Tuesday, November 7, 2017

குறியெதிர்ப்பை நீர துடைத்து - குறளின் மாற்று முகம்

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

இணையத்தில் கண்ட உரை. கிட்டத்தட்ட எல்ல உரைகளும் இதையொட்டியே அமைகிறது.

இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.

இந்தக் குறளை ஜெமோவின் குறளினிது உரையின் படி பார்க்கவேண்டும் என்று தோன்றியது.

அதன் படி நேற்றிலிருந்து இந்த ஒரு குறள் மட்டுமே உள்ளே ஓடிக்கொண்டிருந்தது.

இக்குறள் அறத்துப்பாலில், இல்லறவியலில், ஈகை எனும் அதிகாரத்தில் தொகுக்கப் பட்டுள்ளது. ஜெமோவின் ஆய்வின் கருத்துப் படி இந்த தொகுத்தல்கள் பிற்காலத்தில் நிகழ்ந்தவை. எனவே இதை அறத்துப் பாலில் மட்டும் வைத்துப் பார்க்கலாம்.

வறியார்க்கொன்றை ஈவதே ஈகை - தேவையான ஒருவர்க்கு கொடுப்பது அறம், இதை தேவையுள்ள இடத்தில் ஆற்றும் செயலாகக் கொண்டால் அதுவும் அறம்.

மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து -

மற்றெல்லாம் - மற்ற எல்லா வினைகளும், அதாவது தேவையற்ற அனைத்து செயல்களும்(கர்மங்களும்) , இங்கே ஈகையை மட்டும் எனக் கொள்ளாதிருத்தல் வேண்டும்

குறியெதிர்ப்பை - எனும் சொல்லுக்கு கொடுத்த அளவே மீண்டும் வாங்கும் முறைமை என்ற பொருள் உள்ளது. எனவே நம்முடையை தத்துவப் பார்வையின் படி நாம் செய்யும் எல்லா வினைகளுக்கும் அதே விதமான எதிர்வினை உண்டு. எனவே இதை கர்மாவோடு தொடர்பு படுத்திக் கொள்ளலாம்.

நீரது உடைத்து - உன்னுடைய உடமையாகும்.

இப்பொழுது மொத்தமாக பொருள் கொண்டால்.

தேவை இருக்கும் இடத்தில் மட்டும் செயலாற்றுவதே அறம், மற்றெல்லா கர்மங்களும் எதிர்வினையையே தோற்றுவிக்கும்.

இதுக்கு பழந்தமிழ் ஆசான்களெல்லாம் வந்து அடிச்சா தாங்கிக்க வேண்டியதுதான் வேற வழி இல்ல.

ஆனால் அந்த உறையின் தாக்கம் மிக அதிகம் அதைப் பற்றி ஒரு தனித்த பதிவே எழுத வேண்டும்.

No comments: