Sunday, September 4, 2011

சாயாவனம் – எரிந்தடங்க முடியாத எதார்த்தங்கள்



மனமெங்கும் இன்னும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது சாயாவனத்தில் வைத்த தீ. கணையாழியின் தொகுப்பிற்குப் பிறகு தொடர்ந்து கையிலிருந்த சில ஆங்கிலப்புத்தகங்களில் கவனம் சென்றதால் தமிழ் வாசிப்புக்கள் உயிர்மை, உயிரெழுத்து, சில இணைய வாசிப்புக்கள் என்பதோடு நின்றிருத்தது.
பொதுவில் என் ஆங்கிலப்புத்தக வாசிப்புகளில் தீவிரம் அதிகமிருக்காது, மிக மெல்லிய தென்றலாய் எந்த அலைக்கழிப்புகளுக்கும் ஆளாகாத வண்ணம் வாசித்தே ஆகவேண்டும், இப்போதே முடிக்க வேண்டும் என்ற எந்த முனைப்பும் இன்றியே வாசிப்பதுண்டு. நான் தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள் கூட ஒரு காரணமாயிருக்க முடியும். “Be still, it is the Wind that Sings” (Arthur Osborne) முடித்தபின் “The Journey of an American Swamy” (Rathanath Swamy) முடித்து விட்டு, Wyne Dyer’s “ There is a spiritual solution to every problem” படிக்க நினைத்திருந்த சமயத்தில் ஏதோ ஒரு உந்துதலில் கடந்த மாதம் வாங்கியும் இன்னும் தொடாதிருந்த சாயாவனத்தை நேற்றிரவு கையிலெடுத்தேன். சிதம்பரம் வைத்த தீ இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது.

“சாயாவனம் ஸ்ரீகந்தசாமியின் முதல் நாவல்” இந்த வரிகள் தந்த இன்னும் தந்துகொண்டிருக்கும் ஆச்சர்யம் அளவிடமுடியாதது. மிக எதார்த்தமான எளிமையான பாத்திரங்களைக்கொண்டு எந்த ஒரு மிகப்பெரிய திருப்பங்களையும் உள்ளடக்காது, மிகைப்படுத்தப்படாத சம்பவங்களோடு, சிதம்பரம், சிவனாண்டித்தேவர், குஞ்சம்மா இவர்களைத்தவிர வேறு எவர்பெயரும் தேவைப்படாத அதே சமயம் அந்தந்த கதாபாத்திரங்களுக்கான முக்கியத்துவம் கெடாது ஒரு மிகநீண்ட கயிற்றின் மேல் கத்திமுனையில் நடப்பது போன்று மிகத்திறமையாக முதல் நாவலிலேயே நடந்து காட்டியுளது இன்று எழுத ஆசைப்படும் அத்தனை எழுத்தாளர்களுக்குமான மிகப்பெரிய படிப்பினை.
ஜெயமோகனின் காடு தந்தது மிகப்பெரிய மன அழுத்தம் என்றால், சாயாவனம் தந்துள்ளது ஒரு விதமான மன எழுச்சி, நடந்து முடிந்தது வரமா சாபமா என்று தீர்மானிக்க முடியாத அனுமானத்தோடே சட்டென்று முடிந்து போகிறது கதை, ஆச்சி பிழிந்து போடுவது பட்டுபுடவையை மட்டுமல்ல என்பது படித்து முடித்த அத்தனை வாசகர்களும் உணர்ந்து கொள்ளும் உண்மை.
கதைப்பரப்பில் வரும் அத்தனை செடிகொடிகளையும், மரங்களையும் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதென்பது கூடுதல் மகிழ்ச்சி, இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது இயற்கையின் வாசனைகள் இந்த தலைமுறைக்கு மட்டுமாவது என்று இளைப்பாறுதல் கொள்ள முடிகிறது. (காரை – கொடிவகை இது மட்டும் என்னெவென்று புரியவில்லை தெரிந்தவர்கள் சொன்னால் நன்றி)
அடிக்கடி கடந்து செல்லும் கும்பகோணம் சென்னை நெடுஞ்சாலைகளின் ஏதோ ஒரு திருப்பத்தில் வரிசையாய் இருளில் காத்திருக்கும் கரும்பு லாரிகளை கடந்து செல்கையில் கட்டுக்கட்டாய் கரும்போடு ஆற்றோடு அடித்துசெல்லப்பட்ட பழனியும் அவனின் பாரவண்டியும் தைரியமும் கண்களில் ஒரு நொடியேனும் இனி வந்து போகும், விழுப்புரத்தின் முன்பிலும், சேத்தியாத்தோப்பின் முடிவிலும் காண நேரும் சர்க்கரை ஆலையைப் பார்க்கையில் எத்தனை சாயாவனங்களென எண்ணத்தோன்றும், ஆனாலும் சிதம்பரத்தையும் சிவனாண்டியையும் நேசிக்கவும் தோன்றும். வாழ்வின் வளர்சிதை மாற்றங்களை சிதம்பரத்தைபோலவே நம்மையும் வேறொரு கண்ணோட்டோத்தோடு ஜீரணிக்க வைக்கிறது சா.கந்தசாமியின் சாயாவனம்.


Sunday, August 28, 2011

இயலாமையின் சில விழுதுகள் - வார்த்தை





தரையெங்கும் இறைந்து கிடக்கிறது வார்த்தைகள், காலில் மிதிபடும் இரணம் பொறுக்க முடியாமல் வாரிக்குமித்து குப்பை தொட்டியிலிடச்செல்கையில் தான் கவனித்தேன் அதுவும் நிரம்பி வழிகிறதென. அலுப்பாய் வீதியில் சென்று விசிறலாம் என்று போனால் அங்கேயும் மலைபோல் குமிந்திருந்தது வார்த்தைகள்

போவோர் வருவோரெல்லாம் வழியின்றி தட்டுத்தடுமாறி மிதித்தபடி சென்றுகொண்டிருந்தனர். கொட்டிக்கிடக்கும் பனித்துகள்களின் நடுவே வழுக்கிச்செல்லும் வல்லுனர்களைபோல வாகன ஓட்டிகள் லாவகமாய் கடந்து சென்றனர்.




செய்வதற்கேதுமின்றி சிறியதும் பெரியதுமாய் கூடைகூடையாய் வார்த்தைகளோடு விழித்திருக்கையில் கண்சிமிட்டிச் சிரித்தன சில வார்த்தைகள். எப்போது சிந்திய வார்த்தைகளென்ற பிரஞ்ஞை ஏதுமில்லாத காரணத்தால் என்னால் மையமாய் புன்னகைக்க மட்டுமே முடிந்தது. மறுநிமிடம் அத்தனையும் கொந்தளிப்பாய் குதிக்கத்துவங்கியது. எதற்கிப்படி எங்களை உருவாக்கி உருவாக்கி வீணடிக்கிறீர்கள் என நியாயம் கேட்கையில் பதிலேதுமின்றி இலக்கின்றிப் பார்த்திருந்தேன்.





உருவாக்கியவர்க்கே சொந்தமென்ற பொது புத்தியின் வரம்புகளுக்கடங்காத வார்த்தைகளை மீண்டும் தொலைந்து போகச்செய்யும் திறனிருந்தால் மட்டுமே இனி உருவாக்கினாலென்ன என்ற எண்ணம் மின்னி மறைந்தாலும் சாத்தியங்களின் விளிம்புகளில் கரைதட்டி நின்றதென் எண்ண அலைகள்.





இயலாமையின் உச்சத்தில் கூடைகளுக்கு நடுவே உறங்கச்செல்கையிலும் விழித்திருந்து கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தன வார்த்தைகள், ஆனாலும் அன்று பெய்த பெருமழை அத்தனை வார்த்தைகளையும் ஆற்றோடும் கடலோடும் கொண்டு சேர்த்தது, மறுநாள் கடல் முழுதும் வார்த்தைகள் ஓ என்ற சப்தத்தோடு இப்போதும் சப்திக்கிறது.





மீதமிருந்த கூடைகளின் சில வார்த்தைகளை இதோ இணையத்தில் கொஞ்சம் கொட்டிவிட்டேன் மீண்டும் ஒரு பெரூமழைக்காய் காத்திருக்கிறேன்.

Saturday, March 26, 2011

"பைத்தியக்காரர்களும் பிழைக்கத்தெரியாதவர்களும் ஒன்று படுவோம்" - அட நாம கொஞ்சம் கூட மாறவேயில்லை.....

இருபத்து மூன்று வருடம் கழித்தும் நிலைமை அப்படியேதான் உள்ளது சொல்லப்போனால் மோசமடைந்து வருகிறது.

எண்பதுகளின் பிற்பகுதில் வந்த கணையாழியின் தொகுப்பொன்று சமீபத்தில் நன்பரின் இல்லத்திற்கு சென்ற போது கிடைத்தது படிக்க ஆரம்பித்த சில பக்கங்களில் இருந்த கட்டுரையொன்று தற்போதைய நிலைமைக்கு மிகவும் பொருந்திவரவே பகிர்ந்து கொள்கிறென்



கணையாழியின் பக்கங்களில் இருந்து


பைத்தியக்காரர்களும் பிழைக்கத்தெரியாதவர்களும் ஒன்று படுவோம்.


இன்று நாட்டின் மற்ற மாநிலங்களை விடத் தமிழகத்தில் அரசியல் நிலை மிகவும் குழப்பமடைந்து காணப்படுகிறது. கொள்கைப்பிடிப்புள்ள தீவிர இடது சாரி , வ்லதுசாரிக்கட்சிகளுக்கு இங்கு ஆதரவில்லை, தேசீயக் கட்சிகளான காங்கிரசும், தேசீய முன்னணியும் எந்தக் கழகத்தின் பின்னால் போனால் அதிக வோட்டுகள் கிடைக்கும் என்று அரசியல் ஆதயத்திற்காக அலைகிறார்கள். கொள்கையின் பேரால் கொள்ளையடித்த பிராந்தியக் கட்சிகளையோ அவற்றின் புதிய அவதாரங்களையோ நம்பி வோட்டுப் போடுவது திருடனின் கையில் பெட்டிச் சாவியைக்கொடுப்பது போலாகும்.


தமிழகத்தில் இன்றுள்ள நிலையில் இது ஒரு தவிர்க்கமுடியாத உண்மை என்ன வென்றால் களத்தில் நிற்கும் எந்த அரசியல் கட்சியையும் ஊழக லை ஒழிக்க விரும்புவோர் ஆதரிக்க முடியாது. எல்லாக் கட்சிகளிலும் அடிமட்டத்தில் தொண்டர்கள் நல்லவர்களாக இருக்கலாம், ஆனால் எல்லாக் கட்சிகளின் தலமைகளும் ஊழலில் சிக்குண்டு பொதுமக்களின் நம்பிக்கையை இழந்து விட்டன.


தமிழ்நாட்டில் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தப் பல அரசியல் சாரா இயக்கங்கள் தோன்றி நல்ல முறையில் பணியாற்றத்தொடங்கியுள்ளன. மக்கள் தூய்மை இயக்கம் மக்கள் சக்தி இயக்கம், ஸ்வச்சித் போன்ற அமைப்புகள் ஊழல் ஒழிப்பு என்ற ஒரே குறிக்கோளில் இணைந்து மக்களை அணுகினால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

இந்த இயக்கங்கள் உடனடியாகச் செய்யவேண்டிய பணி, தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் அரசியல் கட்சிகளின் தொடர்பில்லாத ஒரு நல்லவரைத்தேர்ந்தெடுத்து அவரை ஊழல் ஒழிப்பு இயக்கங்களின் சார்பில் மக்கள் பிரிதிநிதி என்று அறிவித்து நிறக வைக்க வேண்டும்.


மக்கள் பிரதிநிதிக்கு எத்தகைய தகுதிகள் இருக்க வேண்டும் என்பதில் ஊழல் ஒழிப்பு இயக்கங்களிடையே கருத்து வேறுபாடு இருக்க இடமில்லை. பொது வாழ்வில் தூய்மையானவர்களை நாணயமானவ்ர்களை, பொது தொண்டில் ஈடுபாடு உள்ளவர்களை ஜாதி மத மொழி வேறுபாடின்றி ஒவ்வொரு தொகுதியிலும் தேடிக்கண்டுபிடிக்க முயலுவது இந்த இயக்கங்களின் பொறுப்பாகும். நல்ல பெயர் இல்லதவர்களையும் தவறான வழியில் சொத்து சேர்த்தவர்களையும் அடையாளங்கண்டு அறவே ஒதுக்கி விடவேண்டும்.


நல்லவர்கள் அரசியல் சாக்கடையில் காலைவிடத் தயங்குவார்கள் என்பது உண்மைதான் மேலும் பண வசதி இல்லாதவர்கள் தேர்தலில் நிற்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டிருப்பதும் உண்மைதான். ஆனால் பொதுமக்கள் உறுதியாகச் செயல்பட்டால் இந்தப் பிரச்சினைகளையும் சமாளித்துவிடலாம். ஊழல் ஒழிப்பு இயக்கங்களின் தொண்டர்கள் கால்நடையாகவும் சைக்கிள்களிலும் தெருத் தெருவாகச் சென்று வீடு வீடாக நுழைந்து ஊழலால் விளைந்த கொடுமைகளைப்பற்றியும் நல்லவர்கள் அரசியலில் ஈடுபட மக்களின் ஆதரவைத்தேடியும் பிரசாரம் செய்ய வேண்டும்


இன்றுள்ள அரசியல் கட்சிகளை விட்டால் வேறு எவருமே ஆட்சி அமைக்க முடியாது என்பது வெறும் பிரமைதான். சுயேச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஊழல் ஒழிப்பு, நேர்மையான நிர்வாகம், வறுமையை ஒழிக்க பரவலான சிறுவேலை வாய்ப்புத்திட்டங்கள். குடிநீர் வசதி சுற்றுப்புறச் ச்சுழல் பாதுகாப்பு, பிற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களும் பெண்டிரும் சமூக நீதியின் அடிப்படையில் மேம்பாடடைய வாய்ப்புகள் போன்ற சில அடிப்படைக் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்து அவற்றை செயல்படுத்த புதிய அரசியல் அமைப்புகளை உருவாக்க முடியும்,.


ஊழலை அறவே வெறுக்கும் பைத்தியக்காரர்களும் நேர்மையை நம்பும் பிழைக்கத்தெரியாதவர்களும் ஒன்று பட்டால் தமிழகத்தை மட்டுமின்றி நாட்டையே காப்பாற்றிவிடலாம்.


நன்றி - 24-08-88 தினமணி

Saturday, February 26, 2011

முகமூடிக்கவிதைகள் - 13


எந்த நியதிகளுக்குள்ளும் அடங்க மறுக்கும்
ஒரு சிலரின் நியாயங்கள்
விழி நிரப்பும் சிறு துரும்பென
உறுத்திக்கொண்டேயிருக்கிறது
முகவரிகளுக்கும் முகமூடிக்களுக்கும்
பின்னால் ஒளிந்துக்கொள்ளும் சவுகரியங்களினாலேயே
நிறமாற்றங்களை எளிதில் கண்டுகொள்வதென்பது கடினமாகிறது.
ஆட்டுமந்தைகளென தலையசைத்து போவதற்கு
செவிகளும் விழிகளும் இருந்தென்ன போயென்ன?
எத்தனையோ போதைகள்
பணம் புகழ் பெண்ணென்று,
கூட போர்வைகளெதெற்கு
பண்பு, பாடம், பக்திகளென்று
போர்வைகளுக்குள்ளென்றாலும்
அம்மணமாய் நிற்பது அவமானம் தானென்பது
சிலரது நியாங்களில் இல்லாமல் போகுமோ????

Tuesday, February 15, 2011

பெண்பால் கவிதைகள் - 5



இப்படித்தான் ஆகிவிடுகிறது
சில சமயம்

எண்ணுவதற்கு ஏதுமில்லாத சமயங்களில்
எப்போதேனும் வந்துபோகிறதுன் நினைவு

எப்போதும் சுமந்தலைந்தவைகளை
எப்படித்தான் எளிதில் தொலக்கமுடிகிறதென்ற
கேள்விகளுக்கிடையில்

இப்படித்தான் ஆகிவிடுகிறது
சிலசமயம்

*******************
படர்ந்த மாசுகளுக்கிடையில்
அடையாளமற்று கிடக்கும் நீர்நிலையென
உள்ளே உறைந்து போயிருக்கிறதுன் நினைவு

இருண்ட நிலவொளியில் கடந்து போகையில்
நெஞ்சக்கூட்டுக்குள் ஊடுருவும்
ஏரிக்கரைக்காற்று
நினைவுருத்திப்போவது
மாசினடியில் மறைந்திருக்கும்
நீர்நிலையை மட்டுமல்ல

Saturday, February 12, 2011

முகமூடிக்கவிதைகள் - 12


இப்போதும் முகம் வெளிறிப்போகிறது
என்றோ கண்டுகொள்ளாமல் வந்த

அந்த சிகப்பு சட்டை மனிதனின் சடலமும

கூடவே கிடந்த அவன் வாகனமும்

மனவோரத்தில் நினைவுறும்போது


மனித நேயம் குறித்த எந்த ஒரு

விவாதத்திற்குப்பின்னாலும்

மவுனம் காக்க வைக்கிறதென்

மனநிழலில் கடந்து போகுமிந்த நிகழ்வு


**********************

முனைந்து செய்ய இயலாது
போனவைகளை
பட்டியலிடத் தேடத்

தொலைந்து போனதென்

எழுது கோலும் வெள்ளைதாள்களும்

பிறகென்ன

அத்தனை பாசாங்குகளுக்குள்ளும்

ஒளிந்து கொள்ள முயற்சிக்கிறது மனது



Saturday, January 15, 2011

பிரபஞ்சனின் சிறுகதைத்தொகுப்பு - ஒரு பகிர்வு

மூளையைவிட்டு அகலமறுக்கிறது அந்த இரண்டு வரிகள் அடுத்த முறை போவு்ம்போது முதல்லியே பணத்தை வாங்கிடுங்க - நிகழ் உலகத்தின் நாயகன் கிருஷ்ணமூர்த்தியைப்போலவே நம்மையும் புரட்டிப்போட்டும் வரிகள்

மிகவும் எளிமையான மனிதர்கள், பிரச்சனைகள், நிகழ்வுகள் அதைச்சுற்றி ஓடும் எண்ண ஓட்டங்கள் படிக்க நேர்ந்த 90 கதைகளிலும் விரவிக்கிடந்த விதம் விதமான உணர்வுகள் படித்து முடிந்த இத்தனை நாட்களுக்குப்பிறகும் இதை எழுத முனையும் இந்த நேரத்தில் என்னுள் எழும்பி அலையடித்துக்கொண்டேயிருக்கிறது.

மனுஷி அம்மா வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து அழுதாள், நிச்சயமாகச் செத்து போன தங்கைக்காக அல்ல அந்த அழுகை என்று முடிக்கும் போது பெண்மனதின் பல பரிணமங்களை அதை வெளிப்படுத்த அவர்கள் தேர்ந்தெடுக்கும் உத்திகளை அதைச்சுற்றி நிகழும் மாற்றங்களை அது ஏற்படுத்தும் உணர்வுகளை படம் பிடித்துக்காட்டுகிறது.

அப்பாவு கணக்கில் 35 ருபாய் - இப்படித்தான் முடியும் என்று கதையோட்டத்தை ஆரம்பத்திலேயே யூகிக்க முடிந்தாலும் கடைசியில் கதையின் நாயகன் எழுந்து நடக்க ஆரம்பித்த நேரத்தில் நம் மனதிலும் வந்து அமர்ந்து கொள்ளும் அந்த உணர்ச்சிக்கு வார்த்தைகளில்லை.

சைக்கிள் - கதையில் நம்மை மிகச்சுலபமாக தனிமனித தன்மானதிற்கும் அவரது அபிலாஷைகளுக்குமான இடைவெளியை உணரச்செய்யும் வேளையில் வெகு நேர்த்தியாக நம்மை எந்த ஒரு விளிம்புகளுக்கும் ஒட்டாது வெளித்தள்ளிவிடுகிறார்.

பொதுவில சிறு்கதைத்தொகுப்புகளை படிக்க நேர்கையில் ஏற்படும் உணர்வுக்குழப்பங்கள் இந்த முறை என்னை பீடிக்கவில்லை. எல்லாக்கதைகளும் ஒன்றோடொன்று மிக மெல்லிய சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதை போன்றதோர் உணர்வுதான் எஞ்சியது. அதன் காரணம் பெரும்பாலும் நம்மைச்சுற்றி நிகழும் பதிவுகளை எந்த ஒரு தொடர்புமற்று கண்டுகொண்டிருக்கும் வெறும் வெளிப்பார்வைகளுக்குள் ஊடுருவியிருக்கும் காண்தன்மையின் வெளிபாடாகக்கூட இருக்கலாம்.

ஒவ்வொரு கதையாக விவரிக்க இன்னும் பாக்கியுள்ள 86 கதைகளை தனித்தனியாக எழுத முயலாததற்கான காரணம் கூட இதுவாக இருக்கலாம்.

படித்துப் பாருங்கள் தவறவிடக்கூடாத தொகுப்புகளில் இதுவும் ஒன்று என்பது என் எண்ணம்.