Showing posts with label ஜென். Show all posts
Showing posts with label ஜென். Show all posts

Tuesday, May 19, 2015

வாசிப்பு - ஜென் புரிதல்கள்

இந்த விசித்ரமான மனதிற்கு எப்போதும் உரைகல் தேவைப்படுகிறது. பரீட்சைகளின் முடிவுகளில் திருப்தியுறும் இந்த எளிய மனதை கண்டு நகைக்கிறது உள்ளுறங்கும் முதிய மனம். ஆனாலும் கற்றுக் கொள்வதை உரசிப்பார்ப்பத்தில் களிப்புறுகிறது புத்தி.

நான் நிகழ்வுகளில் என் கேள்வியை ஏற்றிக் கொள்கிறேனா இல்லை கேள்விக்குப் பின் நிகழ்வுகளை கோர்த்துக் கொள்கிறேனா என இப்போதெல்லாம் என்னை நானே விசாரித்துக் கொள்கிறேன்.
சிறிது நாட்களுக்கு முன் ஜென் பற்றிய ஒரு விட்டேத்தி மனநிலை கைக் கொண்டது. ஆனாலும் மனம் அதை ஒரு மூலை...யில் ஒதுக்கி விட்டு தன் பாடலை இசைத்துக்கொண்டு தானிருந்தது.

கையிலிருந்த மொழிபெயர்ப்பு புத்தகம் முடிந்ததும் அலுவலுக்கு கிளம்பும் அவசரத்தில் படிக்க வேண்டிய புத்தகங்களின் தொகுப்பில் இருந்து ஒரு புத்தகத்தை உருவிச் சென்றது கை. பொதுவில் அவ்வப்போதைய மனநிலைக்கு தக்கவாறு தெரிந்தெடுப்பதே வழக்கம். இன்றைய நிகழ்ச்சி எனக்கே ஒரு வழமை மீறிய செயலாகப்பட்டாலும் காலமின்மை உந்தித்தள்ள மனதின் வியப்புக்குறியை புறந்தள்ளினேன்.
வாசிக்க ஆரம்பித்த பொழுது என் மனம் நின்று மீண்டும் ஓடத் துவங்கியது.

அது சத்குரு ஜக்கி அவர்களின். ஜென் கதைகளின் தொகுப்பு. ஒரு கதை பின் அதற்கான விளக்கம்/புரிதல் என்றபடி செல்லும் புத்தகம். இது வரையில் இது போன்ற ஒன்றை வாசித்ததில்லை.

ஒரு சில கதைகளுக்குப்பின் மனம் நான் முதலில் எழுதிய வரிகளுக்குள் சிக்கிக் கொண்டது. ஒவ்வொரு கதைகளுக்குப் பின்னும் அதனுடனான என் புரிதலை தேர்வு எழுதும் மாணவியின் மனநிலையோடு ஆராய்ந்து விட்டு அவரது விளக்கத்தை வாசிக்க ஆரம்பித்தேன்....
கதைகளின் முடிவில்.. முதல் இரண்டு பத்திகளை மீண்டும் வாசித்துக்கொள்ளலாம் பொறுமையிருந்தால்.

நம் கேள்விக்கான ஒவ்வொரு பதிலையும் பிரபஞ்சத்திலிருந்து உணர்ந்து கொள்வதொன்றே நாம் செய்ய வேண்டியது என மீண்டும் மனதிலிருத்திக்கொள்ளும் தருணம் இது.

#‎ஜன்னல்‬ - தங்கத்தாமரை பதிப்பகம் - ஜக்கி வாசுதேவ் - எழுத்தாக்கம் சுபா.