Sunday, February 25, 2018

ஆசீவகம் - ஆதி தமிழரின் தொன்ம மெய்யியல் - 1



ஆசீவகம் என்பதை “இந்திய மெய்யியல் கொள்கையும் துறவு இயக்கமும்” என்றும் கிமு 500 – 250 காலப் பகுதியில் தொல் பெளத்தர்கள், ஜைனர்களோடு ஒத்த காலத்தில் இருந்தாக கருதப்படுகிறது. என்றும், இந்த மெய்யியல் பெளத்தம், ஜைனம், சார்வகம் போன்றே வேதத்தை முழுமையாக புறக்கணித்த மெய்யியல் ஆகும் என்றும் சொல்கிறது விக்கி பக்கங்கள்.
இது அமணம் என்றும் குறிப்பிடப் படுகிறது. (சமணம் அல்ல என்பதற்கான சான்றுகளும் நிறுவப் பட்டுள்ளது)
1. அமணர் = அம்மண்ணர் = அம்+அண்ணர் = அம்+ம்+அண்ணர்
அம் - ஊழ்கப் பயிற்சியில் உயிர்வளி மேலேறும் போது மேல்நோக்கி மேலண்ணத்தைக் கடக்கும் போது அம்மெனும் ஒலியை எழுப்பும் என்பது ஊழ்கக் கருத்து.
அண்ணம் - ஊழ்கியின் மேலண்ணம்
அர் - பலர்பால் சிறப்பு விகுதி
அம்மெனும் ஒலியைக் கொண்ட ஊழ்கம் பயிலும் மேலண்ணத்தினை உடையவர் எனும் பொருள் கொண்டது. .இத்தகு அறிவர் வாழ்ந்த இடங்கள் திரு அண்ணர் மலை, அண்ணல் மங்கலம் எனும் பெயர்களுடன் வழங்கப் பட்டு இன்று திருவண்ணாமலை, அண்ணமங்கலம் எனும் பெயர்களால் வழங்கப்பட்டு வருகின்றன.
சித்தன்னவாசல் - அண்ணல் வாயில், திருவண்ணாமலை - திரு அண்ணர் மலை, அண்ணமங்கலம் - அண்ணல் மங்கலம்
இவ்விடங்களில் இன்றும் ஆசீவகப் பள்ளிகளின் எச்சங்கள் காணக் கிடக்கின்றன என்ற குறிப்புகள் கிடைக்கிறது. இச்சமயத்தின் அறிவர்கள்
1. ஆசீவகர் (அ) ஆசீவகச் சித்தர் (அ) சித்தர்
2. ஐயன், ஐயனார், நல்வெள்ளையார் - கழிவெண் பிறப்பு அல்லது நல்வெள்ளை         நிறத்தை அடைந்தவர்கள்
3. அண்ணர் (அ) அண்ணல்
என்றும் அழைக்கப் பட்டிருந்தார்கள். மேலும் ஆசீவகம் என்ற சொல்லுக்கு
ஆசீவகம் = ஆசு+ஈவு+அகம் என்றும் பொருள்கொ ள்வர். 
ஆசு - பிழையற்ற செம்மையான தோல்வியேற்படுத்தாத கேட்ட போதே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென,
ஈவு – தீர்வு (எட்டை இரண்டால் வகுத்தால் 4 வரும். இதில் முதலில் அவரிடம் இருக்கும் எண்கள் 8 மற்றும் 2, இந்த இரண்டைக் கொண்டு கணக்கிடும் பொழுது வரும் 4 ஐ ஈவு என்று சொல்வோம்)
அகம் - தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.
ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம். அத்தீர்வுகளைத் தருபவர்கள் ஆசீவக சித்தர்கள் ஆவர்.
எந்த ஒரு அறிந்த செய்தியிலிருந்தும் அறியாமல் உள்ள விடையை அறியலாம். அதற்கு ஈவு என்று பெயர். ஈவு என்பது வகுத்தும் பகுத்தும் பெறப்படும் விடையாம். கணக்கியலில் மட்டுமின்றி இயங்கியலில் உள்ள அனைத்துத் திணைதுறை, பல்தொழில், மூவிடம், ஐம்பாலிலும் நமக்குத் தெளிய வேண்டியவற்றைப் பகுத்தும் வகுத்தும் நாம் காணும் விடை ஈவு ஆகும்
அத்தகைய ஈவை அன்றைய இல்லறத்தானுக்கு நல்கும் இடமாக அமைந்தது ஆசீவகத் துறவிகளின் கற்படுக்கை. அங்குச் சென்று தனக்குத் தேவையான ஈவுகளைப் பெற்றதால் அத் துறவிகளின் கற்படுக்கை ஈவகம் (ஈவு+அகம்) எனப் பெயர் பெற்றது. இதற்காக கைம்மாறு எதுவும் கருதாமல் எவ்வகைப் பிழையுமின்றிச் செம்மையாக ஈவு தந்ததால் ஆசு+ஈவகம் எனச் சிறப்பிக்கப் பட்டது. இக்கற்படுக்கைகள் ஆசீவகக் கற்படுக்கைகள் எனவும், இங்கிருந்த துறவிகள் ஆசீவகத் துறவிகள் எனவும் பெயரிடப் பெற்றுச் சிறப்புற்றனர்.
இது தொடர்பான பல ஆய்வுகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்து கொண்டே இருப்பதும் ஒவ்வொரு கால கட்டத்திலும் சிலர் அதை ஒவ்வொரு விதமாக முன்னெடுப்பதும் நடந்து கொண்டே இருக்கிறது.
ஆசீவகத்தை நிறுவியவர்கள் எவர்?? அதன் முழுமுதல் கடவுளர் எவர்? போன்ற பல விஷயங்களை வாசிக்கும் பொழுது எதுவொன்றும் புதியதாகத் தோன்றாது ஏற்கனவே அறிந்த ஒன்றை மீள் வாசிப்பு செய்வது போன்ற உணர்வைத் தருவது எனக்கு ஒரு புதிய அனுபவம். உங்களோடு என் புரிதல்களை தொடர்ந்து இயன்று வரை பகிர்ந்து கொள்ளவும் முயல்கிறேன்.
இவைகளை நான் இணையத்திலும், புத்தகங்களிலும் தேடி எடுத்த தரவுகளின், செ்ய்திகளின் அடிப்படையிலேயே தொகுத்து அளிக்கிறேன்.

No comments: