Showing posts with label எண்ணஓட்டம். Show all posts
Showing posts with label எண்ணஓட்டம். Show all posts

Friday, July 20, 2012

உறவாடும் வாக்கியங்கள்

எழுத்துக்களும், வார்த்தைகளும், வாக்கியங்களும் மனிதர்களைப் போலவே உடன் உறவாடுகிறது, உள்ளத்தை உறு மாற்றுகிறது. உற்றுப்பார்த்தால் நான் எண்ணியிருந்தது போல் இவை உணவோ இரையோ இல்லை சூட்சுமமாக நம்மோடு தொடர்ந்து உரையாடிக்கொண்டும் உறவாடிக்கொண்டுமிருக்கிறது.



சில வார்த்தைகள், மிக நெருக்கமான சிறுபிரயாத்து நட்பைப்போல் நினைவுகளை கிளறிப்போடுகிறது, சில வாக்கியங்கள் மிகப்பிரியாமானவர்களைப்போல் மனதிற்கு மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொண்டு அன்றைய நாட்களின் நடவடிக்கைகளை தீர்மானிக்கிறது. மற்ற சில வாக்கியங்களோ அடங்க மறுக்கும் பிள்ளைகளென பிடிவாதமாய் போராடி சில மணித்துளிகள் வேறொன்றையும் சிந்திக்கவொட்டாமல் ஆதிக்கம் செலுத்துகிறது.

சில பத்திகளை வாசிக்கும் நேரங்களில், ஜேசுதாஸ் “நகுமோ கனலே நினஜாலி தெலிசி” என்று திருவாரூர் பக்தவத்சலம் மிருதங்கதோடும், திருப்பணித்துரா இராதகிருஷ்ணன் கடத்தோடும், நாகை முரளிதரன் வயலினோடும் பாடி முடித்ததும், சபை நிறந்து ஆகர்ஷிக்குமோ அது போல் கூட்டமாய் நம்மை சூழ்ந்து நிற்கும். அதே சமயம் சில பக்கங்கள் வெகு ஆழத்தின் மோனத்திலிருந்து வரும் ஒ.எஸ் அருணின் “எப்படித்தான் என் உள்ளம் திறந்து என்னை அடிமை கொண்டீரோ ஸ்வாமி” என்று பாடி முடித்ததும் கை தட்டக்கூட திராணியற்று கூட்டாமாய் தன்னுள்ளே அமிழ்ந்திருப்பவர்களைப்போல் ஆழத்தில் கொண்டு நிறுத்துகிறது.

அப்பா, அம்மா, அக்கா, கணவர் குழந்தைகள், நன்பர்கள் போலவே ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் வாக்கியங்களும் குணமும் நிறமும் ஒரே மாதிரி இருப்பதில்லை, பல சமயம் இதன் நிறங்களும் குணங்களும் மாறிக்கொண்டேயிருக்கிறது. அநேக சமயங்களில் என்னையும் மீறி தறிகெட்டு வந்து விழும் சில வார்த்தைகளை உணருகையில் யாருக்கும் அடங்க மறுக்கும் என் வீட்டு கடைக்குட்டியை உருவகப்படுத்துகிறது.

சில சமயங்களில் ஒவ்வொரு கணத்துளிகளிலும் தேடித்தவிக்கும் ஒரு குருவின் அருகாமையை அளிக்கிறது, மீண்டும் சில சமயங்களில் இவ்வளவுதான் போதும் முடிந்து விட்டது ஆட்டம், என்று அத்தனையும் உதறிவிட்டு செல்லத்துடிக்கும் நானாகவும், இத்தனையையும் மீறி தினமும் உழலும் வாழ்வைக்கொண்டாடி மகிழும் சுகவாசியாகவும் தோன்றுகிறது.



உறவுகளை விட்டு விலகுவது எவ்வளவு துக்கமோ அது போல் வார்த்தைகளையும் வாக்கியங்களையும் விட்டு இருப்பதும் என்றே தோன்றுகிறது. சில பேர் அதிகம் பேசுவதும், அதிகம் வாசிப்பதும் கூட இதனால் தானோ….

Sunday, August 28, 2011

இயலாமையின் சில விழுதுகள் - வார்த்தை





தரையெங்கும் இறைந்து கிடக்கிறது வார்த்தைகள், காலில் மிதிபடும் இரணம் பொறுக்க முடியாமல் வாரிக்குமித்து குப்பை தொட்டியிலிடச்செல்கையில் தான் கவனித்தேன் அதுவும் நிரம்பி வழிகிறதென. அலுப்பாய் வீதியில் சென்று விசிறலாம் என்று போனால் அங்கேயும் மலைபோல் குமிந்திருந்தது வார்த்தைகள்

போவோர் வருவோரெல்லாம் வழியின்றி தட்டுத்தடுமாறி மிதித்தபடி சென்றுகொண்டிருந்தனர். கொட்டிக்கிடக்கும் பனித்துகள்களின் நடுவே வழுக்கிச்செல்லும் வல்லுனர்களைபோல வாகன ஓட்டிகள் லாவகமாய் கடந்து சென்றனர்.




செய்வதற்கேதுமின்றி சிறியதும் பெரியதுமாய் கூடைகூடையாய் வார்த்தைகளோடு விழித்திருக்கையில் கண்சிமிட்டிச் சிரித்தன சில வார்த்தைகள். எப்போது சிந்திய வார்த்தைகளென்ற பிரஞ்ஞை ஏதுமில்லாத காரணத்தால் என்னால் மையமாய் புன்னகைக்க மட்டுமே முடிந்தது. மறுநிமிடம் அத்தனையும் கொந்தளிப்பாய் குதிக்கத்துவங்கியது. எதற்கிப்படி எங்களை உருவாக்கி உருவாக்கி வீணடிக்கிறீர்கள் என நியாயம் கேட்கையில் பதிலேதுமின்றி இலக்கின்றிப் பார்த்திருந்தேன்.





உருவாக்கியவர்க்கே சொந்தமென்ற பொது புத்தியின் வரம்புகளுக்கடங்காத வார்த்தைகளை மீண்டும் தொலைந்து போகச்செய்யும் திறனிருந்தால் மட்டுமே இனி உருவாக்கினாலென்ன என்ற எண்ணம் மின்னி மறைந்தாலும் சாத்தியங்களின் விளிம்புகளில் கரைதட்டி நின்றதென் எண்ண அலைகள்.





இயலாமையின் உச்சத்தில் கூடைகளுக்கு நடுவே உறங்கச்செல்கையிலும் விழித்திருந்து கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தன வார்த்தைகள், ஆனாலும் அன்று பெய்த பெருமழை அத்தனை வார்த்தைகளையும் ஆற்றோடும் கடலோடும் கொண்டு சேர்த்தது, மறுநாள் கடல் முழுதும் வார்த்தைகள் ஓ என்ற சப்தத்தோடு இப்போதும் சப்திக்கிறது.





மீதமிருந்த கூடைகளின் சில வார்த்தைகளை இதோ இணையத்தில் கொஞ்சம் கொட்டிவிட்டேன் மீண்டும் ஒரு பெரூமழைக்காய் காத்திருக்கிறேன்.