Showing posts with label வாசிப்பு. Show all posts
Showing posts with label வாசிப்பு. Show all posts

Tuesday, May 19, 2015

வாசிப்பு - ஜென் புரிதல்கள்

இந்த விசித்ரமான மனதிற்கு எப்போதும் உரைகல் தேவைப்படுகிறது. பரீட்சைகளின் முடிவுகளில் திருப்தியுறும் இந்த எளிய மனதை கண்டு நகைக்கிறது உள்ளுறங்கும் முதிய மனம். ஆனாலும் கற்றுக் கொள்வதை உரசிப்பார்ப்பத்தில் களிப்புறுகிறது புத்தி.

நான் நிகழ்வுகளில் என் கேள்வியை ஏற்றிக் கொள்கிறேனா இல்லை கேள்விக்குப் பின் நிகழ்வுகளை கோர்த்துக் கொள்கிறேனா என இப்போதெல்லாம் என்னை நானே விசாரித்துக் கொள்கிறேன்.
சிறிது நாட்களுக்கு முன் ஜென் பற்றிய ஒரு விட்டேத்தி மனநிலை கைக் கொண்டது. ஆனாலும் மனம் அதை ஒரு மூலை...யில் ஒதுக்கி விட்டு தன் பாடலை இசைத்துக்கொண்டு தானிருந்தது.

கையிலிருந்த மொழிபெயர்ப்பு புத்தகம் முடிந்ததும் அலுவலுக்கு கிளம்பும் அவசரத்தில் படிக்க வேண்டிய புத்தகங்களின் தொகுப்பில் இருந்து ஒரு புத்தகத்தை உருவிச் சென்றது கை. பொதுவில் அவ்வப்போதைய மனநிலைக்கு தக்கவாறு தெரிந்தெடுப்பதே வழக்கம். இன்றைய நிகழ்ச்சி எனக்கே ஒரு வழமை மீறிய செயலாகப்பட்டாலும் காலமின்மை உந்தித்தள்ள மனதின் வியப்புக்குறியை புறந்தள்ளினேன்.
வாசிக்க ஆரம்பித்த பொழுது என் மனம் நின்று மீண்டும் ஓடத் துவங்கியது.

அது சத்குரு ஜக்கி அவர்களின். ஜென் கதைகளின் தொகுப்பு. ஒரு கதை பின் அதற்கான விளக்கம்/புரிதல் என்றபடி செல்லும் புத்தகம். இது வரையில் இது போன்ற ஒன்றை வாசித்ததில்லை.

ஒரு சில கதைகளுக்குப்பின் மனம் நான் முதலில் எழுதிய வரிகளுக்குள் சிக்கிக் கொண்டது. ஒவ்வொரு கதைகளுக்குப் பின்னும் அதனுடனான என் புரிதலை தேர்வு எழுதும் மாணவியின் மனநிலையோடு ஆராய்ந்து விட்டு அவரது விளக்கத்தை வாசிக்க ஆரம்பித்தேன்....
கதைகளின் முடிவில்.. முதல் இரண்டு பத்திகளை மீண்டும் வாசித்துக்கொள்ளலாம் பொறுமையிருந்தால்.

நம் கேள்விக்கான ஒவ்வொரு பதிலையும் பிரபஞ்சத்திலிருந்து உணர்ந்து கொள்வதொன்றே நாம் செய்ய வேண்டியது என மீண்டும் மனதிலிருத்திக்கொள்ளும் தருணம் இது.

#‎ஜன்னல்‬ - தங்கத்தாமரை பதிப்பகம் - ஜக்கி வாசுதேவ் - எழுத்தாக்கம் சுபா.

Wednesday, July 25, 2012

வெளியேற்றம் – யுவன் சந்திரசேகர் – ஒரு பகிர்வு

சில புத்தகங்கள் ஒரு சில பெயர்களைப்போலே நம் ஞாபக அடுக்குகளில் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கும், இப்போதில்லை, இப்போதில்லை என்று சில சந்திப்புக்களைத் தவிர்ப்பதைப்போல, சில புத்தகங்களை கையிலெடுத்து விட்டு இப்போதில்ல்லையென தள்ளிவைத்து விட்டு அடுத்த அடுக்குக்கு கை தாவும், ஆனாலும் சதா எண்ணத்தில் தங்கிய படியே இருக்கும். சிறு வயதில் உணவில் மிகவும் பிடித்த காய் கறியை கடைசியாக தட்டில் வைத்துக்கொண்டு சாப்பிடுவோமே அது போல் ஒரு நீண்ட காத்திருப்புக்கு நம்மை தயார் செய்துகொள்ள வைக்கும். அப்படி ஒரு புத்தகம் தான் யுவன் சந்திரசேகரின் “வெளியேற்றம்”.

இரண்டாயிரத்து பத்தின் முடிவில் ஒரு நன்பரால் பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் தான் வாங்கும் முனைப்பு வந்து இணையத்தின் மூலம் வாங்கினேன். ஆனால் மேலே சொன்னதுபோல் ஒவ்வொரு முறையும் இதை முடித்து விட்டு, அதற்குப்பின் என்று ஏதேதோ காரணங்களை உருவாக்கிக்கொண்டு நானே ஒரு நீண்ட காத்திருப்புக்குள் சிக்கிக்கொண்டேன்.

எல்லாவற்றையும் போல இதற்கும் ஒரு முடிவு வந்தாகத்தானே வேண்டும், கடந்த சில நாட்களுக்கு முன் வாசிக்கத்தொடங்கினேன், வழக்கம் போல் அந்தப்புத்தகத்தோடு வசிக்கத்தொடங்கினேன்.



விஷ்ணுபுரம் வாசித்த போது அந்நாவலின் கட்டமைப்பைக்கண்டு ஏற்பட்ட ஒரு மிகப்பெரும் வியப்பைப்போல, இந்தப்புத்தகத்தின் கட்டமைப்பும் மிக நேர்த்தியான ஓட்டத்துடன் ஒழுங்குடனும் மிகப்பெரும் வியப்பைத்தருகிறது. எந்த ஒரு இடத்திலும் சிறிதும் சுவாரஸ்யம் குறையாமல் அதே சமயம் அதற்கென எந்த ஒரு மெனக்கெடலும் தெளிந்து செல்லும் நீரோடையென கதையோட்டம் நகர்ந்து செல்கிறது.



இதை வெறும் கதையென்று சொல்ல முடியுமா என்றும் ஒரு தர்க்கம் மனதுக்குள் ஓடி மறைகிறது, சில புத்தகங்களை வாசித்து முடிக்கும் தருணங்களில் கதை மாந்தர்களில் ஒருசில பெயர்கள் மட்டுமே மனதில் தங்கும் அநேகமாய் அவர்களின் பாத்திரங்களின் மூலமாகவே என்னால் அடையாளப்படுத்த முடியும், ஆனால் வெளியேற்றத்தின் கதா பாத்திரங்கள் ஒவ்வொருவருவரும் மிகவும் நெருக்கமாய் இத்தனை நாட்களாய் நம்மோடு பழகிவரும் வெகுநாளைய நன்பர்களைப்போல் அவரவர்கள் பெயர்களோடே நினைவோட்டதில் கலந்து விடுகிறார்கள் ஆதியில் வரும் வேதமூர்த்தியின் குருவானவரைத்தவிர. குருவிற்கு பெயரென்ன அவ்வளவு முக்கியமா??

மிக இளம் வயது முதற்கொண்டே மற்றவர்களின் தொடர்பை தொழிலாக/தன் வளர்ச்சியாக மாற்றும் தன்மைகொண்ட ஆயுள்காப்பீட்டு முகவர் சந்தானம் சில வாரங்களுக்கு எந்த ஒரு பயனும் எதிர்பாராது தொடர்ச்சியாக எதையோ யாரையோ தேடிக்கொண்டு செல்லும் போதும் தனக்குள்ளே கேள்விகளை எழுப்பிக்கொள்ளும் போதும் சில சமயம் சந்தானாமாகவும் சில சமயம் நாமாகவும் உணர்கிறோம்.

கோவர்த்தனம் சொல்வது போல், அவரவர் தொடர்பான வினைகளில் இருந்து வெளியேறி அதற்கு எதிர்மறையான பாதைகளில் செல்கிறார்கள் குற்றாலிங்கம், கோவர்த்தனம், சந்தானம் போல்,

மற்றும் சிலரோ புற உலகிற்கு அதிகம் வெளிப்படாத அதே சமயம் உள்ளுக்குள் பெரும் மாற்றத்தை உணர்ந்து தன் சுயங்களிலிருந்து வெளியேறுகிறார்கள், சிவராமன், இராமலிங்கம் போல.

ஆனால் மன்னாதியும் பாண்டியும் சந்தர்ப்பங்களிலிருந்து வெளியேறி ஒருவித இலக்கின்மைக்குள் புகுந்து கொள்கிறார்கள். ஜய்ராமோ அவருடைய அனுமானங்களிலிருந்து வெளியேறி ஒரு வித சமத்துவத்திற்குள் அமர்ந்து கொள்கிறார்.

இன்னும் அறிந்து கொள்ளும் ஆவலைத்தூண்டும் ஆசானின் பாத்திரமும், தீர்த்தபதியின் உரையாடலும்… இப்படி தேடித்தேடி பேச வைக்கிறது.


குரு, தேடல், சந்நியாசம், வாழ்க்கை இவற்றிற்கான விகிதாசாரங்களை நம்முள் மாற்றிவிடுகிறது இந்தப்புத்தகம். ஆனாலும், இந்த நாவலின் ஈர்ப்பு சகிதியின் மையம் என்று கொண்டால், ஒவ்வொருவருக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் வெளியேறுதலுக்கான இரகசிய வேட்கையும் அதிகம் பேசப்படாத அதற்கான முயற்சிகளும் தானோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஆனாலும் இன்னும் நம்மால் விடுபட முடியாத குடும்பம் என்ற கட்டமைப்பின் சக்தி சித்ராவைப்பற்றியும் அவளுடைய உளைச்சல்கள் பற்றியும் நம்மை அனுதாபப்படவைக்கிறது. வெளியேற்றத்திற்கான நம்முடைய தயார்தன்மையை சோதித்துக்கொள்ளும் ஒரு அளவுகோலாகிறது.

இதில் மிகவும் யோசிக்க வைத்த ஒரு சில வரிகள் இதோ…

… வஸ்துக்களாலெ ஆன உலகம் ஒண்ணு இருக்கு அதை என் புலன்களாலே நான் அறிஞ்சிக்கிறேன் ஒங்க உப்லன்களாலே நீங்க, அவங்கவங்க புலன்கள் இருக்கற ஸ்திதியைப்பொறுத்து அவங்கங்க அறிஞ்சிக்கிறோம்…” இப்படியாகத்தொடரும் பத்தி நாம் ஒருவருக்கொருவர் பறிமாறிக்கொள்ளும் செய்திப்பரிவர்த்தனைகளின் அடிப்படையைக்குறித்து யோசிக்க வைக்கிறது.

குள்ளச்சித்தன் சரித்திரம் போல, அதிகம் மாயவிநோதங்கள் ஏதுமின்றி இயல்பு வாழ்க்கையை ஒட்டியிருப்பதும், கடைசியில் ஆசிரியர் கூறியிருக்கும் புனைவின் சதவிகிதத்தையும் கணக்கில் கொள்ளும் போது அடுத்த முறை நம் திருவண்ணாமலை பிராயணத்தில் மன்னாதியை மனம் தேடினாலும் தேடும்.

Thursday, January 12, 2012

மேடேறிச்செல்லும் நீர்நிலைகள் - 19 டி.எம்.சாரோனிலிருந்து



ஒரு புத்தகம் பத்தொன்பொது கட்டுரைகள் உள் மனதில் மிகப்பெரும் வன்முறையை நிகழ்த்த முடியுமா?


முடியும் என்கிறது பவா செல்லத்துரையின் “19 டி.எம்.சாரோனிலிருந்து”. இன்றோடு சரியாய் மூன்று நாட்களாகிறது மீண்டும் மீண்டும் அந்தப்புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன் அதிலிருந்து மீளமுடியாமல் பேரவஸ்தையில் மிதந்து கொண்டிருக்கிறேன். சரி புலம்பி முடித்தாலாவது அடுத்த புத்தகத்தை எடுக்கமுடிகிறதா பார்ப்போம் என்கிற சிறு முயற்சி தான் இத்தனை நாள் சோம்பேறித்தனத்தையும் மீறி எழுத வைக்கிறது.
என் போன்றவர்களை பொறாமைப்பட வைக்கிறது பவாவின் வாழ்வும் பார்வைகளும். கடந்து போன பால்யத்தின் மீதான நினைவாய், அடையாளமிழந்தாலும் எப்போதும் ஒளிந்திருக்கும் முதல் காதலாய், பொய்மையின், விளம்பரங்களின் பெரும் கூச்சலில் அடங்கிப்போகும் உண்மையின் குரலாய் பொங்கி வழிகிறது நிகழ்வாழ்வின் நிதர்சனங்கள். போதும் என்று எல்லாவற்றையும் விட்டு விட்டு எழுந்தோடும் விழைவிருந்தும் அந்த நொடிக்கான துணிவின்றி அத்தனையும் கட்டி இழுத்து கூடவே நகர்ந்து செல்லும் வாழ்வின் பொய்மையை,அதற்காக நாம் கற்பித்துக்கொள்ளும் காரணங்களை எள்ளி நகயாடுகிறது பவாவின் அறிமுகங்கள்.

ஆளுமைகள் என்று அடையாளப்படுத்துப்படும் அனைவரையும் மீறி நம் பார்வைகளே அதை சாத்தியப்படுத்துகிறது என்பதை நிருபிக்கின்றார்கள் துக்கத்தின் தேவதை- யின் லட்சுமியும் குரல் விற்றுப்பிழைக்கத்தெரியாத கலைஞனின் சுகந்தனும்.



விமான நிலையத்தில் காரின் சாவியை தூக்கிப்போட்டு விட்டு விமானம் ஏறும் பினு பாஸ்கரும், அம்மச்சி மரத்தடியின் – வல்சன் கூர்ம கொல்லேரியும் நம்மால் எட்ட முடியாத உயரத்தை மிக எளிதாய் சுட்டிக்காட்டுகிறார்கள், மிகுந்த வேதனையோடு ஒப்புக்கொள்கிறோம் நம் இயலாமையை.



வாழ்வைக்கொண்டாடிய கலைஞனாய் வரும் சந்தானராஜின் கட்டுரையை முன்பே படித்தது போன்ற உணர்விருந்தும் மீண்டும் பலமுறை வாசிக்க வைக்கிறது அதனுள்ளே புதைந்திருக்கும் ஆத்ம தரிசனம், இடப்பெயர்வை நிராகரித்து இயற்கைக்கு திரும்புதலின் காயத்ரி கேம்யூஸ் சொல்ல வொண்ணா பெருந்துயரத்தையும் கூடவே கலவாழ்வின் அற்புதத்தையும் காட்டுகிறார்.

மாயலோகத்தின் – அபுல்கலாமின் வேட்டியைப் பற்றி வாசிக்க நேர்ந்த பொழுதின் பெரும் சிரிப்பு பின்னிரவின் அமைதியை கிழித்து அருகே உறங்கிக்கொண்டிருந்த ஸ்ரீதரை எழுப்பவைத்தது. மிக இலகுவாய் வந்திருந்த அந்த நகைச்சுவை மிகுந்த வரிகள் வேறு எந்தப் பக்கத்திலும் காணக்கிடைக்காதவை.



இரு மகாகவிகளும் ஒரு சின்னஞ் சிறுவனும் – வேலுசரவணைக்குறித்த கட்டுரை என் குழந்தைகள் மீதான என் வன்முறையை முகத்திலறைந்தாற் போல் காட்டிக்கொடுத்தது. அந்த கொடூரமான உண்மையை தாங்கும் மனநிலையற்று குழந்தைககளைக்காணும் போதெல்லாம் குற்ற உணர்ச்சியில் பேச்சற்று போகவைக்கிறது. ஆனாலும் வெளிப்படையாய் மாறத்தயங்கும் குணநிலை தலைமுறை தலைமுறையார் நம்முள் விதைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் மீதான ஆதிக்க மனநிலையை வலியோடு உணர்த்திக்காட்டுகிறது.



எல்லாவற்றயும் தாண்டி ஒவ்வொருமுறை திருவண்ணாமலை மண்ணைத்தொடும் போதும் பொங்கிவரும் உணர்வை அப்படியே படம்பிடித்துக்காட்டுகிறது பேரொளியும் ஒரு துளியும். அங்கிருக்க நேரும் அத்தனை மணி நேரமும் பேச்சற்று ஒரு தவிப்பான மனநிலைக்குத்தள்ளப்படும் கணங்களை அப்படியே விவரிக்கிறது. இங்கேயே புதைந்து போகமாட்டோமா என ஏங்கவைக்ககும் ஏக்கத்தின் பின்னிருக்கும் தவிப்பைச்சொல்கிறது. இனிமேல் வரும் கார்த்திகைகளில் மன பாரமற்று வாயிலில் விளக்கு வைக்கமுடியுமா எனத்தெரியவில்லை. பவாவின் அப்பா பற்றிய கட்டுரையின் வாசிப்பிற்குப்பின்பு. கூட்டத்திற்கு அஞ்சியும் குடும்ப வழமையின் தேவையினாலும் கார்த்திகை தீபம் பார்க்கும் ஆசை எப்போதும் என்னில் வந்தில்லை ஆனால் இப்போது முற்றிலும் மாறிவிட்டது அடடா இன்னும் 11 மாதங்கள் காத்திருக்க வேண்டுமே எனும் ஆயாசத்தைத்தருகிறது.


இதுவரை கண்டும் கேட்டுமிராத மகேஷ் என்கிற மகேஸ்வரியும், ஜெயஸ்ரீயும், கேட்டுமட்டுமேயிருந்த கோணங்கியும், ஷைலாஜுவும் ஜென்மஜென்மாந்திரமாய் உறாவைடியதைப்போன்ற நெருக்கத்தை தந்துவிட்டார்கள்



இந்தப்புத்தகத்தை நான் தேடி வாங்க காரணமாயிருந்த யோகியைப்பற்றிய கட்டுரைகள் எனக்கு ஒரு புதிய தரிசனத்தை தந்துள்ளது. தெய்வமாய்க்கொண்டாடும் அனைவரிடையேயும் அவரை உன்னதமான நன்பராய் காட்டியிருக்கும் பவாவின் நெருக்கம் தரும் ஆன்ம உணர்வு அளவிடமுடியாதது. இதைத்தானோ யோகி எப்போதும் சொல்ல முயன்றுகொண்டிருந்தாரோ என எண்ணத்தோன்றுகிறது. யாருமற்ற சன்னதித்தெரு தரைகள் தரும் நெருக்கத்தை உள்ளே உணரவைக்கிறது.


முடிவாய் கோணங்கியின் ஆறு பெண்மக்கள் முடித்துவிட்டு தவித்த தவிப்பை விடவும் மேலாய் தவிக்க வைத்த பாவாவை மிகப்பெரும் வன்முறையாளரென சொல்லலாமோ எனக்கூடத்தோன்றுகிறது. – சொல்லலாமா??????

Sunday, September 4, 2011

சாயாவனம் – எரிந்தடங்க முடியாத எதார்த்தங்கள்



மனமெங்கும் இன்னும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது சாயாவனத்தில் வைத்த தீ. கணையாழியின் தொகுப்பிற்குப் பிறகு தொடர்ந்து கையிலிருந்த சில ஆங்கிலப்புத்தகங்களில் கவனம் சென்றதால் தமிழ் வாசிப்புக்கள் உயிர்மை, உயிரெழுத்து, சில இணைய வாசிப்புக்கள் என்பதோடு நின்றிருத்தது.
பொதுவில் என் ஆங்கிலப்புத்தக வாசிப்புகளில் தீவிரம் அதிகமிருக்காது, மிக மெல்லிய தென்றலாய் எந்த அலைக்கழிப்புகளுக்கும் ஆளாகாத வண்ணம் வாசித்தே ஆகவேண்டும், இப்போதே முடிக்க வேண்டும் என்ற எந்த முனைப்பும் இன்றியே வாசிப்பதுண்டு. நான் தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள் கூட ஒரு காரணமாயிருக்க முடியும். “Be still, it is the Wind that Sings” (Arthur Osborne) முடித்தபின் “The Journey of an American Swamy” (Rathanath Swamy) முடித்து விட்டு, Wyne Dyer’s “ There is a spiritual solution to every problem” படிக்க நினைத்திருந்த சமயத்தில் ஏதோ ஒரு உந்துதலில் கடந்த மாதம் வாங்கியும் இன்னும் தொடாதிருந்த சாயாவனத்தை நேற்றிரவு கையிலெடுத்தேன். சிதம்பரம் வைத்த தீ இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது.

“சாயாவனம் ஸ்ரீகந்தசாமியின் முதல் நாவல்” இந்த வரிகள் தந்த இன்னும் தந்துகொண்டிருக்கும் ஆச்சர்யம் அளவிடமுடியாதது. மிக எதார்த்தமான எளிமையான பாத்திரங்களைக்கொண்டு எந்த ஒரு மிகப்பெரிய திருப்பங்களையும் உள்ளடக்காது, மிகைப்படுத்தப்படாத சம்பவங்களோடு, சிதம்பரம், சிவனாண்டித்தேவர், குஞ்சம்மா இவர்களைத்தவிர வேறு எவர்பெயரும் தேவைப்படாத அதே சமயம் அந்தந்த கதாபாத்திரங்களுக்கான முக்கியத்துவம் கெடாது ஒரு மிகநீண்ட கயிற்றின் மேல் கத்திமுனையில் நடப்பது போன்று மிகத்திறமையாக முதல் நாவலிலேயே நடந்து காட்டியுளது இன்று எழுத ஆசைப்படும் அத்தனை எழுத்தாளர்களுக்குமான மிகப்பெரிய படிப்பினை.
ஜெயமோகனின் காடு தந்தது மிகப்பெரிய மன அழுத்தம் என்றால், சாயாவனம் தந்துள்ளது ஒரு விதமான மன எழுச்சி, நடந்து முடிந்தது வரமா சாபமா என்று தீர்மானிக்க முடியாத அனுமானத்தோடே சட்டென்று முடிந்து போகிறது கதை, ஆச்சி பிழிந்து போடுவது பட்டுபுடவையை மட்டுமல்ல என்பது படித்து முடித்த அத்தனை வாசகர்களும் உணர்ந்து கொள்ளும் உண்மை.
கதைப்பரப்பில் வரும் அத்தனை செடிகொடிகளையும், மரங்களையும் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதென்பது கூடுதல் மகிழ்ச்சி, இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது இயற்கையின் வாசனைகள் இந்த தலைமுறைக்கு மட்டுமாவது என்று இளைப்பாறுதல் கொள்ள முடிகிறது. (காரை – கொடிவகை இது மட்டும் என்னெவென்று புரியவில்லை தெரிந்தவர்கள் சொன்னால் நன்றி)
அடிக்கடி கடந்து செல்லும் கும்பகோணம் சென்னை நெடுஞ்சாலைகளின் ஏதோ ஒரு திருப்பத்தில் வரிசையாய் இருளில் காத்திருக்கும் கரும்பு லாரிகளை கடந்து செல்கையில் கட்டுக்கட்டாய் கரும்போடு ஆற்றோடு அடித்துசெல்லப்பட்ட பழனியும் அவனின் பாரவண்டியும் தைரியமும் கண்களில் ஒரு நொடியேனும் இனி வந்து போகும், விழுப்புரத்தின் முன்பிலும், சேத்தியாத்தோப்பின் முடிவிலும் காண நேரும் சர்க்கரை ஆலையைப் பார்க்கையில் எத்தனை சாயாவனங்களென எண்ணத்தோன்றும், ஆனாலும் சிதம்பரத்தையும் சிவனாண்டியையும் நேசிக்கவும் தோன்றும். வாழ்வின் வளர்சிதை மாற்றங்களை சிதம்பரத்தைபோலவே நம்மையும் வேறொரு கண்ணோட்டோத்தோடு ஜீரணிக்க வைக்கிறது சா.கந்தசாமியின் சாயாவனம்.


Saturday, March 26, 2011

"பைத்தியக்காரர்களும் பிழைக்கத்தெரியாதவர்களும் ஒன்று படுவோம்" - அட நாம கொஞ்சம் கூட மாறவேயில்லை.....

இருபத்து மூன்று வருடம் கழித்தும் நிலைமை அப்படியேதான் உள்ளது சொல்லப்போனால் மோசமடைந்து வருகிறது.

எண்பதுகளின் பிற்பகுதில் வந்த கணையாழியின் தொகுப்பொன்று சமீபத்தில் நன்பரின் இல்லத்திற்கு சென்ற போது கிடைத்தது படிக்க ஆரம்பித்த சில பக்கங்களில் இருந்த கட்டுரையொன்று தற்போதைய நிலைமைக்கு மிகவும் பொருந்திவரவே பகிர்ந்து கொள்கிறென்



கணையாழியின் பக்கங்களில் இருந்து


பைத்தியக்காரர்களும் பிழைக்கத்தெரியாதவர்களும் ஒன்று படுவோம்.


இன்று நாட்டின் மற்ற மாநிலங்களை விடத் தமிழகத்தில் அரசியல் நிலை மிகவும் குழப்பமடைந்து காணப்படுகிறது. கொள்கைப்பிடிப்புள்ள தீவிர இடது சாரி , வ்லதுசாரிக்கட்சிகளுக்கு இங்கு ஆதரவில்லை, தேசீயக் கட்சிகளான காங்கிரசும், தேசீய முன்னணியும் எந்தக் கழகத்தின் பின்னால் போனால் அதிக வோட்டுகள் கிடைக்கும் என்று அரசியல் ஆதயத்திற்காக அலைகிறார்கள். கொள்கையின் பேரால் கொள்ளையடித்த பிராந்தியக் கட்சிகளையோ அவற்றின் புதிய அவதாரங்களையோ நம்பி வோட்டுப் போடுவது திருடனின் கையில் பெட்டிச் சாவியைக்கொடுப்பது போலாகும்.


தமிழகத்தில் இன்றுள்ள நிலையில் இது ஒரு தவிர்க்கமுடியாத உண்மை என்ன வென்றால் களத்தில் நிற்கும் எந்த அரசியல் கட்சியையும் ஊழக லை ஒழிக்க விரும்புவோர் ஆதரிக்க முடியாது. எல்லாக் கட்சிகளிலும் அடிமட்டத்தில் தொண்டர்கள் நல்லவர்களாக இருக்கலாம், ஆனால் எல்லாக் கட்சிகளின் தலமைகளும் ஊழலில் சிக்குண்டு பொதுமக்களின் நம்பிக்கையை இழந்து விட்டன.


தமிழ்நாட்டில் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தப் பல அரசியல் சாரா இயக்கங்கள் தோன்றி நல்ல முறையில் பணியாற்றத்தொடங்கியுள்ளன. மக்கள் தூய்மை இயக்கம் மக்கள் சக்தி இயக்கம், ஸ்வச்சித் போன்ற அமைப்புகள் ஊழல் ஒழிப்பு என்ற ஒரே குறிக்கோளில் இணைந்து மக்களை அணுகினால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

இந்த இயக்கங்கள் உடனடியாகச் செய்யவேண்டிய பணி, தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் அரசியல் கட்சிகளின் தொடர்பில்லாத ஒரு நல்லவரைத்தேர்ந்தெடுத்து அவரை ஊழல் ஒழிப்பு இயக்கங்களின் சார்பில் மக்கள் பிரிதிநிதி என்று அறிவித்து நிறக வைக்க வேண்டும்.


மக்கள் பிரதிநிதிக்கு எத்தகைய தகுதிகள் இருக்க வேண்டும் என்பதில் ஊழல் ஒழிப்பு இயக்கங்களிடையே கருத்து வேறுபாடு இருக்க இடமில்லை. பொது வாழ்வில் தூய்மையானவர்களை நாணயமானவ்ர்களை, பொது தொண்டில் ஈடுபாடு உள்ளவர்களை ஜாதி மத மொழி வேறுபாடின்றி ஒவ்வொரு தொகுதியிலும் தேடிக்கண்டுபிடிக்க முயலுவது இந்த இயக்கங்களின் பொறுப்பாகும். நல்ல பெயர் இல்லதவர்களையும் தவறான வழியில் சொத்து சேர்த்தவர்களையும் அடையாளங்கண்டு அறவே ஒதுக்கி விடவேண்டும்.


நல்லவர்கள் அரசியல் சாக்கடையில் காலைவிடத் தயங்குவார்கள் என்பது உண்மைதான் மேலும் பண வசதி இல்லாதவர்கள் தேர்தலில் நிற்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டிருப்பதும் உண்மைதான். ஆனால் பொதுமக்கள் உறுதியாகச் செயல்பட்டால் இந்தப் பிரச்சினைகளையும் சமாளித்துவிடலாம். ஊழல் ஒழிப்பு இயக்கங்களின் தொண்டர்கள் கால்நடையாகவும் சைக்கிள்களிலும் தெருத் தெருவாகச் சென்று வீடு வீடாக நுழைந்து ஊழலால் விளைந்த கொடுமைகளைப்பற்றியும் நல்லவர்கள் அரசியலில் ஈடுபட மக்களின் ஆதரவைத்தேடியும் பிரசாரம் செய்ய வேண்டும்


இன்றுள்ள அரசியல் கட்சிகளை விட்டால் வேறு எவருமே ஆட்சி அமைக்க முடியாது என்பது வெறும் பிரமைதான். சுயேச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஊழல் ஒழிப்பு, நேர்மையான நிர்வாகம், வறுமையை ஒழிக்க பரவலான சிறுவேலை வாய்ப்புத்திட்டங்கள். குடிநீர் வசதி சுற்றுப்புறச் ச்சுழல் பாதுகாப்பு, பிற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களும் பெண்டிரும் சமூக நீதியின் அடிப்படையில் மேம்பாடடைய வாய்ப்புகள் போன்ற சில அடிப்படைக் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்து அவற்றை செயல்படுத்த புதிய அரசியல் அமைப்புகளை உருவாக்க முடியும்,.


ஊழலை அறவே வெறுக்கும் பைத்தியக்காரர்களும் நேர்மையை நம்பும் பிழைக்கத்தெரியாதவர்களும் ஒன்று பட்டால் தமிழகத்தை மட்டுமின்றி நாட்டையே காப்பாற்றிவிடலாம்.


நன்றி - 24-08-88 தினமணி

Tuesday, May 11, 2010

வாசிப்பு - சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு - மொழியாக்கம்


மிகவும் குற்ற உணர்ச்சிகளோடேயே எழுதிய கவிதைகளை இடம் மாற்றி வைத்துக்கொண்டிருக்கிறேன். கவிதைகள் எழுதுவதென்பது எளிதென்பதைக்காட்டிலும் உணர்வுகளை உடனே சொல்ல முடிந்த சவுகரியங்கள் மட்டுமே காரணமாயிருக்க முடியும்.


ஆராய்ந்து பார்த்தால் அடுத்தடுத்த பதிவுகளாய் கவிதைகளை இடுவதை தவிர்த்து வந்ததின் பிண்ணணி எனக்கு நானே இட்டுக்கொண்ட வேலியென இப்போது தான் புரிகிறது. ஆனாலும் கவிதையெழுதுவதின் போதை எழுதுபவரை எப்போதும் ஒரு போதத்தில் ஆழ்த்துவதென்பதும் உண்மைதானே..


மிகச்சமீபமாய் இத்தகைய போதம் தரும் புத்தகமொன்றை படிக்க நேர்ந்தது. சிதம்பர நினைவுகள் என்று பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதி ஷைலாஜா அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட அந்தப்புத்தகம் என் கைகளில் மொத்தம் இரண்டு நாட்களுக்கும் குறைவாகவே இருந்தது. பொதுவில் மிகவும் ஆழமான விரும்பத்தக்க எழுத்துக்களை மீள் வாசிப்பிற்கென எடுத்து வைத்தும் சில சமயம் மீண்டும் உடனே வாசித்தும் பழகிய எனக்கு மறுமுறை வாசிக்க வேண்டும் என்ற தேவையற்று வாசித்த வரிகள் தொடர்ந்து கண்களிலும் மனதிலும் நீர்வீழ்ச்சியின் பாதத்தில் தேங்கியிருக்கும் நீர்நிலையென கலங்கலற்றுத் தங்கிவிட்டது.

மிக எளிமையான தினப்படி நிகழ்வுகள் தந்த அவதானிப்புக்களை மிகவும் சரளமாகவும் எந்த ஒரு தாழ்வுணர்ச்சியோ இல்லை அதி உன்னத மிகப்படுத்தல்களோ இல்லாது எவருக்கோ நிகழ்ந்ததென படைக்கும் ஆற்றல் பெற்ற அந்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரரை எந்த மொழிகொண்டும் விவரிக்க இயலாது.

என்றோ இளமைக்குறும்பில் வாங்கிய முத்தத்தை நடு வயதில் மிகவும் நிதானாமாய் திருப்பித்தந்த நெகிழ்வான நிகழ்விலாகட்டும், நடுவயதில் தவறிய நிதானத்தை குற்ற உணர்வுகளோடு மீட்டெடுத்து உடனே செயல்படுத்தியதை சொல்லும் பொழுதிலாகட்டும் தன் மேதாவித்தனங்களை எந்த விதத்திலும் வெளிப்படுத்திக்கொள்ளாத எளிமை நம் எல்லோராலும் கைக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

மிகவும் வயதான தம்பதியரின் அந்நியோன்யம் கண்டு அதிசயத்த அதே மனது மற்றொரு சம்பவத்தில் தனது துணைவியாரின் சகிப்புத்தன்மையைப்பற்றி சொல்லும் பொழுது எதையெல்லாமோ எனக்காக சகித்துக்கொண்ட விஜயலெஷ்மி எனக்காக இதையும் சகித்துக்கொண்டாள்என்ற வார்த்தைகள் தரும் அழுத்தம் அபாரமானது. (படைப்புகளுக்குள்ளே படைப்பாளியை பொறுத்திப்பார்க்கும் இந்த பொது புத்தியினை எத்தனை முயன்றும் தவிர்க்கமுடிவதில்லை)

எப்பொழுதும் ஊசாலாடிக்கொண்டிருக்கும் ஆண்மனதின் அடி நாதத்தை எடுத்துக்காட்டும் இடங்களில் தான் கண்டு இரசித்த பெண்மணியின் இறப்பும் அது குறித்த குற்ற உணர்வு தரும் வலியைக் குறிக்கும் இடங்களில் வானாளாவி நிற்பது படைப்பின் உன்னதம் மட்டுமே. இதில் எடுத்துச்சொல்லாமல் விட்ட எத்தனையோ இடங்கள் இனிமேல் வாசிப்பவர்களின் அனுபவத்திற்கு விட்டுச்சென்றதேயன்றி வேறெதும் இல்லை

முன்னுரையில் ஷைலாஜா கூறியிருப்பதைப்போல் மலையாள மொழியினைக் கற்றுத்தேர்ந்தேயாகவேண்டும் என்ற முனைப்பு எழுந்துதான் உள்ளது. இடயே சிலகாலம் மறந்து போயிருந்த அந்த முனைப்பு இப்போது மீண்டும் துளிர்விடத்துவங்கியுள்ளது. தேடத்துவங்கியுள்ளேன் அரிச்சுவடிப்புத்தகங்களை.

மொழிபெயர்ப்பு என்ற எந்த நெருடல்களும் இல்லாது இந்த புத்தகத்தை படைத்துள்ள ஷைலாஜாவும் ஒரு படைப்பாளியின் அந்தஸ்த்திற்கு இணையானவர் என்று சொன்னால் அது மிகையாகது.


வாழ்வில் ஒரு முறையாவது வாசித்தேயாகவேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று என்று சொல்வதோடு ஒரு சிலருக்கு தன்னை செதுக்கிக்கொள்ளும் உளியாகவும் கூட ஆகிவிடலாம்.

Sunday, December 13, 2009

கொற்றவை - ஒரு பகிர்தல் - பகுதி 2

இயற்கையை கடவுளாக்கியது ஒரு காலம்,
இறையை இயற்கையாக்கியது மற்றொரு காலம்
ஆனால் இறையை மூதாதையாக்கினால் சிவனையோ, சக்தியையோ, திருமாலையோ, தன் குடி மூத்தோராய்க் கொண்டால். அதையும் தீந்தமிழில் தோய்த்துத்தந்தால் அதை எங்கணம் அனுபவிப்பது. எவ்வாறு வார்த்தையால் வருணிப்பது. குருடன் யானையைக்கண்டது போலாகுமா அல்லது தேனென்று எழுத்தில் சொன்னால் தேனின் சுவை அறியக்கிட்டுமோ எனவே அந்த வரிகளையே உங்கள் அனுபவித்திற்காக இங்கு பதிவிட்டிருக்கிறேன்..

படைப்பாளியின் உலகை விட வாசக மனம் சென்றடையும் இலக்குகள் அதிகமல்லவா...

கொற்றவையிலிருந்து சில வரிகள்....


"அறியமுடியாமையின் நிறம் நீலம் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். நிலத்தின் எல்லையின்மை வானம். நீலத்தின் அலைகளே கடல். நீலம் ஒரு புன்னகை கருருமைக்குள் ஒளி பரவுவதன் வண்ணம் அது. கருமையோ வெளியை முழுக்கத் தன்னுள் அடக்கிக் கொண்ட பெருவெளி. கருமையில் இருந்தே ஒவ்வொன்றும் பரு திரட்டி வருகின்றன. கருமையை அஞ்சினார்கள் அதன் முடிவற்ற வல்லமையை வணங்கவும் செய்தார்கள் ஆகவே அவர்களுக்கு நீலமே உகந்த நிறமாயிற்று. புன்னைகைக்கும் கருமையே நீலம்."

அ, இ, உ என்ற மூன்று அடிப்படை ஒலிகளை மட்டுமே மொழியாக கொண்டிருந்த அம்மக்களுக்கு தலைமுறைகள் தோறும் கைமாறிச்செல்லவேண்டிய பெரும் செல்வமென ஒரு சொல் மட்டும் இருந்தது. அம்மா என்ற அச்சொல்லை அவர்கள் குடி பாலூட்டும் விலங்கொன்றிலிருந்து கற்றுக்கொண்டது. மின்னலில் இருந்து தீயை அடைந்தது போல மூன்று ஒலிகள் கூடிய அடுப்பினுள் அச்சொல் அணையாது எரிந்துகொண்டிருந்தது. பின்பு அழகுக்கும் சிறப்புக்கும் அதுவே சொல்லாயிற்று அவர்களுக்கு உடை இருக்கவில்லை ஏனெனில் அவர்கள் ஒருவர் பிறரென உணரவில்லை. எனவே வேறு ஒரு சொல்லுக்கு அவர்கள் உல்ளம் தாவவும் இல்லை"

முழுநிலவு நாள்களில் ஒன்றில் ஏதோ ஆழத்து ஆணை ஒன்று தென்கடலில் இருந்து ஏறி வந்தது போல அவர்களில் ஒரு சிறுமி சன்னதம் கொண்டெழுந்து கைகளை விரித்து வெறிக்குரலெழுப்பி ஆடும்போது அவள் வாயிலிருந்து அதுவரை கேட்டிராத எண்ணற்ற சொற்களைக் கேட்டு அவர்கள் அஞ்சி மண்ணில் குப்புற விழுந்து பணிவார்கள்..... அலைகளுக்கும் அவளுக்கும் இடையே ஓர் உரையாடல் நடந்து கொண்டிருப்பது போல, தென்கடலாழத்தில் இருந்து எவரெவரோ அவளுடன் மொழியொன்றால் உரையாடுதல் போல"....

இடியொலித்து வல்லிரைச்சலுடன் வானாறுகள் மண்ணில் விழுந்தன. பேருருவ அன்னையும் தந்தையும் கூடி முயங்கும் உயிர்நாடகத்தை குமரிக்கோட்டின் பன்மலை அடுக்கத்துக் குகை ஒன்றில் அமர்ந்து பார்த்திருந்தான் ஒருவன் புலித்தோலாடை அணிந்து குளிருக்கு யானைத்தோல் உரியை போர்த்திருந்தான். ஒரு கையில் தன் ஆயுதமான கல்மழுவும் மறுகையில் குடி அடையாளமான மான்குறியும் வைத்திருந்தான் ஒளி கண்ட இடம் நோக்கி பருப்புகையென படையெடுக்கும் பூச்சிகளில் இருந்து தப்ப உடம்பெங்கும் சாம்பல் பூசியிருந்தான். அவனது கனத்த சடைமயிர் தோளில் விழுந்து கிடந்தது. கருநிற இமைகளும் வெண்ணிறப் படலத்தில் நீல மையவிழியுமாக வரையப்பட்ட ஒரு பொய்விழி நெற்றியில். அது அப்பழங்குடியின் தொன்மையான வேட்டை உத்தி பிறகு அது வழக்கமும் அடையாளமும் ஆயிற்று. அவனது எதிரிகள் மனிதர்களாயினும் விலங்குகளாயினும் அவன் தூங்குவதேயில்லை என்று எண்ணினார்கள். அவர்களின் உடல் தூங்கும்போதெல்லாம் அந்த வரைகண்கள் உலகை உறுத்துப்பார்த்துக் காவலிருந்தன. தூங்கிய பிறகு வேறு உலகம் விழித்துக்கொள்வதை அக்கண்மூலம் அவர்கள் கண்டார்கள்.."

"கொடுமுடியொன்றில் மேல் ஏறி அவன்வாழ்வில் முதன் முறையாக முழுத்தனிமையில் நின்றான். ஆனால் அந்த தனிமையை எல்லா உறவும் ஒக்க இருக்கையிலும் அறிந்ததுண்டு என்றும் ஓவ்வொரு இயல்பு நிலையிலும் அத்தனிமையிலேயே இருந்திருக்கிறான் என்றும் அப்போது அறிந்தான்....."

அவனுக்கு என்ன ஆயிற்று என்று குடி மூத்தோர் வினவினர் அக்கேள்வியில் ஒரு கணம் அதிர்ந்து பின்பு ஏதோ சொல்ல முயன்றான் சொல்லின்மையில் சில கணங்கள் ததும்பி பிறகு அவ்விருக்கையில் ஏறித்துள்ளி இடக்கால் வீசி வெளியை அளைய விரல்கள் காற்றில் வடிவங்களை சமைத்துச் சமைத்து அழிக்க சுழற்காற்று போலச்சுற்றி நடமிட்டு தான் கண்டதென்ன என்று அவர்களுக்கு சொல்லத்தொடங்கினான்"

யாரைக்குறித்து கூறப்படும் வார்த்தைகள், இந்த உருவகங்களுக்கு சொந்தமானவர் யார் உன்னிலா, என்னிலா, ந்ம்மிலா இல்லை யாவருள்ளும் உறைந்து நிறைந்திருக்கும் உள்ளுணர்வா... கேள்விகளுக்கான பதிலை நோக்கிய தேடலை துவக்கி வைப்பது தான் உன்னதமான படைப்பிலக்கியமோ....


தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் ஆர்வமுண்டு வருகிறேன்....

Wednesday, April 15, 2009

ஒரு பாடினியின் பரவசம் - ஜெயமோகனின் விஷ்ணுபுரம் ஒரு பார்வை

ஒரு பாடினியாய் இருந்திருக்கலாம்.
இசையும், கலையும், கவிதையும், கதையுமாய் காலம் கடத்தியிருக்கலாம்
வியாபாரம், வணிகம், அயல்நாடு, உள்நாடு தொழில்விருத்தி இது ஏதுமற்று வாழ்வின் உன்னதங்களை சுகித்திருந்திருக்கலாம்,
ஊர் ஊராய், குழுக்களாய் பயணித்திருந்திருக்கலாம்,

இப்படி எத்தனையோ "லாம்"களை என்னுள் எப்போதும் விழித்திருக்கச்செய்திருக்கும் உணர்வுகள், ஒரு சமயம் கவிஞர் விக்ரமாதித்யனை எஸ்.ரா. தன் எழுத்துக்களில் பெருநகரப் பாணன் என்று விளித்திருந்த போது அந்த வார்த்தையின் வசீகரம் என்னுள் அவ்வுணர்வுகளை மீண்டுமொருமுறை கிளர்ந்தெழுந்து ஒர் பேயாட்டம் போடச்செய்தது.

இத்தகைய பாணர்களின் வாயிலாக கதை சொல்லல் தொடங்கப்படுகிறது பின் என்றும் எத்தனையோ கதைசொல்லிகளின் வாயிலாக இன்றும் விஷ்ணுபுரத்துக்கதைகள் சொல்லப்பட்டுகொண்டேயிருக்கிறது என்று
அந்தப்புத்தகத்தின் முடிவில் நம்மால் தீர்க்கமாய் நம்பமுடிகிறது . இந்த கதைசொல்லிகளின் வரிசையில் நானும் ஒரு பாடினியாய் இங்கு ஜெயமோகனின் விஷ்ணுபுரம் பற்றி .....

பொதுவாய் புத்தகங்களை படித்து முடித்ததுமே அதைப்பற்றிய பகிர்தலை கொடுக்கத்துடிக்கும் மனதிற்கு விஷ்ணுபுரம் தந்த உணர்வு வித்யாசமானது. புத்தகத்திலுள்ள பக்கங்கள் தீர்ந்து போன பின்னரும் முழுதாய் இரண்டு வாரங்களுக்குப்பின்னரும் இன்னமும் அதன் கதைக்களத்திலிருந்து விலக முடியாத பெருமயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் இந்த அனுபவத்தை சுகமென்று சொல்வதா இல்லை இம்சையென்று சொல்வதா.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கும் கதைக்களம் நம்முள் இன்று போல் விரிகிறது, ஒவ்வோர் காட்சியின் நுணக்கமான விவரிப்பு ஒவ்வோரு நிகழ்விலும் நம் இருப்பை உணர்த்துகிறது. ஒரு திரைக்கதையை விட நேர்த்தியான காட்சி விவரிப்பின் காரணமாகவே வாசகர்களை தன்னுள் ஈர்த்து பொதிந்துகொள்கிறது கதைக்களம்.

கதை மாந்தர்களின் பாத்திரப்படைப்புகள் பெயர்கள், பெயர்கள் மற்றும் பெயர்கள், ஆரம்பத்தில் எப்படி இத்தனை பெயர்களையும் நாம் நினைவிலிருத்தி மீதப்பக்கங்களை முடிக்கப்போகிறோம் என்ற பயம் வரமாலில்லை, ஆனால் நான் மேலே சொன்னபடி நம் இருப்பை அங்கு ஆசிரியர் ஸ்தாபித்து விடுவதனால் பின்னால வரும் பாகங்களில் நாம் குழப்பமற்று பயணிக்கமுடிகிறது.

இன்றைய புற உலகில் நிகழும் காமம், கோபம், க்ரோதம், இகழ்ச்சி, துரோகம், கூடவே தேடல் இந்தக்கலைவைகளை வெவ்வேறு விகிதத்தில் இருத்தி அதில் கதை மாந்தர்களை உலவவிட்டிருப்பது மிக நேர்த்தி। ஆனால் எல்லா காலங்களில் எளிமையும், நேர்த்தியும் உள்ளவர்கள் ஒன்று மிகச்சீக்கிரம் இறந்துபடவோ இல்லை தன்னிருப்பை தொலைத்துவிடவோ விடும்படி செய்திருப்பதன் பிண்ணணி உணர்த்தும் உண்மைகள் நம் பல கேள்விகளுக்கு விடையாகலாம் (அநிருத்தன், திருவடி, திருவடி விரும்பும் அந்த தேவரடியார் சிறு பெண, கடைசிப்பகுதியில் ப்ரியையின் பாட்டி இப்படி பலர்...)। ஆனாலும் பிரளயகாலத்திற்குபின்னும் பிழைத்திருக்கும் அந்த எளிமையான மலைவாழ் மக்களின் இருப்பு நம்மை சிந்திக்கவைக்கிறது।மீண்டுமொறுமுறை மூப்பன் புரண்டு படுக்கும் பொழுது நாமெந்தப்பக்கம் என கேள்வியெழுப்ப வைக்கிறது.

தருக்க நியாயங்களின் பிண்ணணியும் அதன் நிழலில் அரங்கேறும் துரோகங்களும் மனதை சில்லிடவைக்கின்றன என்றாலும் நடப்புலக்த்தின் நீட்சிதானே என்பதும் மனதில் எழாமலில்லை.

இரண்டாம் பகுதியில் பெரும்பாலும் பல்வேறு மதங்களின் தருக்கங்களும், விவாதங்களும் நிரம்பியிருந்தாலும் அதைதாண்டி மேலே மேலே அறிந்துகொள்ளும் ஆவலைத்தருவதாகவும் அமைந்துள்ளது. பிற்பாடு அஜிதனின் விவாதங்களின் போது ஏற்படும் நிகழ்வுகளில் அவரது தருக்கங்களை மீறிய சூழ்நிலைகளே அவரது வெற்றியை தீர்மானிக்கிறது என்பது போன்ற யதார்த்த நிலைப்பாடுகள் பலவற்றை நாவலில் காணமுடிகிறது. குறிப்பாக எந்த ஒரு கதாமாந்தருக்கும் நாயகி/நாயகன் அந்தஸ்து தராது இயல்புகளோடு சித்திரிப்பது நாவலில் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. நாவலில் கடைசிவரை வரும் அந்த கருப்பு நாய் நம்முள் இனம்புரியாத விசித்திரங்களை விட்டுச்செல்கிறது.

மிக முக்கியமாக நாவலின் கட்டமைப்பின் நேர்த்தி வியக்கவைக்கிறது. இரண்டு, ஒன்று, மூன்று என்று பகுதிகளை வரிசைப்படுத்தியிருப்பின் நாவலின் வீச்சம் வெகு நிச்சயம் குலைந்திருக்கும். தற்போதையை கட்டமைப்பே நம்மை நாவலின் மூன்றாம் பகுதியில் ஒரு சாட்சியாக நிறுத்தி வைக்கிறது. ஒவ்வொரு நிகழ்வும் பிற்பகுதிகளில் வரலாறாக பல்வேறு கட்டங்களில் திருந்தி சொல்வழக்காக, வரலாறாக பேசப்படும் பொழுது வாசக மனம் அதன் பிழைகளை திருத்த தவறுவதில்லை.

கோபிலரும் ஸ்ரீதரரும், பிங்கலரும் ஒன்றல்ல வேறு வேறு மனிதர்கள் என்றும்
பத்மாட்சி என்பது ஸ்ரீதரருக்கு காட்சி தந்த யட்சியல்ல அவரோடு சில காலம் வாழ்ந்திருந்த தேவரடியார் பெண்ணென்றும்....

இது போல பல நிகழ்வுகளையும் நாம் அன்றைய காலகட்ட மனிதர்களின் அறிதல், புரிதல்களை திருத்த வேண்டியது நம் கடமை என்பது போல் மனம் துணுக்குறுவதே இந்த நாவலின் மிகப்பெரிய வெற்றி என்று தோன்றுகிறது.

ஆகச்சிறந்த நாவலின் அடையாளம் என்று மிக எளிதில் சொல்லிவிட மனம் ஆசைப்பட்டாலும் அது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சொல்வதாயிருக்கும் என்பதாலும், இன்னும் வாசிப்பில் கடக்க வேண்டிய தூரம் அதிகமுள்ளது என்ற உண்மை உள்ளிருந்து உணர்த்துவதலேயும் மிகசிறந்த வாசிப்பு அனுபவத்தை தந்த நாவல் என்று முடிக்க வேண்டியுள்ளது. ஆனால் வரலாறுகளையும், ஆலயங்களையும் குறித்த கண்ணோட்டம் விஷ்ணுபுரத்திற்கு முன் விஷ்ணுபுரத்திற்கு பின் என்று மாறிப்போனதை மாற்றும் வல்லமையை இந்நாவல் கொண்டிருக்கிறது என்பது சொல்வது மிகயாகாது.

மீள்வாசிப்பிற்கென எப்போது வேண்டுமானாலும் எடுத்துகொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகளை கொண்டிருக்கும் அடர்ந்த செறிவுள்ள நாவல்.


Tuesday, February 10, 2009

வாசிப்பின் லயம் - நா.பிச்சமூர்த்தி கதைகள்.

தொடர்ச்சியாய் ஒரு செயலைச்செய்யும் பொழுது அது ஒரே லயத்தில் இருந்தாலும் பிரச்சனை இல்லாவிட்டாலும் பிரச்சனை.

இது என்ன முதல் வரியிலேயே ஒரு குழப்பம் என்ற பயம் வேண்டாம் விளக்கமாகவே சொல்ல முயற்சிக்கிறேன்.

பூ தொடுத்துக்கொண்டிருக்கிறோம், எதையாவது பார்த்து நகலெடுத்துக்கொண்டிருக்கிறோம், இப்படி ஏதாவது ஒரு வேலையை தொடர்ந்து செய்துகொண்டே இருக்கும் வேளையில் பத்து இருபது நிமிடங்களுக்கு மேல் அந்த வேலையை நம்மால் தொடர முடிவதில்லை சலிப்படைந்து விடுகிறோம். ஏனென்ன்றால் அதில் இருக்கும் ஒற்றைத்தன்மை. எனவே நாம் செய்யும் வேலையை சுவாரசியமாக்க சின்னச்சின்ன மாற்றங்கள் அந்த வேலையில் தேவைப்படுகிறது.

ஆனால் அதே சமயம், ஒரு பாடல் தொகுப்பை கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம் பல்வேறு தாள லயங்களும், காட்சி அமைப்புக்களும் உடையதாக இருக்கலாம், அதாவது ஒரு குத்துப்பாட்டு, ஒரு மென்மையான இசை, ஒரு சாஸ்திரிய சங்கீதப்பாடல், ஒரு செமிகிளாசிக்கல் பாடல் என்று தொடர்ந்து கேட்க/பார்க்க முடிவதில்லை அதற்கு ஒரு லயம் தேவைப்படுகிறது. நம் மனம் அந்தந்த நிமிட இடைவெளிகளுக்குள் முந்தய அனுபவத்தை மாற்றிக்கொள்ளும் பொழுது சோர்வடைந்து விடுகிறது.


அது போல் ஒரு தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பை வாசித்துக்கொண்டிருக்கிறோம் எனும் சூழ்நிலையில் ஒரு நாவலை வாசிப்பது போல் சிறுகதை தொகுப்பை வாசிக்க முடிவதில்லை. ஒரோர் சிறுகதைக்கும் உண்டான அமைப்பு, கதை மாந்தர்கள் அவர்களது குணாதிசயப்படைப்புகள், கதை ஓட்டம் இவைகளையெல்லாம் நம்மால் ஒரு பக்கத் திருப்பலில் மறந்து விட்டு அடுத்த கதைக்கு செல்ல முடிவதில்லை. அதனாலேயே சில சமயம் ஒரு 80 பக்க சிறுகதை தொகுப்பை படித்து முடிக்க கூட சில நாட்கள் ஆகிவிடுகிறது. அதேசமயம் சில நாவல்களின் 300 பக்கங்களைக்கூட தொடர்ந்து வாசித்து முடித்து விட முடிகிறது.

இது தான் நடந்து கொண்டிருக்கிறது இப்போது நான் வாசித்துக்கொண்டிருக்கும் ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பில். ஒரு கதைக்கும் மறுகதைக்குமுண்டான இடைவெளி சில சமயம் நாட்கணக்காக, மணிக்கணக்காக ஊர்ந்து கொண்டிருக்கிறது. உணர்வுகளால் ஆக்கப்பட்டு அந்த உணர்வுகளின் மூலமாக தன்னையும் எதிர்புலனாக உணரவைக்கின்ற அவரின் எழுத்து தரும் வர்ண ஜாலத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. கை விரல்களினூடே வழியும் மணியென ஓரோர்புறம் சிதறி வழிகிறது நம் உணர்வுகள். தேடல் நிறந்த வாழ்வை வாழ்ந்தெவரென்றும், ஆற்றின் கரைகளில் சாட்சியாய் நிற்கின்ற படித்துறைகள் போல அவரது கதைகள் அவரது தேடலின் சாட்சிகளென்றும் படிக்க, சொல்ல கேட்டு மிகுந்த எதிர்பார்ப்புகளோடேயே இந்த புத்தகத்தை வாசிக்கத்தொடங்கினேன்.

நாம் எதிர்ப்பார்ப்புகள் மிகுதியாய் ஒரு செயலை செய்ய நேரும் வேளையில் நாம் எதிர்கொள்வது பெரும்பாலும் ஏமாற்றமாய் முடிந்துவிடும். அந்த பயமும் என்னுள் இருந்ததென்றாலும் துணிந்து வாசிக்க எடுத்தேன் ஆனால் ஒரு கவளம் சோற்றில் உண்டி நிறையும் சிறு குழந்தையென அவரது ஒவ்வோரும் கதைக்குப்பின்னும் மனம் நிறைந்து விடுகிறது.

வாழ்வைக்குறித்தான் தேடலும் கேள்விகளும், தன்னுணர்வைக்குறித்தான சுய அலசலும் உள்ள இன்றைய தலைமுறை வாசகர்கள் அவசியம் தேடி வாசிக்க வேண்டிய எழுத்துக்கள் ந.பிச்சமூர்த்தியின் கதைகள் என்பது என் எண்ணம்.

Tuesday, January 27, 2009

ஆ..மாதவன் கதைகள் - ஒரு பகிர்தல்

ஒரு வாசகனாய்/வாசகியாய் மட்டுமே இருப்பதென்பது மிகப்பெரும் ஆசுவாசமாய் இருந்திருக்குமோ என்று இப்பொழுதெல்லாம் தோன்ற ஆரம்பித்து விட்டது. ஒரு பத்தியோ, சிறுகதையோ, புத்தகமோ வாசிக்க ஆரம்பிக்கும் பொழுதே அதைக்குறித்தான எழுத்துக்கள் என் மனதில் பதிய ஆரம்பித்தது என் எழுத்துப்படலம் தொடங்கிய பிறகு தான். அதுவரை புத்தகமும், எழுத்தும், சிலசமயம் எழுத்தாளரும் மனதுக்கு மிக அருகில் நெருங்கி நிற்பது மட்டுமே நடந்து வந்தது.

ஆனாலும் பகிர்ந்து கொள்ளும் இப்பகிர்வுகள் ஒரு சிலருக்கு சில சமயம் நல்ல அறிமுகமாகும் விசித்திரங்களும் நடந்து போவதுண்டு. நானும் எத்தனையோ புத்தகங்களை, எழுத்துக்களை, எழுத்தாளர்களை மற்றவர்களின் வாசிப்பானுபவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து அது குறித்த சந்தோஷமோ, துக்கமோ அடைவதுண்டு. அதுபோன்றதொரு பகிர்தலுக்ககாவே ஆ..மாதவனின் எழுத்துலகைக்குறித்து இங்கு நான் பகிர்ந்து கொள்ள விரும்புவதும்.

மிகப்பெரும் உள்ளுணர்வுச்சிக்கலையோ, இல்லது சமூகப்பிரச்சனைகளையோ கருவாகக்கொண்டதில்லைதான் ஆ.மாதவனின் கதைகள். ஆனால் நம் போன்ற சாதரணர்களின் வாழ்வை, சக மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை எந்த முகப்பூச்சுக்களுமின்றி தோலுரித்துக்காட்டுகிறது. இலக்கியம் என்று இசைந்து எழுத முற்படாத எதார்த்தங்களே இவரது கதா பாத்திரங்கள். படைப்புலகுக்கும் வாழ்விற்கும் உண்டான இட்டு நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கிச்செல்வதல்ல இவரது எழுத்துக்கள். யதார்த்தத்தில், மனித மனத்தின் அடி ஆழத்தில் இருண்டுகிடக்கும், வக்கிரத்தை, துரோகத்தை, ஏமாற்றத்தை இயலாமயை எழுதிச்செல்கிறது இவரது எழுத்துக்கள்.

அவரது படைப்புலகில் ஆறாம் அறிவுகொண்ட இரண்டு கால் இரண்டு கை மனிதர்கள் மட்டுமல்ல ஒரு கதைக்கான கருவை, களத்தை நிர்ணயிப்பது, வெறும் சம்பாஷனைகளோ அல்லது நிகழ்சிகளோ மட்டுமல்லாது, அதை மீறிய கதைக்களமும் அதைக்குறித்தான வர்ணணைகளும் பாதி கதைக்கான கருவை நம்முள் இட்டு நிரப்பிவிடுகிறது.

திருவனந்தபுரம் கடைத்தெருவும், பத்மனாபபுரம் கோட்டையையும் காண்பவர்கள் ஆ.மாதவனின் கதைகளை படித்தவர்களானால் அவரை நினைவுகூறாது அவ்விடத்தை விட்டு அகலுவது கடினமாயிருக்கும்.

அவரது கதை மாந்தர்கள் கற்பிதப்படுத்தப்பட்ட ஒழுக்கத்தை திணிப்பதை அடியோடு களைந்தவராகவே காணப்படுகிறார்கள். பாம்பு உறங்கும் பாற்கடலில் வரும் வாசுப்போற்றியாகட்டும், அமுத கலசத்துடன் வந்து நிற்கும் மோகினி என வர்ணிக்கப்படும் கார்த்தியாயினியாகட்டும் அவர்களின் சுய சிந்தனை தெளிவுகளோடே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

திருட்டு கதையில் வரும் திருடனின் சமர்த்காரமும், நாயனம் கதா மாந்தர்கள் சாவு வீட்டிலும் சகித்துக்கொள்ள முடியாத இசைக்கொலையை எதிர்ப்பதிலாகட்டும் வாய்விட்டு சிரிக்க வைக்கும் இலகு மனநிலையை தரத்தவறுவதில்லை.

காமினிமூலம் கதையில் வரும் முஸ்தபாவை கண்முன் கொண்டு நிறுத்தும் ஆசிரியர் அவர் வாழ்வை முடிப்பதிலும் கூட அதிக சோடனைகளற்று முடித்துப்போவது ஒவ்வொரு ஆழ்மன உறக்கங்களில் ஒளிந்திருக்கும் காழ்ப்புணர்ச்சியின் திட்டமிடப்படாத வடிகால்களை நமக்கு உணர்த்திச்செல்கிறது.

கோமதியிலும், இறைச்சியிலும், ஐந்தறிவான விலங்கினத்திற்கும், ஆறாம் அறிவான மனத இனத்திற்கும் மிகப்பெரும் வேற்றுமைகள் ஏதுமில்லை என்பதை சிறிதே பூடகமாகச்சொல்லியிருப்பதும் நம்மை மீண்டும் யோசிக்கவைக்கிறது. அதுவும் கசாப்புக்காரரான நாயர் அன்னிய துக்கம் அறியாத எல்லாவனும் பாவிகதான்.. வெட்டுவேன்.. எல்லாத்தையும் வெட்டுவேன்…” என்று புலம்பும்போது நம்முள்ளும் மண்டிக்கிடக்கும் துக்கத்தை வஞ்சத்தை இனங்காட்டுகிறது.

பிரித்தறியப்பட்டுள்ள இவ்வுணர்வுகள் ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் போலில்லை, இன்னும் பகிர்ந்துக்கொள்ளப்படாத ஓருலகத்தை கோடிட்டு காட்டத்தலைப்படும் ஒரு சிறு வெளிப்பாடுதான். ஆர்வமுள்ளவர்களுக்கான ஒரு சிறு துரும்பு. மேலும் அனுபவத்தை அவரவர்கள் வாசிப்பு மட்டுமே முழுமை செய்யமுடியும் என்பது தானே உண்மை.

Saturday, November 1, 2008

மௌனியின் கதை உலகம் - ஒரு பகிர்வு


நம்மை சுற்றிலும் இருந்த கதை சொல்லிகளின் கதைகளைக்கேட்டே வளர்ந்த பால்யங்களைக் கொண்டிருந்ததாலோ என்னவோ, கதை கேட்பதைக்குறித்தான அலுப்பேதுமின்றியே நான் வளர்ந்திருக்கிறேன்.

தாட் தாட் என குதிரையில் சென்ற இராஜகுமாரன் முதல் பள்ளியின் நான்கு வாசல்களில் எந்த வாசல் வழியே மகன் வந்தாலும் ஏறிச்செல்வதற்கு ஏற்றாவாறு அத்தனை வாசல்களிலும் சாரட் வைத்து காத்திருந்த நேருவின் கதை வரை தந்தை சொல்ல கேட்டதுண்டு, இப்போதும் கதை சொல்லும் என் மகவுகளின் வார்த்தை சரிவிலேயே என் இரவு எப்போதும் கரை தட்டும்.

ஆனாலும் முன் முடிவுகளைத்தராத கதைகளையெதையும் நான் அதிகம் கண்டதில்லை. பல சமயம் சம்பவங்களின் கோர்ப்பு முடிவுகளின், கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல்களை தானாக ஈன்றெடுத்து விடும். சிலசமயம் தத்துவ விசாரங்கள் முன் சொன்ன, படித்திருந்த, கேட்டிருந்த, நம் மனம் யோசித்திருந்த தளங்களை கண்முன்னே காட்டிச்செல்லும்.

வாசிப்புகளின் தேர்வு குறித்தான கர்வம் எப்போதும் எந்த வாசகனுக்கும் இருக்காமலிருந்ததில்லை. என்னுள்ளும் எத்தனையோ கர்வங்களை விதைத்துச்சென்றிருந்த புத்தக வரிசைகளுண்டு ஆனாலும், வாசிப்பு முடிந்தும் அடுத்திப்போது என்ன செய்ய வேண்டுமென்ற எந்த யோசனையையும் கொண்டு தராது மின் விளக்குகள் போன நொடியில் ஏற்படும் மையிருட்டுக்கு கண்கள் பழகுவதற்கு முன் ஏற்படும் ஒரு அமைதியையும், குளுமையையும், அதே சமயம் குழப்பத்தையும் ஏற்படுத்தியது மௌனியின் கதைகள்.

மொத்தம் 24 கதைகளோடு சிறு பத்திகளும் சேர்ந்து மொத்தம் 336 பக்கங்கள் நம் அகவெளியின் எத்தனையோ அடுக்குகளில் இது வரை புதைந்திருந்த காதலை, குழப்பத்தை, பயத்தை, நகைச்சுவையை, தேடலை, வாழ்க்கை குறித்த முன் முடிவுகளை, மிகவும் நுண்ணிய உணர்வுகளை எந்த ஒப்பனைகளுமற்று என் முன் நடமாட வைத்தது. அடுத்து இது தான் என்ற எந்த ஒரு முடிவுகளையும் எடுக்க வொட்டாது வெறுமே பார்வையாளனாக நம்மை இருக்க வைத்து கதைகள் தானே நகர்ந்து செல்கிறது என்று சொல்லலாம்.

அவரது கதைகள் வெளிக்கிட முடியாத மனோ உணர்வுகளின் அணிவகுப்பு. நிராகரிப்பும், காதலும், சாவும், வாழ்வும் ஒரே நோக்கில் எந்த பாகுபாடுகளுமின்றி காட்சிப்படுத்தப்படுகிறது. அக்காலத்தில் புனிதப்படுத்தப்பட்ட எத்தனையோ உறவுகளை, நிலைகளை கேள்விக்குறியாக்கும் அவரது பார்வைகள் எத்தனையோ வருடங்களுக்குப் பின்பும் விகசிக்கவைக்கிறது. வாழ்க்கை குறித்த சாமானியனின் பார்வையோடு அகத்தேடல்கள் நிறைந்த ஒரு ஞானியின் பார்வையும் இணைந்த நாயகபாவம் அவரின் கதைகளில் கண்கூடாக காணமுடிகிறது. பெரும்பாலான படைப்பாளிகளின் படைப்பில் தொக்கி நிற்கும் பால் வேறுபாட்டை மௌனியின் எழுத்துக்களில் நம்மால் தேடினாலும் உணரமுடிவதில்லை. பெண்களைக்குறித்தான அவரது பார்வைகள் அசாதராணமானது. மிகுந்த நிதானமான சிந்தனை மிகுந்த கதா நாயகிகள் இவரது எழுத்துக்களில் பளிச்சிடுகிறார்கள்.

மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்த கதைகள் எத்தனையோ உண்டு. எப்போது வாசித்தாலும் அப்போது புதியதாய் புரிந்து கொள்ள அடுக்கடுக்கடுக்காய் இரகசியங்களை தன்னுள் பொதிந்து வைத்துள்ளது அவ்வெழுத்துக்கள்.

ஒரு நாயகனின் வாழ்வின் பல்வேறு சம்பவங்களின் தனித்தனி வெளிப்பாடாகவும் இக்கதைகளைக் கொள்ளலாம். முடிவில் ஒவ்வொரு கதைக்கும் உண்டான தொடர்பான சம்பவங்களைக்கொண்டு மற்றொரு கதையை கோர்க்க முயன்றால் அத்தனை கதைகளும் ஒரே சங்கிலியில் வந்து சேரும். நகுலனின் எழுத்துக்களிலும், கோபி கிருஷ்ணணின் எழுத்துக்களிலும் இத்தகைய தன்மையை கண்டிருந்தாலும் மௌனியின் கதைகள் சொல்லும் அகவெளி நமக்கு மிகவும் நெருக்கமாயிருப்பதாகவே படுகிறது. சாமானியனின் மன ஓட்டங்களை பதிவித்து சென்றுள்ளத்ய் இவ்வெழுத்துக்கள்.

ஒவ்வொரு கதைகளும் பிரசுரமாயிருக்கும் ஆண்டுகளின் குறிப்புகளும் இருப்பது நமக்கு அந்தக்கதை நிகழ்வுகளின் கால ஓட்டத்தை உணர்ந்து கொள்ள வெகு எளிதில் ஏதுவாகிறது. அத்தனை கதைகளைப்பற்றியும் எழுதும் ஆசையிருந்தாலும், ஒரு சில கதைகளை குறித்து மட்டுமாவது விரிவாக எழுதும் எண்ணமிருக்கிறது பார்ப்போம்.. எவ்வளவு தூரம் முடிகிறதென்று...