
கனவுகள் எப்போதும் ஓர் அதிசய உலகத்தின் திறவுகோல்கள்। சில விழித்திருக்கும் நிகழ்வுகளோடு தொடர்புடையதாய் இருந்தாலும், பல நேரங்களில் உள் மன விழைதல்களின் வெளிப்பாடாகவோ அல்லது இனம் காண முடியாத நிகழ்வுகளின் தொடராகவோ வருவதுண்டு। நானின்றொரு கனவு கண்டேன் எனத்தொடங்கினால் கேட்கும் பலருக்கு இளநகை, குறுநகை, கொட்டாவி முதலியன வருவதுண்டு ஆனால் கனவுகள் பெரும்பாலும் மிக அந்தரங்கமாக ஒரு செய்தியை சொல்வதுபோல் தோன்றும்.
மிகவும் நெருக்கமான அந்த செய்திகள் நம் மனதிற்கு பலசமயம் புரியும் படியும் சிலசமயம் ஏதும் புரியாத சிக்கலாகவும் இருப்பதுண்டு. எதையும் அறிவியலாய் நோக்கும் அறிஞர்கள் இதெற்கென ஒரு தனி விளக்கங்களையும், பிராய்ட், ஆல்பிரட் ஆட்லர் போன்றவர்களையும் துணைக்கழைத்தாலும் தனிப்பட்ட மனிதர்களின் கனவுகள் அவரவர்க்கு மிகவும் நெருக்கமானவை என்பதை மறுப்பதிற்கில்லை.
எத்தனையோ நிகழ்வுகளை காட்டிச்செல்லும் கனவுகளோடு மிகச்சந்தோஷமாய் மரணிப்பது போன்று, அதுவும் மரணிக்கும் நேரத்தை குறித்து வைத்துக்கொண்டு (மாலை 5.29 ) ஒரு சங்கீதக்கச்சேரி ஆரம்பிக்கும் முன் இருக்கும் குதூகலமான மனநிலையோடு மரணத்தை எதிர்கொண்ட தருணங்களை காட்டிச்சென்றது ஓர் கனவு. அந்த அனுபவத்தை இப்போதும் மீள்நுகர்வு செய்ய முடிகிறதென்பது பெறும் அதிசயமாக உள்ளது. கனவின் எல்லைக்கோட்டிற்கு சென்று மீண்ட பின் விழித்துப்பார்க்கும் கண்களுக்கு பக்கத்திலிருந்தயில் மணி 2.29 என்றிருந்தது. செய்தி என்னவென்பது புரியாமலே அடுத்த நாளுக்கான ஆயத்தங்கள் தொடங்கியது….