Wednesday, February 25, 2009

புனைவு அனுபவம் மற்றும் ஒன்றுமில்லாதது....


நானொரு எழுத்தாளினி என அறிமுகப்படுத்தியும் அவரிடம் எந்த ஒரு பெரிய எதிர்வினையும் இல்லாத்தது கண்டு எனக்கு வருத்தம் தான். ஆனாலும் என் தன்முனைப்பு எடுத்த காரியத்தை முடித்தே விடுவது என்ற புள்ளியில் குவிந்திருந்ததால் அந்த வருத்தத்தை தள்ளி நகர்த்திவிட்டு நானொரு புனைவு எழுதவேண்டுமென்றும், அதற்கு அடிப்படையான அனுபவ அறிவின்றி என்னால் புனைவெழுத முடியாதென்றும் அவருக்கு விளக்க வேண்டியிருக்குமோ என்று எனக்குத்தோன்றியது. ஆனால் அவர் அதற்கான வழியொன்றையும் தேடவைக்காமால், சொல்லுங்க என்று மட்டுமே சொன்னார்.

ஒரு நாளில் எத்தனை முறை நீங்கள் பின்னோக்கி போகவேண்டியிருக்கும்? அந்த அனுபவம் எப்படியிருக்கும் அப்போது தாங்கள் என்ன நினைத்துக்கொள்வீர்கள் இதையெல்லாம் நான் புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன், முடிந்தால், தாங்கள் அனுமதித்தால் தங்களோடு ஒரு நாள் கூடவே வந்துபோகவும் ஆசையாயுள்ளது என்று சொன்னதும், அவர் என்னை ஏதோ வேற்றுகிரகத்து ஜந்து போல பார்த்தார்.


இங்க பாரும்மா இதொன்னும் நீ நினைக்கறாமாதிரி
ஆராய்ச்சி பண்ணவேண்டிய விஷயமெல்லாமில்லை.

இன்ஞ்சின் கேபின்ல ஏறி உக்காந்தா வண்டி முன்னயோ பின்னயோ போகும், முன்னாடி போனா ஸ்டேஷனெல்லாம், சீக்கிரம் கண்ணைவிட்டு போயிடும். வண்டி திரும்பி போகும் போது பின்னாடி இருந்தா ஸ்டேஷனெல்லாம் ரொம்ப நேரத்துக்கு கண்ணுல தெரியும் அவ்ளோதான். ஆங் அப்புறம் முன்னாடி போகும்போது மனுசங்களை ரொம்ப பக்கத்துல டிராக்குல பார்த்துட்டா அந்த டிரிப் கொஞ்ச நேரத்துக்கு பேஜாராயிடும், பின்னாடி உக்கார்ந்து இருந்தா அந்தக்கவலையில்லை அவ்ளோதான். வேற ஒன்னும் இல்லை. வர்ட்டா.. என்ற படி நகர்ந்து போனார்.


எனக்கு மிகவும் ஏமாற்றமாய் ஆனது இவ்ளோதானா இதுக்கு மேல ஒன்னும் இல்லையா.


நான் பேசியது ஒரு மின்சார தொடர் வண்டியின் ஓட்டுநரிடம் என்று உங்களுக்கு புரிந்துவிட்டது தானே.


Friday, February 20, 2009

காதலின் மீள்கடிதம்

பிப்ரவரி 14 எந்த ஒரு கவனிப்பும் இன்றி கழிந்து சென்றது என்னுள் கேள்வியை எழுப்பியது என்ன ஆச்சு எனக்கு? எனக்குள் காதல் செத்து விட்டதா.... தேடிப்பார்த்தேன் நல்லவேளை இல்லை.... ஆழப்புதைந்திருக்கும் உணர்வுகளில் ஒளிந்திருக்கும் உண்மை. மிக மெல்லிய காதல் கவிதை.


எப்போதும் கனவுகளில்

பார்த்தேயிராத தெருக்களில்
பயணித்திருக்கிறேன்

ஓட்டியே இராத கார்களின்
வட்டுவம் பிடித்து
மைல்கணக்காய்
காரோட்டியிருக்கிறேன்

பறந்து செல்லும்
பறவைக்கூட்டத்தினரோடு
நானும் பறவையாய்
பறந்திருக்கிறேன்

மிதந்து செல்லும்
ஆற்றின் சுழிகளில்
சுழன்று வீழ்ந்திருக்கிறேன்

தொலைந்து போன
பால்யத்தின் கதவுகளை
திறந்து பார்த்திருக்கிறேன்

அதோடு கூட


உன்னோடும் இருந்திருக்கிறேன்

Sunday, February 15, 2009

கேள்விகள் - 4 - முதிர்ச்சியை எதிர்பார்ப்பது சரியா தவறா?

ரொம்ப பெரிய மனுஷத்தனமா பேசறான், இது வயசுக்கு மீறிய பேச்சு. அவன் லெவலுக்குப்பேசவே மாட்டான், இப்படி எத்தனையோ முறை நாம் நம் வீட்டு குழந்தையைப்பற்றியோ அல்லது தன் வயதுக்கு ஒவ்வாத பேச்சுக்களை பேசும் மற்ற சிறு குழந்த்தைகளையோ பார்க்கும் பொழ்து சொல்லக்கூடிய சூழலில் இருந்தால் சொல்லியும் சொல்ல முடியாத நிலையியாயின் மனதுள் நினைத்தும் இருந்திருப்போம்.

இப்போது என் கேள்வி, இது போன்று வயதானவர்களைக்குறித்தும் நமக்குத் தோன்றுவதுண்டா?
எது போன்ற தருணங்களில் ? உதாரணத்துக்கு

  1. பத்து வயதில் ஹார்லிக்ஸை அப்படியே சாப்பிடலாம், அதையே 20 வயதிலும் செய்யும்போதாக இருக்கலாம்
  2. 15 வயதில் சாக்லேட்டிற்காக சண்டை போடலாம், உயிரே அதுதான் என்று சாப்பாடு கூடத்தேவையில்லாமல் சாக்லேட்டோடு உயிர் வாழலாம் 40 வயதிலும் அதைத்தொடர்ந்தால்
  3. 18/20 வயதுகளில் இருக்கும் விடலைத்தனங்களில் இருந்து மீளாமல் மத்யம வயதிலும் அதே போன்ற செயல்பாடுகளோடு இருப்பதை கவனிக்கும் போதாக இருக்கலாம் (எ.டு - நடை உடை பாவனை, கவன ஈர்ப்பு விவகாரங்கள், அதிக நாணல், கோணல், போலியான பணிவு, அடக்கம், போக்கிரித்தனம், குறும்புகள்)
  4. அறுபது அறுபதைந்து வயதைத்தாண்டிய ஒரு முதியவரோ, மூதாட்டியோ
    1. மிக ஆர்வமாக சினிமா கிசு கிசுக்களுக்கு விடை கண்டுபிடிக்கும் போதாக இருக்கலாம்,
    2. சில புலனாய்வுப்பத்திரிகைகளின் வசீகரச்செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதைக்குறித்து விவாதிக்கும் போதாக இருக்கலாம்
    3. அண்டை வீட்டுக்காரரைப்பற்றியோ அல்லது சில உறவுகாரர்களைப்பற்றிய சிறிய செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வம்பு பேசும் போதாக இருக்கலாம்
    4. சில சமயம், தன் உடை அலங்காரத்தைப்பற்றிய அதீத கவனம் கொண்டு போட்டிருக்கும் சட்டையோ, கால்சராயோ/புடவை , ரவிக்கையோ சற்று ஒத்துபோகவில்லை என்பதால் அது குறித்து அதீத கவனம் கொள்ளும் போதாக இருக்கலாம்.
    5. நன்னா பூரி பண்ணி தொட்டுக்க கிழங்கோட சேர்த்து அன்னிக்கு சப்பாத்திக்கு பண்ணினேயே தக்காளி கூட்டு புளிப்பா அதுவும் சேர்த்து சாப்பிடனும் என்று சொல்லும் போதாக இருக்கலாம்
    6. தொலைக்காட்சியில் மானாடி மயிலாடி வரும் நிகழ்ச்சிகளை ஒன்று விடாமல் பார்த்து விட்டு அதன் அங்கத்தனர்களை விமர்சிக்கும் பொழுதாக இருக்கலாம்

இப்படி எத்தனையோ இருக்கலாம்கள் இருக்கும்.

  1. எனவே இரசனை, நடவடிக்கை என்பதும் அதைத்தொடர்ந்த மனோநிலையும் 20, 40, 60 , 80 களிலும் ஒன்று போல் இருப்பது தவறாகுமா?
  2. ஒருவருக்கு வயதாகிவிட்டதாலேயே அவர் நமீதாவைக்குறித்தோ, வெங்காய பஜ்ஜி குறித்தோ பேசக்கூடாது அது அவர்கள் வயதுக்கு ஏற்ற செயலல்ல என்று நம்மால் புறங்கூறமுடியுமா?
  3. இல்லை அவர்கள் சரிதான் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா.?
  4. அனுபவங்களே நம்மை கூறுபோட்டு பக்குவப்படுத்தும் அந்த அனுபவங்களை வாழ்நாள் பொழுதெங்கும் சேகரித்து, வயதாக வயதாக சில வருடங்களுக்குப்பிறகு நாம் ஒரு மனோநிலைக்கு செல்லமுடியும் என்பது சரிதானா?
  5. அந்த நிலையின் வெளிப்பாடாக நாம் மிகவும் முதிர்ச்சி அடைந்த மனநிலையை எட்டமுடியும் என்பதும் உண்மைதானா?
  6. அந்த முதிர்ச்சியான மனநிலையில் நம்மைக்குறித்தான அதீக கவலைகளையோ, புற உலகைக்குறித்தான தேவையற்ற விவாதங்களையோ தவிர்த்துவிடுவோம் என்பது நடைமுறையாகுமா?

யோசிக்க யோசிக்க நம்முள் தான் எத்தனை கேள்விகள்????? இந்தக்கேள்விகள் எனக்கானவை மட்டுமல்ல.

கேள்விகள் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் சுவாசக்குழாய்கள்.


கேள்விகள் 1
கேள்விகள் 2
கேள்விகள் 3

Tuesday, February 10, 2009

வாசிப்பின் லயம் - நா.பிச்சமூர்த்தி கதைகள்.

தொடர்ச்சியாய் ஒரு செயலைச்செய்யும் பொழுது அது ஒரே லயத்தில் இருந்தாலும் பிரச்சனை இல்லாவிட்டாலும் பிரச்சனை.

இது என்ன முதல் வரியிலேயே ஒரு குழப்பம் என்ற பயம் வேண்டாம் விளக்கமாகவே சொல்ல முயற்சிக்கிறேன்.

பூ தொடுத்துக்கொண்டிருக்கிறோம், எதையாவது பார்த்து நகலெடுத்துக்கொண்டிருக்கிறோம், இப்படி ஏதாவது ஒரு வேலையை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கும் வேளையில் பத்து இருபது நிமிடங்களுக்கு மேல் அந்த வேலையை நம்மால் தொடர முடிவதில்லை சலிப்படைந்து விடுகிறோம். ஏனென்ன்றால் அதில் இருக்கும் ஒற்றைத்தன்மை. எனவே நாம் செய்யும் வேலையை சுவாரசியமாக்க சின்னச்சின்ன மாற்றங்கள் அந்த வேலையில் தேவைப்படுகிறது.

ஆனால் அதே சமயம், ஒரு பாடல் தொகுப்பை கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம் பல்வேறு தாள லயங்களும், காட்சி அமைப்புக்களும் உடையதாக இருக்கலாம், அதாவது ஒரு குத்துப்பாட்டு, ஒரு மென்மையான இசை, ஒரு சாஸ்திரிய சங்கீதப்பாடல், ஒரு செமிகிளாசிக்கல் பாடல் என்று தொடர்ந்து கேட்க/பார்க்க முடிவதில்லை அதற்கு ஒரு லயம் தேவைப்படுகிறது. நம் மனம் அந்தந்த நிமிட இடைவெளிகளுக்குள் முந்தய அனுபவத்தை மாற்றிக்கொள்ளும் பொழுது சோர்வடைந்து விடுகிறது.


அது போல் ஒரு தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பை வாசித்துக்கொண்டிருக்கிறோம் எனும் சூழ்நிலையில் ஒரு நாவலை வாசிப்பது போல் சிறுகதை தொகுப்பை வாசிக்க முடிவதில்லை. ஒரோர் சிறுகதைக்கும் உண்டான அமைப்பு, கதை மாந்தர்கள் அவர்களது குணாதிசயப்படைப்புகள், கதை ஓட்டம் இவைகளையெல்லாம் நம்மால் ஒரு பக்கத் திருப்பலில் மறந்து விட்டு அடுத்த கதைக்கு செல்ல முடிவதில்லை. அதனாலேயே சில சமயம் ஒரு 80 பக்க சிறுகதை தொகுப்பை படித்து முடிக்க கூட சில நாட்கள் ஆகிவிடுகிறது. அதேசமயம் சில நாவல்களின் 300 பக்கங்களைக்கூட தொடர்ந்து வாசித்து முடித்து விட முடிகிறது.

இது தான் நடந்து கொண்டிருக்கிறது இப்போது நான் வாசித்துக்கொண்டிருக்கும் ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பில். ஒரு கதைக்கும் மறுகதைக்குமுண்டான இடைவெளி சில சமயம் நாட்கணக்காக, மணிக்கணக்காக ஊர்ந்து கொண்டிருக்கிறது. உணர்வுகளால் ஆக்கப்பட்டு அந்த உணர்வுகளின் மூலமாக தன்னையும் எதிர்புலனாக உணரவைக்கின்ற அவரின் எழுத்து தரும் வர்ண ஜாலத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. கை விரல்களினூடே வழியும் மணியென ஓரோர்புறம் சிதறி வழிகிறது நம் உணர்வுகள். தேடல் நிறந்த வாழ்வை வாழ்ந்தெவரென்றும், ஆற்றின் கரைகளில் சாட்சியாய் நிற்கின்ற படித்துறைகள் போல அவரது கதைகள் அவரது தேடலின் சாட்சிகளென்றும் படிக்க, சொல்ல கேட்டு மிகுந்த எதிர்பார்ப்புகளோடேயே இந்த புத்தகத்தை வாசிக்கத்தொடங்கினேன்.

நாம் எதிர்ப்பார்ப்புகள் மிகுதியாய் ஒரு செயலை செய்ய நேரும் வேளையில் நாம் எதிர்கொள்வது பெரும்பாலும் ஏமாற்றமாய் முடிந்துவிடும். அந்த பயமும் என்னுள் இருந்ததென்றாலும் துணிந்து வாசிக்க எடுத்தேன் ஆனால் ஒரு கவளம் சோற்றில் உண்டி நிறையும் சிறு குழந்தையென அவரது ஒவ்வோரும் கதைக்குப்பின்னும் மனம் நிறைந்து விடுகிறது.

வாழ்வைக்குறித்தான் தேடலும் கேள்விகளும், தன்னுணர்வைக்குறித்தான சுய அலசலும் உள்ள இன்றைய தலைமுறை வாசகர்கள் அவசியம் தேடி வாசிக்க வேண்டிய எழுத்துக்கள் ந.பிச்சமூர்த்தியின் கதைகள் என்பது என் எண்ணம்.

Sunday, February 8, 2009

நான் கடவுள் - அகம் பிரம்மாஸ்மி........

நான் கடவுள் படம் நேற்று பார்த்தேன்.....


அதைப்பற்றி எழுத முயன்றால் நான்

உணர்ந்தவற்றில் பத்து சதவிகிதம் கூட எழுத்தில்

கொணரமுடியாது என்று தோன்றுகிறது ஹாட்ஸ்

ஆஃப் டு
திரு.இளையராஜா மற்றும் திரு.பாலா

கூடவே
திரு.ஜெயமோகனையும்

சேர்த்துக்கொள்ளலாம்.

Tuesday, February 3, 2009

முகமூடிக்கவிதைகள் - 6

ஆற்றொழுக்கின் இரு கரைகளுக்குண்டான
விகிதாசாரங்களில்
இறைந்து கிடக்
கிறது வாழ்க்கை

ம் என்றோ
இல்லை என்றோ
மறுமொழிகளில்
கழிந்துபோகிறது
அன்றன்றைய நாட்கள்

வாழ்வை தேடவைக்கும்
சில சொற்கள்
ஆனால்
சொற்களை தேடவைக்கிறது
சிலர் வாழ்க்கை

முகமூடிகளின்
வாழ்வியலில்
வார்த்தைகளே
மூலதனம்

வார்த்தைகள்
வாழ்வை நிர்ணயிப்பதில்லைதான்
ஆனால்
நிர்ணயமாகும் வாழ்வில்
வார்த்தைகளுக்கே முதலிடம்