Tuesday, July 21, 2015

புதிய தலைமுறை


அவனுக்கு அத்தனை குறுகுறுப்பாய் இருந்தது. தவறாய் தெரிந்தெடுத்து விட்டோமோ என்பதை விட இன்னமும் கொஞ்சம் நிதானமாய் தெரிந்தேடுத்திருக்கலாம் என்று தோன்றியது போலும். 23 வயதில் ஐந்து வருடக் காதல் அதிகம் என்று தோன்றியது.

ஒரு கட்டத்தில் எப்படி வெளிவருவது என்று யோசிக்கத் துவங்கிய நேரத்தில் கடவுள் போல் அவள் வந்து சொன்னாள். எங்க வீட்ல மாப்பிள பாக்கறாங்க யூ.எஸ். மாப்பிள்ளையாம், அக்கா வீட்டுக்காரருக்கு உறவாம். செப்டம்பர்ல வருவாராம், உடனே கல்யாணம் வைச்சுக்கலாமாம். இப்பவே சொன்னா விசா ரெடி பண்ணிடலாமாம். போகும் பொது  கூட்டிட்டு போகமுடியும்னு சொன்னாங்களாம்.  அப்பா என்கிட்ட முடிச்சிடட்டுமா என்று கேட்கிறார்.

ஒரே யோசனையா இருக்கு.  என்ன சொல்ற? நீ  எப்படியும் செட்டிலாக இன்னும் நாலு வருஷம் வேணும் அப்பா கிட்ட எப்படி சொல்றதுன்னு புரியலை.... இழுத்தாள்.

மேகம் விலகியது. சரின்னு சொல்லு. கூட இருக்கலாம்னு நினைச்சோம், இப்ப என்ன ப்ரெண்ட்ஸா இருக்கலாம். லைப்ல டைமுக்கு செட்டிலாகறது ரொம்ப முக்கியம் உனக்கு இது தான் கரெக்டான வயசு கல்யாணத்துக்கு.

பாசாங்குகளற்று நிர்பந்தங்கள் ஏதுமின்றி கை குலுக்கிப் பிரிந்தார்கள். பின்னாளில் எப்போதாவது கண் சொருகி பேசுவார்களாயிருக்கும். இன்று இருவரும் நிம்மதியாய் மூச்சு விட்டார்கள்.  

அவரவர்கள்  முகநூல்  பக்கங்களில் போட்டோ அப்லோட் செய்தார்கள் அவள் நிச்சயதார்த்த போட்டோவும், இவன் புதிய புதிய விதத்தில் ப்ரோபைல் போட்டோவும். இவளும் லைக்கினாள், அவனும் லைக்கினான்.

 

2 comments:

ஜீவி said...

ரொம்ப சாமர்த்தியமாய் எழுதியிருக்கிறீர்கள், வார்த்தைக்குள் வார்த்தை புதைத்து...
'காதல்' என்கிற சமாச்சாரத்தின் உண்மையான அர்த்தம் தொலைந்து போய் ரொம்ப காலமாச்சு...

கிருத்திகா ஸ்ரீதர் said...

நாம் எழுதியதை மிகச்சரியாக அதே பார்வையோடு ஒரு சிலரால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஜீவி நீங்கள் அதில் வல்லவர்.