Showing posts with label பகிர்வு. Show all posts
Showing posts with label பகிர்வு. Show all posts

Wednesday, July 25, 2012

வெளியேற்றம் – யுவன் சந்திரசேகர் – ஒரு பகிர்வு

சில புத்தகங்கள் ஒரு சில பெயர்களைப்போலே நம் ஞாபக அடுக்குகளில் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கும், இப்போதில்லை, இப்போதில்லை என்று சில சந்திப்புக்களைத் தவிர்ப்பதைப்போல, சில புத்தகங்களை கையிலெடுத்து விட்டு இப்போதில்ல்லையென தள்ளிவைத்து விட்டு அடுத்த அடுக்குக்கு கை தாவும், ஆனாலும் சதா எண்ணத்தில் தங்கிய படியே இருக்கும். சிறு வயதில் உணவில் மிகவும் பிடித்த காய் கறியை கடைசியாக தட்டில் வைத்துக்கொண்டு சாப்பிடுவோமே அது போல் ஒரு நீண்ட காத்திருப்புக்கு நம்மை தயார் செய்துகொள்ள வைக்கும். அப்படி ஒரு புத்தகம் தான் யுவன் சந்திரசேகரின் “வெளியேற்றம்”.

இரண்டாயிரத்து பத்தின் முடிவில் ஒரு நன்பரால் பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் தான் வாங்கும் முனைப்பு வந்து இணையத்தின் மூலம் வாங்கினேன். ஆனால் மேலே சொன்னதுபோல் ஒவ்வொரு முறையும் இதை முடித்து விட்டு, அதற்குப்பின் என்று ஏதேதோ காரணங்களை உருவாக்கிக்கொண்டு நானே ஒரு நீண்ட காத்திருப்புக்குள் சிக்கிக்கொண்டேன்.

எல்லாவற்றையும் போல இதற்கும் ஒரு முடிவு வந்தாகத்தானே வேண்டும், கடந்த சில நாட்களுக்கு முன் வாசிக்கத்தொடங்கினேன், வழக்கம் போல் அந்தப்புத்தகத்தோடு வசிக்கத்தொடங்கினேன்.



விஷ்ணுபுரம் வாசித்த போது அந்நாவலின் கட்டமைப்பைக்கண்டு ஏற்பட்ட ஒரு மிகப்பெரும் வியப்பைப்போல, இந்தப்புத்தகத்தின் கட்டமைப்பும் மிக நேர்த்தியான ஓட்டத்துடன் ஒழுங்குடனும் மிகப்பெரும் வியப்பைத்தருகிறது. எந்த ஒரு இடத்திலும் சிறிதும் சுவாரஸ்யம் குறையாமல் அதே சமயம் அதற்கென எந்த ஒரு மெனக்கெடலும் தெளிந்து செல்லும் நீரோடையென கதையோட்டம் நகர்ந்து செல்கிறது.



இதை வெறும் கதையென்று சொல்ல முடியுமா என்றும் ஒரு தர்க்கம் மனதுக்குள் ஓடி மறைகிறது, சில புத்தகங்களை வாசித்து முடிக்கும் தருணங்களில் கதை மாந்தர்களில் ஒருசில பெயர்கள் மட்டுமே மனதில் தங்கும் அநேகமாய் அவர்களின் பாத்திரங்களின் மூலமாகவே என்னால் அடையாளப்படுத்த முடியும், ஆனால் வெளியேற்றத்தின் கதா பாத்திரங்கள் ஒவ்வொருவருவரும் மிகவும் நெருக்கமாய் இத்தனை நாட்களாய் நம்மோடு பழகிவரும் வெகுநாளைய நன்பர்களைப்போல் அவரவர்கள் பெயர்களோடே நினைவோட்டதில் கலந்து விடுகிறார்கள் ஆதியில் வரும் வேதமூர்த்தியின் குருவானவரைத்தவிர. குருவிற்கு பெயரென்ன அவ்வளவு முக்கியமா??

மிக இளம் வயது முதற்கொண்டே மற்றவர்களின் தொடர்பை தொழிலாக/தன் வளர்ச்சியாக மாற்றும் தன்மைகொண்ட ஆயுள்காப்பீட்டு முகவர் சந்தானம் சில வாரங்களுக்கு எந்த ஒரு பயனும் எதிர்பாராது தொடர்ச்சியாக எதையோ யாரையோ தேடிக்கொண்டு செல்லும் போதும் தனக்குள்ளே கேள்விகளை எழுப்பிக்கொள்ளும் போதும் சில சமயம் சந்தானாமாகவும் சில சமயம் நாமாகவும் உணர்கிறோம்.

கோவர்த்தனம் சொல்வது போல், அவரவர் தொடர்பான வினைகளில் இருந்து வெளியேறி அதற்கு எதிர்மறையான பாதைகளில் செல்கிறார்கள் குற்றாலிங்கம், கோவர்த்தனம், சந்தானம் போல்,

மற்றும் சிலரோ புற உலகிற்கு அதிகம் வெளிப்படாத அதே சமயம் உள்ளுக்குள் பெரும் மாற்றத்தை உணர்ந்து தன் சுயங்களிலிருந்து வெளியேறுகிறார்கள், சிவராமன், இராமலிங்கம் போல.

ஆனால் மன்னாதியும் பாண்டியும் சந்தர்ப்பங்களிலிருந்து வெளியேறி ஒருவித இலக்கின்மைக்குள் புகுந்து கொள்கிறார்கள். ஜய்ராமோ அவருடைய அனுமானங்களிலிருந்து வெளியேறி ஒரு வித சமத்துவத்திற்குள் அமர்ந்து கொள்கிறார்.

இன்னும் அறிந்து கொள்ளும் ஆவலைத்தூண்டும் ஆசானின் பாத்திரமும், தீர்த்தபதியின் உரையாடலும்… இப்படி தேடித்தேடி பேச வைக்கிறது.


குரு, தேடல், சந்நியாசம், வாழ்க்கை இவற்றிற்கான விகிதாசாரங்களை நம்முள் மாற்றிவிடுகிறது இந்தப்புத்தகம். ஆனாலும், இந்த நாவலின் ஈர்ப்பு சகிதியின் மையம் என்று கொண்டால், ஒவ்வொருவருக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் வெளியேறுதலுக்கான இரகசிய வேட்கையும் அதிகம் பேசப்படாத அதற்கான முயற்சிகளும் தானோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஆனாலும் இன்னும் நம்மால் விடுபட முடியாத குடும்பம் என்ற கட்டமைப்பின் சக்தி சித்ராவைப்பற்றியும் அவளுடைய உளைச்சல்கள் பற்றியும் நம்மை அனுதாபப்படவைக்கிறது. வெளியேற்றத்திற்கான நம்முடைய தயார்தன்மையை சோதித்துக்கொள்ளும் ஒரு அளவுகோலாகிறது.

இதில் மிகவும் யோசிக்க வைத்த ஒரு சில வரிகள் இதோ…

… வஸ்துக்களாலெ ஆன உலகம் ஒண்ணு இருக்கு அதை என் புலன்களாலே நான் அறிஞ்சிக்கிறேன் ஒங்க உப்லன்களாலே நீங்க, அவங்கவங்க புலன்கள் இருக்கற ஸ்திதியைப்பொறுத்து அவங்கங்க அறிஞ்சிக்கிறோம்…” இப்படியாகத்தொடரும் பத்தி நாம் ஒருவருக்கொருவர் பறிமாறிக்கொள்ளும் செய்திப்பரிவர்த்தனைகளின் அடிப்படையைக்குறித்து யோசிக்க வைக்கிறது.

குள்ளச்சித்தன் சரித்திரம் போல, அதிகம் மாயவிநோதங்கள் ஏதுமின்றி இயல்பு வாழ்க்கையை ஒட்டியிருப்பதும், கடைசியில் ஆசிரியர் கூறியிருக்கும் புனைவின் சதவிகிதத்தையும் கணக்கில் கொள்ளும் போது அடுத்த முறை நம் திருவண்ணாமலை பிராயணத்தில் மன்னாதியை மனம் தேடினாலும் தேடும்.

Friday, July 20, 2012

உறவாடும் வாக்கியங்கள்

எழுத்துக்களும், வார்த்தைகளும், வாக்கியங்களும் மனிதர்களைப் போலவே உடன் உறவாடுகிறது, உள்ளத்தை உறு மாற்றுகிறது. உற்றுப்பார்த்தால் நான் எண்ணியிருந்தது போல் இவை உணவோ இரையோ இல்லை சூட்சுமமாக நம்மோடு தொடர்ந்து உரையாடிக்கொண்டும் உறவாடிக்கொண்டுமிருக்கிறது.



சில வார்த்தைகள், மிக நெருக்கமான சிறுபிரயாத்து நட்பைப்போல் நினைவுகளை கிளறிப்போடுகிறது, சில வாக்கியங்கள் மிகப்பிரியாமானவர்களைப்போல் மனதிற்கு மிகவும் நெருக்கமாக அமர்ந்து கொண்டு அன்றைய நாட்களின் நடவடிக்கைகளை தீர்மானிக்கிறது. மற்ற சில வாக்கியங்களோ அடங்க மறுக்கும் பிள்ளைகளென பிடிவாதமாய் போராடி சில மணித்துளிகள் வேறொன்றையும் சிந்திக்கவொட்டாமல் ஆதிக்கம் செலுத்துகிறது.

சில பத்திகளை வாசிக்கும் நேரங்களில், ஜேசுதாஸ் “நகுமோ கனலே நினஜாலி தெலிசி” என்று திருவாரூர் பக்தவத்சலம் மிருதங்கதோடும், திருப்பணித்துரா இராதகிருஷ்ணன் கடத்தோடும், நாகை முரளிதரன் வயலினோடும் பாடி முடித்ததும், சபை நிறந்து ஆகர்ஷிக்குமோ அது போல் கூட்டமாய் நம்மை சூழ்ந்து நிற்கும். அதே சமயம் சில பக்கங்கள் வெகு ஆழத்தின் மோனத்திலிருந்து வரும் ஒ.எஸ் அருணின் “எப்படித்தான் என் உள்ளம் திறந்து என்னை அடிமை கொண்டீரோ ஸ்வாமி” என்று பாடி முடித்ததும் கை தட்டக்கூட திராணியற்று கூட்டாமாய் தன்னுள்ளே அமிழ்ந்திருப்பவர்களைப்போல் ஆழத்தில் கொண்டு நிறுத்துகிறது.

அப்பா, அம்மா, அக்கா, கணவர் குழந்தைகள், நன்பர்கள் போலவே ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் வாக்கியங்களும் குணமும் நிறமும் ஒரே மாதிரி இருப்பதில்லை, பல சமயம் இதன் நிறங்களும் குணங்களும் மாறிக்கொண்டேயிருக்கிறது. அநேக சமயங்களில் என்னையும் மீறி தறிகெட்டு வந்து விழும் சில வார்த்தைகளை உணருகையில் யாருக்கும் அடங்க மறுக்கும் என் வீட்டு கடைக்குட்டியை உருவகப்படுத்துகிறது.

சில சமயங்களில் ஒவ்வொரு கணத்துளிகளிலும் தேடித்தவிக்கும் ஒரு குருவின் அருகாமையை அளிக்கிறது, மீண்டும் சில சமயங்களில் இவ்வளவுதான் போதும் முடிந்து விட்டது ஆட்டம், என்று அத்தனையும் உதறிவிட்டு செல்லத்துடிக்கும் நானாகவும், இத்தனையையும் மீறி தினமும் உழலும் வாழ்வைக்கொண்டாடி மகிழும் சுகவாசியாகவும் தோன்றுகிறது.



உறவுகளை விட்டு விலகுவது எவ்வளவு துக்கமோ அது போல் வார்த்தைகளையும் வாக்கியங்களையும் விட்டு இருப்பதும் என்றே தோன்றுகிறது. சில பேர் அதிகம் பேசுவதும், அதிகம் வாசிப்பதும் கூட இதனால் தானோ….

Sunday, September 4, 2011

சாயாவனம் – எரிந்தடங்க முடியாத எதார்த்தங்கள்



மனமெங்கும் இன்னும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது சாயாவனத்தில் வைத்த தீ. கணையாழியின் தொகுப்பிற்குப் பிறகு தொடர்ந்து கையிலிருந்த சில ஆங்கிலப்புத்தகங்களில் கவனம் சென்றதால் தமிழ் வாசிப்புக்கள் உயிர்மை, உயிரெழுத்து, சில இணைய வாசிப்புக்கள் என்பதோடு நின்றிருத்தது.
பொதுவில் என் ஆங்கிலப்புத்தக வாசிப்புகளில் தீவிரம் அதிகமிருக்காது, மிக மெல்லிய தென்றலாய் எந்த அலைக்கழிப்புகளுக்கும் ஆளாகாத வண்ணம் வாசித்தே ஆகவேண்டும், இப்போதே முடிக்க வேண்டும் என்ற எந்த முனைப்பும் இன்றியே வாசிப்பதுண்டு. நான் தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள் கூட ஒரு காரணமாயிருக்க முடியும். “Be still, it is the Wind that Sings” (Arthur Osborne) முடித்தபின் “The Journey of an American Swamy” (Rathanath Swamy) முடித்து விட்டு, Wyne Dyer’s “ There is a spiritual solution to every problem” படிக்க நினைத்திருந்த சமயத்தில் ஏதோ ஒரு உந்துதலில் கடந்த மாதம் வாங்கியும் இன்னும் தொடாதிருந்த சாயாவனத்தை நேற்றிரவு கையிலெடுத்தேன். சிதம்பரம் வைத்த தீ இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது.

“சாயாவனம் ஸ்ரீகந்தசாமியின் முதல் நாவல்” இந்த வரிகள் தந்த இன்னும் தந்துகொண்டிருக்கும் ஆச்சர்யம் அளவிடமுடியாதது. மிக எதார்த்தமான எளிமையான பாத்திரங்களைக்கொண்டு எந்த ஒரு மிகப்பெரிய திருப்பங்களையும் உள்ளடக்காது, மிகைப்படுத்தப்படாத சம்பவங்களோடு, சிதம்பரம், சிவனாண்டித்தேவர், குஞ்சம்மா இவர்களைத்தவிர வேறு எவர்பெயரும் தேவைப்படாத அதே சமயம் அந்தந்த கதாபாத்திரங்களுக்கான முக்கியத்துவம் கெடாது ஒரு மிகநீண்ட கயிற்றின் மேல் கத்திமுனையில் நடப்பது போன்று மிகத்திறமையாக முதல் நாவலிலேயே நடந்து காட்டியுளது இன்று எழுத ஆசைப்படும் அத்தனை எழுத்தாளர்களுக்குமான மிகப்பெரிய படிப்பினை.
ஜெயமோகனின் காடு தந்தது மிகப்பெரிய மன அழுத்தம் என்றால், சாயாவனம் தந்துள்ளது ஒரு விதமான மன எழுச்சி, நடந்து முடிந்தது வரமா சாபமா என்று தீர்மானிக்க முடியாத அனுமானத்தோடே சட்டென்று முடிந்து போகிறது கதை, ஆச்சி பிழிந்து போடுவது பட்டுபுடவையை மட்டுமல்ல என்பது படித்து முடித்த அத்தனை வாசகர்களும் உணர்ந்து கொள்ளும் உண்மை.
கதைப்பரப்பில் வரும் அத்தனை செடிகொடிகளையும், மரங்களையும் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதென்பது கூடுதல் மகிழ்ச்சி, இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கிறது இயற்கையின் வாசனைகள் இந்த தலைமுறைக்கு மட்டுமாவது என்று இளைப்பாறுதல் கொள்ள முடிகிறது. (காரை – கொடிவகை இது மட்டும் என்னெவென்று புரியவில்லை தெரிந்தவர்கள் சொன்னால் நன்றி)
அடிக்கடி கடந்து செல்லும் கும்பகோணம் சென்னை நெடுஞ்சாலைகளின் ஏதோ ஒரு திருப்பத்தில் வரிசையாய் இருளில் காத்திருக்கும் கரும்பு லாரிகளை கடந்து செல்கையில் கட்டுக்கட்டாய் கரும்போடு ஆற்றோடு அடித்துசெல்லப்பட்ட பழனியும் அவனின் பாரவண்டியும் தைரியமும் கண்களில் ஒரு நொடியேனும் இனி வந்து போகும், விழுப்புரத்தின் முன்பிலும், சேத்தியாத்தோப்பின் முடிவிலும் காண நேரும் சர்க்கரை ஆலையைப் பார்க்கையில் எத்தனை சாயாவனங்களென எண்ணத்தோன்றும், ஆனாலும் சிதம்பரத்தையும் சிவனாண்டியையும் நேசிக்கவும் தோன்றும். வாழ்வின் வளர்சிதை மாற்றங்களை சிதம்பரத்தைபோலவே நம்மையும் வேறொரு கண்ணோட்டோத்தோடு ஜீரணிக்க வைக்கிறது சா.கந்தசாமியின் சாயாவனம்.


Saturday, March 26, 2011

"பைத்தியக்காரர்களும் பிழைக்கத்தெரியாதவர்களும் ஒன்று படுவோம்" - அட நாம கொஞ்சம் கூட மாறவேயில்லை.....

இருபத்து மூன்று வருடம் கழித்தும் நிலைமை அப்படியேதான் உள்ளது சொல்லப்போனால் மோசமடைந்து வருகிறது.

எண்பதுகளின் பிற்பகுதில் வந்த கணையாழியின் தொகுப்பொன்று சமீபத்தில் நன்பரின் இல்லத்திற்கு சென்ற போது கிடைத்தது படிக்க ஆரம்பித்த சில பக்கங்களில் இருந்த கட்டுரையொன்று தற்போதைய நிலைமைக்கு மிகவும் பொருந்திவரவே பகிர்ந்து கொள்கிறென்



கணையாழியின் பக்கங்களில் இருந்து


பைத்தியக்காரர்களும் பிழைக்கத்தெரியாதவர்களும் ஒன்று படுவோம்.


இன்று நாட்டின் மற்ற மாநிலங்களை விடத் தமிழகத்தில் அரசியல் நிலை மிகவும் குழப்பமடைந்து காணப்படுகிறது. கொள்கைப்பிடிப்புள்ள தீவிர இடது சாரி , வ்லதுசாரிக்கட்சிகளுக்கு இங்கு ஆதரவில்லை, தேசீயக் கட்சிகளான காங்கிரசும், தேசீய முன்னணியும் எந்தக் கழகத்தின் பின்னால் போனால் அதிக வோட்டுகள் கிடைக்கும் என்று அரசியல் ஆதயத்திற்காக அலைகிறார்கள். கொள்கையின் பேரால் கொள்ளையடித்த பிராந்தியக் கட்சிகளையோ அவற்றின் புதிய அவதாரங்களையோ நம்பி வோட்டுப் போடுவது திருடனின் கையில் பெட்டிச் சாவியைக்கொடுப்பது போலாகும்.


தமிழகத்தில் இன்றுள்ள நிலையில் இது ஒரு தவிர்க்கமுடியாத உண்மை என்ன வென்றால் களத்தில் நிற்கும் எந்த அரசியல் கட்சியையும் ஊழக லை ஒழிக்க விரும்புவோர் ஆதரிக்க முடியாது. எல்லாக் கட்சிகளிலும் அடிமட்டத்தில் தொண்டர்கள் நல்லவர்களாக இருக்கலாம், ஆனால் எல்லாக் கட்சிகளின் தலமைகளும் ஊழலில் சிக்குண்டு பொதுமக்களின் நம்பிக்கையை இழந்து விட்டன.


தமிழ்நாட்டில் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தப் பல அரசியல் சாரா இயக்கங்கள் தோன்றி நல்ல முறையில் பணியாற்றத்தொடங்கியுள்ளன. மக்கள் தூய்மை இயக்கம் மக்கள் சக்தி இயக்கம், ஸ்வச்சித் போன்ற அமைப்புகள் ஊழல் ஒழிப்பு என்ற ஒரே குறிக்கோளில் இணைந்து மக்களை அணுகினால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

இந்த இயக்கங்கள் உடனடியாகச் செய்யவேண்டிய பணி, தமிழகத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் அரசியல் கட்சிகளின் தொடர்பில்லாத ஒரு நல்லவரைத்தேர்ந்தெடுத்து அவரை ஊழல் ஒழிப்பு இயக்கங்களின் சார்பில் மக்கள் பிரிதிநிதி என்று அறிவித்து நிறக வைக்க வேண்டும்.


மக்கள் பிரதிநிதிக்கு எத்தகைய தகுதிகள் இருக்க வேண்டும் என்பதில் ஊழல் ஒழிப்பு இயக்கங்களிடையே கருத்து வேறுபாடு இருக்க இடமில்லை. பொது வாழ்வில் தூய்மையானவர்களை நாணயமானவ்ர்களை, பொது தொண்டில் ஈடுபாடு உள்ளவர்களை ஜாதி மத மொழி வேறுபாடின்றி ஒவ்வொரு தொகுதியிலும் தேடிக்கண்டுபிடிக்க முயலுவது இந்த இயக்கங்களின் பொறுப்பாகும். நல்ல பெயர் இல்லதவர்களையும் தவறான வழியில் சொத்து சேர்த்தவர்களையும் அடையாளங்கண்டு அறவே ஒதுக்கி விடவேண்டும்.


நல்லவர்கள் அரசியல் சாக்கடையில் காலைவிடத் தயங்குவார்கள் என்பது உண்மைதான் மேலும் பண வசதி இல்லாதவர்கள் தேர்தலில் நிற்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டிருப்பதும் உண்மைதான். ஆனால் பொதுமக்கள் உறுதியாகச் செயல்பட்டால் இந்தப் பிரச்சினைகளையும் சமாளித்துவிடலாம். ஊழல் ஒழிப்பு இயக்கங்களின் தொண்டர்கள் கால்நடையாகவும் சைக்கிள்களிலும் தெருத் தெருவாகச் சென்று வீடு வீடாக நுழைந்து ஊழலால் விளைந்த கொடுமைகளைப்பற்றியும் நல்லவர்கள் அரசியலில் ஈடுபட மக்களின் ஆதரவைத்தேடியும் பிரசாரம் செய்ய வேண்டும்


இன்றுள்ள அரசியல் கட்சிகளை விட்டால் வேறு எவருமே ஆட்சி அமைக்க முடியாது என்பது வெறும் பிரமைதான். சுயேச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஊழல் ஒழிப்பு, நேர்மையான நிர்வாகம், வறுமையை ஒழிக்க பரவலான சிறுவேலை வாய்ப்புத்திட்டங்கள். குடிநீர் வசதி சுற்றுப்புறச் ச்சுழல் பாதுகாப்பு, பிற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களும் பெண்டிரும் சமூக நீதியின் அடிப்படையில் மேம்பாடடைய வாய்ப்புகள் போன்ற சில அடிப்படைக் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்து அவற்றை செயல்படுத்த புதிய அரசியல் அமைப்புகளை உருவாக்க முடியும்,.


ஊழலை அறவே வெறுக்கும் பைத்தியக்காரர்களும் நேர்மையை நம்பும் பிழைக்கத்தெரியாதவர்களும் ஒன்று பட்டால் தமிழகத்தை மட்டுமின்றி நாட்டையே காப்பாற்றிவிடலாம்.


நன்றி - 24-08-88 தினமணி