Thursday, March 25, 2010

முகமூடிக்கவிதைகள் -11


சில சமயம் எதுவும் வேண்டாமென
ஓடிவிடத்தான் தோன்றுகிறது
பிறகெங்கே என்ற கேள்விகளுக்கான
பதிலொன்றும் தெரியாததால் மட்டுமே
இருப்பு என்பது நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

கேள்விகள் தொலைந்துபோவதின்
நிகழ்வுக்களுக்கான நாளை
எதிர்பார்த்துக்காத்திருக்கிறோம்
மீளமுடியாது தொலைந்து போகாலமென
நாட்களை தள்ளிக்கொண்டும் இருக்கிறோம்
தெரிந்தும் தெரியாமலும்...

மீளவும் மறந்து போவதின் உண்டான
சௌகர்ய அசௌகர்யங்களுக்குள்
புதைத்துக்கொள்கிறோம்
அன்றன்றைய ஏமாற்றங்களையும்
நேற்றைய சந்தோஷங்களையும்


இருந்தும் ஏதோவொன்று எடுத்துச்செல்கிறது
அலையோடு புரண்டெழும் நுரையென

எப்போதும் நம்மோடு இருக்கும்
முகமூடிகளுக்குப்பின்னான
நாளைய நம்பிக்கைகள்.



5 comments:

Radhakrishnan said...

முகமூடிகளைக் கிழித்துவிடும் தைரியம் எவருக்கும் அத்தனை எளிதாக வருவதில்லை.

Nathanjagk said...

இருப்பு என்ற வார்த்தையின் இழுப்பு விசை அசாதாரணம்.

புரண்டெழும் நுரையென கவிதை ​மென்மையாய் கனக்கிறது..!

வாழ்த்துக்கள்.. மகிழ்ச்சியோடு!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

இருந்தும் ஏதோவொன்று எடுத்துச்செல்கிறது
அலையோடு புரண்டெழும் நுரையென //


இடைவெளி விட்டு வந்தாலும் உங்கள் கவிதை வரிகளுக்கு இருக்கும் வசீகரம் குறைவதில்லை.

ஜீவி said...

'இன்று புதிதாய்ப் பிறந்தோம்';
புதிய நம்பிக்கைகளோடு--
என்று கொள்ளலாமா?

தொலைதல், அந்த தொலைதல்
தவிர்த்த இருத்தல், எல்லாவற்றிற்குமான காரணங்கள் என்று சலித்த ஒரு பாவனையில் வரிசையாகச் சொல்லிக்கொண்டு வந்து கடைசியில் இந்தக் கவிதையையே அஸ்திவாரமாய்த் தாங்கிக்கொண்டிருக்கும் 'நாளைய நம்பிக்கைகள்' என்னும் நங்கூரத்தை
அஸ்திரமாய்ப் பிரயோகித்திருக்கிறீர்களே, அந்த அழகு கவிதைக்குப் பேரழகைக் கொடுத்தது, கிருத்திகா!




நாளைய நம்பிக்கைகள்

பாச மலர் / Paasa Malar said...

முகமூடிகள் தவிர்க்கமுடியாதவை கிருத்திகா...உங்கள் இந்த வார்ப்பு ஆழம்..அழகு..