Showing posts with label வாசிப்பு அனுபவம். Show all posts
Showing posts with label வாசிப்பு அனுபவம். Show all posts

Thursday, January 12, 2012

மேடேறிச்செல்லும் நீர்நிலைகள் - 19 டி.எம்.சாரோனிலிருந்து



ஒரு புத்தகம் பத்தொன்பொது கட்டுரைகள் உள் மனதில் மிகப்பெரும் வன்முறையை நிகழ்த்த முடியுமா?


முடியும் என்கிறது பவா செல்லத்துரையின் “19 டி.எம்.சாரோனிலிருந்து”. இன்றோடு சரியாய் மூன்று நாட்களாகிறது மீண்டும் மீண்டும் அந்தப்புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன் அதிலிருந்து மீளமுடியாமல் பேரவஸ்தையில் மிதந்து கொண்டிருக்கிறேன். சரி புலம்பி முடித்தாலாவது அடுத்த புத்தகத்தை எடுக்கமுடிகிறதா பார்ப்போம் என்கிற சிறு முயற்சி தான் இத்தனை நாள் சோம்பேறித்தனத்தையும் மீறி எழுத வைக்கிறது.
என் போன்றவர்களை பொறாமைப்பட வைக்கிறது பவாவின் வாழ்வும் பார்வைகளும். கடந்து போன பால்யத்தின் மீதான நினைவாய், அடையாளமிழந்தாலும் எப்போதும் ஒளிந்திருக்கும் முதல் காதலாய், பொய்மையின், விளம்பரங்களின் பெரும் கூச்சலில் அடங்கிப்போகும் உண்மையின் குரலாய் பொங்கி வழிகிறது நிகழ்வாழ்வின் நிதர்சனங்கள். போதும் என்று எல்லாவற்றையும் விட்டு விட்டு எழுந்தோடும் விழைவிருந்தும் அந்த நொடிக்கான துணிவின்றி அத்தனையும் கட்டி இழுத்து கூடவே நகர்ந்து செல்லும் வாழ்வின் பொய்மையை,அதற்காக நாம் கற்பித்துக்கொள்ளும் காரணங்களை எள்ளி நகயாடுகிறது பவாவின் அறிமுகங்கள்.

ஆளுமைகள் என்று அடையாளப்படுத்துப்படும் அனைவரையும் மீறி நம் பார்வைகளே அதை சாத்தியப்படுத்துகிறது என்பதை நிருபிக்கின்றார்கள் துக்கத்தின் தேவதை- யின் லட்சுமியும் குரல் விற்றுப்பிழைக்கத்தெரியாத கலைஞனின் சுகந்தனும்.



விமான நிலையத்தில் காரின் சாவியை தூக்கிப்போட்டு விட்டு விமானம் ஏறும் பினு பாஸ்கரும், அம்மச்சி மரத்தடியின் – வல்சன் கூர்ம கொல்லேரியும் நம்மால் எட்ட முடியாத உயரத்தை மிக எளிதாய் சுட்டிக்காட்டுகிறார்கள், மிகுந்த வேதனையோடு ஒப்புக்கொள்கிறோம் நம் இயலாமையை.



வாழ்வைக்கொண்டாடிய கலைஞனாய் வரும் சந்தானராஜின் கட்டுரையை முன்பே படித்தது போன்ற உணர்விருந்தும் மீண்டும் பலமுறை வாசிக்க வைக்கிறது அதனுள்ளே புதைந்திருக்கும் ஆத்ம தரிசனம், இடப்பெயர்வை நிராகரித்து இயற்கைக்கு திரும்புதலின் காயத்ரி கேம்யூஸ் சொல்ல வொண்ணா பெருந்துயரத்தையும் கூடவே கலவாழ்வின் அற்புதத்தையும் காட்டுகிறார்.

மாயலோகத்தின் – அபுல்கலாமின் வேட்டியைப் பற்றி வாசிக்க நேர்ந்த பொழுதின் பெரும் சிரிப்பு பின்னிரவின் அமைதியை கிழித்து அருகே உறங்கிக்கொண்டிருந்த ஸ்ரீதரை எழுப்பவைத்தது. மிக இலகுவாய் வந்திருந்த அந்த நகைச்சுவை மிகுந்த வரிகள் வேறு எந்தப் பக்கத்திலும் காணக்கிடைக்காதவை.



இரு மகாகவிகளும் ஒரு சின்னஞ் சிறுவனும் – வேலுசரவணைக்குறித்த கட்டுரை என் குழந்தைகள் மீதான என் வன்முறையை முகத்திலறைந்தாற் போல் காட்டிக்கொடுத்தது. அந்த கொடூரமான உண்மையை தாங்கும் மனநிலையற்று குழந்தைககளைக்காணும் போதெல்லாம் குற்ற உணர்ச்சியில் பேச்சற்று போகவைக்கிறது. ஆனாலும் வெளிப்படையாய் மாறத்தயங்கும் குணநிலை தலைமுறை தலைமுறையார் நம்முள் விதைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் மீதான ஆதிக்க மனநிலையை வலியோடு உணர்த்திக்காட்டுகிறது.



எல்லாவற்றயும் தாண்டி ஒவ்வொருமுறை திருவண்ணாமலை மண்ணைத்தொடும் போதும் பொங்கிவரும் உணர்வை அப்படியே படம்பிடித்துக்காட்டுகிறது பேரொளியும் ஒரு துளியும். அங்கிருக்க நேரும் அத்தனை மணி நேரமும் பேச்சற்று ஒரு தவிப்பான மனநிலைக்குத்தள்ளப்படும் கணங்களை அப்படியே விவரிக்கிறது. இங்கேயே புதைந்து போகமாட்டோமா என ஏங்கவைக்ககும் ஏக்கத்தின் பின்னிருக்கும் தவிப்பைச்சொல்கிறது. இனிமேல் வரும் கார்த்திகைகளில் மன பாரமற்று வாயிலில் விளக்கு வைக்கமுடியுமா எனத்தெரியவில்லை. பவாவின் அப்பா பற்றிய கட்டுரையின் வாசிப்பிற்குப்பின்பு. கூட்டத்திற்கு அஞ்சியும் குடும்ப வழமையின் தேவையினாலும் கார்த்திகை தீபம் பார்க்கும் ஆசை எப்போதும் என்னில் வந்தில்லை ஆனால் இப்போது முற்றிலும் மாறிவிட்டது அடடா இன்னும் 11 மாதங்கள் காத்திருக்க வேண்டுமே எனும் ஆயாசத்தைத்தருகிறது.


இதுவரை கண்டும் கேட்டுமிராத மகேஷ் என்கிற மகேஸ்வரியும், ஜெயஸ்ரீயும், கேட்டுமட்டுமேயிருந்த கோணங்கியும், ஷைலாஜுவும் ஜென்மஜென்மாந்திரமாய் உறாவைடியதைப்போன்ற நெருக்கத்தை தந்துவிட்டார்கள்



இந்தப்புத்தகத்தை நான் தேடி வாங்க காரணமாயிருந்த யோகியைப்பற்றிய கட்டுரைகள் எனக்கு ஒரு புதிய தரிசனத்தை தந்துள்ளது. தெய்வமாய்க்கொண்டாடும் அனைவரிடையேயும் அவரை உன்னதமான நன்பராய் காட்டியிருக்கும் பவாவின் நெருக்கம் தரும் ஆன்ம உணர்வு அளவிடமுடியாதது. இதைத்தானோ யோகி எப்போதும் சொல்ல முயன்றுகொண்டிருந்தாரோ என எண்ணத்தோன்றுகிறது. யாருமற்ற சன்னதித்தெரு தரைகள் தரும் நெருக்கத்தை உள்ளே உணரவைக்கிறது.


முடிவாய் கோணங்கியின் ஆறு பெண்மக்கள் முடித்துவிட்டு தவித்த தவிப்பை விடவும் மேலாய் தவிக்க வைத்த பாவாவை மிகப்பெரும் வன்முறையாளரென சொல்லலாமோ எனக்கூடத்தோன்றுகிறது. – சொல்லலாமா??????

Saturday, January 15, 2011

பிரபஞ்சனின் சிறுகதைத்தொகுப்பு - ஒரு பகிர்வு

மூளையைவிட்டு அகலமறுக்கிறது அந்த இரண்டு வரிகள் அடுத்த முறை போவு்ம்போது முதல்லியே பணத்தை வாங்கிடுங்க - நிகழ் உலகத்தின் நாயகன் கிருஷ்ணமூர்த்தியைப்போலவே நம்மையும் புரட்டிப்போட்டும் வரிகள்

மிகவும் எளிமையான மனிதர்கள், பிரச்சனைகள், நிகழ்வுகள் அதைச்சுற்றி ஓடும் எண்ண ஓட்டங்கள் படிக்க நேர்ந்த 90 கதைகளிலும் விரவிக்கிடந்த விதம் விதமான உணர்வுகள் படித்து முடிந்த இத்தனை நாட்களுக்குப்பிறகும் இதை எழுத முனையும் இந்த நேரத்தில் என்னுள் எழும்பி அலையடித்துக்கொண்டேயிருக்கிறது.

மனுஷி அம்மா வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து அழுதாள், நிச்சயமாகச் செத்து போன தங்கைக்காக அல்ல அந்த அழுகை என்று முடிக்கும் போது பெண்மனதின் பல பரிணமங்களை அதை வெளிப்படுத்த அவர்கள் தேர்ந்தெடுக்கும் உத்திகளை அதைச்சுற்றி நிகழும் மாற்றங்களை அது ஏற்படுத்தும் உணர்வுகளை படம் பிடித்துக்காட்டுகிறது.

அப்பாவு கணக்கில் 35 ருபாய் - இப்படித்தான் முடியும் என்று கதையோட்டத்தை ஆரம்பத்திலேயே யூகிக்க முடிந்தாலும் கடைசியில் கதையின் நாயகன் எழுந்து நடக்க ஆரம்பித்த நேரத்தில் நம் மனதிலும் வந்து அமர்ந்து கொள்ளும் அந்த உணர்ச்சிக்கு வார்த்தைகளில்லை.

சைக்கிள் - கதையில் நம்மை மிகச்சுலபமாக தனிமனித தன்மானதிற்கும் அவரது அபிலாஷைகளுக்குமான இடைவெளியை உணரச்செய்யும் வேளையில் வெகு நேர்த்தியாக நம்மை எந்த ஒரு விளிம்புகளுக்கும் ஒட்டாது வெளித்தள்ளிவிடுகிறார்.

பொதுவில சிறு்கதைத்தொகுப்புகளை படிக்க நேர்கையில் ஏற்படும் உணர்வுக்குழப்பங்கள் இந்த முறை என்னை பீடிக்கவில்லை. எல்லாக்கதைகளும் ஒன்றோடொன்று மிக மெல்லிய சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதை போன்றதோர் உணர்வுதான் எஞ்சியது. அதன் காரணம் பெரும்பாலும் நம்மைச்சுற்றி நிகழும் பதிவுகளை எந்த ஒரு தொடர்புமற்று கண்டுகொண்டிருக்கும் வெறும் வெளிப்பார்வைகளுக்குள் ஊடுருவியிருக்கும் காண்தன்மையின் வெளிபாடாகக்கூட இருக்கலாம்.

ஒவ்வொரு கதையாக விவரிக்க இன்னும் பாக்கியுள்ள 86 கதைகளை தனித்தனியாக எழுத முயலாததற்கான காரணம் கூட இதுவாக இருக்கலாம்.

படித்துப் பாருங்கள் தவறவிடக்கூடாத தொகுப்புகளில் இதுவும் ஒன்று என்பது என் எண்ணம்.

Friday, July 2, 2010

வாசிப்பின் வடிகால் - சிறுபத்திரிகைகள்



பள்ளி முடிந்து வரும் மாலை வேளைகளுக்காக மிகவும் காத்திருந்த நாட்களுண்டு. மிகவும் கண்டிப்பான அம்மா 6 மணி விளக்கு வைப்பதற்குள் வீட்டிற்கு வரவேண்டும், ஒருவரது வீட்டிற்குள்ளும் சென்று விளையாடக்கூடாது, யார் வீட்டு வாசலிலும் அவர்களைக்கூப்பிட என்று மற்றொரு தோழியோடு காத்திருக்க கூடாது இப்படி பல பல நிபந்தனைகள் உண்டு, பெரும்பாலும் என் தோழிகள் என்னை விளையாடக்கூப்பிட வரத்தயங்குவார்கள் "உங்க அம்மா திட்டுவாங்க" "நீ பாதில போயிடுவ" "யாரையும் கூப்பிட வரமாட்டே" இப்படி அவர்களுக்கென காரணங்களும் இருந்தது.

இவைகளிலிருந்து தப்பிக்கும் நோக்கமா இல்லை தந்தையுடனான நெருக்கமா என காரணம் புரியாமலே மாலை வேளைகளில் அவரோடு எங்களூரில் இருந்த நூலகத்திற்கு சென்று விடுவேன். அந்த நூலகம் மிக வித்யாசமாக இருக்கும். மிக உயர்ந்த மேட்டில் மிகப்பெரிய மண்டபம், திருவிழா காலங்களில் சாமி வந்து இறங்கும் ஏழாம் திருநாள் மண்டபம் ஆகிவிடும், பின் எட்டாம் திருநாள் பச்சைசாத்தி கூட அங்கிருந்து தான் கிளம்பும். ஏழாம் திருநாள் நள்ளிரவில் ஒரு பக்கம் கச்சேரி நடக்கும் பந்தலடியில் மணிகள் குலுங்க குலுங்க மாலையில் சூட்டியிருந்த பூக்கள் பாதி வாடியிருக்க தீப்பந்த வெளிச்சத்தில் சாமி சப்பரம் அந்த உயர்ந்த மண்டப முகப்பில் நிற்கும் காட்சி இப்போது நினைத்தாலும் மனதிலிருந்து அகல மறுக்கிறது. ஆனால் அதுவே மறுநாள் முன் மதிய வேளையில் பச்சை சாத்தி அலங்காரத்திற்கு முன் போய் பார்க்கும் வேளயில் மனிதர்களின் அடர்த்தியை விட பூக்களின் மணத்தை விட, கால்கள் நசநசக்கும் நீரின் ஈரத்தைவிட மண்டபத்தின் ஒரு மூலையறையில் பூட்டி வைத்திருக்கும் புத்தகங்களே மிகப்பிரியமானதாய்த்தோன்றும். திருவிழா முடியும் வரை நூலகத்திற்கு விடுமுறை மீண்டும் திறக்கும் நாளுக்காக ஆவலோடு காத்திருப்போம்.

அந்த பால்ய காலங்களில் நான் கண்ட பத்திரிகைகளில் சிலவற்றைக்கூட இன்று என்னால் காண முடிவதில்லை. இரஷ்ய எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியது அந்த நூலகம் தான். "சோவியத் யூனியன்" என்றொரு பத்திரிகை அதில் மாதம் ஒரு கதைதான் வரும் மற்றபடி பெரும் பாலும் பத்தி எழுத்துக்களும் செய்திகளுமே இருக்கும் ஆனாலும் அந்தப்புத்தகத்தின் வசீகரம் அதீதமாயிருக்கும். கூடவே மஞ்சரி, கல்கண்டு, அந்தக்கால கலைமகள், இன்னும் தனிச்சுற்றுக்கென வந்த பல பத்திரிகைகளின் பெயர் மறந்து போயிற்று. ஆனாலும் அந்த பத்திரிகைகள் தந்த நெருக்கத்தை இடைப்பட்ட சில காலங்கள் இழந்திருந்தேன். வேலை, திருமணம், குழந்தைகள் என்று நகர் நோக்கி வந்த போது பொது இதழ்கள் மட்டுமே பத்திரிகைகள் என்றாயிற்று.

ஆனால் கடந்த 6 வருடங்களாக சிற்றிதழ்களின் அறிமுகம் என்னை என் பால்யத்திற்கு கொண்டு செல்கிறது என்று சொல்வதில் பிழையொன்றும் இல்லை. அதிலும் கடந்த 6 மாதங்களாக எனை மிகவும் கவர்ந்த "அகநாழிகை" குறித்த என் எண்ணங்ளை ஒரு தோழமையுடன் பகிர்ந்து கொள்வதைப்போலவே இங்கு பேச முற்படுகிறேன்.

மிகச்சிறந்த படைப்புக்களின் மிகச்சரியான கலவை. அதிகம் பொது இதழ்பரப்பில் அறியப்படாத ஆனால் காத்திரமான படைப்புக்களைத்தரும் கலைஞர்களின் படைப்புக்கள். தொடராய் வரும் ஒரு பகுதி, சமாதனத்தின் இசை - சுபின் மேத்தா ஒரு இசைக்கலைஞனின் பரிணாமத்தின் அகமும் புறமுமாய் கண்முன் நிறுத்தும் பகுதி
உள்ளும் புறமுமாய் மனதைப் புரட்டிப்போடவைக்கும் பாத்திரங்களையும் மொழிக்கட்டமைப்புக்களையும் கொண்ட கதைகள் (இருளில் தொலைந்தவர்களின் துர்க்கனவுகள் - கே பாலமுருகன்) தேர்ந்தெடுத்த நேர்காணல்கள், அதிகம் அடைத்துக்கொள்ளாத விளம்பரங்கள், எல்வற்றிலும் மேலாக மிகவும் எளிமையான தலையங்கங்கள்.

சாதரணணின் நியாயங்களை எழுதிப்பார்க்கும் உத்திகளைக்கொண்ட அகநாழிகை வாசுதேவனின் எழுத்து இது வரை வந்த அத்தனை இதழ்களிலும் இடம் பிடித்திருக்கும் நேர்த்தியான அட்டைப்படச்சித்திரங்கள் என எல்லாவிதத்திலும் ஒரு சாமானியனின் முயற்சியை அசாதாரணமாக்கிகாட்டுகிறது.

ஆசிரியர் கவனத்துக்கு கொண்டு வரவேண்டிய விஷயம் ஒன்றும் உண்டு அது மிகச்சிறிய எழுத்துக்கள் பயணத்தின் போது படிக்க முடிவதில்லை (வயதாகிவிட்டதோ) அது போக என் குற்ற உணர்ச்சியும் ஒன்றுண்டு இந்த இதழுக்காக எனக்கும் சேர்த்து சந்தா செலுத்திய ஜ்யோவ்ராம் சுந்தருக்கு இன்னும் நான் திருப்பித்தராத பாக்கி.

வாழ்த்துக்கள் வாசுதேவனுக்கும் அகநாழிகைக்கும்.


Friday, March 28, 2008

கைகளில் சுவாசித்த புத்தகம் – குள்ளச்சித்தன் சரித்திரம்,

ஒரு நாள் பேச்சுவாக்கில் அதான் ஜீடாக் வாக்கில் பேசிக்கொண்டு இருக்கும் போது உரையாடல் மனித மனத்தில் ஆழ் மனதின் நம்பிக்கைகள் பற்றி திரும்பிய நேரத்தில் ஒரு நன்பரால் பரிந்துரைக்கப்பட்டது இந்தப் புத்தகம். எதனாலோ அன்றே அந்தப்புத்தகத்தை வாங்கக்கூடிய சந்தர்ப்பமும் அமைந்து விட்டது. (வழக்கத்தில் பல நாட்கள் நினைத்து கை கூடி வராமல் என் கைப்பையில் பதுங்கியிருக்கும் சிறு குறிப்பு நோட்டுக்குள் புத்தகங்களின் பெயர்கள் சில சமயம் மாதக்கணக்கில் குடியிருக்கும்). ஆனால் இந்தப் புத்தகத்தை வாங்கும் வேளையில் எதிர்பாராத விதமாக கோணங்கியின் புத்தகம் ஒன்றையும் வாங்க முடிந்ததால் முதல் ஈர்ப்பை கோணங்கியின் புத்தகமே இழுத்துக்கொண்டது. குள்ளச்சித்தன் சரித்திரம் எனும் இந்தப்புத்தகம் என் புத்தக அலமாரிக்குள் செல்லாது எப்போதும் என்னைப்பார்த்த படி என் கவனத்தை ஈர்த்தபடி என் மேசை முகட்டில் குடியிருந்தது. படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை இருப்பில் வைத்து விட்டு கோணங்கியை வாசிக்கத்துவங்கினேன். பின் இயல்பாக இந்தப்புதிய புத்தகம் என்னை ஆகர்ஷிக்கத்துவங்கியது.

புத்தகத்தின் தலைப்பு குள்ளச்சித்தன் சரித்திரம் என்பதை கேட்டதில்/கண்டதில் இருந்து எனக்குள் ஒரு சிறு உதைப்பு ஒருவேளை இந்திரா பார்த்தசாரதி வகையை சார்ந்து இருக்குமோ என்று ஆனாலும் பரிந்துரைத்திருத்த நன்பரின் வாசிப்பு அலைவரிசை பல நேரங்களில் என்னோடு ஒத்துப்போயிருப்பதால் சிறிதே இருந்த தயக்கத்தை ஒதுக்கி விட்டு வாசிக்கத்துவங்கினேன். என்னை முழுதுமாய் தன்னுள் மூழ்கடித்துக் கொண்டது அப்புத்தகம்.

புனைவிற்குள் புனைவு என்ற வகையில் எழுதப்பட்டிருக்கும் அந்த நாவலின் கதை மாந்தர்கள் துவக்கத்தில் ஒரே சமதளத்தில் பயணிக்கத் துவங்கி பின் இரு பிரிவாகப்பிரிந்து ஒரு பிரிவு பாத்திரங்கள் ஒரு புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருப்பதாகவும், மறு பிரிவு அந்த புத்தகத்தை வாசிக்கும் கதாபாத்திரமாகவும் அவரைச்சுற்றி வாழும் கதை மாந்தர்களாகவும் அமைந்திருக்கும் பாங்கு வியக்க வைக்கிறது. அந்தப்புத்தகமும் இரண்டாம் பிரிவு கதாபாத்திரங்களில் ஒன்றாகி விடுகிறது.

ஒரு கட்டத்தில் நாமும் பழனியப்பனோடு அந்தப்புத்தகத்தை வாசிக்கும் வாசகனாக மாறத்துவங்கிவிடுகிறோம். மிக நேர்த்தியான கட்டமைப்போடு கூடிய ஒரு கதைப்பின்னல்.

முத்துசாமியின் (முத்துஸ்வாமி இல்லை என்று அவராலேயே மறுக்கப்படுகிறது புத்தகத்தின் ஆரம்பத்தில்) பார்வைகளும், அனுபவங்களும் எந்த வித மிகைப்படுத்துதல்களும் இல்லாமல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவரோடு நட்புறவாடும் ஹாலாஸ்யம் மிக இயல்பாக அதை எதிர் கொள்ளும் பாங்கும் அதைத்தொடர்ந்த முயற்சிகளும் ஒரு நல்ல பார்வையாளனுக்கான விதிமுறகளைக் கற்றுத்தருகிறது.

நம்மை செட்டிநாட்டு செம்மண் தெருக்கெளிலும் விளாத்திகுளத்தின் உப்பேறிய காற்றுக்களிலும், மதுரையின் ரத வீதிகளிலும், திருவண்ணாமலை கிரிவலப்பாதைகளிலும், வைத்தீஸ்வரன் கோயில் குளக்கரையிலும் மட்டுமல்லாது சந்தடி மிகுந்த காசி நகர் தெருக்களிலும், யமுனை நதிக்கரைகளிலும் வெகு அநாயசமாக எடுத்துச்செல்லும் திறமை அந்த எழுத்துக்களுக்கு இருந்தது என்றே சொல்ல வேண்டும்..

கதைக்கருவின் சாத்தியக்கூறுகளை தனிமனித நம்பிக்கைகளுக்கு விடுத்துவிட்டாலும் நாவல் படைப்பின் கட்டமைப்பினால் அந்தப் புத்தகம் நம் கைகளில் சுவாசிக்கத்தொடங்குகிறது என்று சொன்னால் மிகையாகாது.

புத்தகத்தின் முடிவில் பாத்திரப்படைப்புக்களிலும், நிகழ்ச்சிகோர்ப்புக்களிலும் உள்ள சிறிதளவு ஒற்றுமை எஸ்.ராவின் யாமத்தை நினைவூட்டத்தவறுவதில்லை. ஆனால் இந்த புத்தகம் 2002ல் யாமத்திற்கு முன்னரே வெளிவந்துள்ள காரணத்தினால் யாமம் ஒரு எதேச்சையான ஒற்றுமையாகவோ அல்லது எப்பொழுதுமே நல்ல புத்தகங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை இந்த புத்தகமும் ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கருதத் தோன்றுகிறது.

ஆசிரியர் – யுவன் சந்தரசேகர் – தமிழினி பதிப்பகம் – 2002 வெளியீடு.