Wednesday, October 8, 2008

50 வது பதிவு - நட்பின் பதிவு

நம்மில் பலரும் எண்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள். எதிலும் முதலாவதாய் இருப்பதில் இருக்கும் சுகம், பெருமை, இருவராய் இணைந்து இருப்பதில் உள்ள நம்பிக்கை... இப்படி எத்தனையோ எண்களில் நமக்கு ஈடுபாடு.

அது போல் இந்த ஐம்பதாவது பதிவையும் கொண்டாடித்தான் பார்ப்போமே என்று முடிவு செய்துவிட்டேன்.

ஏதும் புதியதாய் செய்யவில்லை என்ற பெரிய புலம்பல்கள் ஏதுமின்றி எல்லா பதிவுகளுமே மிக்க மனநிறைவோடு நான் எழுதிய பதிவுகள் என்றமகிழ்ச்சி ஒன்று எஞ்சிநிற்கிறது.

அதனாலேயே எனக்கு இன்னும் நிறைவு தரும் ஒரு நன்பரின் எழுத்தை என் ஐம்பதாவது பதிவாக பதிவேற்ற விழைகிறேன். எனக்காக எழுதப்பட்ட ஒரு நட்பின் பதிவிது. நட்பைப்பற்றிய பதிவிது.

நட்பு எனப்படுவது யாதெனில்?...
--- விஜி
கடற்கரையில் காந்தி சிலை அருகே கூடியிருந்தோம். ஒவ்வொரு வாரமும் நடக்கிறது தான் இது. வெள்ளிக்கிழமை மாலை என்றால் தப்பாது இந்தக் கூட்டம் எங்கள் குழுவுக்கு ஞாபகம் வந்து விடும் ஜிலுஜிலுவென்று கடற்காற்று வீசிக்கொண்டிருந்தது பேராசிரியர் நஞ்சுண்டராவ் சொல்லிக் கொண்டிருந்தார்: "நட்பெனப்படுவது யாதெனில்_____"

உணர்வு சம்பந்தப்பட்ட எதுக்கும் இப்படி ஃப்ரேம் போட்டமாதிரி வரையறைகள் வகுப்பது எனக்குப் பிடிக்காத சமாச்சாரம். ஆகவே அவர் சொல்வதில் மனம் பதியாது கண்கள் அவர் முகம் பார்த்திருந்தாலும், நினைவலைகள் எங்கெங்கோ நீந்திக் கொண்டிருந்தன.. 'நட்பென்றால் என்ன? உம்?...' என்று என்னையே கேட்டுக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தேன்.

வாழ்க்கை எனும் வேள்வியில் எத்தனையோ பேர் நம்மிடம் இனிமையாகப் பழகுகின்றனர். அவ்வளவும் நட்பாகி விடுமா? 'வசந்தா வெரைட்டி' என்பது எங்கள் பக்கத்தில் பிரபலமான சூப்பர் மார்க்கெட். இங்கு மேலாளராகப் பணியாற்றும் கோபால், நான் அங்கு நுழைந்தாலே ஓடிவந்து அன்பைப் பொழிவார். எதுவாவது வாங்கப்போனால், முதலில் "என்ன சாப்பிடுகிறீர்கள்?.. அதைச் சொல்லுங்கள்; அப்புறம் தான் எல்லாம்!" என்பார். அங்கு வருவோர் எல்லோரிடமும் அவர் அப்படித்தான் பழகுகிறாரா என்றால், 'இல்லை' என்று தான் சொல்ல வேண்டும். என்னிடம் அவருக்குப் பிடிக்கும் ஏதோ குணநலன் தான் இந்த அன்புக்குக் காரணம் என்றாலும் வியாபார நிமித்தம் தான் இந்த உறவு என்பது எனக்குப் புரியும். நான் இந்த சூப்பர் மார்க்கெட்டை விட்டு வேறொன்றுக்குத் தாவினால், இந்த அன்பு முறிந்து விடும் என்கிற நிச்சய உணர்வு எனக்குண்டு

எதுதான் நட்பு என்று மேலும் யோசிக்கலானேன்:

நட்பு ஏமாற்றங்களை உருவாக்கக் கூடாது; அது சந்தேகங்களையும் தாண்டிய ஒன்று.

தோழமை வேறு; நட்பு வேறு அதனால் நண்பர்கள் இருவர் ஒரே கொள்கையையோ, கருத்தையோ கொண்டிருக்க வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை. நட்பு என்பது உதட்டு உறவல்ல; இன்றைக்கு இருக்கும் நாளை காணாமல் போகும் என்கிற விஷயமும் அல்ல. உண்மையான நட்பினில் முறிவு என்பதே கிடையாது. இறப்பு ஒன்றாலேயே இருவரையும் பிரிக்க முடியும்.

இளம் வயசில் இருவர் கொள்ளும் நட்புக்கு பலம் ஜாஸ்தி அது எஃகு போன்று உறுதி குலையாது இறுதி வரை இருக்கும் 'இன்னாருக்கு இன்னார்' என்று நண்பர் கிடைப்பது கணவன் - மனைவிக்கு மட்டுமல்ல; நண்பர்களுக்கும் பொருந்தும்। இன்னும் சொல்லப் போனால், திருமணத்திற்கு முன்னேயே, மனைவி அமைவதற்கு முன்னேயே ஏற்படக்கூடிய உறவு இந்த ஆத்மார்த்த நட்பு என்கிற உறவு. இந்த நட்பின் ஆரம்ப காலங்களில் இருவராலும் ஒருநாள் கூட சந்திக்காமல் இருக்க முடியாது. ஆண்- பெண் காதலுக்கு சற்றும் மாற்றுக் குறைந்ததில்லை, இந்த நட்பின் மேன்மை. அந்தியந்த நட்பு என்று சொல்லக்கூடியவர் ஒருவருக்கு ஒருவரே இருக்க முடியும்

ஆழ்ந்த இருவரின் நட்பு அவரவர் கணவன் மனைவிமார்கள் கூடப் பொறாமைப்பட வைக்கும் ஒன்று. அதனால் அந்தியந்த நட்பை பிறர் அங்கீகரிக்க வேண்டிய அவசியமும் கிடையாது

உண்மையான நட்புக்கு 'பிரிவு' கூட ஒரு பொருட்டல்ல; நீண்ட நெடியகாலம் இருவரும் சந்திக்காமல் கூட இருக்கலாம். இந்த 'சந்திப்பின்மை'.'கால இடைவெளி' இதெல்லாம் நட்பை ஒன்றும் செய்யும் முடியாது எவ்வளவு ஆண்டுகள் கழித்து சந்தித்தால் என்ன, நேற்று பார்த்துப் பிரிந்தது போல், பச்சை பசேலென்று பசுமையாக இருக்கும். அப்படிப்பட்ட சந்திப்புகள் 'பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ' என்கிற நிலைதான். அதனால் தான் தெய்வப்புலவர், 'அகம் நக நட்பது நட்பு' என்றார். கணவனோமனைவியோ அறியாததைக் கூட நட்பு அறியும். அதனால் தான், கல்யாணங்களில் 'மாப்பிள்ளைத் தோழன்' என்று தனி மரியாதையே நண்பனுக்கு உண்டு.
ஆதலின் கோபாலுக்கும் எனக்கும் உண்டான பழக்கம் நட்பல்ல; அது ஒவ்வொருவருக்கொருவர் புரிந்து கொண்ட இனிமையான பழக்கம். அவ்வளவு தான்.

* நண்பன் குசேலன் கிழிசல் துணியில் கட்டிவந்த அவலை ஆசையோடு அள்ளி உண்ட கண்ண பெருமான் --
* சொக்கட்டான் விளையாட்டின் பாதியில் எழுந்த தன் மனைவி பானுமதியின் துகிலை நண்பன் பற்றி இழுக்க, துகிலில் கோர்த்திருந்த மணிகள் அறுந்து கீழே கொட்ட, "இந்த மணிகளை எடுக்கவோ, அன்றி கோக்கவோ" என்று கேட்ட துரியோதனன் - கர்ணனின் நட்பு --
* மன்னன் கோப்பெருஞ்சோழனுக்காக வடக்கிருந்து உயிர் துறந்த பெரும் புலவர் பிசிராந்தையாரின் தூய நட்பு --
* தகடூர் அதியமான் - ஒளவையாரின் அதிசயத்தக்க அருந்நட்பு --
* நண்பன் வள்ளல் பாரி இறந்து விட, நண்பனின் மணமாகா புதல்வியருக்கு நல்ல இடத்தில் மணம் முடிக்க அலைந்து திரிந்து பெறாத தந்தையாய்ப் பொறுப்பேற்றுக் கொண்டு நண்பன் உயிருடன் இருந்தால் என்ன செய்வானோ அதைச் செய்த புலவர் கபிலரின் போற்றி மகிழத்தக்க நட்பு ---


இத்தகைய மாட்சிமைப் பெற்ற நண்பர்களின் கூட்டம் இறந்து பட்டாலும், இத்தனை நுற்றாண்டுகளுக்குப் பின்னும் காலத்தின் இவ்வளவு மாற்றங்களுக்குப் பின்னும் இவர்
கள் நெஞ்சில் அழியாமல் இன்னும் நம் நினைவிருக்கிறார்கள் என்றால்,

இத்தகைய உன்னத நட்பின் மேன்மையை என்ன பெயரிட்டு அழைப்பது என்று தான் தெரியவில்லை।


17 comments:

கார்க்கிபவா said...

வாழ்த்துக்கள்

தமிழ்நதி said...

கிருத்திகா! இனிய நட்பினை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். ஏறத்தாழ 20ஆண்டு கால நட்பு அது. பேசாதிருந்தாலும் மனசு பேசிக்கொண்டிருக்கும். பார்க்காதிருந்தாலும் பார்த்துக்கொண்டிருப்பது போல ஓருணர்வு. சில சமயங்களில் கணவன்-மனைவியை விடவும் வெளிப்படையானது. பாசாங்கற்றது. நட்புக்காகவே ஒரு பதிவு இட்டிருக்கிறீர்கள். நட்புக் கலந்த வாழ்த்துக்கள்:)

sury siva said...

தோழர் பல இருப்பினும் எல்லோரும் இடுக்கண் வருங்காலத்து
நழுவிவிடுவர். உடன் இருந்து தனது இன்னல் போல் நினைத்துத்
தன் தோழனது தோளாக இருப்பவரே நண்பர்.

1967 டிசம்பர் 4 அது மறக்க இயலாத நாள்.
அன்று திருச்சியில் எனது தந்தை இறந்து போனதை எனது குடும்பத்தார்
எனக்குத்தகவல் அனுப்பிய போது, நான் எனது அலுவலகத்தில் தஞ்சையில் இல்லை.
அருகில் இருந்த சக ஊழியருக்கு நான் எங்கே சென்றேன் என்றும் தெரியவில்லை.
அப்போதெல்லாம், ஃபோன் வசதிகள் கிடையாது. ஒரு ஃபோன் போட்டு விட்டு,
மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை அந்த காலத்தில்.
அப்போது எனது நண்பர் இருவர் திருவேங்கடசாமி, ரங்கனாதன் ஒரு டாக்ஸி
பிடித்து, நான் எங்கெல்லாம் செல்வேனோ அங்கெல்லாம் அலைந்து ஒரு பத்து
மணி நேரம் கழித்து என்னை சுவாமிமலையில் கண்டு, பின் என்னை
கூட அழைத்துச் சென்று திருச்சியில் எனது வீடு வரைக்கூட்டிச் சென்றதை
என்னால் இன்னமும் மறக்க முடியவில்லை.

இது நடந்து 40 வருடங்களுக்கு மேல் ஆகியும் இந்த நிகழ்ச்சியை நான்
மறக்க இயலவில்லை.

உங்கள் பதிவு இதை நினைவு படுத்தியது.
நன்றி.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://menakasury.blogspot.com
http://ceebrospark.blogspot.com

கிருத்திகா ஸ்ரீதர் said...

மிக்க நன்றி கார்க்கி மற்றும் தூயா.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி தமிழ்நதி, நட்பின் அனுபவத்தை உணர்ந்தோர்க்கு வாழ்வின் இனிய பக்கங்களை எப்போது வேண்டுமானால் திறந்து பார்க்கும் திறவுகோல் உண்டென்று நம்புவள் நான். உண்மைதான் பேசாதிருந்தாலும் மனசு பேசிக்கொண்டுதானிருக்கும்....

கிருத்திகா ஸ்ரீதர் said...

சூரி சார், நட்பின் பன்முகத்தன்மையை யாரால் தான் மறுக்க முடியும். ஆனாலும் 40 வருடங்கள் கழித்தும் நினைத்துப்பார்க்கத்தூண்டும் நட்பின் ஆழம் வியக்கத்தக்கது தான்.

கபீரன்பன் said...

ஐம்பதாவது பதிவை சிறப்பானதாகவும் செய்திருக்கிறீர்கள்.

//இலக்கில்லை, ஆனலும், வழித்தடமுள்ள முடிவில்லா பயணமிது //

இலக்கில்லாவிட்டாலும் அங்கங்கே மைல்கற்கள் கடந்து வந்த பாதையை நினைவூட்டுகிறது. உங்கள் பயணம் மேலும் சிறப்பாக தொடரட்டும்.
வாழ்த்துகள்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி கபீரன்பன், தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் பாத்திரமானது குறித்து மிக்க மகிழ்ச்சி

கே.என்.சிவராமன் said...

50வது பதிவுக்கு தோழமை கலந்த வாழ்த்துக்கள் கிருத்திகா...

நட்புடன் பயணம் இனிதே தொடரட்டும்...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி பைத்தியக்காரன். தங்கள் வலைப்பதிவு வெகு நாளாய் புதியதாய் ஒன்றும் வலையேற்றப்படாமல் இருக்கிறதே... ஏதாவது எழுதக்கூடாதா...

MSK / Saravana said...

வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்..

anujanya said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். உங்கள் நண்பர் விஜி நட்பு பற்றி எழுதியது ஆழமாக இருக்கிறது. அவருக்கும் வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி அனுஜன்யா... அவரது முதிர்ந்த அனுபவத்தில் விளைந்த முத்துக்கள் அவை...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!

தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி!!

Anonymous said...

50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

பாச மலர் / Paasa Malar said...

50க்கு வாழ்த்துகள்..

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள்!