Wednesday, August 20, 2008

இளம் பிராயத்தின் மொழி



பேசும் மொழியின் பல சாத்தியக்கூறுகளை நமக்கு முன் கடை பரப்பிச்சென்றதான இளம் பருவங்கள் இப்போதைய நகரத்து இளம் தலை முறைகளுக்கு ஆட்பட்டுள்ளதா என்பது மிகப்பெரிய கேள்வி.

மொழி என்பதனை சம்பாஷானைகளுக்குண்டான கருவி என்று எடுத்துக்கொண்டால், உடல் மொழியும், அந்நிய பாஷைகளும் அதனதன் ஆதிக்கத்தை இளசுகளிடையே பதித்து வைத்திருந்தாலும் நாம் சிறு வயதில் கிராமப்புறங்களின் குளக்கரைகளில், தண்ணீர் தொட்டி அருகில், கோவில் வாசல்களில், பந்தடிகளில், பேசித்திரிந்த தமிழ் மொழியின் பல் வேறு பட்ட சாத்தியங்களை இவர்கள் அறிந்திருக்கவில்லைதான். அதற்கான ஆர்வங்கள் கூட அற்று இருப்பதும் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய அவலம்.

சிறு வயதில் பேசிப்பழகிய சில தமிழ் மொழியின் வடிவங்கள்.


லானா பஷை

நீ எங்க போற

நில் நீ எல் எங்க பொல் போற

நான் உன் கூட வரேன்

நல் நான் உல் உன் குல் கூட வல் வரேன்

அந்தப் புத்தகம் படித்தாயா

அல் அந்தப் புல் புத்தகம் பல் படித்தாயா


இது போன்ற வார்த்தை பிரயோகங்களை யார் உருவாக்கினார்கள், எங்களுக்கு கற்றுத்தந்தது யார், இன்று வரை யோசித்ததில்லை ஆனால் இப்போது கார்டூனும் நாட்ஜியோவும் பார்க்க சிறு பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கத்தேவையில்லாதது போலவே இது நமக்கு வழிவந்துள்ளது.


கானா பாஷை

நீ எங்க போற

கநீ கஎகங்கக கபோகற

நான் உன் கூட வரேன்

நாகன் கஉகன் ககூகட கவகரேகன்

அந்தப் புத்தகம் படித்தாயா

கஅகந்கதகப் கபுகத்கதகககம் கபகடிகத்கதாகயா


மிக வேகமாக வந்து விழக்கூடிய இந்தச்சொற்கள் தரும் இன்பம் அன்றும் இன்றும் விவரிக்க முடியாததாகவே இருக்கிறது.

இது போன்ற மற்றுமொரு வழக்கமும் இருந்தது


திருப்பி

நீ எங்க போற

றபோ கங்எ நீ / நீ கங்எ றபோ

நான் உன் கூட வரேன்

ன்ரேவ டகூ ன்உ ன்நா / ன்நா ன்உ டகூ ன்ரேவ

அந்தப் புத்தகம் படித்தாயா

யாதாத்டிப ம்கதத்பு ப்தந்அ / ப்தந்அ ம்கதத்பு யாதாத்டிப


இப்படி பேசுவது பெரும்பாலும் ஆண் பெண் இரு பாலருக்கும் பொதுவாகவே இருந்தாலும், பெரும்பாலும் பெண்குழந்தைகளே இதை அதிகம் பிரயோகித்து பார்த்திருக்கிறோம். என் வீட்டில் இருவருமே பெண் பிள்ளைகள் என்ற காரணத்தில் ஆண்கள் உலகமும் அவர்கள் பிரத்யோக பாஷயும் எங்களுக்கு மிகவும் அந்நியமாகவே இருந்து வந்ததும் கூட ஒரு காரணமாயிருக்கலாம். இந்த வியப்பு இன்னும் என் இரு மகன்களின் சம்பாஷனையே கேட்க கேட்க விரிவடைந்து கொண்டே செல்கிறது. இப்போதைய பெண் பிள்ளைகளின் பேச்சும் இப்படித்தான் இருக்குமோ இதை அறிந்து கொள்வதற்காகான சாத்தியக்கூறும் இல்லாமல் போனதில் வருத்தம் தான்.

இப்போது இது போன்ற வார்த்தை பிரயோகங்கள் இன்னும் நம்முள் வாழ்ந்து கொண்டிருக்கிறதா, வார்த்தைகளை வேகமாக கையாளும் சாகித்யத்தை நாம் இன்னும் கொண்டிருக்கிறோமா என்று சோதித்துப்பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது. அதற்காக நம் சிறு வயது தோழி தோழியர்களை சந்தித்து உரையாடவேண்டும் என்று ஊர் ஆசைகளையும் தோற்றுவிக்கிறது. பிறந்த கிராமங்களை குறித்த காதலுக்கு வெவ்வேறு வடிவங்கள்.


இந்த சிந்தனை என்னுள் எழும்ப காரணமான எஸ்.ராவின் கதைக்கான சுட்டி. இல்மொழி

10 comments:

சந்தனமுல்லை said...

ஹை..உணமைதான்..சில விஷயங்கள் யாரும் கற்றுக் கொடுப்பதில்லை..ஆனாலும் அது சிறு பிள்ளைகளை எப்படி வந்தடைகிடைறது எனபது ஆச்சரியமே!! நல்ல பதிவு!!
அந்த கானா பாஷை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..ஆனால் என் தூரத்து கஸின்ஸ் பேசி,ஆனால் நான் அப்போது ரொம்ப சிறு பெண்!! எங்கள் வீட்டில் ரிவர்ஸ்..பையன்கள் தான் அப்படி பேசினார்கள்..ஒருவேளை எனக்கு புரியக்கூடதென்று பேசினார்களோ என்னவோ!! ஆனால் ரொம்ப சரளமாக பேசுவார்கள்!! :-))

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி சந்தனமுல்லை. ஆம இது போன்ற பாஷைகளைப்பேசும் போது ஒரு சுவாரசியம் கலந்த ஆர்வம் இருக்கும். மேலும் ஓரிருவர் அதிகம் இருந்தாலோ கலகலப்பிற்கு கேட்கவே வேண்டாம். இந்த சிங்கிள் அவுட் பிரச்சனை இன்றல்ல என்றுமே உண்டு ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி.. :)

ஜீவி said...

எங்கள் வீட்டிலும் நீங்கள் சொன்ன மாதிரியே; என் தமக்கைகளும், மாமா பெண்ணும் இந்த 'கா'னா பாஷையில் வெகுவேகமாக வெளுத்துக் கட்டுவார்கள். நீங்கள் சொன்ன இன்னொரு விஷயமும் உண்மையே. பெண்கள் மத்தியில் தான் இந்த வேடிக்கை மொழி வெகு சரளமாகப் புழக்கத்தில் இருந்தது.
இந்த ஒரு காலத்து பாஷை என்பதும் சரியே. இப்பொழுதெல்லாம் குழூக்குறி போன்ற (மூன்றாமவருக்கு சட்டென்று புரியாத மாதிரி) இப்படிப் பேசுகிறார்களா என்று தெரியவில்லை.
என் பெண்ணோ, பிள்ளையோ இப்படிப்பேசிப் பார்த்ததில்லை.

இன்னொன்றையும் சொல்லி விடுகிறேன். உங்கள் எழுத்து நடையில் மெல்லியதாக புகுந்து கொண்ட மாற்றத்தை மிகவும் ரசித்தேன். இது வரவேற்கத்தக்கது.
வாழ்த்துகிறேன்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி ஜீவி, உண்மைதான், ஆனால் இப்போதெல்லாம் ஆங்கில எழுத்துக்களையே இது போல் வெகு சுருக்கி பேசுவதை நான் கேட்டிருக்கிறேன் கிட்டத்தட்ட அந்தக்காலத்தில் டெலக்ஸ் மொழி என்றொரு வகை இருப்பது போல்.

தாங்கள் சொல்லும் மாற்றம் என்ன என்று எனக்கு புரியாவிட்டாலும் ரசித்தேன்/வாழ்த்துக்கள் என்ற சொற்களால் சந்தோஷமே... நன்றி..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சிறுவயதில் நாங்களும் இந்தக் கானா பாஷை பேசியிருக்கிறோம். :)

காணாமல் போக்கியவை பற்றிய நீண்ட பட்டியலே இருக்கிறது நம்மிடம் :(

கிருத்திகா ஸ்ரீதர் said...

உங்கள் காணாமல் போனவைகளின் பட்டியல் எங்களிடமும் உள்ளது சுந்தர்...
http://jyovramsundar.blogspot.com/2008/02/blog-post_18.html

:)

sury siva said...

க ந கன் கறா கக க இ கரு கக் ககி கற கது.

கசு கப் கபு கர கத் கதி கன க்ம்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி சுப்பு ஐயா...

:)

sury siva said...

என்னுடைய பேத்தி ந்யூ ஜெர்ஸியிலிருந்து வந்திருந்தாள்.
அவளிடம் நான் ' க.ன.." பாஷையைப்பற்றிச் சொன்னபோது, அவள்
எனக்கு ஸுபு, டுபு தெரியுமா ?" என்றாள்.

அது என்ன ஸுபு,டுபு என்றேன்.

அது உனக்குப்புரியாது தாத்தா என்றாள்.
ஏன் ! என்றேன். உனக்கு வவ்வல் தெரியுமா?
வவ்வால் தெரியும். வறுவல் தெரியும் என்றேன்.

அதான் உனக்குப்புரியாது என்று சொன்னாள்.
இங்க்லீஷில் வவ்வல் vowels

" தமிழிலே உயிர் எழுத்தா ? "
" அதெல்லாம் எனக்குத்தெரியாது."

" ஒவ்வொரு word லெயும் வவ்வலுக்கு முன்னாடி
ஸுபு இல்லைன்னா டுபு சேக்கணும்" என்றாள்.

"முதல்லே ஸுபு அப்பறம் டுபு..
உதாரணத்திற்கு rose
rsubosdube ஆகிவிடும். இது போல எதுவேணுமானாலும்
code உபயோகப்படுத்தலாம்."

சரிதான். எப்படி எழுதுவது பொறுமையுடன் ? என்றேன்.
"நாம் எதற்கு எழுதணும். மைக்ரோ வேர்ட் அதைச்செஞ்சுடும்.
ஒரு சிங்கில் கமான்ட்லே இதைச் செஞ்சுடலாம்.
செஞ்சுட்டா நாம என்ன எழுதினோம்னு நமக்குத்தான் தெரியும்.
மற்றவங்க காபி அடிக்கமுடியாது" என்றாள்.

"நமக்கு மறந்துபோச்சுன்னா என்ன செய்வது ?"
என்றேன்.
" பாஸ் வேர்ட் மாதிரி தான். forgot passwoர்ட் க்குப்போய் பாக்கலாம்."
என்றாள்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com

முஹம்மது ,ஹாரிஸ் said...

நானும் சிறுவயதில் இந்த பாஷைகளைப் பேசி இருக்கிறேன் . அருமையான அனுபவம்.
குழந்தை பருவத்தை நினைவூட்டுகிறது..........