Thursday, January 22, 2009

கேள்விகள் - 3 எது கோபம், ஏன் கோபம்.


மனதில் ஊறும் கேள்விகளை தொடராய் எழுதும் எண்ணம் தோன்றியது சில காலங்களுக்கு முன்.

இரண்டாவது பதிவிலேயே அது நின்று போய் விட்டாலும் மனதின் ஒரு மூலையில் அந்த முயற்சி இருந்து கொண்டே தான் இருந்தது.

அதற்கான தொடர்முயற்சியாய் இது.


நவீன் காப்பி குடிச்சாச்சா? நித்தா எழுந்தாச்சான்னு பார்த்துச்சொல்லு, எழுந்தாச்சுன்னா உடனே அவனை பல் தேய்ச்சுட்டு கீழ வரச்சொல்லு கொஞ்சம் வேலை இருக்கு். நீ உன் காமர்ஸை சீக்கிரம் முடிச்சுட்டு ஸ்கூலுக்கு கிளம்பற வழியப்பாறு என்றபடியே துர்கா சமயலறையில் இயங்கிக்கொண்டிருந்தாள். ஒரு பக்கம் கிரைண்டரும் மறு பக்கம் மிக்ஸியும், அடுத்த பக்கம் எலக்டிரிக் சிம்னியும், சமயலறை சங்கீதத்திற்கு ஸ்ருதி கூட்டிக்கொண்டிருந்தது.

இந்தா நறுக்கினது போறுமா இல்ல இதையும் நறுக்கட்டுமா என்று கேட்ட சீனுவிற்கு, போறும் போறும் கோஸ் காயா பண்ணினா அதுங்க தொடாது, கூட்டுன்னாலாவது கொஞ்சம் போகும் நேத்திக்குத்தான் புடலங்காய் கூட்டு இன்னக்கும் கூட்டுனா நமக்கு போரடிக்கும் அதனால நமக்கு் மட்டும் தான் கோஸ் பசங்களுக்கு பீட்ரூட் முடிச்சுட்டு நீங்க கிளம்ப ஆரம்பியுங்கோ அப்பத்தான் அம்மாவோட ஆஸ்பத்திரி வேலையை முடிச்சுட்டு நீங்க ஆபிஸ் போக முடியும் என்று துரிதப்படுத்தினாள்.

நன்னூஊஊஊ நித்தா எழுந்தாச்சா கேட்டேனில்லை என்றதும் நித்தா எனப்படும் நிதுன், துர்காவின் இளையவன் சமயலறையை அடுத்திருக்கும் ஹாலில் இருந்து குரல் கொடுத்தான். "நான் அப்பவே எழுந்தாச்சு", அப்ப இங்க வா இந்தப்பாலைக்குடி, உதயம் ஸ்டோர்ஸ்க்குப்போய் ஒரு தேங்கா வாங்கிட்டு வா. என்றபடி கிரைண்டர் மாவை எடுக்கத்தொடங்கினாள். எப்படியும் அவன் எழுந்து வர குறைந்த பட்சம் 5 நிமிடமாவது ஆகும் என்பது அவளுக்குத்தெரியும். ஆனால் இவை எதற்குமே எந்த ஒரு எதிர்வினையும் இன்றி அவன் அமைதியாய் சோபாவில் படுத்திருக்கவும் சிறிதே கோபம் தலைக்கேறியது துர்காவிற்கு.

நித்தா உன்னைத்தான் சொல்றேன் பாப்பா, சீக்கிரம் வா கண்ணா, தேங்கா வாங்கி வைச்சுக்க மறந்து போச்சு, அண்ணா படிச்சிண்டிருக்கான், எனக்கு வேலையாகனும் பிளீஸ் ... பதிலில்லை.... நித்தா என்ன பண்ற .... பதிலில்லை முதல்ல நீ இங்க வா சொல்றேன் குரலில் கடுமையேறியது.

என்னஆஆஆ..... குரலில் எரிச்சல் மிக வந்தான்। பத்து வயசுப்பையனுக்கு காலங்கார்த்தால என்ன எரிச்சல் எழுந்தோமா தெம்பா ஏதாவது பண்ணினோமா, ஸ்கூலுக்குபோனாமான்னு இல்லமா இப்ப என்ன எரிச்சல் உன்னை என்ன மலையையா பொரட்டச்சொல்றேன் கடைக்குப்போய் தேங்க வாங்கிண்டுன்னு வாந்தானே சொல்றேன். இதோ தெருமுனைல இருக்கற கடைக்குப் போறதுக்கு உனக்கென்ன அலுப்பு அதுவும் இந்த சின்ன வயசுல என்று ரவுண்டு கட்டத்துவங்கினாள்.

அம்மாஆஆஆஅ.. எனக்கு நேரமாயிடும்மா என்று தரையை உதைத்தபடி மாடியேறிச்சென்றவனைப்பார்க்கவும் கோபம் இன்னும் அதிகமானது. நீ மாடிக்குப்போனே கொன்னுடுவேன்... ஒழுங்கா மரியாதையை கடைக்குப்போயிட்டு வா என்று தன் அதிகாரத்தை காட்ட ஆரம்பித்தாள்.

துர்க்கா இப்ப எதுக்கு உனக்குத்தேங்கா கோஸுக்கா இன்னக்கி தேங்கா போடமா பண்ணிடேன் இதுக்கு எதுக்கு அவங்கூட காலைல என்று சாவதானமாகச்சொல்லியபடி குளியலறையிலிருந்து வந்தான் சீனு. அன்றைய கோஸ் காய் தேங்காய் இல்லாமல் முடிந்தது.

அன்று முழுதும் துர்காவிற்கு கோபம் தாங்கவில்லை

அது எதனால்

தேங்காய் இல்லாத சமையல் செய்ததாலா?
மகன் கடைக்கு போக மாட்டேன் என்று சொன்னதாலா
தான் சொல்லி ஒரு வேலையை செய்ய மறுத்துவிட்டதாலா?
கணவர் தனக்கு ஆதரவாக பேசாமல் சமாதனமாகப் போகச்சொன்னதாலா?
தனக்கு சிறு வயதில் இருந்து போதிக்கப்பட்டு தன்னுள் ஊரிப்போன "பெரியவங்க ஒரு வேலையைச்சொன்னா தட்டாம செய்யனும்" என்ற மனோநிலையை கேள்விக்குறியாக்கியதாலா?

எது துர்காவை அன்று முழுவதும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கும்.

இதில் எந்தக்கேள்விக்கான பதிலை நாம் தேட முற்பட்டாலும் அதில் துர்காவின் தன்முனைப்பு சம்பந்தப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமுண்டா.

குழந்தைகளுக்கென்று உரிமைகள், நியாயங்கள் உண்டு, நீ சொன்னதாலேயே அவன் ஒரு வேலையை, நிகழ்வை செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை, வயதானவர்களைப்போலவே குழந்தைகளையும் கணக்கில் கொள் உன் அம்மா எனும் ஆளுமையை அவர்களிடம் செலுத்த நினைக்காதே என்றும் சொல்லும் சீனு சரியா.

இல்லை இதெல்லாம் உதவிதானே ஒருத்தருக்கு உதவி செய்யனுங்கற எண்ணத்தை சின்ன வயசிலேர்ந்து அதுவும் வீட்டுலேர்ந்துதானே கத்துக்கொடுக்க முடியும், அதுவுமில்லாமா தன்னால முடியாதுங்கறதைக்கூட தன்மையா சொல்ல வேண்டிய முறையையும், கலையையும் நாமதானே கத்துக்கொடுக்கனும். எல்லா விஷயத்தையும் தடவித்தடவி சொல்லிக்கொடுக்க முடியாது கொஞ்சம் வேகமாவும் சொல்லனும் அப்பத்தான் புரியும்னு சொல்ற துர்கா சரியா

எனக்கு விருப்பமில்லாததை செய்யச்சொல்பவர் யாராயிருந்தாலும் எதாயிருந்தாலும் அதை செய்யமாட்டேன் என்ற துணிவிருக்கும் நிதுன், இன்றய இளைய சமுதாயப்பிரதிநிதி் சரியா.

இத்தனை நிகழ்வுகளுக்கு இடையிலும் பிரச்சனை நம்மிடம் வராமல் இருந்தால் சரி என்று ஒதுங்கியிருக்கும் நவீன், மற்றொரு இளைய சமுதாயப்பிரதிநிதி சரியா.

இந்த கேள்விகளுக்கான பதில்கள், துர்கா, சீனு, நவீன், நிதுன் இவர்களைத்தாண்டி நம்மனைவருக்கும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம் சுய அலசலுக்கு உதவும் தானே....

13 comments:

கபீரன்பன் said...

//அன்று முழுதும் துர்காவிற்கு கோபம் தாங்கவில்லை //

கண்டிப்பு அவசியம். அந்த நேரத்தில் சற்று கடுமையாக இருக்கவும் வேண்டும். ஆனால் அதை கோபமாக மனதில் சுமக்க வேண்டியதில்லை. அன்றே வேறொரு சமயம் பார்த்து அவனுக்கு அவன் தவறை சுட்டிக்காட்ட வேண்டும்.

இது பிரச்சனைக்கான தீர்வு என்று சொல்லமுடியாது. ஆனால் ஒரு நிகழ்வை நாம் பிரச்சனையாக்கிக் கொண்டு மனதில் கோபதாபங்களை வளர்த்து கொள்ளாமல் இருக்க வழி. :))

Vijay said...

ஐயா, மிக சரியான ஒரு சிச்சுவேஷனை எடுத்து இருக்கீங்க.மனித வாழ்ககைல பார்தீங்கன்னா இது மாதிரி எத்தனை எத்தனை இருக்கு. எல்லாருக்கும் எல்லாத்துக்கும் பொருமையா யோசிக்கதான் நேரம் இருக்கா?

இதுக்கு பார்த்தீங்கண்னா இன்னும் நிறைய கேள்விகள் கூட கேட்கலாம். கேள்விகள் சம்மந்தபட்ட எல்லார் மனதிலும் எழுந்தால்தான் தீர்வு ஒரு கலந்துரையாடலிலோ அல்லது மன புரிதலிலோ கிடைக்கும் வாய்ப்பு இருக்கு. ஆனால் தெரிந்தோ தெரியாமலோ Life is full of POWER GAME தான். அதனால தான் மிக சிறந்த அருமையான உறவுகளில் கூட மன வேதனையும் மனதாங்கல்களும் இல்லாம இல்ல.

ஒரெ வழி. மன்னிப்பு கேட்டலும்(புரியும்போதவது) மன்னிப்பு வழங்கலும்தான்(கேட்காவிட்டாலும்). இதுல நோயின் வாய் நாடி ஆகிய கலந்துரையாடலோ அல்லது புரிதலோ நடக்கலைனாலும், தலைவலியா? ஒரு சாரிடான் சாப்பிடுங்கறா மாதிரி மன்னிப்புதான் உதவுது.

எதோ எனக்கு தோணினதை சொல்லி இருக்கேன். நன்றி

Vijay said...

சாரிங்க, எதோ நினைப்புல ஐயான்னு சொல்லிட்டேன். மன்னிக்கணும் கிருத்திகா

Unknown said...

சிறுமியாக இருக்கும் போது நாட்டார் கடைக்கும் வீட்டிற்கும் நான் தான் அனேகமாய் நிறைய ரன் எடுத்திருப்பேன். எங்கள் ஆச்சி கறிவேப்பிலை வாங்குவதற்கும், சீனி வாங்குவதற்கும் சில வேளைகளில் கடுகு வாங்குவதற்கும் கூட என்னை ஏவியிருக்கிறார்கள். இதற்கு லஞ்சமாகக் கிடைக்கும் ஐந்து அல்லது பத்து பைசாவுக்கு நான் பறந்தோடுவதுண்டு....என் மகள் கடைக்குப் போகச் சொன்னால் முதலில் அவளுக்கு மூட் இருக்கவேண்டும், இரண்டாவதாக போகோ அல்லது சுட்டி ஓடாமல் இருக்கவேண்டும், முக்கியமாக சாக்கோஸ் வாங்கணும், கிட்காட் வேணும் என்ற நிபந்தனைகளோடுதான் போவாள். இத்தனைக்கும் பழனி கடை வீட்டு நேர் எதிரே..மகன் இன்னும் கொஞ்சம் வளர்ந்தால்தான் கடைக்கு அனுப்பும் படலம் தொடங்கும். காலங்கள் மாறுகின்றது காட்சிகள் அப்படியே....என்ன மேலும் சில பல கூடுதல் லஞ்சங்களுடன், கெஞ்சுதல்களுடன்...நல்ல பதிவு க்ருத்திகா...30 ஆண்டுகள் ரிவெர்ஸ் எடுக்க வைத்துவிட்டீர்கள்

பாச மலர் / Paasa Malar said...

இணைப்பில் சிறு கோளாறு..அதனால் பதிவை பிறகு படிக்கிறேன்..அதற்கு முன் இங்கே பார்க்கவும்:

http://pettagam.blogspot.com/2009/01/blog-post_24.html

பாச மலர் / Paasa Malar said...

வெகு இயல்பாக நடக்கிற ஒரு விஷயம்..ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் இப்படி..வேறோர் சந்தர்ப்பத்தில் குழந்தையும் உதவி செய்யத் தயாராக இருக்கும்.. நாமும் வேண்டாம் என்று கூறி இருப்பதை வைத்து அனுசரிக்கத் தயாராகிவிடுவோம்..

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி கபிரன்ப..., விஜய், மற்றும் உமாஷக்தி. நினைவுகளையும், யோசனைகளையும் உள்நோக்கித்திருப்பும் சிந்தனைகளை கிளறுவதே இந்தப்பதிவின் நோக்கம். இதற்கான பதில்கள் வேறுவேறாய் இருக்கலாம் அது செல்லும் பாதை நம் அனைவருக்கும் பயனுள்ளதாய் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி, மலர் தங்கள் வரவிற்கும் அணிவித்திருக்கும் பதக்கத்திற்கும். இதற்கான தகுதி உண்டோ இல்லையோயென யோசிப்பதில் இப்போது பயனில்லை அதனால் இதை நட்பிற்கான மணிமகுடமாய் ஏற்றுக்கொள்கிறேன். கூடவே மற்றொரு பணியையும் தந்துள்ளீர்கள் நிறைவாய் செய்யவேண்டும் என்று பொறுப்பு தலையில் கூடியுள்ளது... நன்றி மீண்டும்.

திவாண்ணா said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!
குழந்தை வளர்ப்பு ஒரு கலை. அனுபவத்தில்தான் வரும். குழந்தைகளை கடைக்கு போக சொல்வது சில குணங்களை வளர்க்கவே இருக்கணும். இல்லை அவசரத்துக்கு இருக்கலாம். நம்ம சோம்பேரித்தனத்துக்கோ அல்லது மறதிக்கோ இருந்தா அதை பசங்க சுலபமா கண்டு பிடிச்சுடுவாங்க. நான் ஏன் பண்ணணும்ன்னு அப்ப தோணும்.

கோபத்துக்கு காரணம் எதிர்பார்ப்புதான். இப்படி நடந்துக்கணும்ன்னு எதிர்பார்த்து ஏமாந்து போறதாலே வருகிறது.
இது போதும்னு தோணுது! :-)

நான் துர்க்கா பக்கம்தான். சீனுவோட போக்கு அபாயகரமானது!

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க திவா.. :கோபத்துக்கு காரணம் எதிர்பார்ப்புதான். இப்படி நடந்துக்கணும்ன்னு எதிர்பார்த்து ஏமாந்து போறதாலே வருகிறது.:
இது போன்ற அலசல்களுக்குத்தான் இது போன்ற பதிவுகள். மிக்க நன்றி....

நித்தி .. said...

துர்கா, சீனு, நவீன், நிதுன்

krithi...peyar thearvu romba naaluruku...
nithun- rommmba nallaruku..

நித்தி .. said...

துர்கா, சீனு, நவீன், நிதுன்

krithi...peyar thearvu romba naaluruku...
nithun- rommmba nallaruku..

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி நித்தி...