Thursday, December 11, 2014

அய்யா பாரதி


அன்னையர் தினம், தந்தையர் தினம், குழந்தைகள் தினம், தீபாவளி, பொங்கல், புது வருஷம், இவற்றிற்கெல்லாம் தனித்து நினைவுறுத்தும் பதிவுகளை போடுவதில் பொதுவில் எனக்கு ஒப்புமை இல்லை. எனவே கூடியவரை தவிர்த்து விடுவதுண்டு.

ஆனால் இன்று பாரதியை நினைக்காமலிருக்க முடியாது, மனதை ஆக்கரமிக்கும் எதையும் என்னால் எழுதாமலிருக்க முடியாது.

பாரதி எனும் தீ என்னை பற்றிக்கொண்டது மிகச்சிறிய வயதிலானாலும், என் பதின்மங்களில் என்னை கனன்று எ றியச் செய்தவரும் இவர்தான். என் திருமணப்பரிசாக என் உற்ற தோழன் எனக்களித்ததும் பாரதியையே. அந்த சிலை இருபத்திநாலு ஆண்டிற்குப்பின்னும் இன்றும் என் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்திருக்கும்.( நவீன் பெங்களூர் சென்ற போது எனக்குத் தெரியாமல் தூக்கிச் சென்றதை மீட்டெடுத்து கொண்டுவந்து விட்டேன். ) அந்த அளவு என்னை உருவாக்கிய சிற்பி.

அன்று என்னை ஆட்கொண்டது அவருடைய கோபமும் ரௌத்திரமும், தமிழும், இன்று எண்ணி எண்ணி நான் வியந்து மயங்குவது அவரது ஆத்ம தரிசனத்தை. அன்று புரிந்த பால பாடல்களின் மீள் பரிமாணம் இன்று என்னை வியப்பிலாழ்த்துகிறது. என் மூத்த குடி இவரென கொண்டாட வைக்கிறது. 

பாரதி... பாரதி.. இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய்...

என்ன சொல்ல வருகிறாய். இந்த வரிகளில்..

அக்னி குஞ்சொன்று கண்டேன்....
அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு - தழல்

வீரதிற்குஞ்சென்று மூப்பென்றுமுண்டோ 

எது அக்னிகுஞ்சு, இருப்பின் ஒரு துளியா? பொந்தென்பது என்ன இந்த உடம்பா? எப்படி இது வெந்து தணியும் நம்மை அறிதலின் மூலமா? பிறப்பும் மூப்பும் இல்லா வெளி எது?

விகசிக்க வைக்கிரதய்யா உன் பார்வை...

உங்களுக்காக அவரது மதுரமானதொரு பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாம்பே ஜெயஸ்ரியின் குரலில்.
 

No comments: