிறோம். “Call a Spade is a spade but we also should be careful how this is being addressed by us. இதில் நமது கண்ணியமும் அடங்கியிருக்கிறது என்ற எண்ணம் தோன்றுவதில்லையே ஏன்?


இது அவரவர் வீட்டு வரவேற்பறை தான் ஆனாலும் அதில் காமரா வைத்து உலகிற்கு பகிரத் தொடங்கியபின் சில கண்ணியப் போக்குகளை கடை பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை விதிகளை நாம் அறிந்து கொள்வது நல்லது என்றே தோன்றுகிறது. 

நம் நம்பிக்கொண்டிருக்கும் பரந்து பட்ட விசாலமான படிப்பறிவும், அனுபவமும் சமூக அந்தஸ்த்தும் இதற்கு துணை புரியாதா?

Disclaimer J

இந்த பத்தி உண்மையாக விமர்சிப்பவர்களுக்கும் மேலே குறிப்பிட்ட அடிப்படை விதிகளை பின்பற்றுவர்களுக்கும் பொருந்தாது. இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதியதல்ல. ஏன் சொந்த வியப்பு காரணமாக  என்னில் எழுந்த கேள்வி. பொதுவில் வைக்கிறேன்.  

Friday, December 5, 2014

இங்கு துவங்கலாம் மானுடத்தை ஆன்மீகத்தை

நாம் மனிதர்கள், தொன்று தொட்டு குழுவாக சேர்ந்து வாழப் பழகியவர்கள் நொமாடியன்ஸ் வேர் நெவெர் அலோன். குழுவாக வாழ்தல், கூட்டு விவசாயம், கூட்டுக்குடும்பம் இப்படி வளர்ந்தவர்கள் நாகரீகம் கற்றவர்கள், கற்பித்தவர்கள். 

ஆனால் தனித்திரு என்று பல ஞானியர்கள் கூறுவதன் உட் பொருள் என்ன?? இந்த வாழ்க்கை தவறா? மனிதர்களை புறக்கணித்து சென்றுவிடு என்பதா? இதுதான் ஆன்மீகமா?? கேள்வி வரும்.

இல்லை,  கூடி வாழ்தலும், இணைந்து இயைந்து வாழ்தலும் புற வாழ்க்கைக்கு உண்டான காரியங்கள். அதுவே அழகு, அங்கணம் வாழ்வது கடமை, ஆனால் அகவாழ்வென்பது வேறு,  அக வாழ்விற்கு உள்ளே தனித்திருத்தலும், சுயமாய் சிந்திப்பதும் பெரும் கூட்டத்தினிடையேயும் நம் உள் மன கட்டளைகளை புரிந்து கொள்ளும் நிசப்தத்தை கொண்டிருப்பதுமே உகந்தது இதையே தனித்திரு என்கிறார்கள் அறிந்தவர்கள்.

மற்றவர்களின் பார்வைகள் நம் என்ன ஓட்டத்தை தூண்டலாம் ஆனால் கட்டுபடுத்தலாகாது. ஒருவருக்காக ஒருவர் முடிவெடுக்க  முடியுமானால் தனித்தனி மனமும் மூளையும் எதற்கு. ஒத்த எண்ணம் கொண்டிருப்பது வேறு ஒரே எண்ணம் தான் என்பது வேறு. அது தவறு..

ஒருவரைப் பற்றிய விமர்சனங்கள் கருத்துக்கள் பேசப்படும் பொழுதே இதன் அடுத்த பாகத்தை அதன் மற்றொரு முகத்தை  சிந்திக்க தவறுபவர்கள் இந்த குழு முடிவுகளுக்குள் சிக்கிக்கொள்ளும் ஆபத்துண்டு. எவரையும் புரிதலின்றி கேட்டறிந்தவற்றின் மூலம் தவறாகவோ சரியாகவோ உணர்ந்து கொள்ள வாய்ப்புண்டு.

எதையும் எவரையும் தன் சிந்தனையின் துணை கொண்டு அனுபவத்தின் பலம் கொண்டு புரிந்து கொள்ளத்துவங்கலாம்.  கோடு தாண்டி யோசிக்கலாம். சில சமயம் நம் யோசனையின் முடிவும் அதாகவே இருக்கலாம் அப்போதும் அதன் சரி தவறுகளுக்கு நாமே பொறுப்பாகலாம்.
இங்கு துவங்கலாம் மானுடத்தை,  ஆன்மீகத்தை

Thursday, October 9, 2014

ஆம்பிளை பசங்க மில்ஸ் அண்ட் பூண் வாசிக்க மாட்டாங்களா??


நான் புத்தகங்கள் வாசிக்க துவங்கிய வயது ஞாபகம் இல்லை சிறு வயது முதலே அப்பாவுடன் நூலகத்தில் கழித்த சாயங்கால வேளைகளும் விடுமுறை நாட்களின் மதிய வேளைகளும் எனக்கு புத்தகங்களை பழகித்தந்திருந்தது. நான் நான்காவது, ஐந்தாவது படிக்கும் காலத்திலேயே தொடர்கதைகள் வாசித்து அதற்காக அம்மாவிடம் அடி வாங்கிய ஞாபகம் உண்டு.

ஆனால் என் பிள்ளைகளில் பெரியவன் மிகவும் தாமதமாகத்தான் வாசிக்க ஆரம்பித்தான். ஆனால் இப்போதெல்லாம் புத்தகங்கள் வாசிக்காத இரவுகளே இல்லை என்றாகி விட்டது. ஆனால் அவனது விருப்பம் சமீபத்திய இந்திய ஆங்கில எழுத்தர்களின் படைப்புகள். இப்போது தேடித் தேடி படிப்பது தேவதூத் பட்நாயக்கும், அமிஷ் திரிபாதியும் தான்.

சின்னவன் முற்றிலும் வேறாக உள்ளான். ஒரு மாதம் பார்த்தால் பெரி மேசன் சீரிஸ் புத்தகங்களோ அல்லது ஷெர்லாக் ஹோம்ஸ் நாவல்காளாக இருக்கும். மறு மாதம் பார்த்தால் ஏதாவது அறிவியல், புவியியல் அல்லது மெஷினரி சம்பந்தமான புத்தகமாக இருக்கும்.

ஆனால் இவர்கள் பார்க்கும் படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் ஒன்றாகவே இருக்கும் இரசித்து இரசித்து இவர்கள் பார்க்கும் படங்களில் கீழே உள்ள சப் டைட்டில் பார்க்க விட்டால் நமக்கு சத்தியமாக ஏதும் புரியாது.

நேற்றைய உரையாடலில் திடீரென சின்னவன் கேட்டான். அம்மா நீ எப்ப ஆங்கில புத்தகங்கள் வாசிக்கத் துவங்கின? எதுல ஆரம்பிச்சன்னு. எனக்கு சொல்ல கொஞ்சம் வெக்கமா இருந்தது நா மொத மொதல்ல வாசிச்ச ஆங்கில புத்தகம் மில்ஸ் அண்ட் பூண் சீரிஸ் தான்னு அதுவும் கல்லுரி போய்த்தான்னு.

ஒரு வேளை பொம்பளை பிள்ளையா இருந்திருந்தா சுலபமா இருந்திருக்குமோ?? ஆம்பிளை பசங்க மில்ஸ் அண்ட் பூண் வாசிக்க மாட்டாங்களா??

ஆம்பிளை பசங்க மில்ஸ் அண்ட் பூண் வாசிக்க மாட்டாங்களா??

Wednesday, September 24, 2014

ஆன்மீக இறுமாப்பு


கேள்விகள் என்பது நம் வினைச்செயல்,கர்மா அதற்கும் கடவுளே காரணம் என்பதில் எனக்கு ஒப்புமை இல்லை. அவர் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர். நாம் செய்யும் நன்மை தீமைகளுக்கும்  நம் வினைப்பயனே காரணம்.

நல்லோர் நட்பும் கடவுள் நாமமும் நம் கர்ம வினைகளைக் குறைக்க உதவும். அதன் மூலம் நாம் செய்யும் நன்மைகள் அதிகரிக்கும் அப்போதும் அதற்கான கர்த்தா நாம் தான்

இதில் நன்மையை நாம் கடவுளின் பெயருக்கு விடுவதன் காரணம் “நாம் ஒரு நன்மை செய்து விட்டோம்” என்ற ஆணவத்தை அடைந்து விடாமல் இருப்பதற்காகத்தான்.ஏனெனில் இந்த உணர்வு இறுமாப்பையும் அதற்கான பதில் உபகாரத்தையும் (குறைந்த பட்சம் ஒரு சிறிய அங்கீகாரத்தையாவது ) எதிர்பார்க்க வைக்கும். இதன் பயனால் இம்மையில் நாம் மீண்டும் ஒரு செயல் சக்கரத்தில் சிக்கிக் கொள்கிறோம். மறுமையிலோ மற்றுமோர் வினைச்சக்கரத்தை உருவாக்கிக்கொள்கிறோம். .

இப்போது கேள்விக்கு வருவோம். - எல்லாமும் கடவுள் செயல்தான் என்று சொன்னால் ஒருவர்  செய்யும் தவறையும் கடவுள் செயல் என்று சொல்லமுடியுமா?  அது நாத்திகவாதமாகதா? அது போலத்தான் கேள்விகளும். கேள்விகள் அறியாமையின், இருளின்,  வெளிப்பாடு, இதில் அணுவுக்குள் அனுவானவர்க்கும் ஒளியானவர்க்கும் தொடர்பில்லை.

 

இப்போது பதிலுக்கும் வரலாம் – பதில் எங்கும் எப்போதும் ஓரு  காற்றைப்போல நிலைத்து நிறைந்திருப்பது.  ஆனால் காற்றாடி சுற்றும் போதோ மரங்கள் அசையும் போதோதான் நாம் அதை புரிந்து கொள்கிறோம். இதில் நம் கேள்விகளை சுயம் ஏற்றி அதற்குண்டான பதில்களையும் தொடர்பு படுத்தி நம்மை சுகத்திலோ துக்கத்திலோ ஆழ்த்திக்கொள்கிறோம். தற்குறிப்பேற்றல் அணி உண்டல்லாவா அது போல.  இங்கும் நம் அறியாமை மட்டுமே வியாபித்திருக்கிறது.

கடவுளின் வேலை நம்மில் கேள்விகளை உண்டாக்குவதோ அதற்குண்டான பதில்களை தருவதோ இல்லை. அவரது நாமத்தால் நம்மை கேள்விகளற்ற நிலைக்கு தள்ளுவது மட்டுமே அதை உணர்த்துவது மட்டுமே. இதையும் தாண்டிய ஒரு நிலையில் அவர் வேறு எவரோ இல்லையென்றும், வேறு எங்கோ ஓர் தனி உலகத்தில் பருப்பொருளாய் இருக்கவில்லை என்றும் நம் ஆத்மா அந்த பேருணர்வின் ஒரு துகள் என்றும் புரிந்து கொள்ளும் நொடியில் மற்றுமொரு கடவுள் நமக்குள் உருக்கொள்கிறார்.

இதில் காலம் காலாமாய் நாம் செய்து கொண்டிருக்கும் சாங்கியத்திற்கு எந்த ஒரு கர்வமும் கொள்ளத்தேவையில்லை என்பது என் கருத்து.

Tuesday, September 23, 2014

தூய்மையான இந்தியா – ஜெய விஜயி பவ


கிளீன் இந்தியா ப்ராஜெக்ட் அக்டோபர் இரண்டிலிருந்து ஆரம்பிக்கப் போகிறோம் என்று பெங்களூரில் மோடி உணர்ச்சி போங்க பேசிக்கொண்டிருந்தார்.  உண்மைதான் மிகவும் தேவையான ஒரு முயற்சி. நாம் மற்ற நாடுகளில்  பயணிக்கும் போது அங்குள்ள தெருக்களையும் சாலை ஓரங்களையும் காணும் பொது நம்முள் ஏதோ ஒரு தன்னிரக்கம் சுரந்து கொள்ளும். அதுவே நம் ஊரில் சில வெளிநாட்டவர்களோடு தெருவில் பயணிக்கும் போது மிகப்பெரிய கையாலாகதத் தனமாக மாறி  மிகவும் அருசியான உணர்வுகளை தோற்றுவிக்கும்..


வெளிநாடுகளின் இண்டஸ்ட்ரியல் பார்க் உண்மையில் ஒரு பூங்கா போல இருக்கும் ஆனால் எனக்குத் தெரிந்து இங்கு எந்த ஒரு இண்டஸ்ட்ரியல் பார்க்கும் சாதாரண பகுதியாகக் கூட இருக்காது ஏதோ கைவிடப்பட்ட குப்பைத்தொட்டி போல இருக்கும். சிப்காட் அதிகாரிகள் நம் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதில் ஏதோ அவர்கள் தன்மானம் குறைந்து போவது போல் நடந்து கொள்வார்கள். சில முக்கியமான வெளிநாட்டு வாடிக்கையாளர்களை நம் ஏரியாவிற்கு அழைத்து வரும் போது தான் இதுவரை நாம் தினமும் கடந்து வந்துகொண்டிருக்கும் அவலத்தின் மொத்த விஸ்தீரமும் உரைக்கும்.

தாமதமான நடவடிக்கை என்றாலும் தேவையான ஒன்று. எல்லா நல்ல திட்டங்களைப்போல இதுவும் தொடங்கி மறைந்து  விடக்கூடாது என்று இந்த நவராத்திரி நன்னாளில் எல்லா சக்திகளையும் வேண்டிக்கொள்கிறேன். J

ஜெய விஜயி பவ

Thursday, September 11, 2014

எவ்ளோ பெரிய நிம்மதி...

எந்த ஒரு விஷயத்தையும் ஆழ்ந்து அனுபவிக்கும்  போதே அது குறித்த பார்வையும் விமர்சனமும் எனக்குள்ளேயே  துவங்கி விடும். சில சமயம் அந்த விஷயங்களில் இருந்து என் முயற்சியில் வெளி வருவேன் சில சமயம் காக்கை உட்கார பனம் பழம் விழுவது போல் தானாகவே நடக்கும். சமீபத்தில் நடந்த இரண்டு விஷயங்கள்.
 
ஒன்று  - என்னுடைய விண்டோஸ் போனில் ஒரு வசதி, பேஸ் புக் அப்டேட் எல்லாம் அதற்குள் போகாமலே பார்த்து விட முடியும். என் பக்கத்திற்கு வரும் லைக், கமன்ட் எல்லாம் தனியாக மீ என்ற பக்கத்திலும்  எல்லா பதிவுகளும் பீப்புள் என்ற பக்கத்திலும் வந்து விடும்.  நான் பேஸ்புக் பக்கத்திற்கு வராமலே இதையெல்லாம் பார்த்து விடமுடியும். அதிலும் இந்த பகுதிகள் குறைந்த சிக்னல் இருந்தால் கூட வெகு எளிதில் லோட் ஆகிவிடும். நாங்கள் எல்லாம் ஆரம்ப கால கணணி பயன்பாட்டாளர்கள் என்பதால் டாஸ் பேஸ் லினக்ஸ் பேஸ் போன்ற அவுட்புட் மிகவும் பிடிக்கும்.  இதனால் கை சும்மாவே இருக்காது, எப்பொழுது பார்த்தாலும் போனை புரட்டியபடியே இருக்கும். ஒரு கட்டத்தில் எனக்கே என் மீது விமர்சனம் வர ஆரம்பித்தது.  அப்போது தான் வந்தது ஒரு விடிவு காலம்  சமீபத்திய விண்டோஸ் அப்டேட் செய்ததில் இந்த வசதியை எடுத்து விட்டு நேரடியாக பேஸ்புக் அப்ளிகேஷனுக்கு தொடர்பு கொடுத்து விட்டார்கள். இந்த இன்டர்பேஸ் முறையில் நோட்டிபிகேஷன் வந்து அதைத்  திறந்தால் அது நேரேடியாக நம் எப்.பி பக்கத்திற்கு எடுத்துச் சென்றுவிடும் ஆனால் சிக்னல் குறைவாக இருந்தால் எப்.பி பக்கங்கள் ஒப்பன் ஆக தாமதமாகும்  இது கொஞ்சம் எரிச்சல் ஊட்டுவதால் போனை உருட்டுவது கொஞ்சம்.. கொஞ்சம்தான்  குறைந்துள்ளது. ஒரு பக்கம் சந்தோஷம் மறு பக்கம் சிறு அசௌகரியமாக உணர்ந்தாலும் முள் கொஞ்சம் குறைந்த உணர்வு.
இரண்டாவது சனிக்கிழமை காலை ஒன்பது மணி முதல் பதினொன்றரை மணி வரை ஏசியா நெட்டில் வரும் மகாபாரத தொடர். அடுத்த வாரம் நாம் தமிழில் பார்க்கப்போகும் பகுதிகள் மொத்தமும் முதல் வாரமே இங்கு முடிந்து விடும்.  எனக்கு மலையாளம் மொழி மிகவும் பிடிக்கும் என்பதாலும் சில சமயம் வார நாட்களில் அலுவல் முடிந்து ஏழு   மணிக்கு முன் வீடு திரும்ப தாமதமாகிவிடும் என்பதாலும் தவறாமல் இந்த சனிக்கிழமை தொடரை பார்த்து விடுவதுண்டு. ஆனால் இப்படி இரண்டரை மணி நேரம் டீவி முன்னாடி கழிப்பது எனக்குள்ளேயே சில வாரங்களாக குற்ற உணர்வை தந்து கொண்டிருந்தது. வந்தது விடி மோசனம். போன வாரம் ஓணத்தை முன்னிட்டு மற்ற நிகழ்ச்சிகள் இருந்ததால் இந்த பகுதி கிடையாது. இதன் படி அவர்கள் நமக்கு ஒரு வாரம் பின் தங்கி விட்டார்கள் எனவே இனிமேல் பார்க்க வேண்டிய தேவை இல்லை... எவ்ளோ பெரிய நிம்மதி....

Friday, August 15, 2014

உரத்த சிந்தனை – உடை – என்ன செய்யப் போகிறோம்?



சிற்றாடை இடை உடுத்திய சின்னஞ்சிறு பெண் குழந்தைகளை இப்போதெல்லாம் கண்களால் காண்பதும் அரிது என்பது நாமெல்லாம் அறிந்த ஒன்றே. இனி கற்பனையில் கூட மனதில் காண முடியாது என்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கிறோம் என்பது  பத பதைப்பிற்கு உள்ளாக்குகிறது.

இப்போதிருக்கும் பெண்களில் மிகப்பெரும் சதவிகிதத்தினர்  சுடிதார் போன்ற உடைகளையே மிகவும் சௌகரியமாக எண்ணும் நிலை உள்ளது. இதற்கான காரணமாக நாம் பலவற்றைச் சொன்னாலும் அடிப்படையான காரணம் பள்ளி கல்லூரி காலங்களில் அதுவே சீருடையாக மாறியதும் ஒரு காரணம் என்பது என் எண்ணம். தொடர்ந்து ஒரே விதமான சௌகர்யமான விதத்தில் உடை அணிந்தவர்களுக்கு கொஞ்சம் அதிக கவனம் தேவைப்படும் வேறு மாதிரியான உடைக்கு (பாவாடை தாவணி, புடவை) மாறுவதில் சிரமம் கண்டிபாய் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்த அடிப்படை காரணத்தினாலேயே முப்பது முப்பத்தைந்து வயதிற்கு கீழ் உள்ள இப்போதைய பெண்கள் பெரும்பாலும் புடவை அணியும் வழக்கத்தை தவிர்த்து வருகின்றனர்.

இப்போதைய நவீன நகர்புறப் பள்ளிகள் நம்மை இன்னும் ஒரு படி பின்னுக்கு அல்லது முன்னுக்கு தள்ளுகிறார்கள்.  இது போன்ற பள்ளிகளில் இப்போதெல்லாம் மூன்றாவது வகுப்பு வரை ஆண் பிள்ளைகளைப் போல அரை கால் சராயும் காலர் வைத்த சட்டையுமே  சீருடையாக பெண் குழந்தைகளுக்கும் பின்பற்றப் படுகிறது. பின் மேல் வகுப்பு செல்லும் பொது அது  முழு கால் சராயாக மாறுகிறது. 

இந்தக்குழந்தைகள் இப்போதே கூட பட்டுப்பாவாடை சட்டை, ப்ராக், குட்டை பாவாடை போன்ற உடைகளை விரும்புவதில்லை. விசேஷ வீடுகளுக்கோ, கோவில்களுக்கோ செல்வதற்கு கூட அவர்கள் ஷார்ட்ஸ், டி ஷர்ட், பேன்ட்ஸ், போன்ற உடைகளை அணிவதையே விரும்புவதாக அநேக பெற்றோர்கள் கூற கேட்கிறேன். இந்த நிலை தொடர்ந்தால் இன்று பாவாடை தாவணி, புடவைக்கு நேர்ந்தது நாளை சுடிதாருக்கும் நேரும் என்பது என் எண்ணம்.

இது வெறும் உடை சம்பந்தமானது மட்டுமல்ல பெண்களின் நடை, மனம் குணம் மற்றும் அவர்களின் நளினம் சார்ந்ததும் கூட. நானும் கூட எல்லாவிதமான உடைகளையும் அணியும் வழக்கம் உள்ளவள் தான். அதனாலேயே உடை தரும் உள்ளம் மற்றும் உடல்மொழி  மாற்றங்களை வெகு தெளிவாக என்னால் யூகிக்க முடிகிறது.

இந்த பதிவை படித்து விட்டு என்னை பத்தாம் பசலியாகவோ இல்லை கட்டுப்பெட்டியாகவோ நினைக்கத் தோன்றினால் அவரவர் ஆழ் மனைதை கேட்டுப்பாருங்கள்  இந்தக் கவலை உண்மை எனச் சொல்வீர்கள்.

களவையும் கற்று மறக்கலாம் ஆனால் களவு மட்டுமே கற்கலாகதல்லாவா? பெண்மையும் அதன் நளினமும் தொலைந்து போவது ஏற்புடையது தானா? நாம் என்ன செய்யப்போகிறோம்??

Wednesday, August 13, 2014

உரத்த சிந்தனை – உறவுகள் – ஒரு சுய பரிசோதனையின் தேவை


காலம் காலமாய் நம்முள் கனன்று கொண்டிருக்கும் பெரு நெருப்பொன்றை கையாள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். அன்றைய கூட்டுக் குடும்ப காலகட்டமாகட்டும், இன்றைய தனிக்குடித்தன காலமாகட்டும் இரத்த சொந்தக்களுக்கிடையேயான பூசல்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

முகலோபனம் இல்லாத உறவுகளை இன்றும் எத்தனயோ வீடுகளில் நாம் மிகவும் வேதனையோடு எதிர் கொள்ளத்தான் செய்கிறோம். இதில் நம் தவறென்ன அவர் தவறென்ன என்பதை தாண்டி ஒரு சூல் உறவு என்பதை நாம் யோசிக்கின்றோமா? என்பது மட்டுமே நம் கேள்வி, இதையே நீர் அடித்து நீர் விலகுமா என்றும் கேட்பதுண்டு. 

ஒருகுடும்பம் ஒரு குழந்தை என்ற இன்றைய குடும்ப அமைப்பில் நம்மைத் தாண்டி அந்த குழந்தைகளுக்கு உருத்தானவர் யார்? பெரியப்பா, சித்தப்பா, அத்தை பெரியம்மா, சித்தி, மாமா, இவர்தம்  குழந்தைகளை உறவகாவும் உயிராகவும் நினைக்கும் அளவிற்கு நாம் நம் குழந்தைகளை வளர்த்திருக்கிறோமா? என்பது நாம் பதிலுறுக்க வேண்டிய ஒரு கேள்வி.

எழுபது என்பது வருடங்களுக்கு முன் ஒரே வீட்டில் பிறந்து நகமும் சதையுமாய் வளர்ந்து காலச்சூழலில் ஒருவருக்கு ஒருவர் அந்நியமாய் ஆனா சகோதர சகோதரியின் உறவு அவர்கள் இறப்பிலும் இணையவில்லை. இந்த விலகலின் காரணங்கள் மட்டும் கதை கதையாய் இருவர் குடும்பங்களிலும் பேசுவது தாண்டி உண்மையான காரணம் புரியாமலே இரு குடும்பமும் இன்று வரை தனித்திருக்கும் எத்தனையோ கதை நாம் அறிந்ததே. ஆனால் இருவரில் கடைசியாய் எஞ்சியவர் இறக்கும் தருவாயில் சொன்ன சில நெகிழ்வான வார்த்தைகளில் இன்றைய தலைமுறை உறவுகளை புதுப்பிக்க விழையும் சாத்தியக்கூறுகளும் நாம் அறிந்ததே. மிக்க சந்தோஷம், ஆனால் காலம் கடந்த இந்த ஞானத்தின் இடையில் நாமும் நம் தலைமுறைகளும் எத்தனை உணர்வு பூர்வமான  நிகழ்வுகளை,  சந்திப்புகளை இழந்திருப்போம்?  குறைந்த பட்சம் நாமாவது அந்த தவறை செய்யாதிருக்க என்ன செய்கிறோம்? நாம் சிந்திக்க வேண்டிய முக்கியமான கேள்வி இது.

உறவுகளை சுயலாபம் தாண்டிப் பார்க்கும் மனோபாவம் நம்மில் உள்ளதா? அதையும் தாண்டி கருத்து வேறுபாடுகள் எழும் சமயங்களில் அந்த கசப்புக்களை வரும் தலைமுறைக்குள்ளும்  செலுத்தாதிருக்கிறோமா? ஒருவருக்கொருவர் விலகாதிருக்கிறோமா? இவைகளுக்கான பதிலை நாம் யாரோடும் பகிர்ந்து கொள்ளத்தேவையில்லை ஆனால் நம்முள் ஒரு சுய பரிசோதனை மிகவும் அவசியம்.

Monday, August 11, 2014

உரத்த சிந்தனை – மொழி – எப்படி சரி செய்யப் போகிறோம்??


மதிய உணவு இடைவேளை என்பது சில சமயம் இயந்திரத்தனமாயும், சில சமயம் ஆசுவாசமாகவும் அமைவதுண்டு. நேற்றைய நாள் இரண்டாவது வகையைச் சார்ந்தது.

மதிய உணவை சில நண்பர்களோடு உண்ண நேர்ந்தது. பேச்சு அவர்கள் குழந்தைகளின் புத்திசாலித் தனங்களைப் பற்றியும், விளையாட்டைப்பற்றியும் போய்க்கொண்டிருந்தது. மெதுவாக பாடத்திட்டதைப்பற்றியும் திரும்பியது. எல்லோருமே அவரவர் குழந்தைகளை ICSE/CBSE பாடத்திட்டத்தில்  தான் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் இரண்டாவது மொழியாக பொதுவில் ஹிந்தியை எடுத்துள்ளார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அப்பா, அம்மா இருவருமே ஹிந்தி படித்திருக்கவில்லை ஒரு சிலர் பிள்ளைகளுக்காக தாங்கள் படிப்பதாகவும் சிலர் தனி வகுப்பில் சேர்த்திருப்பதாகவும் சொன்னார்கள்.

இதில் தெலுங்கர், தமிழர், மலையாளி என கலவையாக எல்லா மாநிலத்தவரும் இருந்தனர். வீட்டில் அவரவர் தாய் மொழியில் தான் பேசுகிறார்களாம். ஆனால் இரண்டாம் மொழிப்பாடமாக தாய்மொழியை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது .  இதில் நாம் ஒத்துக்கொள்ள வேண்டிய ஒரு அம்சமும் இருக்கிறது. நம் மாநிலங்களில் உள்ள இது போன்ற பள்ளிகளில் அந்தந்த மாநில மொழியே பெரும்பாலும் இரண்டாவது மொழியாக இருக்கும். அந்த வகையில் மற்ற மாநிலத்தாருக்கு அதில் ஆட்சேபமும் அசௌகரியமும் இருக்க  வாய்ப்புண்டு.

ஆனாலும் இப்படியே போனால் நம் சந்ததியினர் அவரவர் தாய் மொழியில்  எழுதவோ படிக்கவோ தெரியாமல் பேச மட்டுமே தெரிந்தவராவர். இதுவே ஒரு மொழியின் அழிவின் ஆரம்பம் ஆகாதா? என் குழந்தைகளை எடுத்துகொண்டாலும் அவர்களின் வாசிப்பு முற்றிலும் ஆங்கிலத்திலேயே உள்ளது. பல தரப்பட்ட புத்தகங்களை வாசித்தாலும் அவை நம் தாய் மொழியில் இல்லை. இதில் மேலும் வருத்தம் என்னவென்றால் இருவருமே தமிழையே இரண்டாம் மொழிப்பாடமாக எடுத்தவர்கள்.

இன்றைய வணிக சூழலில் அவரவர் மாநிலங்களிலேயே வேலை செய்யும் வாய்ப்புக்கள் மிகவும் அரிது என்பதாலும், யாதும் ஊரே யாவரும் கேளீர் வாழ்வே மிகவும் சிறந்தது என்றாலும் எழுத்துக்களை தொலைக்கும் மொழியை நாம் எவ்வாறு காப்பது? அரிதாக அரிதாகி மறைந்து போன நம் எத்தனையோ குல/குடும்ப வழக்கங்களைப்போல நாம் நம் மொழியையும் தொலைத்து விடப்போகிறோமா? அந்நிய தேசங்களுக்குச் செல்லாமலேயே நாம் நம் மொழிக்கு அந்நியமாகிப்போகும் நிலைமையை எப்படி சரிசெய்யப் போகிறோம்??

இது போல இன்னும் சில கேள்விகள் உண்டு?......