Friday, August 15, 2014

உரத்த சிந்தனை – உடை – என்ன செய்யப் போகிறோம்?



சிற்றாடை இடை உடுத்திய சின்னஞ்சிறு பெண் குழந்தைகளை இப்போதெல்லாம் கண்களால் காண்பதும் அரிது என்பது நாமெல்லாம் அறிந்த ஒன்றே. இனி கற்பனையில் கூட மனதில் காண முடியாது என்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கிறோம் என்பது  பத பதைப்பிற்கு உள்ளாக்குகிறது.

இப்போதிருக்கும் பெண்களில் மிகப்பெரும் சதவிகிதத்தினர்  சுடிதார் போன்ற உடைகளையே மிகவும் சௌகரியமாக எண்ணும் நிலை உள்ளது. இதற்கான காரணமாக நாம் பலவற்றைச் சொன்னாலும் அடிப்படையான காரணம் பள்ளி கல்லூரி காலங்களில் அதுவே சீருடையாக மாறியதும் ஒரு காரணம் என்பது என் எண்ணம். தொடர்ந்து ஒரே விதமான சௌகர்யமான விதத்தில் உடை அணிந்தவர்களுக்கு கொஞ்சம் அதிக கவனம் தேவைப்படும் வேறு மாதிரியான உடைக்கு (பாவாடை தாவணி, புடவை) மாறுவதில் சிரமம் கண்டிபாய் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்த அடிப்படை காரணத்தினாலேயே முப்பது முப்பத்தைந்து வயதிற்கு கீழ் உள்ள இப்போதைய பெண்கள் பெரும்பாலும் புடவை அணியும் வழக்கத்தை தவிர்த்து வருகின்றனர்.

இப்போதைய நவீன நகர்புறப் பள்ளிகள் நம்மை இன்னும் ஒரு படி பின்னுக்கு அல்லது முன்னுக்கு தள்ளுகிறார்கள்.  இது போன்ற பள்ளிகளில் இப்போதெல்லாம் மூன்றாவது வகுப்பு வரை ஆண் பிள்ளைகளைப் போல அரை கால் சராயும் காலர் வைத்த சட்டையுமே  சீருடையாக பெண் குழந்தைகளுக்கும் பின்பற்றப் படுகிறது. பின் மேல் வகுப்பு செல்லும் பொது அது  முழு கால் சராயாக மாறுகிறது. 

இந்தக்குழந்தைகள் இப்போதே கூட பட்டுப்பாவாடை சட்டை, ப்ராக், குட்டை பாவாடை போன்ற உடைகளை விரும்புவதில்லை. விசேஷ வீடுகளுக்கோ, கோவில்களுக்கோ செல்வதற்கு கூட அவர்கள் ஷார்ட்ஸ், டி ஷர்ட், பேன்ட்ஸ், போன்ற உடைகளை அணிவதையே விரும்புவதாக அநேக பெற்றோர்கள் கூற கேட்கிறேன். இந்த நிலை தொடர்ந்தால் இன்று பாவாடை தாவணி, புடவைக்கு நேர்ந்தது நாளை சுடிதாருக்கும் நேரும் என்பது என் எண்ணம்.

இது வெறும் உடை சம்பந்தமானது மட்டுமல்ல பெண்களின் நடை, மனம் குணம் மற்றும் அவர்களின் நளினம் சார்ந்ததும் கூட. நானும் கூட எல்லாவிதமான உடைகளையும் அணியும் வழக்கம் உள்ளவள் தான். அதனாலேயே உடை தரும் உள்ளம் மற்றும் உடல்மொழி  மாற்றங்களை வெகு தெளிவாக என்னால் யூகிக்க முடிகிறது.

இந்த பதிவை படித்து விட்டு என்னை பத்தாம் பசலியாகவோ இல்லை கட்டுப்பெட்டியாகவோ நினைக்கத் தோன்றினால் அவரவர் ஆழ் மனைதை கேட்டுப்பாருங்கள்  இந்தக் கவலை உண்மை எனச் சொல்வீர்கள்.

களவையும் கற்று மறக்கலாம் ஆனால் களவு மட்டுமே கற்கலாகதல்லாவா? பெண்மையும் அதன் நளினமும் தொலைந்து போவது ஏற்புடையது தானா? நாம் என்ன செய்யப்போகிறோம்??

Wednesday, August 13, 2014

உரத்த சிந்தனை – உறவுகள் – ஒரு சுய பரிசோதனையின் தேவை


காலம் காலமாய் நம்முள் கனன்று கொண்டிருக்கும் பெரு நெருப்பொன்றை கையாள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். அன்றைய கூட்டுக் குடும்ப காலகட்டமாகட்டும், இன்றைய தனிக்குடித்தன காலமாகட்டும் இரத்த சொந்தக்களுக்கிடையேயான பூசல்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

முகலோபனம் இல்லாத உறவுகளை இன்றும் எத்தனயோ வீடுகளில் நாம் மிகவும் வேதனையோடு எதிர் கொள்ளத்தான் செய்கிறோம். இதில் நம் தவறென்ன அவர் தவறென்ன என்பதை தாண்டி ஒரு சூல் உறவு என்பதை நாம் யோசிக்கின்றோமா? என்பது மட்டுமே நம் கேள்வி, இதையே நீர் அடித்து நீர் விலகுமா என்றும் கேட்பதுண்டு. 

ஒருகுடும்பம் ஒரு குழந்தை என்ற இன்றைய குடும்ப அமைப்பில் நம்மைத் தாண்டி அந்த குழந்தைகளுக்கு உருத்தானவர் யார்? பெரியப்பா, சித்தப்பா, அத்தை பெரியம்மா, சித்தி, மாமா, இவர்தம்  குழந்தைகளை உறவகாவும் உயிராகவும் நினைக்கும் அளவிற்கு நாம் நம் குழந்தைகளை வளர்த்திருக்கிறோமா? என்பது நாம் பதிலுறுக்க வேண்டிய ஒரு கேள்வி.

எழுபது என்பது வருடங்களுக்கு முன் ஒரே வீட்டில் பிறந்து நகமும் சதையுமாய் வளர்ந்து காலச்சூழலில் ஒருவருக்கு ஒருவர் அந்நியமாய் ஆனா சகோதர சகோதரியின் உறவு அவர்கள் இறப்பிலும் இணையவில்லை. இந்த விலகலின் காரணங்கள் மட்டும் கதை கதையாய் இருவர் குடும்பங்களிலும் பேசுவது தாண்டி உண்மையான காரணம் புரியாமலே இரு குடும்பமும் இன்று வரை தனித்திருக்கும் எத்தனையோ கதை நாம் அறிந்ததே. ஆனால் இருவரில் கடைசியாய் எஞ்சியவர் இறக்கும் தருவாயில் சொன்ன சில நெகிழ்வான வார்த்தைகளில் இன்றைய தலைமுறை உறவுகளை புதுப்பிக்க விழையும் சாத்தியக்கூறுகளும் நாம் அறிந்ததே. மிக்க சந்தோஷம், ஆனால் காலம் கடந்த இந்த ஞானத்தின் இடையில் நாமும் நம் தலைமுறைகளும் எத்தனை உணர்வு பூர்வமான  நிகழ்வுகளை,  சந்திப்புகளை இழந்திருப்போம்?  குறைந்த பட்சம் நாமாவது அந்த தவறை செய்யாதிருக்க என்ன செய்கிறோம்? நாம் சிந்திக்க வேண்டிய முக்கியமான கேள்வி இது.

உறவுகளை சுயலாபம் தாண்டிப் பார்க்கும் மனோபாவம் நம்மில் உள்ளதா? அதையும் தாண்டி கருத்து வேறுபாடுகள் எழும் சமயங்களில் அந்த கசப்புக்களை வரும் தலைமுறைக்குள்ளும்  செலுத்தாதிருக்கிறோமா? ஒருவருக்கொருவர் விலகாதிருக்கிறோமா? இவைகளுக்கான பதிலை நாம் யாரோடும் பகிர்ந்து கொள்ளத்தேவையில்லை ஆனால் நம்முள் ஒரு சுய பரிசோதனை மிகவும் அவசியம்.

Monday, August 11, 2014

உரத்த சிந்தனை – மொழி – எப்படி சரி செய்யப் போகிறோம்??


மதிய உணவு இடைவேளை என்பது சில சமயம் இயந்திரத்தனமாயும், சில சமயம் ஆசுவாசமாகவும் அமைவதுண்டு. நேற்றைய நாள் இரண்டாவது வகையைச் சார்ந்தது.

மதிய உணவை சில நண்பர்களோடு உண்ண நேர்ந்தது. பேச்சு அவர்கள் குழந்தைகளின் புத்திசாலித் தனங்களைப் பற்றியும், விளையாட்டைப்பற்றியும் போய்க்கொண்டிருந்தது. மெதுவாக பாடத்திட்டதைப்பற்றியும் திரும்பியது. எல்லோருமே அவரவர் குழந்தைகளை ICSE/CBSE பாடத்திட்டத்தில்  தான் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் இரண்டாவது மொழியாக பொதுவில் ஹிந்தியை எடுத்துள்ளார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அப்பா, அம்மா இருவருமே ஹிந்தி படித்திருக்கவில்லை ஒரு சிலர் பிள்ளைகளுக்காக தாங்கள் படிப்பதாகவும் சிலர் தனி வகுப்பில் சேர்த்திருப்பதாகவும் சொன்னார்கள்.

இதில் தெலுங்கர், தமிழர், மலையாளி என கலவையாக எல்லா மாநிலத்தவரும் இருந்தனர். வீட்டில் அவரவர் தாய் மொழியில் தான் பேசுகிறார்களாம். ஆனால் இரண்டாம் மொழிப்பாடமாக தாய்மொழியை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது .  இதில் நாம் ஒத்துக்கொள்ள வேண்டிய ஒரு அம்சமும் இருக்கிறது. நம் மாநிலங்களில் உள்ள இது போன்ற பள்ளிகளில் அந்தந்த மாநில மொழியே பெரும்பாலும் இரண்டாவது மொழியாக இருக்கும். அந்த வகையில் மற்ற மாநிலத்தாருக்கு அதில் ஆட்சேபமும் அசௌகரியமும் இருக்க  வாய்ப்புண்டு.

ஆனாலும் இப்படியே போனால் நம் சந்ததியினர் அவரவர் தாய் மொழியில்  எழுதவோ படிக்கவோ தெரியாமல் பேச மட்டுமே தெரிந்தவராவர். இதுவே ஒரு மொழியின் அழிவின் ஆரம்பம் ஆகாதா? என் குழந்தைகளை எடுத்துகொண்டாலும் அவர்களின் வாசிப்பு முற்றிலும் ஆங்கிலத்திலேயே உள்ளது. பல தரப்பட்ட புத்தகங்களை வாசித்தாலும் அவை நம் தாய் மொழியில் இல்லை. இதில் மேலும் வருத்தம் என்னவென்றால் இருவருமே தமிழையே இரண்டாம் மொழிப்பாடமாக எடுத்தவர்கள்.

இன்றைய வணிக சூழலில் அவரவர் மாநிலங்களிலேயே வேலை செய்யும் வாய்ப்புக்கள் மிகவும் அரிது என்பதாலும், யாதும் ஊரே யாவரும் கேளீர் வாழ்வே மிகவும் சிறந்தது என்றாலும் எழுத்துக்களை தொலைக்கும் மொழியை நாம் எவ்வாறு காப்பது? அரிதாக அரிதாகி மறைந்து போன நம் எத்தனையோ குல/குடும்ப வழக்கங்களைப்போல நாம் நம் மொழியையும் தொலைத்து விடப்போகிறோமா? அந்நிய தேசங்களுக்குச் செல்லாமலேயே நாம் நம் மொழிக்கு அந்நியமாகிப்போகும் நிலைமையை எப்படி சரிசெய்யப் போகிறோம்??

இது போல இன்னும் சில கேள்விகள் உண்டு?......

Monday, April 7, 2014

பேசவும் கேட்கவும் திகட்டாத தெள்ளமுது – இசை அதன் பல்வேறு ரூபங்களுடன்


ஆங்கிலத்தில் வாசிக்கவும், எழுதவும், பின் பேசவும் ஆர்வம் கொண்டிருந்த எனக்கு ஆங்கில பாடல்களை கேட்பதில் ஒரு மிகப்பெரிய தயக்கம் இருந்தது. சரியான வழிகாட்டுதல் இல்லாததும் கூட ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். பகிர்ந்து கொள்ளக்கூடிய அளவில் நட்புகளும் இந்த வரிசையில் இல்லை. இந்த நிலையில்
Colonial Cousins -  by Hariharan and Leslie Lewis.  நான் முதல் முதலில் கேட்ட ஆங்கில ஆல்பம். கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்கள் முன்பு என்று நினைக்கிறேன் (1996), நவீன் (என் பெரிய பையனுக்கு நாலு வயதிருக்கும் ஆனால் எப்போதெல்லாம் இந்த இசைத் தொகுப்பை கேட்க நேருகிறதோ அப்போதெல்லாம்  நான் என் பதின் பருவத்திற்கு சென்று மீள்வேன். I used feel so much of love in me when I hear this album, மேலும் கடவுளையும் இசையையும் பற்றிய மிகப்பெரிய புதியதொரு புரிதலை தந்ததும் இந்தப் பாடல்கள் தான்.
அதிலும் கிருஷ்ணா நீ பேகனே பாரோ என்ற இந்த பாடல் ஒரு நேர்த்தியான கோர்வை. ஆங்கில இசையும், கர்நாடக இசையும் கலந்ததோடல்லாமல் இந்துஸ்தானியும், ஹரியின் குரலும் தரும் மயக்கம் எந்நாளும் தீராதது. ஒவ்வொரு பாடலும் தரும் இன்பம் ஒவ்வொரு வகையானது
 
 

இதன் பிறகு தான் ஜான் டென்வரும், லூசியானா சொசாவும், யானியும் கேட்கத்துவங்கினேன் ஆனாலும் இந்த தொகுப்பிற்குண்டான இடம் இன்று வரை மாறாதது. இன்று காலை கேட்கும் போது கூட மொத்த உலகையும் மிகவும் அன்போடும் காதலோடும் பார்க்கத்தூண்டும் இந்த பாடலை பகிர்ந்து கொள்வது என் ஆத்ம திருப்தி.

இவரது மற்றொரு தொகுப்பு காதல் வேதம், இதற்கு முன்பா இல்லை பின்பா ஞாபகம் இல்லை, ஆனால் அதுவும் இதுபோலவே பித்துக்கொள்ள வைக்கும் பாடல்களை கொண்டது...

Thursday, April 3, 2014

இசை எனும் காற்றழுத்த தாழ்வுமண்டலம் - இப்போது பாம்பே ஜெயஸ்ரீ

 
 

இசை என்னை ஆக்கிரமிக்கும் விதம் மிகவும் வித்யாசமானது. கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தன் மகவை மட்டுமே நினைப்பது போலவும், மழைக்காலத்திய இரவுகளில் இடைவிடாது நினைவுறுத்தும் குளிரைப்போலவும், கோடை காலத்தின் குளீரூட்டப்பட்ட அறைக்குள்ளும் உணர்த்தும் வெப்பத்தைப்போலவும், காதல் வயப்பட்ட மனதைப்போலவும் இடைவிடாது தன்னை நிலைநிறுத்தி என்னை முழுதுமாய் ஆக்கிரகிக்கும்.

சக்கரமணிந்த கால்களைப்போன்ற ஓட்டத்தினிடையேயும், உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் இசை ஒரு தனி ஸ்துலமாய் அரூபமாய் உடன்வரும்.  யாரும் அறியாமலும் சில சமயம் அறிந்தும் மனதுள் ஓடும் இசை கண்களின் வழியேயும்,  வார்த்தைகளினோடும் வழிந்தோடும். போதை கொண்ட மனதை நெருங்கிய சிலருக்கு அநேக நேரங்களில் கண்கள் காட்டிக்கொடுத்துவிடும்  மேலும் அந்த நேரங்களில் என் காதுகளில் நிரம்பியிருக்கும் இசை மற்றவர்களையும் கூட தொடக்கூடும். இது ஒரு காற்றழுத்த தாழ்வுமண்டலத்தைபோல தொடங்கி புயலாய் மாறும். பின் நிலைமை மாறும் மீண்டும் தாழ்வு மண்டலம் உருவாகும் இதுவரை இதன் பின்னிருக்கும் வேதியலை நான் அறிந்து கொள்ள முயற்சித்ததே இல்லை.
அதுபோன்ற தொரு இயற்கை சீற்றத்தில் தான் கடந்த சில நாட்களாக நான் பாம்பே ஜெயஸ்ரீ யுடன் வலம்வந்து கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கையின் அதிகமான பாடங்களை கற்றுக்கொண்டிருந்ததொரு காலமது. அதை முழுதாய் அனுபவங்களாய் மாற்றிக்கொள்ளவும் அன்றைய நிதர்சனங்களை பழகிக்கொள்ளவும் முயன்று கொண்டிருந்த காலகட்டத்தில் தான் நான் முதல் முதல் பாம்பே ஜெயஸ்ரீ யை கேட்க நேர்ந்தது.  அன்று முதல் இன்று வரை தியானத்திற்கு ஒப்பான நிமிடங்களை வாரி வாரி வழங்கும் ஒரு அட்சய பாத்திரம் அவரது குரல். பாடல் கேட்டுக்கொன்டிருக்கும் போதே மனம் மிக மிக ஆழத்தில் திம்மென்று அமர்ந்து விடும். பின்பு இது போலஏதாவது வெளியேற்றினாலன்றி நான் நானல்ல.

என்னை முதல் முதலாக வசீகரித்த பாடல்...

Friday, August 23, 2013

வலி​ - ஆணவம் அறுக்கும்



சுய பரிசோதனை செய்துகொள்வதற்கு மிகப்பெரிய சத்திய சோதனைகள் தேவையில்லை. குளிகைகளின்றி வலியோடு போராடுவதே மிகப்பெரிய சோதனை.
ஈவிரக்கமின்றி அத்தனை வைராக்கியங்களையும் அடித்து நொறுக்கி சுய பச்சாதபத்தை கிளப்பி விடுகிறதிந்த வலி.

கடவுளைப்போல் கண்ணில் தெரியாமல் உணரமட்டுமே முடிகிறதிந்த வலியை யாரோடும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை.

தார் சாலைகளைப்பெயர்த்தெடுக்கும் ​​பொக்லைன் இயந்திரங்க்களின் குரூரத்தை ஒத்ததாயிருக்கிறது அந்த நிமிடங்கள்.

இருளடர்ந்த அறையின் ஒற்றை மூலமாய் ஒளிர்ந்துகொண்டிருக்கும் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்ததும் மொத்தமாய் கவியும் இருளைப்போல் தூக்கம் கலைந்த அந்த நிமிடங்களை ஆக்கிரமித்துக்கொள்கிறது வலி.

பிடிவாதிக்கும் சிறுகுழந்தையாய் என் சமாதன விரல்களை பற்ற மறுக்கும் வலியிடம் தோற்றுப்போய் நிராயுதபாணியாய் சரணடையத்தான் வேண்டியுள்ளது, அங்கே நான், தான், தன்முயற்சி என்பெதெல்லாம் வெறும் பிதற்றல்.

அகமும் புறமும் ஆக்கிரமிக்கும் அதெற்கென அடையாளம் ஏதுமின்றி இயலாமை எனும் முகமூடியிட்டுக்கொள்கிறது மனது 

Wednesday, July 25, 2012

வெளியேற்றம் – யுவன் சந்திரசேகர் – ஒரு பகிர்வு

சில புத்தகங்கள் ஒரு சில பெயர்களைப்போலே நம் ஞாபக அடுக்குகளில் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கும், இப்போதில்லை, இப்போதில்லை என்று சில சந்திப்புக்களைத் தவிர்ப்பதைப்போல, சில புத்தகங்களை கையிலெடுத்து விட்டு இப்போதில்ல்லையென தள்ளிவைத்து விட்டு அடுத்த அடுக்குக்கு கை தாவும், ஆனாலும் சதா எண்ணத்தில் தங்கிய படியே இருக்கும். சிறு வயதில் உணவில் மிகவும் பிடித்த காய் கறியை கடைசியாக தட்டில் வைத்துக்கொண்டு சாப்பிடுவோமே அது போல் ஒரு நீண்ட காத்திருப்புக்கு நம்மை தயார் செய்துகொள்ள வைக்கும். அப்படி ஒரு புத்தகம் தான் யுவன் சந்திரசேகரின் “வெளியேற்றம்”.

இரண்டாயிரத்து பத்தின் முடிவில் ஒரு நன்பரால் பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் தான் வாங்கும் முனைப்பு வந்து இணையத்தின் மூலம் வாங்கினேன். ஆனால் மேலே சொன்னதுபோல் ஒவ்வொரு முறையும் இதை முடித்து விட்டு, அதற்குப்பின் என்று ஏதேதோ காரணங்களை உருவாக்கிக்கொண்டு நானே ஒரு நீண்ட காத்திருப்புக்குள் சிக்கிக்கொண்டேன்.

எல்லாவற்றையும் போல இதற்கும் ஒரு முடிவு வந்தாகத்தானே வேண்டும், கடந்த சில நாட்களுக்கு முன் வாசிக்கத்தொடங்கினேன், வழக்கம் போல் அந்தப்புத்தகத்தோடு வசிக்கத்தொடங்கினேன்.



விஷ்ணுபுரம் வாசித்த போது அந்நாவலின் கட்டமைப்பைக்கண்டு ஏற்பட்ட ஒரு மிகப்பெரும் வியப்பைப்போல, இந்தப்புத்தகத்தின் கட்டமைப்பும் மிக நேர்த்தியான ஓட்டத்துடன் ஒழுங்குடனும் மிகப்பெரும் வியப்பைத்தருகிறது. எந்த ஒரு இடத்திலும் சிறிதும் சுவாரஸ்யம் குறையாமல் அதே சமயம் அதற்கென எந்த ஒரு மெனக்கெடலும் தெளிந்து செல்லும் நீரோடையென கதையோட்டம் நகர்ந்து செல்கிறது.



இதை வெறும் கதையென்று சொல்ல முடியுமா என்றும் ஒரு தர்க்கம் மனதுக்குள் ஓடி மறைகிறது, சில புத்தகங்களை வாசித்து முடிக்கும் தருணங்களில் கதை மாந்தர்களில் ஒருசில பெயர்கள் மட்டுமே மனதில் தங்கும் அநேகமாய் அவர்களின் பாத்திரங்களின் மூலமாகவே என்னால் அடையாளப்படுத்த முடியும், ஆனால் வெளியேற்றத்தின் கதா பாத்திரங்கள் ஒவ்வொருவருவரும் மிகவும் நெருக்கமாய் இத்தனை நாட்களாய் நம்மோடு பழகிவரும் வெகுநாளைய நன்பர்களைப்போல் அவரவர்கள் பெயர்களோடே நினைவோட்டதில் கலந்து விடுகிறார்கள் ஆதியில் வரும் வேதமூர்த்தியின் குருவானவரைத்தவிர. குருவிற்கு பெயரென்ன அவ்வளவு முக்கியமா??

மிக இளம் வயது முதற்கொண்டே மற்றவர்களின் தொடர்பை தொழிலாக/தன் வளர்ச்சியாக மாற்றும் தன்மைகொண்ட ஆயுள்காப்பீட்டு முகவர் சந்தானம் சில வாரங்களுக்கு எந்த ஒரு பயனும் எதிர்பாராது தொடர்ச்சியாக எதையோ யாரையோ தேடிக்கொண்டு செல்லும் போதும் தனக்குள்ளே கேள்விகளை எழுப்பிக்கொள்ளும் போதும் சில சமயம் சந்தானாமாகவும் சில சமயம் நாமாகவும் உணர்கிறோம்.

கோவர்த்தனம் சொல்வது போல், அவரவர் தொடர்பான வினைகளில் இருந்து வெளியேறி அதற்கு எதிர்மறையான பாதைகளில் செல்கிறார்கள் குற்றாலிங்கம், கோவர்த்தனம், சந்தானம் போல்,

மற்றும் சிலரோ புற உலகிற்கு அதிகம் வெளிப்படாத அதே சமயம் உள்ளுக்குள் பெரும் மாற்றத்தை உணர்ந்து தன் சுயங்களிலிருந்து வெளியேறுகிறார்கள், சிவராமன், இராமலிங்கம் போல.

ஆனால் மன்னாதியும் பாண்டியும் சந்தர்ப்பங்களிலிருந்து வெளியேறி ஒருவித இலக்கின்மைக்குள் புகுந்து கொள்கிறார்கள். ஜய்ராமோ அவருடைய அனுமானங்களிலிருந்து வெளியேறி ஒரு வித சமத்துவத்திற்குள் அமர்ந்து கொள்கிறார்.

இன்னும் அறிந்து கொள்ளும் ஆவலைத்தூண்டும் ஆசானின் பாத்திரமும், தீர்த்தபதியின் உரையாடலும்… இப்படி தேடித்தேடி பேச வைக்கிறது.


குரு, தேடல், சந்நியாசம், வாழ்க்கை இவற்றிற்கான விகிதாசாரங்களை நம்முள் மாற்றிவிடுகிறது இந்தப்புத்தகம். ஆனாலும், இந்த நாவலின் ஈர்ப்பு சகிதியின் மையம் என்று கொண்டால், ஒவ்வொருவருக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் வெளியேறுதலுக்கான இரகசிய வேட்கையும் அதிகம் பேசப்படாத அதற்கான முயற்சிகளும் தானோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஆனாலும் இன்னும் நம்மால் விடுபட முடியாத குடும்பம் என்ற கட்டமைப்பின் சக்தி சித்ராவைப்பற்றியும் அவளுடைய உளைச்சல்கள் பற்றியும் நம்மை அனுதாபப்படவைக்கிறது. வெளியேற்றத்திற்கான நம்முடைய தயார்தன்மையை சோதித்துக்கொள்ளும் ஒரு அளவுகோலாகிறது.

இதில் மிகவும் யோசிக்க வைத்த ஒரு சில வரிகள் இதோ…

… வஸ்துக்களாலெ ஆன உலகம் ஒண்ணு இருக்கு அதை என் புலன்களாலே நான் அறிஞ்சிக்கிறேன் ஒங்க உப்லன்களாலே நீங்க, அவங்கவங்க புலன்கள் இருக்கற ஸ்திதியைப்பொறுத்து அவங்கங்க அறிஞ்சிக்கிறோம்…” இப்படியாகத்தொடரும் பத்தி நாம் ஒருவருக்கொருவர் பறிமாறிக்கொள்ளும் செய்திப்பரிவர்த்தனைகளின் அடிப்படையைக்குறித்து யோசிக்க வைக்கிறது.

குள்ளச்சித்தன் சரித்திரம் போல, அதிகம் மாயவிநோதங்கள் ஏதுமின்றி இயல்பு வாழ்க்கையை ஒட்டியிருப்பதும், கடைசியில் ஆசிரியர் கூறியிருக்கும் புனைவின் சதவிகிதத்தையும் கணக்கில் கொள்ளும் போது அடுத்த முறை நம் திருவண்ணாமலை பிராயணத்தில் மன்னாதியை மனம் தேடினாலும் தேடும்.