Wednesday, August 13, 2014

உரத்த சிந்தனை – உறவுகள் – ஒரு சுய பரிசோதனையின் தேவை


காலம் காலமாய் நம்முள் கனன்று கொண்டிருக்கும் பெரு நெருப்பொன்றை கையாள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். அன்றைய கூட்டுக் குடும்ப காலகட்டமாகட்டும், இன்றைய தனிக்குடித்தன காலமாகட்டும் இரத்த சொந்தக்களுக்கிடையேயான பூசல்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

முகலோபனம் இல்லாத உறவுகளை இன்றும் எத்தனயோ வீடுகளில் நாம் மிகவும் வேதனையோடு எதிர் கொள்ளத்தான் செய்கிறோம். இதில் நம் தவறென்ன அவர் தவறென்ன என்பதை தாண்டி ஒரு சூல் உறவு என்பதை நாம் யோசிக்கின்றோமா? என்பது மட்டுமே நம் கேள்வி, இதையே நீர் அடித்து நீர் விலகுமா என்றும் கேட்பதுண்டு. 

ஒருகுடும்பம் ஒரு குழந்தை என்ற இன்றைய குடும்ப அமைப்பில் நம்மைத் தாண்டி அந்த குழந்தைகளுக்கு உருத்தானவர் யார்? பெரியப்பா, சித்தப்பா, அத்தை பெரியம்மா, சித்தி, மாமா, இவர்தம்  குழந்தைகளை உறவகாவும் உயிராகவும் நினைக்கும் அளவிற்கு நாம் நம் குழந்தைகளை வளர்த்திருக்கிறோமா? என்பது நாம் பதிலுறுக்க வேண்டிய ஒரு கேள்வி.

எழுபது என்பது வருடங்களுக்கு முன் ஒரே வீட்டில் பிறந்து நகமும் சதையுமாய் வளர்ந்து காலச்சூழலில் ஒருவருக்கு ஒருவர் அந்நியமாய் ஆனா சகோதர சகோதரியின் உறவு அவர்கள் இறப்பிலும் இணையவில்லை. இந்த விலகலின் காரணங்கள் மட்டும் கதை கதையாய் இருவர் குடும்பங்களிலும் பேசுவது தாண்டி உண்மையான காரணம் புரியாமலே இரு குடும்பமும் இன்று வரை தனித்திருக்கும் எத்தனையோ கதை நாம் அறிந்ததே. ஆனால் இருவரில் கடைசியாய் எஞ்சியவர் இறக்கும் தருவாயில் சொன்ன சில நெகிழ்வான வார்த்தைகளில் இன்றைய தலைமுறை உறவுகளை புதுப்பிக்க விழையும் சாத்தியக்கூறுகளும் நாம் அறிந்ததே. மிக்க சந்தோஷம், ஆனால் காலம் கடந்த இந்த ஞானத்தின் இடையில் நாமும் நம் தலைமுறைகளும் எத்தனை உணர்வு பூர்வமான  நிகழ்வுகளை,  சந்திப்புகளை இழந்திருப்போம்?  குறைந்த பட்சம் நாமாவது அந்த தவறை செய்யாதிருக்க என்ன செய்கிறோம்? நாம் சிந்திக்க வேண்டிய முக்கியமான கேள்வி இது.

உறவுகளை சுயலாபம் தாண்டிப் பார்க்கும் மனோபாவம் நம்மில் உள்ளதா? அதையும் தாண்டி கருத்து வேறுபாடுகள் எழும் சமயங்களில் அந்த கசப்புக்களை வரும் தலைமுறைக்குள்ளும்  செலுத்தாதிருக்கிறோமா? ஒருவருக்கொருவர் விலகாதிருக்கிறோமா? இவைகளுக்கான பதிலை நாம் யாரோடும் பகிர்ந்து கொள்ளத்தேவையில்லை ஆனால் நம்முள் ஒரு சுய பரிசோதனை மிகவும் அவசியம்.

No comments: