Friday, March 28, 2008

கைகளில் சுவாசித்த புத்தகம் – குள்ளச்சித்தன் சரித்திரம்,

ஒரு நாள் பேச்சுவாக்கில் அதான் ஜீடாக் வாக்கில் பேசிக்கொண்டு இருக்கும் போது உரையாடல் மனித மனத்தில் ஆழ் மனதின் நம்பிக்கைகள் பற்றி திரும்பிய நேரத்தில் ஒரு நன்பரால் பரிந்துரைக்கப்பட்டது இந்தப் புத்தகம். எதனாலோ அன்றே அந்தப்புத்தகத்தை வாங்கக்கூடிய சந்தர்ப்பமும் அமைந்து விட்டது. (வழக்கத்தில் பல நாட்கள் நினைத்து கை கூடி வராமல் என் கைப்பையில் பதுங்கியிருக்கும் சிறு குறிப்பு நோட்டுக்குள் புத்தகங்களின் பெயர்கள் சில சமயம் மாதக்கணக்கில் குடியிருக்கும்). ஆனால் இந்தப் புத்தகத்தை வாங்கும் வேளையில் எதிர்பாராத விதமாக கோணங்கியின் புத்தகம் ஒன்றையும் வாங்க முடிந்ததால் முதல் ஈர்ப்பை கோணங்கியின் புத்தகமே இழுத்துக்கொண்டது. குள்ளச்சித்தன் சரித்திரம் எனும் இந்தப்புத்தகம் என் புத்தக அலமாரிக்குள் செல்லாது எப்போதும் என்னைப்பார்த்த படி என் கவனத்தை ஈர்த்தபடி என் மேசை முகட்டில் குடியிருந்தது. படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை இருப்பில் வைத்து விட்டு கோணங்கியை வாசிக்கத்துவங்கினேன். பின் இயல்பாக இந்தப்புதிய புத்தகம் என்னை ஆகர்ஷிக்கத்துவங்கியது.

புத்தகத்தின் தலைப்பு குள்ளச்சித்தன் சரித்திரம் என்பதை கேட்டதில்/கண்டதில் இருந்து எனக்குள் ஒரு சிறு உதைப்பு ஒருவேளை இந்திரா பார்த்தசாரதி வகையை சார்ந்து இருக்குமோ என்று ஆனாலும் பரிந்துரைத்திருத்த நன்பரின் வாசிப்பு அலைவரிசை பல நேரங்களில் என்னோடு ஒத்துப்போயிருப்பதால் சிறிதே இருந்த தயக்கத்தை ஒதுக்கி விட்டு வாசிக்கத்துவங்கினேன். என்னை முழுதுமாய் தன்னுள் மூழ்கடித்துக் கொண்டது அப்புத்தகம்.

புனைவிற்குள் புனைவு என்ற வகையில் எழுதப்பட்டிருக்கும் அந்த நாவலின் கதை மாந்தர்கள் துவக்கத்தில் ஒரே சமதளத்தில் பயணிக்கத் துவங்கி பின் இரு பிரிவாகப்பிரிந்து ஒரு பிரிவு பாத்திரங்கள் ஒரு புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருப்பதாகவும், மறு பிரிவு அந்த புத்தகத்தை வாசிக்கும் கதாபாத்திரமாகவும் அவரைச்சுற்றி வாழும் கதை மாந்தர்களாகவும் அமைந்திருக்கும் பாங்கு வியக்க வைக்கிறது. அந்தப்புத்தகமும் இரண்டாம் பிரிவு கதாபாத்திரங்களில் ஒன்றாகி விடுகிறது.

ஒரு கட்டத்தில் நாமும் பழனியப்பனோடு அந்தப்புத்தகத்தை வாசிக்கும் வாசகனாக மாறத்துவங்கிவிடுகிறோம். மிக நேர்த்தியான கட்டமைப்போடு கூடிய ஒரு கதைப்பின்னல்.

முத்துசாமியின் (முத்துஸ்வாமி இல்லை என்று அவராலேயே மறுக்கப்படுகிறது புத்தகத்தின் ஆரம்பத்தில்) பார்வைகளும், அனுபவங்களும் எந்த வித மிகைப்படுத்துதல்களும் இல்லாமல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவரோடு நட்புறவாடும் ஹாலாஸ்யம் மிக இயல்பாக அதை எதிர் கொள்ளும் பாங்கும் அதைத்தொடர்ந்த முயற்சிகளும் ஒரு நல்ல பார்வையாளனுக்கான விதிமுறகளைக் கற்றுத்தருகிறது.

நம்மை செட்டிநாட்டு செம்மண் தெருக்கெளிலும் விளாத்திகுளத்தின் உப்பேறிய காற்றுக்களிலும், மதுரையின் ரத வீதிகளிலும், திருவண்ணாமலை கிரிவலப்பாதைகளிலும், வைத்தீஸ்வரன் கோயில் குளக்கரையிலும் மட்டுமல்லாது சந்தடி மிகுந்த காசி நகர் தெருக்களிலும், யமுனை நதிக்கரைகளிலும் வெகு அநாயசமாக எடுத்துச்செல்லும் திறமை அந்த எழுத்துக்களுக்கு இருந்தது என்றே சொல்ல வேண்டும்..

கதைக்கருவின் சாத்தியக்கூறுகளை தனிமனித நம்பிக்கைகளுக்கு விடுத்துவிட்டாலும் நாவல் படைப்பின் கட்டமைப்பினால் அந்தப் புத்தகம் நம் கைகளில் சுவாசிக்கத்தொடங்குகிறது என்று சொன்னால் மிகையாகாது.

புத்தகத்தின் முடிவில் பாத்திரப்படைப்புக்களிலும், நிகழ்ச்சிகோர்ப்புக்களிலும் உள்ள சிறிதளவு ஒற்றுமை எஸ்.ராவின் யாமத்தை நினைவூட்டத்தவறுவதில்லை. ஆனால் இந்த புத்தகம் 2002ல் யாமத்திற்கு முன்னரே வெளிவந்துள்ள காரணத்தினால் யாமம் ஒரு எதேச்சையான ஒற்றுமையாகவோ அல்லது எப்பொழுதுமே நல்ல புத்தகங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை இந்த புத்தகமும் ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கருதத் தோன்றுகிறது.

ஆசிரியர் – யுவன் சந்தரசேகர் – தமிழினி பதிப்பகம் – 2002 வெளியீடு.

11 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நானும் வாசித்துள்ளேன் இதை. நல்ல கட்டுரைக்கு நன்றி.

தமிழ்நதி said...

மனதில் போட்டுக்கொண்டேன். நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற ஆவலை மீண்டும் தூண்டுகிறது உங்கள் பதிவு..வழக்கம்போலவே..

நல்லா எழுதிருக்கீங்க கிருத்திகா...

கே.என்.சிவராமன் said...

வழக்கம்போல் அழகியல் ரசனை சார்ந்து எழுதியிருக்கிறீர்கள்.

இதே எழுத்தாளரின் 'பகடையாட்டம்' (தமிழினி வெளியீடு), 'கானல் நதி' (உயிர்மை பதிப்பகம்) ஆகிய இரண்டு புதினங்களும் உங்கள் வாசிப்புக்கு உதவும் என நினைக்கிறேன்.

முடிந்தால் இவரது 'ஜென் கவிதைகள்'(உயிர்மை பதிப்பகம்) மொழிபெயர்ப்பு நூலை வாசியுங்கள். முக்கியமான நூல் அது.

தொடர்ந்து புதினங்களை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி.

தொடருங்கள்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி சுந்தர்.

நன்றி தமிழ்நதி

கிருத்திகா ஸ்ரீதர் said...

வாங்க மலர், புத்தகங்களின் மீதான காதல் பிறந்து விட்டால் அது ஒரு சுகமான தனி உலகம்தான்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி பைத்தியக்காரன். புத்தகங்களை குறித்துக்கொள்கிறேன். தங்கள் பதிவுகளைப்போல ஆழமாக தரவேண்டும் என்ற எண்ணமும் அவ்வப்போது எழுவதுண்டு.

தினேஷ் said...

இந்த புத்தகத்தை பற்றி தெரிந்து கொள்ளவும், நன்றாக அறிந்து கொள்ளவும் மற்றும் இந்த புத்தகத்தின் மிது ஒரு ஆர்வத்தையும் ஏற்ப்படுத்துகிற நல்ல பதிவு...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி தினேஷ்.. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் தான்.....

முஹம்மது ,ஹாரிஸ் said...

bangloril தமிழ் நூல் விற்கும் அங்காடி யாருக்காவது தெரி இமா
தயவு செய்து யாராவது சொல்லுங்களேன்.......

கிருத்திகா ஸ்ரீதர் said...

தங்கத்தமிழன் www.anyindian.com சென்னைல தான் இருக்கு பாருங்க எல்லாப்புத்தகம் அவங்களே அனுப்புவாங்கன்னு நினைக்கிறேன். தொலைபேசி எண் கூட இருக்கு பேசிப்பாருங்க...