Tuesday, January 27, 2009

ஆ..மாதவன் கதைகள் - ஒரு பகிர்தல்

ஒரு வாசகனாய்/வாசகியாய் மட்டுமே இருப்பதென்பது மிகப்பெரும் ஆசுவாசமாய் இருந்திருக்குமோ என்று இப்பொழுதெல்லாம் தோன்ற ஆரம்பித்து விட்டது. ஒரு பத்தியோ, சிறுகதையோ, புத்தகமோ வாசிக்க ஆரம்பிக்கும் பொழுதே அதைக்குறித்தான எழுத்துக்கள் என் மனதில் பதிய ஆரம்பித்தது என் எழுத்துப்படலம் தொடங்கிய பிறகு தான். அதுவரை புத்தகமும், எழுத்தும், சிலசமயம் எழுத்தாளரும் மனதுக்கு மிக அருகில் நெருங்கி நிற்பது மட்டுமே நடந்து வந்தது.

ஆனாலும் பகிர்ந்து கொள்ளும் இப்பகிர்வுகள் ஒரு சிலருக்கு சில சமயம் நல்ல அறிமுகமாகும் விசித்திரங்களும் நடந்து போவதுண்டு. நானும் எத்தனையோ புத்தகங்களை, எழுத்துக்களை, எழுத்தாளர்களை மற்றவர்களின் வாசிப்பானுபவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து அது குறித்த சந்தோஷமோ, துக்கமோ அடைவதுண்டு. அதுபோன்றதொரு பகிர்தலுக்ககாவே ஆ..மாதவனின் எழுத்துலகைக்குறித்து இங்கு நான் பகிர்ந்து கொள்ள விரும்புவதும்.

மிகப்பெரும் உள்ளுணர்வுச்சிக்கலையோ, இல்லது சமூகப்பிரச்சனைகளையோ கருவாகக்கொண்டதில்லைதான் ஆ.மாதவனின் கதைகள். ஆனால் நம் போன்ற சாதரணர்களின் வாழ்வை, சக மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை எந்த முகப்பூச்சுக்களுமின்றி தோலுரித்துக்காட்டுகிறது. இலக்கியம் என்று இசைந்து எழுத முற்படாத எதார்த்தங்களே இவரது கதா பாத்திரங்கள். படைப்புலகுக்கும் வாழ்விற்கும் உண்டான இட்டு நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கிச்செல்வதல்ல இவரது எழுத்துக்கள். யதார்த்தத்தில், மனித மனத்தின் அடி ஆழத்தில் இருண்டுகிடக்கும், வக்கிரத்தை, துரோகத்தை, ஏமாற்றத்தை இயலாமயை எழுதிச்செல்கிறது இவரது எழுத்துக்கள்.

அவரது படைப்புலகில் ஆறாம் அறிவுகொண்ட இரண்டு கால் இரண்டு கை மனிதர்கள் மட்டுமல்ல ஒரு கதைக்கான கருவை, களத்தை நிர்ணயிப்பது, வெறும் சம்பாஷனைகளோ அல்லது நிகழ்சிகளோ மட்டுமல்லாது, அதை மீறிய கதைக்களமும் அதைக்குறித்தான வர்ணணைகளும் பாதி கதைக்கான கருவை நம்முள் இட்டு நிரப்பிவிடுகிறது.

திருவனந்தபுரம் கடைத்தெருவும், பத்மனாபபுரம் கோட்டையையும் காண்பவர்கள் ஆ.மாதவனின் கதைகளை படித்தவர்களானால் அவரை நினைவுகூறாது அவ்விடத்தை விட்டு அகலுவது கடினமாயிருக்கும்.

அவரது கதை மாந்தர்கள் கற்பிதப்படுத்தப்பட்ட ஒழுக்கத்தை திணிப்பதை அடியோடு களைந்தவராகவே காணப்படுகிறார்கள். பாம்பு உறங்கும் பாற்கடலில் வரும் வாசுப்போற்றியாகட்டும், அமுத கலசத்துடன் வந்து நிற்கும் மோகினி என வர்ணிக்கப்படும் கார்த்தியாயினியாகட்டும் அவர்களின் சுய சிந்தனை தெளிவுகளோடே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

திருட்டு கதையில் வரும் திருடனின் சமர்த்காரமும், நாயனம் கதா மாந்தர்கள் சாவு வீட்டிலும் சகித்துக்கொள்ள முடியாத இசைக்கொலையை எதிர்ப்பதிலாகட்டும் வாய்விட்டு சிரிக்க வைக்கும் இலகு மனநிலையை தரத்தவறுவதில்லை.

காமினிமூலம் கதையில் வரும் முஸ்தபாவை கண்முன் கொண்டு நிறுத்தும் ஆசிரியர் அவர் வாழ்வை முடிப்பதிலும் கூட அதிக சோடனைகளற்று முடித்துப்போவது ஒவ்வொரு ஆழ்மன உறக்கங்களில் ஒளிந்திருக்கும் காழ்ப்புணர்ச்சியின் திட்டமிடப்படாத வடிகால்களை நமக்கு உணர்த்திச்செல்கிறது.

கோமதியிலும், இறைச்சியிலும், ஐந்தறிவான விலங்கினத்திற்கும், ஆறாம் அறிவான மனத இனத்திற்கும் மிகப்பெரும் வேற்றுமைகள் ஏதுமில்லை என்பதை சிறிதே பூடகமாகச்சொல்லியிருப்பதும் நம்மை மீண்டும் யோசிக்கவைக்கிறது. அதுவும் கசாப்புக்காரரான நாயர் அன்னிய துக்கம் அறியாத எல்லாவனும் பாவிகதான்.. வெட்டுவேன்.. எல்லாத்தையும் வெட்டுவேன்…” என்று புலம்பும்போது நம்முள்ளும் மண்டிக்கிடக்கும் துக்கத்தை வஞ்சத்தை இனங்காட்டுகிறது.

பிரித்தறியப்பட்டுள்ள இவ்வுணர்வுகள் ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் போலில்லை, இன்னும் பகிர்ந்துக்கொள்ளப்படாத ஓருலகத்தை கோடிட்டு காட்டத்தலைப்படும் ஒரு சிறு வெளிப்பாடுதான். ஆர்வமுள்ளவர்களுக்கான ஒரு சிறு துரும்பு. மேலும் அனுபவத்தை அவரவர்கள் வாசிப்பு மட்டுமே முழுமை செய்யமுடியும் என்பது தானே உண்மை.

Monday, January 26, 2009

பட்டாம்பூச்சி விருது


ஆஹ எனக்கும் பட்டாம்பூச்சி விருது கொடுத்துட்டாங்க நம்ம பாசமலர்இதை விருதென்று சொல்லுவதை விட நட்புக்கான அங்கீகாரம் என்று கருதுவதே எனக்கு மிகவும் உவப்பானதாக இருக்கிறது.

என் பங்களிப்பாக இவர்களோடு இதை பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

திவா -எந்த திரட்டியிலும் தன்னை இணைத்துக்கொள்ளாமல், பின்னூட்டங்களுக்கான உழைப்பின்றி கடமையைச்செய் பலனை எதிர்பாரேதே எனும் கீதா வாக்கியத்திற்கிணங்க பல சத்தியங்களை தெளிவுபடுத்தும் பதிவுகள்.

மங்கை - குறைவாகவே எழுதினாலும், நிறைவாக எழுதும் இவரது பக்கங்கள் அதிமுக்கியமானவை. தன் மேதாவிலாசங்களுக்கான சுய தேடலின்றி, சமூக அக்கறையுள்ள எழுத்துக்களே இவரது பதிவின் பக்கங்கள்.

பூ வனம் -ஆத்மார்த்தான எழுத்துக்கள், நம்முள்ளே நம்மை பரீட்சை செய்து பார்க்க உதவும் சிந்தனைகள் என இவரது வலைப்பதிவுகள் அனைத்துமே நான் ஒரு போதும் தவற விட விரும்பாத வகை.

இதற்கென சில விதிகளும் உளதாம்.
இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:


1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. 3 அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)



Thursday, January 22, 2009

கேள்விகள் - 3 எது கோபம், ஏன் கோபம்.


மனதில் ஊறும் கேள்விகளை தொடராய் எழுதும் எண்ணம் தோன்றியது சில காலங்களுக்கு முன்.

இரண்டாவது பதிவிலேயே அது நின்று போய் விட்டாலும் மனதின் ஒரு மூலையில் அந்த முயற்சி இருந்து கொண்டே தான் இருந்தது.

அதற்கான தொடர்முயற்சியாய் இது.


நவீன் காப்பி குடிச்சாச்சா? நித்தா எழுந்தாச்சான்னு பார்த்துச்சொல்லு, எழுந்தாச்சுன்னா உடனே அவனை பல் தேய்ச்சுட்டு கீழ வரச்சொல்லு கொஞ்சம் வேலை இருக்கு். நீ உன் காமர்ஸை சீக்கிரம் முடிச்சுட்டு ஸ்கூலுக்கு கிளம்பற வழியப்பாறு என்றபடியே துர்கா சமயலறையில் இயங்கிக்கொண்டிருந்தாள். ஒரு பக்கம் கிரைண்டரும் மறு பக்கம் மிக்ஸியும், அடுத்த பக்கம் எலக்டிரிக் சிம்னியும், சமயலறை சங்கீதத்திற்கு ஸ்ருதி கூட்டிக்கொண்டிருந்தது.

இந்தா நறுக்கினது போறுமா இல்ல இதையும் நறுக்கட்டுமா என்று கேட்ட சீனுவிற்கு, போறும் போறும் கோஸ் காயா பண்ணினா அதுங்க தொடாது, கூட்டுன்னாலாவது கொஞ்சம் போகும் நேத்திக்குத்தான் புடலங்காய் கூட்டு இன்னக்கும் கூட்டுனா நமக்கு போரடிக்கும் அதனால நமக்கு் மட்டும் தான் கோஸ் பசங்களுக்கு பீட்ரூட் முடிச்சுட்டு நீங்க கிளம்ப ஆரம்பியுங்கோ அப்பத்தான் அம்மாவோட ஆஸ்பத்திரி வேலையை முடிச்சுட்டு நீங்க ஆபிஸ் போக முடியும் என்று துரிதப்படுத்தினாள்.

நன்னூஊஊஊ நித்தா எழுந்தாச்சா கேட்டேனில்லை என்றதும் நித்தா எனப்படும் நிதுன், துர்காவின் இளையவன் சமயலறையை அடுத்திருக்கும் ஹாலில் இருந்து குரல் கொடுத்தான். "நான் அப்பவே எழுந்தாச்சு", அப்ப இங்க வா இந்தப்பாலைக்குடி, உதயம் ஸ்டோர்ஸ்க்குப்போய் ஒரு தேங்கா வாங்கிட்டு வா. என்றபடி கிரைண்டர் மாவை எடுக்கத்தொடங்கினாள். எப்படியும் அவன் எழுந்து வர குறைந்த பட்சம் 5 நிமிடமாவது ஆகும் என்பது அவளுக்குத்தெரியும். ஆனால் இவை எதற்குமே எந்த ஒரு எதிர்வினையும் இன்றி அவன் அமைதியாய் சோபாவில் படுத்திருக்கவும் சிறிதே கோபம் தலைக்கேறியது துர்காவிற்கு.

நித்தா உன்னைத்தான் சொல்றேன் பாப்பா, சீக்கிரம் வா கண்ணா, தேங்கா வாங்கி வைச்சுக்க மறந்து போச்சு, அண்ணா படிச்சிண்டிருக்கான், எனக்கு வேலையாகனும் பிளீஸ் ... பதிலில்லை.... நித்தா என்ன பண்ற .... பதிலில்லை முதல்ல நீ இங்க வா சொல்றேன் குரலில் கடுமையேறியது.

என்னஆஆஆ..... குரலில் எரிச்சல் மிக வந்தான்। பத்து வயசுப்பையனுக்கு காலங்கார்த்தால என்ன எரிச்சல் எழுந்தோமா தெம்பா ஏதாவது பண்ணினோமா, ஸ்கூலுக்குபோனாமான்னு இல்லமா இப்ப என்ன எரிச்சல் உன்னை என்ன மலையையா பொரட்டச்சொல்றேன் கடைக்குப்போய் தேங்க வாங்கிண்டுன்னு வாந்தானே சொல்றேன். இதோ தெருமுனைல இருக்கற கடைக்குப் போறதுக்கு உனக்கென்ன அலுப்பு அதுவும் இந்த சின்ன வயசுல என்று ரவுண்டு கட்டத்துவங்கினாள்.

அம்மாஆஆஆஅ.. எனக்கு நேரமாயிடும்மா என்று தரையை உதைத்தபடி மாடியேறிச்சென்றவனைப்பார்க்கவும் கோபம் இன்னும் அதிகமானது. நீ மாடிக்குப்போனே கொன்னுடுவேன்... ஒழுங்கா மரியாதையை கடைக்குப்போயிட்டு வா என்று தன் அதிகாரத்தை காட்ட ஆரம்பித்தாள்.

துர்க்கா இப்ப எதுக்கு உனக்குத்தேங்கா கோஸுக்கா இன்னக்கி தேங்கா போடமா பண்ணிடேன் இதுக்கு எதுக்கு அவங்கூட காலைல என்று சாவதானமாகச்சொல்லியபடி குளியலறையிலிருந்து வந்தான் சீனு. அன்றைய கோஸ் காய் தேங்காய் இல்லாமல் முடிந்தது.

அன்று முழுதும் துர்காவிற்கு கோபம் தாங்கவில்லை

அது எதனால்

தேங்காய் இல்லாத சமையல் செய்ததாலா?
மகன் கடைக்கு போக மாட்டேன் என்று சொன்னதாலா
தான் சொல்லி ஒரு வேலையை செய்ய மறுத்துவிட்டதாலா?
கணவர் தனக்கு ஆதரவாக பேசாமல் சமாதனமாகப் போகச்சொன்னதாலா?
தனக்கு சிறு வயதில் இருந்து போதிக்கப்பட்டு தன்னுள் ஊரிப்போன "பெரியவங்க ஒரு வேலையைச்சொன்னா தட்டாம செய்யனும்" என்ற மனோநிலையை கேள்விக்குறியாக்கியதாலா?

எது துர்காவை அன்று முழுவதும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கும்.

இதில் எந்தக்கேள்விக்கான பதிலை நாம் தேட முற்பட்டாலும் அதில் துர்காவின் தன்முனைப்பு சம்பந்தப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமுண்டா.

குழந்தைகளுக்கென்று உரிமைகள், நியாயங்கள் உண்டு, நீ சொன்னதாலேயே அவன் ஒரு வேலையை, நிகழ்வை செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை, வயதானவர்களைப்போலவே குழந்தைகளையும் கணக்கில் கொள் உன் அம்மா எனும் ஆளுமையை அவர்களிடம் செலுத்த நினைக்காதே என்றும் சொல்லும் சீனு சரியா.

இல்லை இதெல்லாம் உதவிதானே ஒருத்தருக்கு உதவி செய்யனுங்கற எண்ணத்தை சின்ன வயசிலேர்ந்து அதுவும் வீட்டுலேர்ந்துதானே கத்துக்கொடுக்க முடியும், அதுவுமில்லாமா தன்னால முடியாதுங்கறதைக்கூட தன்மையா சொல்ல வேண்டிய முறையையும், கலையையும் நாமதானே கத்துக்கொடுக்கனும். எல்லா விஷயத்தையும் தடவித்தடவி சொல்லிக்கொடுக்க முடியாது கொஞ்சம் வேகமாவும் சொல்லனும் அப்பத்தான் புரியும்னு சொல்ற துர்கா சரியா

எனக்கு விருப்பமில்லாததை செய்யச்சொல்பவர் யாராயிருந்தாலும் எதாயிருந்தாலும் அதை செய்யமாட்டேன் என்ற துணிவிருக்கும் நிதுன், இன்றய இளைய சமுதாயப்பிரதிநிதி் சரியா.

இத்தனை நிகழ்வுகளுக்கு இடையிலும் பிரச்சனை நம்மிடம் வராமல் இருந்தால் சரி என்று ஒதுங்கியிருக்கும் நவீன், மற்றொரு இளைய சமுதாயப்பிரதிநிதி சரியா.

இந்த கேள்விகளுக்கான பதில்கள், துர்கா, சீனு, நவீன், நிதுன் இவர்களைத்தாண்டி நம்மனைவருக்கும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம் சுய அலசலுக்கு உதவும் தானே....

Friday, January 16, 2009

நடைமுறை வேதம்

வழக்கம் போல் தான் அந்தப் பேச்சு ஆரம்பித்தது. ஆனால் சங்கரிக்குள் அந்த தாகம் அதிகம் இருந்திருக்க வேண்டும் என்பது உரையாடலின் முடிவில் அவள் கண்களில் கோர்த்திருந்த நீர்த்துளிகளும், முகம் அடைந்திருந்த வருத்தச்சாயலும் காட்டிக்கொடுத்திருக்கவேண்டும் கிருஷ்ணனுக்கு அவள் உள்ளக்கிடக்கையை.

அக்கம் பக்கம் அனைவரும் கனுப்பொங்கல் கொண்டாட தன் பிறந்தகம் சென்றுவிட அதிக நடமாட்டமற்ற காலை வேளையில் போட ஆரம்பித்திருந்த பெரிய கோலத்தை முடித்துவிட்டு உள்ளேவந்த சங்கரிக்கு பூட்டிய பக்கத்து வீட்டு கதவுகளும், வெறிச்சோடிய தெருவும் சற்றே சிதைந்த மனநிலையை தந்திருக்க வேண்டும். உடன் பிறந்த சகோதரர்கள் இல்லாத நிலையில், அப்பாவின் காலத்திற்குப்பின் பிறந்த வீடு என்று ஒன்று இல்லாத போனதாலும், இருக்கும் ஒரு
சகோதரியின் வீடும் எங்கோ எட்டாதூரத்தில் இருப்பதாலும் எப்போதும் உண்டாகும் ஏக்கம் தான் இது. ஆனாலும் இது போன்ற பிறந்தகம் சார்ந்த பண்டிகை நாட்களில் மனதில் ஏற்படும் சலனத்தை மாற்றிக்கொள்ள எப்போதும் சிறிது பிரயத்தனப்படத்தான் வேண்டியிருந்தது.

வீட்டிற்கு உள்ளே வந்தவள் டீவி முன் அமர்ந்து காப்பி அருந்தியபடி இருக்கும் கிருஷ்ணனிடம் வந்து "நானும் எம்பொறந்தாத்துக்குப் போப்போறேன்" என்று அர்த்தமற்று சொல்லி அமர்ந்தாள். உடனே அவர் "அம்மாடி எங்களுக்கு இனிமே நல்ல நேரம்னு சொல்லு" என்று எள்ளல் செய்யவும் இது வழக்கம் தான் எனும் படி அவள் உள்ளே நகர்ந்தாள். ஆனால் வளர்ந்த இரு பிள்ளைகள் இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் அப்பாவின் பக்கத்தில் சார்ந்துகொள்வதையே பெருமையாய் நினைத்துக்கொள்வதால் ஆரவராம் செய்ய ஆரம்பித்தார்கள். "சபரி அம்மா பொறந்தாத்துக்கு போறாளாம்" என்று சின்னவன் சொல்ல பெரியவனோ "முதல்ல அந்த வேலையைச்செய் மா எந்த ஊருன்னு மட்டும் சட்டுனு சொல்லு எப்பாடு பட்டாவது டிக்கெட் எடுத்துத்தரேன்" என்று தொடர்ந்து நகையாடத்தொடங்கினான். கணவனும் சேர்ந்து கொள்ள சங்கரி சற்றே நிலை குலைந்து போனாள்.

கையில் வைத்திருந்த காப்பி டபாராவோடு எழுந்திருந்து "ஆமாம் நான் போகத்தான் போறேன் அப்பத்தெரியும் உங்களுக்கு" என்று சொன்னவளின் முகமாற்றம் தான் கிருஷ்ணனை உறுத்தியிருக்க வேண்டும்.

சட்டென்று நிலமையை கையில் எடுத்தவர், "சரி சங்கரி நீ ரொம்ப நாள் ஆசைப்பட்டுட்டிருந்தயே தென்னாங்கூர் பாண்டுரெங்கன் கோவில் இன்று சென்றுவரலாம், சமையல் வேண்டாம் போகும் வழியில் பார்த்துக்கொள்ளலாம் சீக்கிரம் கிளம்பு" என்றபடியே மகன்களையும் அழைத்து கிளம்பச்சொன்னர் அப்படித்தான் ஆரம்பித்தது அந்த பயணம்.

தென்னாங்கூர் கோவில் வாசலைச்சென்றடையும் வரை அதிகம் ஆர்ப்பட்டமில்லாத அந்த 2 மணி நேரப்பயணம் மனதுள் இனந்தெரியாத பக்தி உணர்வை தந்திருந்தது. ஒருவேளை மிகுந்த ஆவலோடு பல சமயம் முனைந்தும் முடியாமல் போனதாலேயும் கூட இருக்கலாம். சன்னதியின் முகப்பு மண்டபத்தை அடையும் முன்னரே கிடைத்த மூர்த்தியின் தரிசனம் கணவன் மனைவி இருவரையும் கட்டிப்போட்டது. இராஜ அலங்காரத்தில் பாண்டுரங்கணும் இரகுமாயியும் தம்பதி சமேதராய் கிளிப்பச்சை நிறப்பட்டும், கீரீடமும், அங்கியும் மாலையும், மீன்களைப்போன்ற தோள்வளையும் அணிந்து புன் சிரிப்போடு நிற்கும் காட்சி மனதில் எந்த வேறொரு எண்ணத்தையும் வரவொட்டாது அவரோடு இணைத்து வைத்தது. 10 நிமிடங்களுக்கும் மேலாக சன்னதியில் அமர்ந்திருந்து வெளியேறும் பொழுது அருகிருக்கும் யாரோ இருவரின் சம்பாஷானை சங்கரியை ஈர்த்தது. "ஆம்படையான் பொண்டாட்டி மாதிரி தான் இருக்கே தவிர பகவான்னு தோணவேயில்லை என்ன ஆதுரம் என்ன கம்பீரம் ஏதோ நம்பாத்து மனுஷா மாதிரி ஒரு நெருக்கம் என்ன சொல்றே .... அதையேதான் நானும் நினைச்சேன் மன்னி அதுவும் அம்மா அப்பா மாதிரி கூட இல்ல ரொம்ப ப்ரியமான சின்ன வயசு அண்ணா, மன்னி மாதிரி என்ன ஒரு நெருக்கம் என்ன ஒரு சௌஜன்யம் அவரோட சிரிப்புல கண்ணே போறல" தனக்கு இல்லையே என்று வருந்திய சொந்தத்தை நான் தருகிறேன் என்று உணர்த்துகிறானோ என்று நினைத்து வெடித்துக்கதறினாள் சங்கரி.

சபரியும், விக்கியும் இருபுறமும் நின்றபடி ஆதரவாய் தோள்பற்றி ஏதும் சொல்லாமல் கூடவே நடந்து வந்தது கூட மனதுக்கு ஆறுதலாய் இருந்தது. ஞானானந்தகிரி பீடமும் சென்று அமர்ந்து அமைதியாய் தியானித்து விட்டு காருக்கு அருகே வந்ததும் தான் அடுத்த யோசனை வந்தது அடுத்து என்ன என்று.


சங்கரிக்கோ வாய் வரை வந்த "பக்கத்துல தானே திருவண்ணாமலை" என்ற வார்த்தையை தன்னுள்ளே விழுங்கிக்கொண்டாள் ஏனென்றால் பெரியவனும் சின்னவனும் இன்றைக்கென்ற போட்டு வைத்திருந்த நிகழ்ச்சி நிரல் அவர்கள் அளவில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியிருந்தது நான்கு நாட்களாக அதைப்பற்றிய பேச்சோடுதான் அந்த நாட்கள் முடிந்திருந்தது. அய்யோ குழந்தைகள் ஏமாற்றம் அடைந்துவிடும் என்பதால் வாய் மூடி மௌனியானாள். ஆனால் கிருஷ்ணனோ "வாட் அபௌட் திருவண்ணாமலை இன்னும் 2 மணி நேரம்தான் ஒரு பிடி பிடிச்சா மத்தியானச்சாப்பாட்டுக்கு திருவண்ணாமலை போயிடலாம்" என்றதும் குழந்தைகள் ஏதும்
சொல்லாமல் சரி என்றதும் அளவிட முடியாத ஆனந்தத்தை தந்தது சங்கரிக்கு.

போகும் வழியில் கலசப்பாகம் சென்றது மற்றொரு பேரானந்த அனுபம். பூண்டி ஆற்று சுவாமிகளின் மூடியிருந்த அதிஷ்டானத்து கதவுகளுக்கு அருகே இருந்து மௌனமாய் தியானித்து எனக்கு ஒரு நல்ல ஆன்மீக வழிகாட்டியின், குருவின் நெருக்கத்தை தரமாட்டாயா, தாங்களெல்லாம் அனுபவித்த பேரானந்தக்கடலின் ஒரு துளியையாவது எனக்கு காட்டமாட்டீர்களா என்று உருகி, கசிந்து நிமிரும்போது மடத்தின் பொறுப்பாளர் "அம்மா உங்களுக்காக கோயிலை திறக்கறோம் போய் பழம் வெத்தலை பாக்கு வேணா வாங்கிட்டு வாங்க" என்றது தன் இறைஞ்சலை அந்த மகான் கேட்டு அருள் செய்கிறாரோ என்ற எண்ணத்தைத்தந்தது.


திருவண்ணாமலையை தொட்டதுமே ஒரு பரபரப்பு ஒட்டிக்கொள்ளும் மற்றவர்களோடான உரையாடல் குறைந்து விடும் தனித்து ஒரு கனத்த மௌனம் வந்து கவிந்து கொள்ளும் ஊரை விட்டு அகலும் வரை அந்த லயம் மாறாது உள்ளுக்குள் கனன்றுகொண்டிருக்கும். ஆனால் இந்த முறை எந்தஒரு படபடப்பும் இன்றி மனம் வெகு இலகுவாய் இருந்தது சங்கரிக்கு. கோவில் சிறப்பு தரிசனம் முடித்து வந்தபின்னும் அந்த நெருக்கடி கொஞ்சம் தொந்தரவு தருவதாகவே இருந்தது. "இந்த ஊரே கோவில், மலைதான் சுவாமி உள்ள போய் இப்படி கஷ்டப்பட்டிருக்க வேண்டாம்" என்று மெதுவாக முனகினாள் . இப்படித்தான் "ஒவ்வொருதரமும் நினைச்சிக்கறோம் ஆனால் உள்ள போகமா இருக்க
முடியறதில்ல" என்றபடி ஆமோதித்தார் கிருஷ்ணன்। பிள்ளைகள் இருவரும் தம் சொந்த சம்பாஷணையில் மூழ்கியிருந்தனர்। அடுத்து எங்கே என்று கேட்காமலேயே பழக்கப்பட்ட கால்கள் சந்நதி தெருவின் தேர்முக்கில் இருக்கும் அடியார்க்கு நல்லான், கடவுளின் குழந்தை, பிச்சைக்காரன் என்று தன்னை அழைத்துக்கொண்டு இந்த மானுடத்திற்கு மிகப்பெரும் பொக்கிஷத்தை விட்டுச்சென்ற பகவானின் வீடு நோக்கித்திரும்பியது. சின்னவன் ஏதோ சங்கரியிடம் சொல்ல வர கிருஷ்ணண் தன்னோடு அவனை இருத்திக்கொண்டு பெரியவனை சங்கரியோடு அனுப்பினார். பொதுவில் கிருஷ்ணன் பக்தி, கோவில் இவைகளைத்தாண்டி தியானம், மகான்களின் சந்நிதானம் இவைகளில் அதிகம் பற்றில்லாதவராகவே இருப்பது வழக்கம்.

ஆஸ்ரமத்தின் தாழ்வார நிழல் தந்த ஆசுவாசமோ அல்லது அந்த மகான் வாழ்ந்து பின் அங்கு விட்டுச்சென்ற ஆசீர்வாத அதிர்வலைகளோ சங்கரிக்கு மிக உன்னதமான தியான அனுபவத்தை தந்தது. நீண்ட சுகமான தியானத்திற்கு பிறகு குரலும் மனமும் தொலைந்தவளாய் அருகே பொறுமையோடு அமர்ந்திருந்த பெரியவனை பார்த்த பார்வையில் மிகுந்த அன்பிருந்தது. வற்றாத சாந்தியிருந்தது. கூடவே ஒரு சிறு கர்வம் இருந்ததையும் அவளால் மறுக்க முடியாததாயிருந்தது. அன்றைய தியானத்தில் அவள் அடைந்ததாய் நினைத்திருந்த நிலை தந்த சிறு கர்வம் கூடவே அவளுள் கனன்று கொண்டிருந்த ஒரு நல்ல வழிகாட்டி, குருவின் அண்மைக்குண்டான ஏக்கம் இவை எல்லாமும் சேர்ந்து ஒரு மேலான மனநிலையை அவளுக்குத்தந்திருக்க வேண்டும்.

திரும்பும் வழியெல்லாம் வழிந்தோடிய ஜேசுதாசின் பாடலகள் அந்த மனநிலையை சற்றும் குலைக்காதிருந்தது. இரவு படுக்கப்போகுமுன் சற்றே இலகுவாகி "தேங்யூ மாமா தேங்யூ ரொம்ப நல்ல நாளில்ல இன்னக்கி" என்றதும் அவள் மனநிலையை படித்தவரே போன்று சொன்னார் கிருஷ்ணன், "சங்கரி அன்பு செய்யறத விட பெரிய பக்தியோ, தியானமோ இல்லடா, இந்தச்சின்ன பசங்களைப்பாரு இன்னக்கி அவங்க போட்ட அத்தனை பிளானையும் விட்டுட்டு நம்மோட ஒரு வார்த்தைக்காக நம்ம கூடவே வந்தாங்க. பொதுவா கார்ல போகும் போது பாட்டும் கூத்தும் எப்படி இருக்கும்னு உனக்குத்தெரியும் இன்னக்கி உன்னோட மனநிலைக்கு ஒத்துப்போறமாதிரி எப்படி இருந்தாங்க இந்த அன்பு எப்பவும் உங்கூட இருக்கும் கண்ணா. இவங்களுக்கு உன்னோட அன்பை குறையில்லாம பகிர்ந்து கொடுத்த போறாதா? இன்னம் வேற யார் வேணும்? சொல்லு என்று சொல்லவும் அவளுள் இருந்த எத்தனையோ கேள்விகளுக்கு பதில் கிடைத்தது போலிருந்தது. தனக்குண்டான கர்மாவை அன்போடும் ஆசையோடும் செய்வதைப்போன்றதொரு மிகப்பெரும் தியானம் ஏதுமில்லை என்ற கீதையின் கர்மயோகத்தைச்சொன்ன சாரதியாய் தெரிந்தார் கிருஷ்ணன்.