Sunday, May 14, 2017

நாராயண யோகீஸ்வரர் - காளையார் கோவில் - 3

 (இறுதிப் பகுதி)
இதுதான் இணையத்தில் காணக்கிடைக்கும் செய்தி. அங்கு வந்த பெரிய பூசாரி இதில் ஒரு 30% அங்கும் இங்கும் மாற்றிச் சொன்னார்.
1801ம் ஆண்டு ஜூலை வாக்கில் சிவன் கோயில் அர்ச்சகர்கள் ஒரு புதிரான சம்பவத்தைக் கண்டனர். நள்ளீரவு அர்த்த ஜாம பூஜை முடிந்து கதவுகள் மூடப்படும். வெளியிலிருந்து ஒருவரும் கோவிலிக்குள் செல்ல இயலாது. மறு நாள் காலையில் கதவுகள் திறந்ததும் சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் மாமிசத் துண்டுகள் மற்றும் எலும்புத் துண்டுகள் இறைந்து கிடக்கும்.
பல நாட்கள் இவ்வாறு நடக்கவே அர்ச்சகர்கள் ஆச்சர்யம், அதிர்ச்சி அடைந்து இதனை ஆட்சி அதிகாரத்திலுள்ள மருது இருவரிடம் தெரிவித்து ஆகம விதிகளுக்குப் புறம்பான கருவறைக்குள் மாமிச பண்டங்கள் சிதறுதலைத் தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
மருதிருவர் ஆச்சரியம் அடைந்தவராக சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் அர்த்த ஜாம காலத்திற்குப் பின்னர் இருந்து நிகழ்வுகளை ஆராய ஓர் ஓற்றரை நியமித்தார்.
கருவறைக்குளிருந்த ஓர் ஓற்றர் கதவுகள் அடைக்கப்பட்டபின்னும் கருவறைக்குள் ஒரு சுரங்கப்பாதை வழியே முதியவர் ஒருவர் வந்து சிவலிங்கத்திற்கு நிணம் கொண்டு பூஜை செய்வதை அவ்வொற்றர் கண்டு அப்பெரியவைக் கைது செய்து மருதிருவர் முன் நிறுத்தினர்.
மருதிருவர் அப்பெரியவரின் செயல் பற்றி வினவ அப்பெரியவர் தான் ஒரு சித்தபுருஷர் என்றும் கடந்த 2000 ஆண்டு காலமாக நிண பூஜை செய்து வருவதாகவும் இன்னிண பூஜை முறை சித்தர் சாத்திரப்படி சரியானது என்றும் பதிலளித்தார். அப்பெரியவரின் கூற்றில் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் அவர் ஒரு சித்தபுருஷர் என்பதை முறைப்படி நிறுவும்படி கோரவே அப்பெரியவர் அர்ச்சகர்களின் சவாலினை ஏற்றார்.
அதன்படி அப்பெரியவர் மண்ணுக்குள் ஆழப்புதைக்கப்படுவார். அதன் பின்னர் அப்பெரியவர் வேறு எங்காவது தோன்றவேண்டும். இதன்படி ஓர் ஒற்றர் ராமேஸ்வரம் அனுப்பப்பட்டார். அப்பெரியவர் மண்ணுக்குள் புதைக்கப்பட்டார். அப்பெரியவரின் கூற்றில் மீண்டும் மீண்டும் சந்தேகமடைந்த அர்ச்சகர்கள் மருதிருவரைக் கொண்டு அப்பெரியவர் புதையுண்ட இடத்தினைத் தோண்டச் செய்தனர்.
அவ்விடம் தோண்டப்பட்டவுடன் அக்குழிக்குள் அப்பெரியவர் இன்னும் தவ நிலையிலிருந்ததையும் ராமேஸ்வரத்திற்கு அனுப்பட்ட ஒற்றனிடமிருந்து அப்பெரியவர் தற்சமயம் ராமேஸ்வரத்தில் தான் உள்ளார் என்ற செய்தி வந்ததையும் கண்டு திகைப்படைந்த அர்ச்சகர்கள் பின் வாங்கினர். தவ நிலை கலைந்த அப்பெரியவர் சித்தர் நாராயண யோகீஸ்வரர் தன் கூற்றினை நம்பாத அர்ச்சர்களை நம்பிய மருதிருவர்களுக்கு ஒரு சாபம் இட்டார்.
அதன்ப்டி அன்றிலிருந்து 90 நாட்கள் கழித்து மருதிருவரின் முடிவு அமையும் என்பது யோகீஸ்வரரின் சாபமாகும். யோகீஸ்வரரின் சாபத்திற்குள்ளான மருதிருவர் மிகச்சரியாக 90 கழித்து 24-10-1801 அதிகாலை ஆங்கிலேயர்களால் திருப்புத்தூரில் தூக்கு மேடையில் வீர மரணம் எய்தினர்.
சித்தர் நாராயண யோகீஸ்வரரின் ஜீவ சமாதி இன்றும் சிவகங்கை சமஸ்த்தான தேவஸ்தானத்தினரால் காளையார்கோவிலில் பேணப்பட்டு வருகிறது.
இவை தவிர வேறு இடங்களில் நாராயண யோகீஸ்வரரைப் பற்றி செய்திகள் இணையத்தில் இல்லை. ஆனால் வேலாம்பாள் யோகிஸ்வரி என்ற யோகினியைப் பற்றிய குறிப்புகளில் அவரது குரு என நாராயண யோகீஸ்வரரைப் பற்றியும் அவர் காளையார் கோவிலில் வாழ்ந்தவர் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. அவரே யோகினிக்கு வழிகாட்டியவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேறு எந்த சித்த புருஷர்கள் வரிசையிலும் இவரைப் பற்றிய குறிப்பு இல்லை. இவையனைத்தையும் தாண்டி அங்கு இரண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்து நமக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஜீவ சமாதி ஆன பின்னரும் உயிர்ப்புடன் நம்மை அரவணைக்கும் அந்த பெருங்கருணையின் இருப்பு மிக நன்றாகப் புரிகிறது.
இவரது குடும்பத்தை சார்ந்தவர்கள் இன்றும் இவரை குலசாமியாக வந்து வணங்கி மீள்வதாகவும் குடும்ப நிகழ்சிகளை அவரது சந்நிதியில் நடத்துவதாக அந்த பெரியவர் சொன்னதில் இருந்து கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்து தொடர்ந்தால் இன்னமும் செய்திகளை சேகரிக்க முடியும் என்று தோன்றுகிறது.
முற்றும்.

No comments: