Showing posts with label டெங்கு. Show all posts
Showing posts with label டெங்கு. Show all posts

Wednesday, November 12, 2008

டெங்கு காய்ச்சலும்- விழிப்புணர்வும்.

ரொம்ப பொறுப்பா பதிவுகள்ள கவனம் செலுத்தி எழுத ஆரம்பிச்சிருந்தேன். ஆனா என்னோட அத்தனை நேரத்தையும் ,கவனத்தையும், முக்கியமா உணர்வுகளையும் கடந்த பத்து நாட்களாக களவெடுத்துக்கொண்டு போனது என் மகனின் சுகவீனம். இது எதுக்கு இந்த டைரி குறிப்புன்னு? கேக்கலாம் ஆனாலும் மத்தவங்களுக்கு இது உபயோகப்படுமேங்கறது தான் முக்கிய காரணம். இரண்டாவது வழக்கம் போல மக்களை நிம்மதியா எவ்ளோ நாளைக்குத்தான் விட்டுவைக்கிறது அதான்.

போன வாரத்துல இரண்டாவது நாள் சின்னவன் பள்ளியில் இருந்து வரும்போது காய்ச்சல் என்று வந்தான் சரி எல்லா இடத்துலேயும் தான் இப்போ வருதேன்னு வழக்கமா குடுக்கற குரோசின், இத்யாதி இத்யாதி மருந்துகளை குடுத்து தூங்க வைச்சா இரவு ஒரு மணிக்கு மேல 103 டிகிரிக்கு காய்ச்சல் பொரிய ஆரம்பிச்சது குறையவே இல்லை. சரின்னு பக்கத்துல இருக்கற ஒரு பெரிய மருத்துவமனையை நோக்கி காலை ஆறு மணிக்கே படையெடுத்தாச்சு அங்க உள்ள அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் பார்த்துட்டு டோலோ 250 யும் இன்னும் சில மருந்து களும் கொடுத்து அனுப்பிச்சார். அந்த டோஸ் குடுத்தும் மூணு மணி நேரம் கழிச்சும் எந்த முன்னேற்றமும் இல்லை, எனக்கு எங்கயோ தப்புன்னு புரிய ஆரம்பிச்சது அதனால அதே மருத்துவமனையோட புறநோயாளிகள் பிரிவின் குழந்தைகள் மருத்துவ பகுதிக்கு போனா
முதல் தவறு புரிஞ்சது. கொடுத்திருந்த மாத்திரையின் அளவு பத்தாது அவனுடைய எடையை கணக்கில் கொண்டு குறைந்த 650வாது கொடுத்திருக்க வேண்டுமாம். அனுபவம் மிக்க அந்த மருத்துவர் அவர்கள் மருத்துவமனையின் தவறுக்காக வருந்தியபடி அளவை மாற்றிக்கொடுத்தார். எங்களுக்கு ஒரு சமாதானம் சரி இதைக்கொடுத்தால் சரியாகிவிடும் என்று, ஆனாலும் அவர் ரொம்ப தீவிரமாய் பரிசோதித்து விட்டு எதற்கும் இரத்தம் மற்றும் மூத்திரம் பரிசோதனைக்கு கொடுத்து விட்டுச்செல்லுங்கள் என்றும், நாங்கள் கொடுத்த மருந்து தவிர்த்து வேறு ஏதும் கொடுக்க வேண்டாம் என்றும் கண்டிப்பாய்ச்சொன்னார் (ஒரு வேளை அவர் சொல்லுமுன்னே என்னிடம் இருந்து மருந்து பட்டியலை சொன்னதால் இருக்கலாம் என்றும் எனக்கு தோன்றியது) ஆனாலும் ஏன் அப்படி என்று கேட்டதால் அறிகுறிகளைக்கண்டால் டெங்கு காய்ச்சல் போல் உள்ளது அதனால் டோலோ வைத்தவிர வேறு ஏதும் கொடுத்தால் அதன் வீர்யம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் ஆனால் அதுதானா என்று தெரிய ஐந்து நாட்கள் ஆகும் என்றும் அதனால அதுவரை மிக கவனாமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கூறினார். (வழக்கமாக எல்லா மருத்துவர்களும் பயப்படுத்தும் வகைதானே இது என்று எண்ணிக்கொண்டு வீட்டுக்கு அழைத்து வந்து விட்டேன்)

ஆனாலும் காய்ச்சல் 103ஐ விட்டு குறையவே இல்லை முகம் வேறு மிகவும் சிவந்து குழந்தை தவிக்க ஆரம்பித்து விட்டான். அதன் காரணமாய் மறுநாள் காலையிலேயே கொண்டுபோய் மருத்துவமனையில் அனுமத்தித்து விட்டோம். தொடர்ந்து மூன்று நாட்கள் காய்ச்சல் 103ஐ விட்டு குறையவே இல்லை எனக்கு கொஞ்சம் கொஞ்சமாய மருத்துவமனையைக்குறித்த சந்தேகம் வர ஆரம்பித்தது. ஆனால் அவர்கள் தினமும் இரத்தப்பரிசோதனை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக சனிக்கிழமையன்று காய்ச்சல் நிதானத்திற்கு வர ஆரம்பித்தது எங்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சி, ஆனால் மருத்துவர்கள் பரபரக்க ஆரம்பித்தார்கள் உடனே ஒரு இரத்த பரிசோதனைக்கு ஆணையிட்டார்கள் முடிவுகளைப்பார்த்ததும் தான் அந்த விபரீதம் புரிந்தது.

இரத்தின் வெள்ளை அனுக்களில் பிளேட்லட் கவுண்ட் குறந்திருந்தது முந்தைய நாள 2லட்சம் அனுக்கள் இருந்த நிலையில் மறுநாள் 1லட்சத்து 52ஆயிரம் மட்டுமே இருந்தது. அடுத்த 7மணி நேரத்தில் மறுபடியும் சோதிக்க வேண்டும் என்றும் குறைந்திருந்தால் ப்ளேட்லட் டிரான்ஸ்பார்ம் பண்ண வேண்டும் என்றும் அந்த வசதி இந்த மருத்துவமனையில் இல்லை என்றும் சென்னையில் மூன்று மருத்துவமனைகளே இந்த துறையில் சிறந்தது அதனால் அங்கு மாற்ற வேண்டியிருக்கும் என்றும் சொன்னார்கள், அப்போது ஆரம்பித்தது எங்கள் மன அழுத்தம்.

இரவு 10மணி சோதனையில் எண்ணிக்கை 82ஆயிரமாக குறைந்திருந்தது. 50ஆயிரத்துக்கும் குறைந்தால் அதன் விளைவுகள் மிகக்கடினம் என்றும், இரத்தம் உறையும் குணம் அதை விட்டுச்சென்று விடும் என்றும், அடி ஏதும் படாமலேயே இரத்தம் உடம்புகளில் கசிய ஆரம்பிக்கும் என்றும் கூறி அந்த மூன்று மருத்துவ மனைகளையும் தொடர்பு கொண்டார்கள் அதில் இரண்டில் இடமில்லை என்று சொல்லி மூன்றாவதில் அனுமதி கொடுத்தார்கள். இரவு 12.30மணிக்கு அந்த மருத்தவ மனையில் இருந்து விடுபட்டு மற்றொரு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தோம் ஆனால் அந்த இடைப்பட்ட 2மணி நேரத்திலேயே 10ஆயிரம் எண்ணிக்கை குறைந்து 72ஆயிரத்து வந்து விட்டது.

உடனே பையனை ஐ.சி.யூ (தீவிர சிகிச்சை பிரிவா)வில் வைத்து வைத்தியம் செய்ய ஆரம்பித்தார்கள் இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைக்குப்பின் அவனது ப்ளேட்லட் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பித்தது. கூடவே வாந்தி பேதியும் கட்டுக்குள் வந்தது.

இப்போது வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டோம் ஆனாலும் மருத்து மாத்திரைகளும் கட்டுபாடானா சாப்பாடு முறைகளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சென்னையில் பல இடங்களில் இது போன்ற டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாகவும் தமிழகத்தின் மற்ற இடங்களில் இது பரவுவதாகவும் மருத்துவர்கள் சொன்னார்கள்.

காரணம் - கொசுக்கடி

அறிகுறி
1. தொடர்ந்து அதிக அளவில் காய்ச்சல்
2. உடலில் சிகப்பு தடிமன்களோ அல்லது நிறமாற்றமோ (ரேஷஸ்)
3. இரண்டாவது மூன்றாவது நாளுக்குப்பிறகு வாந்தி பேதி

இது போன்ற அறிகுறிகளைக்காண நேரிட்டால் உடனே மருத்துவரை அணுகி விடவும். தொடர்ந்து டிரிப்ஸ் கொடுப்பதும் உரிய மருந்துகள் கொடுப்பதோடு மட்டுமின்றி இரத்தப்பரிசோதனையும் மிகவும் இன்றியமையாதது. காய்ச்சல் குறைந்து விட்டது என்று நாங்கள் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை நினைத்துப்பார்க்க கூட மனம் அஞ்சுகிறது.

எனவே கவனத்தில் கொள்ளவும் தெரிந்தவர் அறிந்தவர்களுக்கு விழிப்புணர்வை கொடுக்கவும்.