Showing posts with label கவிதை பெண்பால்கவிதை. Show all posts
Showing posts with label கவிதை பெண்பால்கவிதை. Show all posts

Tuesday, February 15, 2011

பெண்பால் கவிதைகள் - 5



இப்படித்தான் ஆகிவிடுகிறது
சில சமயம்

எண்ணுவதற்கு ஏதுமில்லாத சமயங்களில்
எப்போதேனும் வந்துபோகிறதுன் நினைவு

எப்போதும் சுமந்தலைந்தவைகளை
எப்படித்தான் எளிதில் தொலக்கமுடிகிறதென்ற
கேள்விகளுக்கிடையில்

இப்படித்தான் ஆகிவிடுகிறது
சிலசமயம்

*******************
படர்ந்த மாசுகளுக்கிடையில்
அடையாளமற்று கிடக்கும் நீர்நிலையென
உள்ளே உறைந்து போயிருக்கிறதுன் நினைவு

இருண்ட நிலவொளியில் கடந்து போகையில்
நெஞ்சக்கூட்டுக்குள் ஊடுருவும்
ஏரிக்கரைக்காற்று
நினைவுருத்திப்போவது
மாசினடியில் மறைந்திருக்கும்
நீர்நிலையை மட்டுமல்ல

Sunday, December 27, 2009

பெண்பால் கவிதைகள் - 4


மிகப்பிரியமான இசையைப்போலவோ
ஆழ்ந்த வாசிப்பானுபவத்தைப்போலவோ
நிரம்பித்ததும்பும் கோப்பையின்
பொன்னிறத்திரவத்தைப்போலவோ
முகத்தில் மோதி விலகும் எதிர்காற்றின்
குளிர்வாடையை போலவோ
எப்போதோ தொலைபேசும்
உற்ற தோழமையை போலவோ
வசீகரத்துடனும் வாதையுடனும்
என்னுள் உன் ஞாபகங்கள்

எப்போதும் சுமக்க வழியோ மனமோ
இல்லையென்றபோதும்
ஏதோ ஓர் மூலையில்
சுகந்தமாய் மணம் வீசும்
குடும்பமாய குதூகலிக்கையிலும்...

Tuesday, November 17, 2009

பெண்பால் கவிதைகள் - 3

உள்ளே கனன்று வரும்
பெரு நெருப்பை
அவ்வப்போது விசிறிவிடும்
ஏதோ ஒரு நிகழ்வின்
அடையாளம் தெரியாத
அல்லது
அறிந்து கொள்ள விரும்பாத
அறியாமையின் கணத்தில்
வாழ்கிறது
"பெண்ணென்னும் மாயப்பிசாசு"


**********************


நீவி உடுத்தி
அதரச்சாயமிட்டு
அடர்ந்து
மையெழுதியோ எழுதாமலோ
கண்ணாடி முன்நின்று
அழகிதானடி நீயென
ஒரு முறை பலமுறை
தனக்குள் சொல்லி
பின்
படர்கையில் யாரேனும்
பகர்கையில்
விழியால் செவியுறும்
"பெண்மையின் அழகு"