Friday, August 23, 2013

வலி​ - ஆணவம் அறுக்கும்



சுய பரிசோதனை செய்துகொள்வதற்கு மிகப்பெரிய சத்திய சோதனைகள் தேவையில்லை. குளிகைகளின்றி வலியோடு போராடுவதே மிகப்பெரிய சோதனை.
ஈவிரக்கமின்றி அத்தனை வைராக்கியங்களையும் அடித்து நொறுக்கி சுய பச்சாதபத்தை கிளப்பி விடுகிறதிந்த வலி.

கடவுளைப்போல் கண்ணில் தெரியாமல் உணரமட்டுமே முடிகிறதிந்த வலியை யாரோடும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை.

தார் சாலைகளைப்பெயர்த்தெடுக்கும் ​​பொக்லைன் இயந்திரங்க்களின் குரூரத்தை ஒத்ததாயிருக்கிறது அந்த நிமிடங்கள்.

இருளடர்ந்த அறையின் ஒற்றை மூலமாய் ஒளிர்ந்துகொண்டிருக்கும் மெழுகுவர்த்தியை ஊதி அணைத்ததும் மொத்தமாய் கவியும் இருளைப்போல் தூக்கம் கலைந்த அந்த நிமிடங்களை ஆக்கிரமித்துக்கொள்கிறது வலி.

பிடிவாதிக்கும் சிறுகுழந்தையாய் என் சமாதன விரல்களை பற்ற மறுக்கும் வலியிடம் தோற்றுப்போய் நிராயுதபாணியாய் சரணடையத்தான் வேண்டியுள்ளது, அங்கே நான், தான், தன்முயற்சி என்பெதெல்லாம் வெறும் பிதற்றல்.

அகமும் புறமும் ஆக்கிரமிக்கும் அதெற்கென அடையாளம் ஏதுமின்றி இயலாமை எனும் முகமூடியிட்டுக்கொள்கிறது மனது 

4 comments:

ஜீவி said...

'எவ்வளவு காலம் கழித்து?'-- வந்த சந்தோஷத்தில் வந்து பார்த்தால்,
'வலி' என்று. 'வலி' என்கிற வார்த்தைக்குக் கூட வலிக்கும் சாபமோ!

Kavinaya said...

ஆமாம். மிகவும் உண்மை. அது எந்த வலியாயிருந்தாலும் சரி.

கிருத்திகா ஸ்ரீதர் said...

வணக்கம் ஜீவி.. இது வடிகால் அல்லவா (தமிழும் பிளாகரும்)
இத்தனை காலம் ஆனாலும் மறுமொழி கண்டதும் நேரே கண்டது போல் மகிழ்ச்சி...

நன்றி கவிநயா

இராஜராஜேஸ்வரி said...

பிடிவாதிக்கும் சிறுகுழந்தையாய் என் சமாதன விரல்களை பற்ற மறுக்கும் வலியிடம் தோற்றுப்போய் நிராயுதபாணியாய் சரணடையத்தான் வேண்டியுள்ளது, அங்கே நான், தான், தன்முயற்சி என்பெதெல்லாம் வெறும் பிதற்றல்.

வலி மிகுந்த வரிகள்..!