Showing posts with label அறிவியல்-ஆன்மீகம். Show all posts
Showing posts with label அறிவியல்-ஆன்மீகம். Show all posts

Monday, January 22, 2018

ஐயா வைகுந்தர் - சுவாமித்தொப்பு - ஆதி மூலத்தின் தரிசனத்தை நோக்கிய பயணம் - 20 - Jan-2018

அகவழிப் பயணங்களில் முதன்மையானது ஒப்புக் கொடுப்பது அதன் மூலமாகவே நாம் ஆற்றின் கரையில் இருந்து அதன் மைய நீரோட்டத்திற்கு இழுத்துச் செல்லப் படுகிறோம். பின் ஆற்றின் ஒழுக்கினோடே இயைந்து பயணம் செய்வதொன்றே வழி. நீரின் ஓட்டத்திற்கு எதிராகவோ, குறுக்கு மறுக்காகவோ அல்லது அந்த ஒழுக்கின் திசையோடோ நாம் முனைந்து நீந்த முற்படும் பொழுது விளைவுகள் எனும் வினைகளை சந்திக்க நேருகிறோம்.

அதுபோலவே 2016 துவக்கத்தில் இருந்தே மைய நீரோட்டத்தின் ஒழுக்கினோடே பயணிப்பதே வாழ்வென்றானது. குறிப்பாக பக்தி, மெய்யியல், மெய்ஞானம் சார்ந்த விஷயங்களில் தினசரி வாழ்வில் ஊடுபாவு போல ஒரு தனி இழையோடு பயணம் நடந்து கொண்டே இருக்கிறது.

அந்த தரிசன நீட்சியில் இந்த பயணத்தில் நான் சென்று நின்றது “ஐயா வைகுந்தரின்” வாசல். ஏகத்தை வலியிருத்தும் மற்றொரு மாற்று இந்து மதக் கோட்பாடுகளை உடைய மரபு. தந்தையின் பாதை, என்று பொருள் தரக்கூடிய “ஐயா வழி”.  My father blesses My father blesses  என்று சொன்ன யோகி ராம்சுரத்குமாரின் மாற்று வடிவம். எல்லா மாற்றுக் கோட்பாடுகளுக்கும் நேரும் சமூக ஒழுக்குகள் இந்த மரபிற்குள்ளும் நிகழ்வதைக் கண்கூட காண நேர்ந்தாலும் எவரோ சிலரின் உணர்தலுக்காக சாட்சியாக நிற்பதாக உணர்கிறேன் “சுவாமித் தோப்பில்” முதல் பதி என்றழைக்கபடும் இந்தப்  புனிதத்தலம்.

ஆதி உண்மையின் பரிணாமங்களைப் பேசும் எல்லா மாற்று இந்து மரபுகளையும் போல இங்கும் வருணாஸ்ரம நிராகரிப்பு, அத்வைதம், அகம்பிரம்மாஸ்மி, சமூக அக்கறை என்ற ஸ்ரத்தைகளை உள்ளடக்கி ஆதியில் உருவாக்கப் பட்டிருந்தாலும் காலப் போக்கில் பக்தி மரபின் ஒரு வாசலாக மாறியிருப்பதை உள்ளங்கை நெல்லிக் கனியாக காண முடிகிறது. இது சரியா தவறா என்று எழுந்த கேள்விக்கான விடையையும் மறு புலரியில் அருணனின் வரவுக்காக காத்திருந்த பொழுதுகளில் கிடைக்கச் செய்ததும் அதை மேலும் பேசிப் பேசி விரித்துக் கொள்ளும் சக உயிரினை தந்தற்குமான இந்தப் பிரபஞ்ச்சத்தின் உள் நோக்கத்தில் இருக்கிறது என் ஸ்வதர்மாவிற்கான பதில் என்று உள்ளுணர்வு சொல்கிறது.

வடக்கு வாசல் அவர் தவம் இருந்த இடமாக போற்றப் படுகிறது அங்கு ஒரு மர இருக்கையும் அதன் மேல் அமையப் பெற்ற கண்ணாடியும் உத்திராட்சமும். கண்டு அமர்கையில் உள்ளே எழும் ஓசையின் அளவுகள் தனித்து வேறு எதனோடோ லயிக்கிறது. பின் கிழக்கு வாசல் சென்றால் பள்ளியறை என்று அழைக்கபடும் ஐயாவின் சமாதி அறை உள்ளது அங்கு உள்ளே நுழையுமுன் அவரது தொண்டர்களின் அனுமதி பெற்று நெற்றியில் செங்குத்தாக ஒற்றை பட்டை தரித்து உள்ளே செல்ல வேண்டியுள்ளது.
அங்கும் அமர்ந்து தியானத்தில் ஒன்ற,  காணும் தரிசனங்கள் இன்னும் மைய நீரோட்டத்திற்கு அழகாக இட்டுச் செல்கிறது.



Sunday, May 14, 2017

Entropy Vs Enlightenment – பகுதி 4

 (நிறைவுப் பகுதி - ஒரு வழியா முடிச்சிட்டேன் :) )
அந்த மரத்துண்டு கையில் இருந்து கிழே விழும் பொழுது ஏதேனும் தடை ஏற்பட்டு இடையில் ஒரு தளத்தில் தங்க நேரும் பொழுது சில சமயம் அது குவாண்டம் டனலிங் (Quantum Tunneling) கான்செப்ட் படி சுற்றி இருக்கும் ஆற்றல் சக்தியை பயன் படுத்திக் கொள்வதன் மூலம் தனது இருப்பைச் சென்று அடைகிறது. அவ்வாறு செயலாற்றும் பொழுது அதன் எடையற்ற தன்மையே இந்த டனலிங் முயற்சியின் முதல் காரணி.
இதில் மரக்கட்டைக்குப் பதில் பந்து ஒன்றை உருவகப் படுத்திக் கொள்வோம் என்றால் இன்னமும் இலகுவாக விளங்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும் -( a ball which is lacking the energy to penetrate a hurdle will become still. However In quantum mechanics, these particles can, with a very small probability, tunnel to the other side, thus crossing the barrier. Here, the "ball" could, in a sense, borrow energy from its surroundings to tunnel through the obstacle)
இப்பொழுது ஞானமடைதல் (enlightenment) என்ற நிலையில் நாம் எடையற்று இந்த உடலுக்கும் ஆன்மாவிற்குமான தொடர்புகளை முழுவதும் அறிந்து விலகும் முயற்சியில் உண்டாகும் தடைகளை இந்த பிரபஞ்ச சக்தியை உள்வாங்கிக் கொள்வதன் மூலமாக தாண்டி பிரபஞ்சத்தின் இருப்பினோடு ஒன்றிணைந்து விடுகிறோம்.
அப்பொழுதும் இந்த இருப்பு உள்ளது அனால் இந்த பிரபஞ்சத்தினோடு கலந்த ஒத்திசைவாக எந்த எதிர்வினையும் ஆற்றாத நிலைக்குச் சென்று விடுகிறது.
எனவே இருக்கிறது... ஆனால் இல்லை, அதாவது ஆன்மா தன் எண்ட்ரோபி நிலையை அடைந்து விடுகிறது.
அறிவியலாளருக்கு அது அறிவியல் ஆன்மீகர்களுக்கு அது ஆன்மீகம் அவ்வளவே.

Entropy Vs Enlightenment – பகுதி 3

ஒரு கை அகல மரக்கட்டையை எடுத்துக் கொள்வோம். அதை நாம் நம் மற்றொரு கையால் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் பிடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதற்கென செயல்படும் விசை இல்லை ஆனால் அதற்குள் பொட்டேன்ஷியல் எனர்ஜி (திறன்படும் செயல்) (Potential Energy - the energy possessed by a body by virtue of its position relative to others, stresses within itself, electric charge, and other factors) உள்ளது.
நாம் நம் கையில் இருந்து அதை விடுவிக்கும் பொழுது கைநெடிக் எனர்ஜியின் மூலம் (இயங்கு ஆற்றல்) (Kinetic Energy - energy which a body possesses by virtue of being in motion ) தரையைச் சென்று ஓய்வடைகிறது. ஆங்கிலத்தில் அதை Resting (be placed or supported so as to stay in a specified position ) என்று சொல்லலாம்.
அதாவது அதன் செயலற்ற தன்மைக்குள் செல்கிறது. இன்னமும் சொல்வதென்றால் அது தனது எண்ட்ரோபி நிலையை அடைகிறது. இன்னொரு விசை அதை இயக்குமானால் அது மீண்டும் இயங்கு நிலைக்கு மாறும் அதுவரை அது அந்த நிலையில் நீடித்திருக்கும்.
அதுவே அந்த மரக்கட்டையை நாம் ஒரு அரவை இயந்திரத்தில் இட்டு அரைக்கும் பொழுது அது துகள் துகளாக மாறி எடையற்ற நிலைக்குச் செல்கிறது இனி அது மரக்கட்டை இல்லை மரத்துகள், அதன் எடை மாற்றம், கொள்கிறது. . இதுதான் என்று தனித்து ஒரு துகளாக காணும் அடையாளமற்று அணு அளவு ஆகிறது. இப்பொழுது அந்தத் துகள் தரையைச் சென்று அடைந்ததும் அது காற்றுடனோ நீருடனோ, பூமியுடனோ (பஞ்ச பூதங்களில்) கலந்து விடுகிறதே தவிர மீண்டும் அது தனித்து இன்னொரு பொருளாக உருக் கொள்வதில்லை.
இதில் மற்றொரு பரிணாமமும் உள்ளது.....
தொடரும்....

Entropy Vs Enlightenment – பகுதி 2


இந்தப் பிறப்பில் நாம் என்பது இரண்டாக உள்ளது அதாவது உடல், மற்றும் அதனுள் இருக்கும் ஆன்மா. இதில் இந்த உடல் என்ட்ரோபியை அடைவதற்கு முன் அதனுள் இருக்கும் ஆன்மா என்ட்ரோபி அடைந்து விடுவதே என்லைட்மென்ட்.
அவ்வாறு அடைந்து விடுமென்றால் இந்த உடலுக்கும் ஆன்மாவிற்குமான தொடர்பு விடுபட்டு இந்த உடலின் கர்ம வினைகளோடான தளைகள் அற்றுப் போகிறது. அப்பொழுது இந்த ஆன்மா ஒரு துகளாக துளியாக இந்தப் பிரபஞ்சத்தில் கலக்கிறதே அன்றி இன்னொரு பிறப்பிற்கு ஏதுவாவதில்லை.
இங்கு வள்ளலார் ஒளி உடம்பாக ஜோதியில் கலந்ததை ஒரு புரிதலுக்காக நினைவு படுத்திக் கொள்ளலாம்.
அவ்வாறில்லாத பட்சத்தில் இந்த உடலின் எடையோடு கூடி அதன் கர்ம தளைகளை ஏற்று மற்றொரு பிறப்பிற்கு ஆட்படுகிறது.
இதை ஒரு சிறிய எடுத்துக் காட்டின் மூலமாக பார்க்கலாம்.
தொடரும்...

Entropy Vs Enlightenment - பகுதி - 1

பெரும்பாலும் எங்கள் வீட்டில் அம்மா மகன்களுக்குள்ளான உரையாடலில் ஆன்மீக அறிவியல் விசாராங்கள் அதிகம் இருக்கும். அவர்கள் அறிவியலாக அறிந்து கொண்டதை பகிரும்போது நான் அதை ஆன்மீகப் பார்வையில் விளக்குவேன். சிலசமயம் அவர்களே அதை ஆன்மீகப் பார்வையில் ஒப்புமைப் படுத்தி என்னிடம் கொண்டு வருவார்கள்.
இன்றும் அதுபோல நித்தா ஒரு வார்த்தைக்கான ஒப்புமையோடு வந்தான். அவன் அறிவியல் சொல்ல நான் ஆன்மீகம் சொல்ல பேசிப் பேசி ஒரு நிலையை அடைந்தோம்.
அந்த அறிவியல வார்த்தை Entropy. அதை  Enlightenment உடன் ஒப்புமைப் படுத்தி ஒரு விசாரம்.
எண்ட்ரோபி என்றால் இயற்பியல் பிராகாரம் “ a thermodynamic quantity representing the unavailability of a system's thermal energy for conversion into mechanical work, often interpreted as the degree of disorder or randomness in the system” இப்படித்தான் சொல்கிறது
அதாவது ஒரு பொருள் தனது செயல்படக்கூடிய ஆற்றல் சக்தியை விடுப்பதன் மூலமாக அடுத்து இயங்குவதற்கான நிலையற்று ஒரு பொருளாக தங்கி விடுகிறது. As per quantum physics, every body has to reach its ground state or vacuum state or ultimate resting stage. அதாவது ஒவ்வொரு பொருளும் தன்னுடைய சரிஇயல்பு நிலைக்கு, அதன் கடைசி இருப்பு நிலைக்கு சென்றாக வேண்டும்.
இன்னமும் சொல்லப் போனால் இந்த உடலின் பிறப்பு என்பது இறப்பாக மாறும் பொழுது அது எண்ட்ரோபி என்று சொல்லலாம். அதாவது உடல் இருக்கிறது ஆனால் அதனால் இயங்க முடியாது. எனவே எல்லா உயிர்களும் பிறப்பு இறப்பு சுழலில் ஒரு கட்டத்தில் என்ட்ரோபியை அடைகிறது. இது அறிவியல். இப்பொழுது ஆன்மீகப் பார்வைக்குச் செல்வோம்.

தொடரும்....