Thursday, May 15, 2008

அப்பா......


அப்பா என் ஞாபக அடுக்குகளில் என்றுமே படர்ந்திருக்கும் ஓர் இனிமயான உறவு। சூரியனின் கதிர்கள் யாருடைய உத்தரவும் இல்லாமல் நம் பூட்டியிருக்கும் புத்தக அறைக்குள் நுழைவதுபோல் இந்த மூன்றெழுத்து வார்த்தை என்னுள் எப்போதும் திறந்து விடும் பல ஞாபகக்கதவுகளை என் உணர்வுகளின் அனுமதியின்று.

இரண்டும் பெண்களென்ற போது பெண்ணென்ற பேதமற்று என்னை எனக்கான எந்த ஒரு சுதந்திரத்திலும் இருந்து விலக்காது ஊக்குவித்தவர். என்னை பொது நூலகத்திற்கு கூட்டிச்செல்வார் அவர் படிப்பதோ தினசரிகள் நானோ அங்குள்ள சிறுவர்/பெரியவர் புத்தகங்களை முழுவதும் மேய்ந்து வரும் வரை மிகப்பொறுமயாக காத்திருப்பார். ஒரு நாள் கூட காத்திருத்தலுக்காக அலுத்துக்கொண்டதே இல்லை. என் சிறிய கிராமத்தில் 8 வயதுப்பெண் சைக்கிள் ஓட்டியதென்றால் அது நானாகத்தான் இருக்கமுடியும். அதுவும் அப்பாவின் சைக்கிளில் குரங்குப்பெடல் கவலையே படாமல் கடைத்தெரு வரைக்கும் சுற்றத்தருவார். (இது நினைவுக்கு வந்த நாளிலிருந்து தான் நான் என் மகனை நம்பி என் ஹோண்டா ஆக்டிவாவை குடுக்க ஆரம்பித்தேன்). பால்யம் தாண்டி வளர்ந்த பெண்ணாகிய போது கூட நானும் அப்பாவும் ஒன்றாகவே கடைத்தெருவில் சுற்றுவோம். மாரியப்பன் கடை அல்வாவும் அதன் தித்திப்பை சரி பண்ண கொஞ்சமே கொஞ்சம் காரபூந்தியோ மிக்சரோ கடை வாசலிலேயே சுடச்சுட அப்பாவும் பெண்ணுமாய் நின்றும் சாப்பிட்டவர்கள் நாங்களாய்த்தானிருப்போம்.

என் அம்மாவின் எதிர்ப்பையும் மீறி “நீ தைரியமா அடிச்சிட்டு வா நான் பார்த்துக்கறேன் எவன் ஒன்னைக்குத்தம் சொல்றான்னு” என்று எனக்கு பிரச்சனையான நேரங்களில் அறிவுரை?? கூறுவார். கல்யாணம் வரை எந்த ஒரு விஷயத்திலும் எனக்கும் அவர்கும் முரண் வந்ததே இல்லை, நானே தேர்ந்தெடுத்த வரனில் அவர்க்கு சிறிதே அதிர்ச்சி இருந்தாலும் பிறகு தன்னை சமாதனம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகும் அவர் உடல்நிலை காரணமாக அவரை தனித்து விடாதது மட்டுமே நான் அவருக்கென செய்ததாயிருக்கும். சகோதரிகளுக்குள் எந்த வேறு பாட்டையும் காண்பித்ததில்லை என்றாலும் நான் எப்போதுமே அப்பா செல்லம். அவர் இருந்த வரை நான் குழந்தையாகவே இருந்து வந்தேன் என்று சொன்னால் அது வெறும் வாய்வார்த்தை இல்லை. என் வீட்டுக்கதவின் சாவி எது? என் பையனின் சைக்கிள் பூட்டும் பூட்டு எது? முன் வாசல் கேட்டின் சாவி எது? இப்படி என் வீட்டின் பாதுகாப்பிற்கான எந்த முஸ்தீபுகளும் அவர் இருந்த வரை நான் அறியாதது.

இன்று நான் என் புதிய வீட்டிற்கு சென்றிருக்கும் வேளையில் எத்தனையோ விஷயங்களை அப்பா மட்டும் இருந்திருந்தால் என்று எண்ணுவதை தவிர்க்க முடியாத அளவிற்கு அவர் தனக்கான தடயங்களை எங்களோடே விட்டுச்சென்றிருக்கிறார்.

அப்பா .. இவர் பற்றி எழுத என்னில் ஆயிரம் கதைகளுண்டு. அப்பாவின் நினைவுகளை மேலதிகமாய் கிளர்த்தெழுப்பும் இன்னுமொரு நாள் வரும்வரை காத்திருக்கட்டும் அந்தக்கதைகள்

Monday, May 12, 2008

சேதி என்ன....


கனவுகள் எப்போதும் ஓர் அதிசய உலகத்தின் திறவுகோல்கள்। சில விழித்திருக்கும் நிகழ்வுகளோடு தொடர்புடையதாய் இருந்தாலும், பல நேரங்களில் உள் மன விழைதல்களின் வெளிப்பாடாகவோ அல்லது இனம் காண முடியாத நிகழ்வுகளின் தொடராகவோ வருவதுண்டு। நானின்றொரு கனவு கண்டேன் எனத்தொடங்கினால் கேட்கும் பலருக்கு இளநகை, குறுநகை, கொட்டாவி முதலியன வருவதுண்டு ஆனால் கனவுகள் பெரும்பாலும் மிக அந்தரங்கமாக ஒரு செய்தியை சொல்வதுபோல் தோன்றும்.

மிகவும் நெருக்கமான அந்த செய்திகள் நம் மனதிற்கு பலசமயம் புரியும் படியும் சிலசமயம் ஏதும் புரியாத சிக்கலாகவும் இருப்பதுண்டு. எதையும் அறிவியலாய் நோக்கும் அறிஞர்கள் இதெற்கென ஒரு தனி விளக்கங்களையும், பிராய்ட், ஆல்பிரட் ஆட்லர் போன்றவர்களையும் துணைக்கழைத்தாலும் தனிப்பட்ட மனிதர்களின் கனவுகள் அவரவர்க்கு மிகவும் நெருக்கமானவை என்பதை மறுப்பதிற்கில்லை.

எத்தனையோ நிகழ்வுகளை காட்டிச்செல்லும் கனவுகளோடு மிகச்சந்தோஷமாய் மரணிப்பது போன்று, அதுவும் மரணிக்கும் நேரத்தை குறித்து வைத்துக்கொண்டு (மாலை 5.29 ) ஒரு சங்கீதக்கச்சேரி ஆரம்பிக்கும் முன் இருக்கும் குதூகலமான மனநிலையோடு மரணத்தை எதிர்கொண்ட தருணங்களை காட்டிச்சென்றது ஓர் கனவு. அந்த அனுபவத்தை இப்போதும் மீள்நுகர்வு செய்ய முடிகிறதென்பது பெறும் அதிசயமாக உள்ளது. கனவின் எல்லைக்கோட்டிற்கு சென்று மீண்ட பின் விழித்துப்பார்க்கும் கண்களுக்கு பக்கத்திலிருந்தயில் மணி 2.29 என்றிருந்தது. செய்தி என்னவென்பது புரியாமலே அடுத்த நாளுக்கான ஆயத்தங்கள் தொடங்கியது….