Showing posts with label தேடல். Show all posts
Showing posts with label தேடல். Show all posts

Sunday, February 25, 2018

ஆசீவகம் - ஆதி தமிழரின் தொன்ம மெய்யியல் - வெண்காயபர் - ஆசீவக சித்தர்

சாலை ஓரத்தில்  கண்ட காட்சியால் காலுக்கு ப்ரேக் போட வேண்டி வந்தது. அது “மாறுகால் தலை” சமணர் சின்னம் என்ற வழி காட்டியபடி நின்றிருந்த அறிவுப்பலகை. பக்கத்து பெட்டிக்கடையில் கேட்டதில் 13 கிலோ மீட்டர் உள்ளே செல்ல வேண்டும் என்று சொல்ல ஸ்ரீயிடம் 10 கிலோ மீட்டர் தானாம் ரோடு நன்றாக இருக்குமாம். என்று எக்ஸ்ட்ரா பிட் போட சரி என்று கிளம்பி வயல்காடுகளின் நடுவே செல்லத்துவங்கினோம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித வாடையே இல்லை. எங்கோ ஓர் இடத்தில் ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருக்க கேட்டதும் இப்படி போங்க சீவலப் பேரி வரும் அங்கபோய் மலக்கோவில்னு கேளுங்க சொல்லுவாங்கன்னு சொல்ல. மேலும் பயணித்தோம்.
இதற்கிடையில் நான் நெட்டில் அது என்ன இடம் என்று தேட ஆர்வம் அதிகம் பற்றிக் கொண்டது ஏனெனில் அது சமணருக்கும் முன்னறேயான ஆசீவகம் என்னும் தொல் மரபு சார்ந்த மதத்தின் மிக முக்கியமான மூவரில் ஒருவரான “வெண் காயபர்” வாழ்ந்து மறைந்த இடம். வாழ்வியல் முறையில் சமணருக்கு ஒத்து இருப்பதால் சமணப் படுகை என்றே அழைக்கப் படுகிறது.











யார் இவர்கள் இவர்களுக்கு என்ன பெயர்.. தேடத் தேட நம் மெய்யியல் மரபின் ஆணிவேரைச் சென்று சேர்க்கிறது தகவல்கள்.
இப்பொழுது இது எவ்வாறு உள்ளது? அதன் பரிமாணங்கள் எவ்வாறு வளர்ந்துள்ளது பார்க்க பார்க்க கண்ணைக் கட்டுகிறதுமலையடிவாரம் சென்றதும் விதம் விதமான கிராம தேவதைகளின் சந்நிதிகள்
அங்கிருந்த சிவனனைந்த பெருமாள் சந்நிதியில் இருந்த பெரியவரிடம் சமணர் படுகை எங்கே என்று கேட்க அதா... பின்னா....ஆ...டி இருக்கு இடக்க திரும்பி மலைக்குப் பின்னாடி போனா வரும் என்று சொல்ல அட எப்படி போவது என்று ஒரு நிமிஷம் குழப்பம் வந்ததும். பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது ஆள் பக்கத்துல தான் மேடம் போகலாம் என்று சொல்லவும் லபக் என்று தாவிப் பிடித்துக் கொண்டேன். கொஞ்சம் கூட்டிடுப் போகறீங்களா என்று கேட்க சரி என்று தலை ஆட்டிவிட்டு கூட வர பின்னாடி யார் வருகிறார்கள் என்று கூட பார்க்காது நான் உடன் நடந்தேன். தலையெழுத்தே என்று நவீன் தொடர ஸ்ரீ யும் நித்தாவும் தயங்கி தயங்கி கிளம்பினார்கள்.
கரடுமுரடான மலைப்பாதையில் நடக்க அவர் பேசிக் கொண்டே போனார். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் நம்மால் உள்ளே செல்ல முடியும் பார்க்கலாம். என்பதைத் தாண்டி மேலதிக விபரங்கள் இல்லை. பங்குனி உத்திரத்திற்கு அந்த கோவிலில் விசேஷம் அதிக மக்கள் வருவார்கள். மேல உள்ள சாமி சைவம், ஆனா கீழ உள்ள சாமி, சிவனனைந்த பெருமாள் நீங்கலாக மற்ற அனைவரும் அசைவ சாமி. அவங்களுக்கு அசைவம் படைக்கலாம் அதனால மேல போய் பூலுடையார் சாஸ்தாவைப் பார்த்துட்டு வந்து கீழ வந்து படையல் போடுவாங்க.
இத்தனை விஷயம் பேசிக்கொண்டே நடக்க அந்த இடம் வந்தது. பார்வைக்கு ஒரு பெரும் பாறை அதனடியில் ஓராள் உயரத்திற்கு ஒதுங்கக் கூடிய அளவுக்கு இடம் அதனடியில் ஐந்து சமணர் படுக்கை, கூடவே ஒரு முடியாத நிலையில் ஒரு படுக்கை.
அத்தனை இடங்களிலும் ஒராள் அகலத்திற்கு உயரத்திற்கு ஒரு சின்ன பள்ளம், தலை மாட்டில் கொஞ்சம் உயரமாக சின்னதாக செதுக்கப்பட்ட தலையணை போன்ற அமைப்பு. கூடவே இடமெங்கும் கோலம் போன்ற கோடுகள், கட்டங்கள், அதை சித்திரம் என்றோ, அல்லது அல்லது சக்கரம் என்றோ வகைப் படுத்த முடியாத கோடுகள். அவர்கள் காலத்தில் ஏற்படுத்தியதா இல்லை பின்னாளில் ஆடு மேய்க்கும் ஆட்கள் வரைந்து ஆடுபுலி கட்டம் விளையாடியாத என்று தெரியவில்லை. ஆனால் அங்கிருந்த பழமையான மற்ற எழுத்துக்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பழமை வாய்ந்தது என்றே தோன்றியது. ஆனால் அதைக் குறித்த குறிப்புகள் ஏதுமில்லை.
பாறையின் மேலே “வெண் காசிபன் கொடுப்பித்த கஞ்ச்சனம்” என்று பிரம்மி எழுத்துக்களாலும், “சுவாமி அழகிய அம” என்று எட்டாம் நூற்றாண்டு தமிழ் எழுத்துக்களிலும் எழுதிள்ளதாக மட்டுமே தொல்லியல் துறை குறிப்புகள் சொல்கிறது.
அந்த பாறையின் கீழ் உள்ள இடம் சிறிதாக இருந்தாலும் மழை நீர் அங்கு விழாதவாறு குடையின் அமைப்பில் அந்தப் பாறை சிறிதே செதுக்கப் பட்டிருப்பதைக் காண முடிந்தது. பார்க்கப் பார்க்க வியப்பு மேலிட்டது.
சுட்டெரிக்கும் வெயிலையும் தாண்டி அங்கு அமர்ந்து தியானிக்க மனம் சொல்ல கண்மூடி அமர தலையில் வெள்ளை ஒற்றை ஆடையோடு வெள்ளை வெட்டி சகிதம் ஒரு பெரிசு பக்கத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த உணர்வு. உள்ளே உள்ளே என அமிழ்த்தியது. அது மிகையுணர்வு அல்ல என்பது தெள்ளத் தெளிவான உணர்தல்.
எங்களை அழைத்து வந்த ஆளும் சிவனே என்று காத்திருக்கக் கண்டு நவீன் மெல்ல தோள் தொட்டு போலாமா என்று கேட்க மீண்டும் மலை அடிவாரத்துக்கு வந்தோம்.

ஆசீவகம் - ஆதி தமிழரின் தொன்ம மெய்யியல் - 3

"விழு" என்பது ‘வீழ்’ என குறிப்பிடப் படுவது போல் உழு எனும் சொல் “ ஊழ்” எனும் சொல்லாக கிளர்ந்தது. ‘உழு’ என்ற சொல் நிலத்தை உழுதல் என்ற பொருளிலும் குறிக்கப் படும். இது ஊழ்கம் அதாவது யோகம் என்ற சொல்லுக்கு எவ்வாறு தொடர்பு படுகிறது என்று திரு. ஆதி சங்கரன் அவர்கள் தனது ஆதி தமிழர் மெய்யியல் எனும் புத்தகத்தில் கூறுவது மிகவும் பொருத்தமானதாக உள்ளது.
நிலத்தில் பஞ்ச பூதங்களை சேமிக்கும் ஒரு அற்புதமான செயலே உழுதலாகக் கொள்ளலாம். 
நிலத்தை முதலில் புரட்டி விடுதல் என்று சொல்லும் பொழுது மண்ணோடு (பிருத்வி ) காற்று (வளி) சேர்வதும், மேலும் பின்னர் நீர் (ஜலம்) சேர்ந்து ஒளி (நெருப்பு, தேயு ) உமிழும் கதிரவன் பார்வையில் கிளர்ந்து விடப்படும் பொழுது மண்ணின் நுண் உள்ளறைகளில் (அணுவில்) உயிர்காற்று (வாயு, வளி ) அதாவது உயிர்சத்து சேமிக்கப் படுகிறது. இந்த மண்ணின் நீர் சத்து குறைந்ததும் அந்த வெற்றிடங்களில் ஆகாயச் சத்து வந்து நிறைகிறது.

இவ்வாறு உயிர்வளி சேமிக்கப்படுதல் உழு எனும் சொல்லால் குறிக்கப்படுகிறது. இந்த உழு, ஊழ் எனும் சொல்லின் அடிப்படையில் அமைந்த ஊழ்கம் எனும் பயிற்சி மாந்தர் உடலின் (நுண்ணிய) கண்ணறைகள் தோறும் உயிர்வளி சேமிக்கப் பயன்படுகிறது. இந்த உயிர்வளியினை அதிகம் பெறும் இயற்கைச் சூழல் அமைந்த சோலைகளிலும், மலைக் குகைகளிலுமே பெரும்பாலும் ஆசீவகப் பள்ளிகள் அமைந்திருந்தன.
இந்த ‘ஊழ்’ எனும் சொல்லிற்கு இயற்கையில் நிகழும் அணுவியல் மாற்றத் தொடர் நிகழ்வு என்பதே ஆசீவக விளக்கமாகும். இயற்கை நிகழ்வுகளின் ஒழுங்கு என்பது விதிப்படியே நிகழும் ஆதலால் அணுவியம் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
இவ்வாறு ஊழ்க நிலையில் உயர் நிலையினை அதாவது ஆறு வண்ணங்களின் 18 படிநிலைகளையும் கடந்து ஊழ்கத்தினால் அணுக்கள் ஆற்றல் செறிவுற்று ஆகூழ் அதாவது அணுக்கள் எஞ்சி, மிஞ்சி அணுக்கள் ஒன்றுடன் ஒன்று இறுகி யிணைந்து உடலழியா நிலையும், ஒளியுடலும் பெறும் நிகழ்வே மிக இறுதி இலக்காகக் கருதப் படுகின்றது. அவ்வாறு இறுதி நிலைப் பேறு பெற்றவர்கள் எண்வகை உறுதிப் பொருள்களைக் கடக்க வேண்டி இருக்கின்றது என்கிறது ஆசீவகக் கோட்பாடு. அவை எதுவெனக் கண்டால்.
1. கடைமிடறு, 2, இறுதிப்பாடல், 3, இறுதி ஆடல், 4, இறுதி வரவேற்பு, 5, காரிருள், 6, நிறையா வழிகை அமிழ்தூற்று, 7. தடைக்கல் தகர்ப்பு அல்லது தமர் திறப்பு, 8. ஐயன் நிலை அடைதல்.
இவைகளை இன்னும் தெளிவாக அடுத்த பதிவில் காணலாம்.
குறிப்பு - இவைகளை நான் இணையத்திலும், புத்தகங்களிலும் தேடி எடுத்த தரவுகளின் செய்திகளின் அடிப்படையிலேயே தொகுத்து அளிக்கிறேன்

ஆசீவகம் - ஆதி தமிழரின் தொன்ம மெய்யியல் - 2



ஆசீவகத்தினை நிறுவியவர் எவர், அவர்தம் பெயர்கள் என்ன? என்ற விபரங்களுக்குச் செல்வதற்கு முன் அவர்தம் அடிப்படை கோட்பாடுகளும் அதன் வெளிப்பாடுகளும் எவ்வாறு இருந்தன என்று அறிந்து கொள்வதும் மிகவும் முக்கியமான ஒன்று.
ஆசீவகத் துறவிகள் வழிவழியாக (தலைமுறைகளாக) மக்களுக்கு நன்னெறிகளைப் போதித்து அவர்களை வழி நடத்தினர். அத்துறவிகளின் வாழிடங்கள் பெரும்பாலும் கற்குகைகளே. துறவி கூட உழைத்தே உண்ண வேண்டும் என்பது ஆசீவகப் பொருளியல்
இந்தத் துறவிகளின் துறவு வாழ்க்கையில் அறுவகையான நிறக் கோட்பாடு பின்பற்றப் பட்டது.
ஆசீவகத்தினர்அவரவர் சிந்தனை, செயல், தகுதி, அறிவுநிலை, ஊழ்கப் பயிற்சி,மெய்யியல் அறிவு இவற்றை அடிப்படையாகக் கொண்டு அறுவகை நிறங்களால் வகைப்படுத்தப் பட்டனர் :
1. கருமை & சாம்பல் - துவக்க நிலை – இரவு விண்ணின் நிறம்
2. நீலம் - இரண்டாம் நிலை – விடியற்காலை கதிரவன் உதிக்கும் முன் விண்ணின் நிறம்
3. பசுமை - மூன்றாம் நிலை – கதிரவன் உதிக்கத் துவங்கும் பொழுது சிறிய நேரத்திற்கு      இருக்கும் நிறம்
4. செம்மை - நான்காம் நிலை – கதிரவன் உதித்தப் பிறகு விண்ணின் நிறம்
5. மஞ்சள் - ஐந்தாம் நிலை - கதிரவன் உதித்தப் பிறகு கதிரவனின் நிறம்
6. வெள்ளை - இறுதி நிலை – கதிரவன் உச்சிக்கு வந்த பிறகு கதிரவனின் நிறம்
இந்த ஆறு வகைக்குள்ளும் மும்மூன்று உட்பிரிவுகளை கொண்டதாக அமைத்தனர். படிநிலை உயர உயர நிறத்தின் அழுத்தம் குறைக்கப்படும்
1. கரும்பிறப்பில் - 1.கருமை முதல் படி, 2. கருமை இரண்டாம் படி, 3. சாம்பல் மூன்றாம்         படி
2. நீலப் பிறப்பில் - 1.கருநீலம் முதல் படி, 2. நீலம் இரண்டாம் படி, 3. வான்நிறம்              மூன்றாம்    படி
3. பசும் பிறப்பில் - 1. அடர்பச்சை முதல் படி, 2. பச்சை இரண்டாம் படி, 3. வெளிர்பச்சை மூன்றாம் படி
4. செம்பிறப்பில் - 1. செம்மை முதல் படி, 2. இளம்சிவப்பு இரண்டாம் படி, 3. காவி மூன்றாம் படி
5. மஞ்சள் பிறப்பில் - 1. அடர் மஞ்சள் முதல் படி, 2. இளமஞ்சள் இரண்டாம் படி, 3. பொன்மை மூன்றாம் படி
6. வெண்பிறப்பில் வெண்மை மூன்று படிகளிலும்
இந்த 18 படிநிலைகளை கடந்த பின்னரே நல்வெள்ளை எனும் நிறமிலி நிலையினை அடைவர் என்பதே ஆசீவக நிறக்கோட்பாடு. அதாவது கருமையிலிருந்து நல்வெள்ளை நிலை வரையிலும் தகுதி உயர உயர நிறத்தின் அடர்வு குறைவதனைக் காணலாம்.
நல்வெள்ளை எனும் இறுதி நிலை நிறமிலி எனும் நிலையினைக் குறிக்கும். கருமையில் பிறவி துவங்கி அறியாமை இருளுடன் வாழ்வைத் துவங்கும் ஆசீவக மாணவன் தனது பயிற்சியினாலும் ஒழுக்கத்தினாலும் அறுநிறப் பதினெண் படி கடந்து நிறமிலி நிலையினை அடைவதே ‘வீடடைதல்’ எனப்படும். அப்படி ஒளியடைதலே ஆசீவக மெய்யியலின் நோக்கம்.
வள்ளல் பெருமான் கூட ‘ஒளிதேகம்’ என்று குறிப்பிடுவதும் இந்த நல்வெண்மை நிலையையே என்ற கருதுகோளும் உண்டு.
தொடரும்....
குறிப்பு - இவைகளை நான் இணையத்திலும், புத்தகங்களிலும் தேடி எடுத்த தரவுகளின் செய்திகளின் அடிப்படையிலேயே தொகுத்து அளிக்கிறேன்
No automatic alt text available.

Monday, January 22, 2018

ஐயா வைகுந்தர் - சுவாமித்தொப்பு - ஆதி மூலத்தின் தரிசனத்தை நோக்கிய பயணம் - 20 - Jan-2018

அகவழிப் பயணங்களில் முதன்மையானது ஒப்புக் கொடுப்பது அதன் மூலமாகவே நாம் ஆற்றின் கரையில் இருந்து அதன் மைய நீரோட்டத்திற்கு இழுத்துச் செல்லப் படுகிறோம். பின் ஆற்றின் ஒழுக்கினோடே இயைந்து பயணம் செய்வதொன்றே வழி. நீரின் ஓட்டத்திற்கு எதிராகவோ, குறுக்கு மறுக்காகவோ அல்லது அந்த ஒழுக்கின் திசையோடோ நாம் முனைந்து நீந்த முற்படும் பொழுது விளைவுகள் எனும் வினைகளை சந்திக்க நேருகிறோம்.

அதுபோலவே 2016 துவக்கத்தில் இருந்தே மைய நீரோட்டத்தின் ஒழுக்கினோடே பயணிப்பதே வாழ்வென்றானது. குறிப்பாக பக்தி, மெய்யியல், மெய்ஞானம் சார்ந்த விஷயங்களில் தினசரி வாழ்வில் ஊடுபாவு போல ஒரு தனி இழையோடு பயணம் நடந்து கொண்டே இருக்கிறது.

அந்த தரிசன நீட்சியில் இந்த பயணத்தில் நான் சென்று நின்றது “ஐயா வைகுந்தரின்” வாசல். ஏகத்தை வலியிருத்தும் மற்றொரு மாற்று இந்து மதக் கோட்பாடுகளை உடைய மரபு. தந்தையின் பாதை, என்று பொருள் தரக்கூடிய “ஐயா வழி”.  My father blesses My father blesses  என்று சொன்ன யோகி ராம்சுரத்குமாரின் மாற்று வடிவம். எல்லா மாற்றுக் கோட்பாடுகளுக்கும் நேரும் சமூக ஒழுக்குகள் இந்த மரபிற்குள்ளும் நிகழ்வதைக் கண்கூட காண நேர்ந்தாலும் எவரோ சிலரின் உணர்தலுக்காக சாட்சியாக நிற்பதாக உணர்கிறேன் “சுவாமித் தோப்பில்” முதல் பதி என்றழைக்கபடும் இந்தப்  புனிதத்தலம்.

ஆதி உண்மையின் பரிணாமங்களைப் பேசும் எல்லா மாற்று இந்து மரபுகளையும் போல இங்கும் வருணாஸ்ரம நிராகரிப்பு, அத்வைதம், அகம்பிரம்மாஸ்மி, சமூக அக்கறை என்ற ஸ்ரத்தைகளை உள்ளடக்கி ஆதியில் உருவாக்கப் பட்டிருந்தாலும் காலப் போக்கில் பக்தி மரபின் ஒரு வாசலாக மாறியிருப்பதை உள்ளங்கை நெல்லிக் கனியாக காண முடிகிறது. இது சரியா தவறா என்று எழுந்த கேள்விக்கான விடையையும் மறு புலரியில் அருணனின் வரவுக்காக காத்திருந்த பொழுதுகளில் கிடைக்கச் செய்ததும் அதை மேலும் பேசிப் பேசி விரித்துக் கொள்ளும் சக உயிரினை தந்தற்குமான இந்தப் பிரபஞ்ச்சத்தின் உள் நோக்கத்தில் இருக்கிறது என் ஸ்வதர்மாவிற்கான பதில் என்று உள்ளுணர்வு சொல்கிறது.

வடக்கு வாசல் அவர் தவம் இருந்த இடமாக போற்றப் படுகிறது அங்கு ஒரு மர இருக்கையும் அதன் மேல் அமையப் பெற்ற கண்ணாடியும் உத்திராட்சமும். கண்டு அமர்கையில் உள்ளே எழும் ஓசையின் அளவுகள் தனித்து வேறு எதனோடோ லயிக்கிறது. பின் கிழக்கு வாசல் சென்றால் பள்ளியறை என்று அழைக்கபடும் ஐயாவின் சமாதி அறை உள்ளது அங்கு உள்ளே நுழையுமுன் அவரது தொண்டர்களின் அனுமதி பெற்று நெற்றியில் செங்குத்தாக ஒற்றை பட்டை தரித்து உள்ளே செல்ல வேண்டியுள்ளது.
அங்கும் அமர்ந்து தியானத்தில் ஒன்ற,  காணும் தரிசனங்கள் இன்னும் மைய நீரோட்டத்திற்கு அழகாக இட்டுச் செல்கிறது.



Monday, November 20, 2017

சிற்பக்கூடம் - தன்னை தான் உருவாக்கிக் கொள்வது சிற்பங்கள் மட்டுமல்ல - பகுதி 3 - நிறைவு

பார்த்துப் பார்த்து வெகு நாட்களாக பதியமிட்டதைப் போன்று பேணிய கூடு விலகும் நாள் வந்துவிட்டது. உருக்கி விட்ட உலோகம் படிந்ததும் கூட்டை அகற்றி விட்டு முழு உருவச்சிலையாக உருவாகி வெளிவருகிறார்கள் தெய்வங்கள்.
பின் அரம், உளி போன்ற சிறு சிறு கருவிகள் கொண்டு தேய்த்து, செதுக்கி, தங்களை முழுமையை நோக்கி சிற்பிகளின் கைகளின் மூலம் நகர்த்திக்கொள்கிறார்கள் கடவுளர்கள்.
நுணுக்கமான வேலைப்பாடுகள் முழுமை பெற்றதும் மெருகேற்றி உள்ளும் புறமும் பள பளக்க தயாராகிவிடுகிறார்கள் உற்சவ மூர்த்திகள்.
தன்னைத் தானே சமைத்துக் கொள்ளும் சிலைகளின் முன்னிலையில் அத்தனை கைகளும் கருவிகள் மட்டுமே.
இந்தப் பிறவியின் கூட்டிற்குள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் சக்திக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதைப் போல ஆயிரம் கஷ்ட நஷ்டங்களோடு பரம்பரையாக இந்த கலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ குடும்பங்களில் பிரபுவின் குடும்பமும் ஒன்று.
கும்பகோணத்துக்கு அருகிலிருக்கும் சுவாமிமலைக்கு பயணம் செய்பவர்கள் அங்கிருக்கும் ஏதாவது ஒரு சிற்பக்கூடத்துக்கு சென்று வாருங்கள் உள்ளும் புறமும் வெம்மை ஏறட்டும் பின்பொருநாள் குளிர்ந்து உறையலாம்.

Image may contain: 1 personNo automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.Image may contain: 1 personImage may contain: 1 personNo automatic alt text available.Image may contain: one or more peopleNo automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.No automatic alt text available.Image may contain: 1 person, indoorImage may contain: 1 person

சிற்பக்கூடம் - தன்னை தான் உருவாக்கிக் கொள்வது சிற்பங்கள் மட்டுமல்ல - பகுதி 2

தொடர்ச்சி..
இத்தனை அழகான மெழுகு சிலை ஒரு கட்டத்தில் உருகி ஒழுகி மண்ணோடும் கலந்து மீண்டும் இறுகி களிமண்ணைப் போலாகும் என்று சொன்னதும் வாழ்க்கையெனும் வட்டம் கொஞ்சம் புரிந்தது.
இந்த மெழுகு சிலைகளின் மேல் வண்டல் மண் கலவையை முதலில் அதே கலைநயத்தோடு பூசுகிறார்கள், பின் அது காய்ந்தபின் அதன் மேலும் நல்ல அடர்வான சுடுமண் பூசி காயவைக்கிறார்கள். இப்பொழுது முழுவதும் மெழுகுசிலையோ அதன் உருவங்களோ அற்று அது ஒரு மண் பொதி போல் ஆகிறது. காய்ந்து இறுகி இருக்கும் அந்தப் போதிகளின் அடிப்பாகத்திலோ, மேல் பாகத்திலோ உருவங்களுக்குத் தக்கவாறு நேர்த்தியாக துளையிடுகிறார்கள்.
பின் இந்த மண் பொதிகளை நல்ல சூளை போன்ற அடுப்புகளில் வைத்து சூடு செய்ய ஒரு பதத்தில் உள்ளே இருந்த மெழுகுச் சிலைகள் அந்த வண்டல் மண்ணில் தன் அடையாளங்களை விட்டு விட்டு போட்டிருக்கும் ஓட்டைகள் வழியே வெளியே உருகி வழிகிறது.
நிலையென நாம் நினைத்திருக்கும் அத்தனையும் ஒரு நாள் கலைவது போல......
அடுத்தபடிக்கு தயாராகிறது அந்தக்கூடுகள்.
Image may contain: foodImage may contain: foodImage may contain: plant and outdoorNo automatic alt text available.No automatic alt text available.

மேலும் மேலுமென அக்னியின் வெம்மையை சரியாகத் தன்னுள் உள்வாங்குமளவுக்கு அந்தக்கூடுகள் ஒரு புறம் சூட்டில் கனன்று கொண்டிருக்க..
மறுபுறம் பித்தளையும், செம்பும், இன்னம் சில உலோகங்களையும் குவை/குகை யெனும் குடுவையில் இட்டு அது கிட்டத்தட்ட நீர்மையின் நிலையை எட்டும் வரை அனல் குழம்பாகக் கொதிக்க கொதிக்க மிகப் பெரும் இடுக்கிகளின் துணைகொண்டு அந்த வெம்மையில் கனிந்திருக்கும் அந்தக்கூடுகளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்ற வெம்மையோடு வெம்மை சேற கடவுளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தன் உருவங்களுக்குள் ஒருங்கிக்கொள்கிறார்கள்.
நம்முள் தன்னை நிரப்பியிருக்கும் கடவுளர்கள், உருகி ஒழுகி அந்தக் கூடுகளுக்குள் தன்னை நிரப்பிக் கொள்கிறார்கள்.
கூடுகள் பாதுகாப்பானது தான் அருமையானதுதான், நமக்கென அனலும் வெப்பமும் தாங்கி நம்மோடு ஒட்டி உறவாடியவைதான் ஆனாலும் ஒரு நாள் விட்டு, வெட்டி விலகுவதே நியதி லௌகீக வாழ்விற்கு மட்டுமல்ல ஞான வாழ்விற்கும் அதுவே அடிப்படை.
ஏன் இப்போது இந்தக்கூட்டைப் பற்றிய விசாரம்...சொல்கிறேன் அடுத்த பதிவில்
Image may contain: one or more people and people standingImage may contain: outdoorImage may contain: one or more peopleNo automatic alt text available.

சிற்பக்கூடம் - தன்னை தான் உருவாக்கிக் கொள்வது சிற்பங்கள் மட்டுமல்ல - பகுதி 1

இது என்ன மெட்டீரியல்?? என்று பரவசமும் ஆர்வமுமாக அந்த காமாட்சி விக்கிரகத்தை நோக்கியபடி கேட்டேன் ஏனெனில் அது மரம் போலுமிருந்தது, உலோகம் போலவும் இருந்தது. "அது மெழுகு மாடல்ங்க" என்று சொன்ன நேரம் அவர் கையில் ஆஞ்சநேயர் தன்னை அழகுபடுத்திக் கொண்டிருந்தார். என்னால் கண்களை அந்த சிலையை விட்டு நகர்த்தவே முடியவில்லை. மீண்டும் கண் அகட்டாமல் பார்த்தபடி "ஓ இது மோல்டா இதுக்குள்ள தான் உலோகத்தை உருக்கி விடுவீங்களா?? என்ற என் அபத்தமான கேள்வியை கேட்டு பிரபு, அந்த சிற்பக்கூடத்தின் சிற்பி ஒரு நிமிடம் கையில் இருந்த ஆஞ்சநேயரை வைத்து விட்டு ஒரு சிலை எப்படி உருவாகிறது என்று விளக்கமாகச் சொல்லலானார்.
அது ஒரு சிலை உருவாகும் செயல்முறை மட்டுமல்ல என்று தோன்றியது.
It is a process/travel every soul goes thru in their given birth... Let me share the process with you.
கோவில்களிலோ, பூம்புகார் போன்ற பெரும் வர்த்தக நிலையங்களிலோ பெரிதும் சிறிதுமான உலோகச் சிலைகளைக் காணும் போது நம்முள் எழும் மிகுந்த குளிர்ச்சியான உணர்விற்கு நேர் எதிர்மறையான தட்ப வெப்பத்தில் இருந்தது உலோகங்களில் கடவுளர் மூர்த்தங்களைச் சிலை வடிக்கும் அந்தச் சிற்பக்கூடம்.
சுமார் ஆயிரம் சதுரடி ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ் நடராஜர், பிள்ளையார், பெருமாள், விதம்விதமான அம்மன், வீரசிவாஜி, அப்பர் பெருமான், என அத்தனை பேரும் ஒப்பனைகளேதுமற்று முழுமையாகவோ முழுமைக்கு முந்திய சில படி நிலைகளிலோ அங்காங்கு ஆசுவாசப்பட்டுக்கொண்டிருந்தார்கள். நம்முள் பலரும் கடந்துக்கொண்டிருக்கும் வாழ்வே என்னுள் ஒப்புமையாகத் தோன்றியது.
தேன்மெழுகும், குங்கிலியமும், ஒரு எண்ணையும் சில விகிதங்களில் ஒன்றாகக் கலந்து சூடு செய்ய ஒரே குழம்பாகி பின் குளிர்ந்து கெட்டியான களிமண் போன்ற பதத்தில் கிடைப்பது தான் அந்த மெழுகு.
நல்ல கெட்டியான பதத்தில் சிலைகளின் உருவங்களைச் செய்வதற்கும், கொஞ்சம் இளகிய பதத்தில் அந்த உருவங்களின் மேல் இருக்கும் அணிகலன்கள், ஆடை அலங்காரங்கள் செய்வதற்குமாக இரண்டு விதமான தரங்களில் இந்த மெழுகை உற்பத்தி செய்துகொள்ளுகிறார்கள்.
மிகவும் பொதுவான அளவு, மீண்டும் மீண்டும் செய்யும் சிலைகள் என்றால் அதற்கென சில மோல்டுகள் வைத்துள்ளார்கள் அதில் சூடாக ஊற்றி கட்டி வைத்து பின் பிரிக்க மெழுகு மாதிரிகள் கிடைத்து விடுகிறது.
ஆனால் நான் கண்டது போல் காமாட்சியோ, அப்பர் பெருமானோ அத்தனை வழமையான தேவை இல்லை என்பதால் அதன் மாதிரி உருவப் படத்தை வைத்துக் கொண்டு கை, கால், முகம், கழுத்து அணிகலன்கள், திருவாச்சி, பீடம் என்று ஒவ்வொன்றாகச் செய்து ஒன்றிணைத்து தெய்வத்தை கண்முன் ஒருக்குகிறார்கள்.
இளகவும், உருகவும், கலக்கவும் தயாராய் இருக்கும் மனதுதானே தன் அடுத்த படிகளுக்கு நகர முடிகிறது.
இன்னும் வரும்.......
Image may contain: 1 person, shoesImage may contain: one or more peopleImage may contain: shoesImage may contain: one or more peopleImage may contain: one or more people and indoorImage may contain: one or more peopleNo automatic alt text available.

Saturday, November 11, 2017

பிறந்த இடம் நோக்குதே - வீடு திரும்புதல்



ஒருவர் பிறந்தவீட்டில் இருந்து வெகு....தொலைவுக்கு சென்று வீடு திரும்பும் ஒரு காட்சியை இங்கு எண்ணிக் கொள்ளலாம்.
ஆஹா.. இந்தியாவின் தலை நகருக்கு வந்தாச்சு
ஆ..இந்த ட்ரெயினில்தான் தான் நாம் இன்னமும் இரண்டு நாட்களில் இந்தியாவின் தென்கோடியில் உள்ள என் கிராமத்துக்குச் செல்லப் போகிறேன்.
ஆஹா...மத்தியப்பிரதேசம் தாண்டியாச்சு, தெலுங்கானாவும் போயாச்சு, சென்னையும் தாண்டியாச்சு, திருச்சி போய், தூத்துக்குடி வந்தாச்சு. ஆத்தூர் பஸ்ஸில் ஏறியும் ஆச்சு. பஸ் ஸ்டாண்டில் இறங்கி வீட்டை அடைந்ததும் கிடைக்கும் நிம்மதிக்கும் மகிழ்வுக்கும் அளவுகோல் ஏது. ஆனாலும் இனியும் தொடரும்.
நாம் எப்பொழுதும் அமரும் இடத்தில் அமர்ந்த படி அந்திச் சூரியனை ரசித்து அம்மா கையால் சாப்பிட்டு நமது படுக்கையில் கண் மூடி சாயும் நொடியில் அடுத்த வேளை செய்யவேண்டிய வேலை நியாபகம் வரும் பாருங்கள். அதுதான் வீடு திரும்புதலின் புனிதக் கட்டம்.
வீடுதிரும்பியோருக்கும் செய்வதற்கு சில உளது. இதுவே வாழ்க்கை.
இதையே மெய்மை தேடலிலும் பொருத்திப் பாருங்கள். வீடு திரும்புதலின் படிகளும், வீடடைந்தபின் செய்வதற்கென உள்ள கர்மாக்களையும் எதிர்கொள்ளும் நிலையிதுவே. என்ன, எப்படி, எவ்வாறு அதுவும் அந்தந்த நொடியில் தோன்றும்.
#மையம்

Monday, October 30, 2017

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் - ஒரு பார்வை

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்

பல இடங்களில், பலராலும், பல காலங்களாக எடுத்தாளப் படும் ஒரு சொற்றொடர். பெரும்பாலும் ஆன்மிகம் சார்ந்த விவாதங்களில் கடவுளை/உண்மையைக் கண்டவர் சொல்வதில்லை, சொல்பவர் கண்டதில்லை எனும் பொருளில் உபயோகப் படுத்தப் படுவது வழக்கம்.
மிக அற்புதமாக திருமூலர் முதல் ரமணர் வரை தனது உணர்தல்களை மக்களுக்காக விட்டுச் சென்ற பின்னும். நாம் எந்தக் காரணத்திற்காக இந்தப் பதத்தை அப்படி ஒரு த்வனியில் பயன் படுத்துகிறோம். என்ற கேள்வி எழுந்தது.
இதற்கான வித்தை மூன்று வாரங்களுக்கு முன் என்னுள் விதைத்தவர் பூமா Poomalai Haldorai அவரது ஒரு வித்யா பூர்வமான கேள்வியே இந்த தேடுதலின் ஆதாரம். அது மேலும் நேற்று அவரது பக்கத்தில் ஒரு சிறிய விவாதத்தின் மூலம் வலுப்பெற்று இதைக் குறித்து அறிந்து கொள்ளும் தீவிரத்தை என்னுள் விதைத்தது.
சில வாக்கியங்கள், வார்த்தைகள் இப்படித்தான் என்னை ஆண்டுகொள்ளும் உள்ளுணர்வு சொல்லும் பொருளை தரவுகளோடு கண்டடையும் வரை நான் செலுத்தப் பட்டே வருகிறேன்.  இப்படித்தான் இந்த தேடலும் துவங்கியது.
பல விதமான தேடல்களின் மூலமும், முகநூல் நட்புகளின் உதவியாலும் நான் அறிந்து கொண்டது. இந்தப் பதம் இதே சொற்களின் அணிவகுப்பில் எந்த ஒரு சித்தர் பாடலிலும், பழந்தமிழ் செய்யுள் களிலும் கையாளப் படவில்லை என்பதே. பின் எப்படி இணையம் முழுவதும் சித்தர் பாடல்களில் கூறியது போல் என்று மேற்கோள் காட்டப் படுகிறது என்ற கேள்விக்கான பதில் நாம் அறிந்த ஒரு மாஸ் சைக்காலஜி மட்டுமே.
அப்படியானால் இதன் முழுமையான விளக்கம் என்ன? என்ற என் தேடலின் சில அறிதல்கள் இப்படிப் போகிறது.
"கண்டு " என்பதனை பார்த்து என்ற பொருளில் கொள்ளலாம்.
விண்டு என்பதற்கு அநாதி விளக்கங்கங்கள் குவிந்துள்ளது.
திருமூலர் விண்டலர் என்ற பதத்தை எவ்வாறு உபயோகிக்கிறார் என்று பார்க்கலாம்.
"விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்-
கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்
செண்டு வௌiயிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே"
விண்டு அலர் கூபமும் விஞ்ச்சத்து அடவியும் – பிளந்து வெளிப்படும் ஒளியாகிய நீர் ஊற்றையும் அதில் சிவமாகிய அறிவுக்காட்டையும் கண்டு உணர்வாக கருதியிருப்பார்கள் – தரிசித்து உணர்வுமயாமே எண்ணியிருப்பவர்கள் யிருப்பவர்கள் ....... என்று குறிப்பிடுகிறார்.
.
இங்கு விண்டலர் என்பதை – விண்டு+அலர் - பிளந்து வெளிப்படும் மலர் என்ற அர்த்தத்தில் வருகிறது.
இதைக்கொண்டு விளக்க முற்பட்டால் இந்தப் பதத்தை
"கண்டவர் விண்டலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்லலாம்"
அதாவது தன்னுள் பிளந்து மலர்ந்தவர் கண்டவர், அவ்வாறு மலர்ந்தவர் இவ்வுலகையும் தன் ஆத்மனையும் தனியாகக் கண்டவர்கள் அல்லர் என்றும் பொருள் கொள்ளலாம்.
இந்தப் பதத்தை பட்டினத்தாரும் உபயோகித்திருக்கிறார். எப்படி பார்க்கலாம்.

இந்த பதத்திற்கு நெருக்கமாக பட்டினத்தார் தனது அருள் புலம்பல் பகுதியில் இவ்வாறு கேட்கிறார்.
"கொண்டவர்கள் கொண்டதெல்லாம் கொள்ளாதார் 
கொள்ளுவரோ?
விண்டவர்கள் கண்டவரோ? கண்டவர்கள் விண்டவரோ?"
இந்த வரிசையில் விண்டவர் என்பதற்கு – பிளந்து என்ற பொருள் கொண்டால், தன்னுள் அகழ்ந்து ஆத்மனை உணர்ந்தவர்கள் இறையை கண்டவரோ, இல்லை புறத்தே காட்சியாக கண்டவர்கள் தன்னுள் அகழ்ந்து ஆத்மனை உணர்ந்தவர்களோ என்று பொருள் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் அகமும் புறமும் ஒன்றாய் இருக்கும் ஆத்மனை கண்டு தரிசிக்கும் பேறு பெற்றவர்களே தன்னுள் மலர்ந்தவர்களோ என்று கொள்ளலாம்.
இல்லை நாங்கள் சொற்கள் மாறுபடுவதற்கு ஒவ்வாதவர்கள் என்று சொல்லி அதே பதத்தில்
"கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்" – என்று நின்றால் நாம் தாயுமானவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்பதும் தேவை.

தாயுமானவர் தனது தாயுமானவடிகள் திருப்பாடலில்
"காலமொரு மூன்றுங் கருத்திலுணர்ந் தாலும்அதை
ஞாலந் தனக்குரையார் நல்லோர் பராபரமே. " -
என்று சொல்கிறார். இதன் பொருள், முன்னவனருளால் முக்காலமும் தங்கருத்தில் உணர்ந்த மூதறிஞர், பொதுமக்களிடையே அவ்வுணர்ச்சியின் பயனாக அவர்களுக்கு நேரப்போகும் நன்மை தீமைகளை தாம் அறிந்திருந்தாலும் கூறார். இவ்வுண்மையினையே "கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்" என உலகோர் கூறுகின்றனர்.
இதை மேலும் விளங்கிக் கொள்ள சிலப்பதிகாரத்தில் புகார் காண்டத்தில் ஒரு பாடலை பார்க்கலாம்.
"வந்த காரணம் வயங்கிய கொள்கைச்
சிந்தை விளக்கிற் றெரிந்தோ னாயினும்
ஆர் வமுஞ் செற்றமு மகல நீக்கிய
வீர னாகலின் விழுமங் கொள்ளான்"
அதாவது பட்டினப் பாக்கத்தை விட்டு வந்த கோவலன் கண்ணகி வழியில்அ ருக நெறி சாரணர் சிலர் தோன்றினர். அவர்களைக் கண்டதும் கோவலன், கண்ணகி, காவுந்தி ஐயை ஆகிய மூவரும் தம் பண்டைய வினைகள் தீரவேண்டும் என்று வேண்டிக்கொண்டு சாரணர் அடிகளைத் தொழுதனர்.
சாரணர் பொருமகன் அவர்கள் மூவரின் பழ வினையையும் அவ்வினைப் பயனால் மூவரும் வந்திருக்கும் காரணத்தையும் தெளிவாகத் தன் சிந்தை என்னும் விளக்கொளியால் உணர்ந்திருந்தனர் என்றாலும், ஆசையும் சினமும் அறவே நீக்கிய வீரர்ன் ஆதலால், தன் உள்ளத்தில் அவர்கள் பால் இருக்கும் துன்பத்தை வெளிக்காட்டாமல், சொல்லத் தொடங்கினான் “ என்று விறிகிறது காதை.
சரி காவியங்களை விடுவோம் நம் சமகாலத்து ஆன்மீக வழிகாட்டி யாராவது இதைப்னை பற்றி பேசி உள்ளார்களா என்று காணலாம்.

இந்தப் பதத்தை ரமண மகரிஷியின் சீடர் முருகனார் தனது குருவாசகக் கோவையிலும் எடுத்தாண்டுள்ளார்.
"கலி வீட்டி ஆண்டான் தன் காதலர் நெஞ்சத்தில்
கொலு வீற்றிருக்கும் குலாச்சீர் - மலை போற்றாம்
கண்டவர்கள் விண்டிலை விண்டிலர்கள் கண்டிலர்கள் மண்டும் அடியார் மறை"
அதாவது, கலி வீட்டி ஆண்டான் தன் காதலர் நெஞ்சத்தில் கொலு வீற்றிருக்கும் குலாச்சீர் மலைபோல் (குலாச்சீர் – பெருமையான நிலை) தாம் கண்டவர்கள் விண்டிலர், விண்டவர்கள் கண்டிலர்கள் மண்டும் அடியார் மறை (மண்டு – நிறைந்த, மறை – கருத்து)
இங்கும் உணர்ந்தாரே ஆனாலும் வெளியில் சொல்லுவதில்லை என்ற பொருளிலேயே ஆளப் பட்டுள்ளது.
இதுவன்றி மெய்ப்பொருளைக் கண்டவர் விண்டிலர் விண்டவர்எ காணாதவர்ன என நினைப்பது பொருந்தாது. மேலும் அது "கண்ணால் யானுங்கண்டேன் காண்க" என்று திருவாசகம் திரு அண்டப்பகுதியில்(58) உரைக்கப் பட்டிருக்கும் -செந்தமிழ்த் தனித் தமிழ்த் திருமாமறை முடிவுக்கு முற்றும் முரணாகவும் இது அமையும்.
இன்னமும் பார்த்தால் பிங்கல நிகண்டு முதல் பல அகராதிகள் "விண்டு" எனும் சொல்லுக்கு திருமால், அறநூல் பதினெட்டனுள் ஒன்று, வானம், மேலுலகம், மேகம், மலை, மூங்கில், காற்று, தாமரை, செடிவகை. என்று மட்டுமே பொருள் சொல்கிறது.
இதன் படி பார்த்தால் விண்டவர் என்பதற்கு தேவர்கள் என்றும், விண்டிலர் என்பதற்கு காற்று இலாதார் அதாவது தனது வாசியை உச்சியில் செலுத்தியவர் என்றும் பொருள் கொள்ளலாம்.
மீண்டும் திருமந்திரத்தையே நான் துணைக்கழைப்பேன்.
"செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே"
செழுமையான சிரசாகிய மலையில் கொண்டு குதிரை குசை செறுத்தார் – பிராணனாகிய குதிரையை செலுத்தி மனமாகிய கயிற்றை கொண்டு கட்டிவிடுவார்கள். அதாவது, சிரசில் உணர்வினை கருதியிருப்பவர்களுக்குப் பிராணன் (மூச்சு , காற்று) அடங்கி இருக்கும்.
திருநெல்வேலி பக்கம் விண்டு கொடு என்பதை உடைத்துக் கொடு என்ற பொருளில் பயன் படுத்துவதுண்டு.
சோ ... மக்களே.. இனிமே யாராவது கடவுளைக் கண்டவர் விண்டிலை என்று ஆரம்பித்தால் கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம்.

Sunday, May 14, 2017

நாராயண யோகீஸ்வரர் - காளையார் கோவில் - 3

 (இறுதிப் பகுதி)
இதுதான் இணையத்தில் காணக்கிடைக்கும் செய்தி. அங்கு வந்த பெரிய பூசாரி இதில் ஒரு 30% அங்கும் இங்கும் மாற்றிச் சொன்னார்.
1801ம் ஆண்டு ஜூலை வாக்கில் சிவன் கோயில் அர்ச்சகர்கள் ஒரு புதிரான சம்பவத்தைக் கண்டனர். நள்ளீரவு அர்த்த ஜாம பூஜை முடிந்து கதவுகள் மூடப்படும். வெளியிலிருந்து ஒருவரும் கோவிலிக்குள் செல்ல இயலாது. மறு நாள் காலையில் கதவுகள் திறந்ததும் சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் மாமிசத் துண்டுகள் மற்றும் எலும்புத் துண்டுகள் இறைந்து கிடக்கும்.
பல நாட்கள் இவ்வாறு நடக்கவே அர்ச்சகர்கள் ஆச்சர்யம், அதிர்ச்சி அடைந்து இதனை ஆட்சி அதிகாரத்திலுள்ள மருது இருவரிடம் தெரிவித்து ஆகம விதிகளுக்குப் புறம்பான கருவறைக்குள் மாமிச பண்டங்கள் சிதறுதலைத் தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
மருதிருவர் ஆச்சரியம் அடைந்தவராக சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் அர்த்த ஜாம காலத்திற்குப் பின்னர் இருந்து நிகழ்வுகளை ஆராய ஓர் ஓற்றரை நியமித்தார்.
கருவறைக்குளிருந்த ஓர் ஓற்றர் கதவுகள் அடைக்கப்பட்டபின்னும் கருவறைக்குள் ஒரு சுரங்கப்பாதை வழியே முதியவர் ஒருவர் வந்து சிவலிங்கத்திற்கு நிணம் கொண்டு பூஜை செய்வதை அவ்வொற்றர் கண்டு அப்பெரியவைக் கைது செய்து மருதிருவர் முன் நிறுத்தினர்.
மருதிருவர் அப்பெரியவரின் செயல் பற்றி வினவ அப்பெரியவர் தான் ஒரு சித்தபுருஷர் என்றும் கடந்த 2000 ஆண்டு காலமாக நிண பூஜை செய்து வருவதாகவும் இன்னிண பூஜை முறை சித்தர் சாத்திரப்படி சரியானது என்றும் பதிலளித்தார். அப்பெரியவரின் கூற்றில் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் அவர் ஒரு சித்தபுருஷர் என்பதை முறைப்படி நிறுவும்படி கோரவே அப்பெரியவர் அர்ச்சகர்களின் சவாலினை ஏற்றார்.
அதன்படி அப்பெரியவர் மண்ணுக்குள் ஆழப்புதைக்கப்படுவார். அதன் பின்னர் அப்பெரியவர் வேறு எங்காவது தோன்றவேண்டும். இதன்படி ஓர் ஒற்றர் ராமேஸ்வரம் அனுப்பப்பட்டார். அப்பெரியவர் மண்ணுக்குள் புதைக்கப்பட்டார். அப்பெரியவரின் கூற்றில் மீண்டும் மீண்டும் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் மருதிருவரைக் கொண்டு அப்பெரியவர் புதையுண்ட இடத்தினைத் தோண்டச் செய்தனர்.
அவ்விடம் தோண்டப்பட்டவுடன் அக்குழிக்குள் அப்பெரியவர் இன்னும் தவ நிலையிலிருந்ததையும் ராமேஸ்வரத்திற்கு அனுப்பட்ட ஒற்றனிடமிருந்து அப்பெரியவர் தற்சமயம் ராமேஸ்வரத்தில் தான் உள்ளார் என்ற செய்தி வந்ததையும் கண்டு திகைப்படைந்த அர்ச்சகர்கள் பின் வாங்கினர். தவ நிலை கலைந்த அப்பெரியவர் சித்தர் நாராயண யோகீஸ்வரர் தன் கூற்றினை நம்பாத அர்ச்சர்களை நம்பிய மருதிருவர்களுக்கு ஒரு சாபம் இட்டார்.
அதன்ப்டி அன்றிலிருந்து 90 நாட்கள் கழித்து மருதிருவரின் முடிவு அமையும் என்பது யோகீஸ்வரரின் சாபமாகும். யோகீஸ்வரரின் சாபத்திற்குள்ளான மருதிருவர் மிகச்சரியாக 90 கழித்து 24-10-1801 அதிகாலை ஆங்கிலேயர்களால் திருப்புத்தூரில் தூக்கு மேடையில் வீர மரணம் எய்தினர்.
சித்தர் நாராயண யோகீஸ்வரரின் ஜீவ சமாதி இன்றும் சிவகங்கை சமஸ்த்தான தேவஸ்தானத்தினரால் காளையார்கோவிலில் பேணப்பட்டு வருகிறது.
இவை தவிர வேறு இடங்களில் நாராயண யோகீஸ்வரரைப் பற்றி செய்திகள் இணையத்தில் இல்லை. ஆனால் வேலாம்பாள் யோகிஸ்வரி என்ற யோகினியைப் பற்றிய குறிப்புகளில் அவரது குரு என நாராயண யோகீஸ்வரரைப் பற்றியும் அவர் காளையார் கோவிலில் வாழ்ந்தவர் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. அவரே யோகினிக்கு வழிகாட்டியவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேறு எந்த சித்த புருஷர்கள் வரிசையிலும் இவரைப் பற்றிய குறிப்பு இல்லை. இவையனைத்தையும் தாண்டி அங்கு இரண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்து நமக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதி ஆன பின்னரும் உயிர்ப்புடன் நம்மை அரவணைக்கும் அந்த பெருங்கருணையின் இருப்பு மிக நன்றாகப் புரிகிறது.
இவரது குடும்பத்தை சார்ந்தவர்கள் இன்றும் இவரை குலசாமியாக வந்து வணங்கி மீள்வதாகவும் குடும்ப நிகழ்சிகளை அவரது சந்நிதியில் நடத்துவதாக அந்த பெரியவர் சொன்னதில் இருந்து கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்து தொடர்ந்தால் இன்னமும் செய்திகளை சேகரிக்க முடியும் என்று தோன்றுகிறது.
முற்றும்.

நாராயண யோகீஸ்வரர் - காளையார் கோவில் - 2


பக்கத்தில் இருந்த சலுனில் கேட்டதில் அவர்கள் ஒரு சாவியைக் கொடுத்து திறந்து கும்பிட்டுட்டு போங்க என்று சொன்னார்கள். கேட்டை திறந்து உள்ளே போனால் ஏதோ பழங்கால தெப்பக்குளத்து படிகள் போல ஒரு பாதை இறங்கிச் செல்ல இடது புறம் ஒரு புதிய மண்டபம் அதற்கு ஒரு கேட் அதுவும் பூட்டியிருந்தது. ஏறிக் குதித்து விடலாமா என்று யோசிக்கும் போதே ஸ்ரீ என் மைன்ட் வாய்ஸ் கேட்ட மாதிரி கேட் உயரம் ஜாஸ்தி என்று சொன்னார். இப்படியே விட்டா ஸ்ரீ திரும்பி போயிடலாம்னு சொல்லிடுவாரோன்னு பயந்துட்டு “நீ இங்கயே இரு நான் போய் இந்த உள் கேட் சாவியை வாங்கிட்டு வரேன்னு” பதிலுக்கு காத்திராமால் வந்த வழியே ஒடினேன். அங்க போய் கேட்டால் அந்தச் சாவி இங்க இல்லங்க பஸ்டாண்டு பக்கத்துல இளவழுதி பூக்கடைன்னு கேளுங்க அங்க இருக்கும்னு சொல்ல கொஞ்ச தூ.....ரத்தில் இருந்த அந்தப் பூக்கடையை நோக்கி ஓடினேன்.
அங்கே போய் கேட்டதும் அதில் இருந்த ஒரு பையன் ஓஹ் சாமி பாக்கணுமா நீங்க போங்க நான் வந்திடறேன்னு சொன்னாப்ல, சரின்னு திரும்பி நடந்து போய் கிட்டிருக்கும் போதே ஸ்ரீ போன் பண்றார். பூசாரி வந்தாச்சு நீ எங்க போயிட்டேன்னு (அவரு எங்கிட்ட சொல்லிட்டு டூ வீலர்ல போயிட்டார்). தோ வந்துட்டேன்னு போனா அதுக்குள்ள அவர் சந்நிதி திறந்து வைத்திருந்தார்.
நன்றாக தரிசித்து விட்டு சாமியைப் பத்தி சொல்லுங்கன்னு சொன்னதும் அந்தப் பையனுக்கு ஒன்னும் தெரியல, கொலசாமி கும்பிட வருவாங்க, வியாதி தீரும், பிசினஸ் நல்லா வரும், குழந்தை இல்லாதவங்களுக்கு குழந்தை பிறக்கும் அப்படின்னு திருப்பி திருப்பிச் சொல்ல சரி இது வேலைக்காவதுன்னு தியானத்துக்கு உட்கார்ந்து விட்டேன்.
அதுவரை இருந்த பரபரப்பு அகன்று நல்ல அமைதி தண்ணென்று உள்ளே அமைய ஆழ்ந்து செல்ல முடிந்தது. நல்ல அனலடிக்கும் வெய்யிலில் புறம் காய்ந்து கொண்டிருக்க குளிர்ச்சியான கிரானைட் மண்டபத்துள் அகம் குளிர்ந்து அடங்கத்துவங்கியது. மனம் ஒன்றி தளும்பி கண் திறக்க அவர் அங்கிருந்த லிங்கத்தின் மேலிருந்த பூமாலையை எடுத்து பிரசாதமாக ஸ்ரீயின் கழுத்தில் இட்டு விபூதி தரவும் கிளம்பத் தயாராகும் போது “கொஞ்சம் இருங்க எங்க அப்பாக்கு போன் பண்ணியிருக்கேன் வந்துகிட்டிருக்காக, அவுக வந்து சாமி பத்தி சொல்லுவாக என்று சொல்லவும் சரி என்று சிறிது நேரம் காத்திருக்கத் துவங்கினோம்.தொடரும் ....