Showing posts with label உறவுகள். Show all posts
Showing posts with label உறவுகள். Show all posts

Tuesday, May 19, 2015

டிவிட்டர் - ஆவணம் - 2

சிறு குழ‌ந்தையின் பிடிவாத‌மாய் கார‌ண‌ம‌ற்று தொட‌ர்ந்து கொண்டேயிருக்கிற‌து உன்னுட‌னான‌ ஊட‌ல்

நீ எப்பொழுது வருவாய் என காத்திருப்பதில் இப்போதும் ஒரு சுவாரசியம் இருக்கிறது

நூற்றில் ஒரு வார்த்தை மட்டுமே உண்மையாகிறது

உரத்த சிந்தனைகளுக்குப் பின்னிருக்கும் உணர்வுகளோ இல்லை உண்மைகளோ மிகவும் கவனிக்கப்படவேண்டியவை

2013 - Twitts

Wednesday, August 13, 2014

உரத்த சிந்தனை – உறவுகள் – ஒரு சுய பரிசோதனையின் தேவை


காலம் காலமாய் நம்முள் கனன்று கொண்டிருக்கும் பெரு நெருப்பொன்றை கையாள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். அன்றைய கூட்டுக் குடும்ப காலகட்டமாகட்டும், இன்றைய தனிக்குடித்தன காலமாகட்டும் இரத்த சொந்தக்களுக்கிடையேயான பூசல்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

முகலோபனம் இல்லாத உறவுகளை இன்றும் எத்தனயோ வீடுகளில் நாம் மிகவும் வேதனையோடு எதிர் கொள்ளத்தான் செய்கிறோம். இதில் நம் தவறென்ன அவர் தவறென்ன என்பதை தாண்டி ஒரு சூல் உறவு என்பதை நாம் யோசிக்கின்றோமா? என்பது மட்டுமே நம் கேள்வி, இதையே நீர் அடித்து நீர் விலகுமா என்றும் கேட்பதுண்டு. 

ஒருகுடும்பம் ஒரு குழந்தை என்ற இன்றைய குடும்ப அமைப்பில் நம்மைத் தாண்டி அந்த குழந்தைகளுக்கு உருத்தானவர் யார்? பெரியப்பா, சித்தப்பா, அத்தை பெரியம்மா, சித்தி, மாமா, இவர்தம்  குழந்தைகளை உறவகாவும் உயிராகவும் நினைக்கும் அளவிற்கு நாம் நம் குழந்தைகளை வளர்த்திருக்கிறோமா? என்பது நாம் பதிலுறுக்க வேண்டிய ஒரு கேள்வி.

எழுபது என்பது வருடங்களுக்கு முன் ஒரே வீட்டில் பிறந்து நகமும் சதையுமாய் வளர்ந்து காலச்சூழலில் ஒருவருக்கு ஒருவர் அந்நியமாய் ஆனா சகோதர சகோதரியின் உறவு அவர்கள் இறப்பிலும் இணையவில்லை. இந்த விலகலின் காரணங்கள் மட்டும் கதை கதையாய் இருவர் குடும்பங்களிலும் பேசுவது தாண்டி உண்மையான காரணம் புரியாமலே இரு குடும்பமும் இன்று வரை தனித்திருக்கும் எத்தனையோ கதை நாம் அறிந்ததே. ஆனால் இருவரில் கடைசியாய் எஞ்சியவர் இறக்கும் தருவாயில் சொன்ன சில நெகிழ்வான வார்த்தைகளில் இன்றைய தலைமுறை உறவுகளை புதுப்பிக்க விழையும் சாத்தியக்கூறுகளும் நாம் அறிந்ததே. மிக்க சந்தோஷம், ஆனால் காலம் கடந்த இந்த ஞானத்தின் இடையில் நாமும் நம் தலைமுறைகளும் எத்தனை உணர்வு பூர்வமான  நிகழ்வுகளை,  சந்திப்புகளை இழந்திருப்போம்?  குறைந்த பட்சம் நாமாவது அந்த தவறை செய்யாதிருக்க என்ன செய்கிறோம்? நாம் சிந்திக்க வேண்டிய முக்கியமான கேள்வி இது.

உறவுகளை சுயலாபம் தாண்டிப் பார்க்கும் மனோபாவம் நம்மில் உள்ளதா? அதையும் தாண்டி கருத்து வேறுபாடுகள் எழும் சமயங்களில் அந்த கசப்புக்களை வரும் தலைமுறைக்குள்ளும்  செலுத்தாதிருக்கிறோமா? ஒருவருக்கொருவர் விலகாதிருக்கிறோமா? இவைகளுக்கான பதிலை நாம் யாரோடும் பகிர்ந்து கொள்ளத்தேவையில்லை ஆனால் நம்முள் ஒரு சுய பரிசோதனை மிகவும் அவசியம்.

Thursday, May 15, 2008

அப்பா......


அப்பா என் ஞாபக அடுக்குகளில் என்றுமே படர்ந்திருக்கும் ஓர் இனிமயான உறவு। சூரியனின் கதிர்கள் யாருடைய உத்தரவும் இல்லாமல் நம் பூட்டியிருக்கும் புத்தக அறைக்குள் நுழைவதுபோல் இந்த மூன்றெழுத்து வார்த்தை என்னுள் எப்போதும் திறந்து விடும் பல ஞாபகக்கதவுகளை என் உணர்வுகளின் அனுமதியின்று.

இரண்டும் பெண்களென்ற போது பெண்ணென்ற பேதமற்று என்னை எனக்கான எந்த ஒரு சுதந்திரத்திலும் இருந்து விலக்காது ஊக்குவித்தவர். என்னை பொது நூலகத்திற்கு கூட்டிச்செல்வார் அவர் படிப்பதோ தினசரிகள் நானோ அங்குள்ள சிறுவர்/பெரியவர் புத்தகங்களை முழுவதும் மேய்ந்து வரும் வரை மிகப்பொறுமயாக காத்திருப்பார். ஒரு நாள் கூட காத்திருத்தலுக்காக அலுத்துக்கொண்டதே இல்லை. என் சிறிய கிராமத்தில் 8 வயதுப்பெண் சைக்கிள் ஓட்டியதென்றால் அது நானாகத்தான் இருக்கமுடியும். அதுவும் அப்பாவின் சைக்கிளில் குரங்குப்பெடல் கவலையே படாமல் கடைத்தெரு வரைக்கும் சுற்றத்தருவார். (இது நினைவுக்கு வந்த நாளிலிருந்து தான் நான் என் மகனை நம்பி என் ஹோண்டா ஆக்டிவாவை குடுக்க ஆரம்பித்தேன்). பால்யம் தாண்டி வளர்ந்த பெண்ணாகிய போது கூட நானும் அப்பாவும் ஒன்றாகவே கடைத்தெருவில் சுற்றுவோம். மாரியப்பன் கடை அல்வாவும் அதன் தித்திப்பை சரி பண்ண கொஞ்சமே கொஞ்சம் காரபூந்தியோ மிக்சரோ கடை வாசலிலேயே சுடச்சுட அப்பாவும் பெண்ணுமாய் நின்றும் சாப்பிட்டவர்கள் நாங்களாய்த்தானிருப்போம்.

என் அம்மாவின் எதிர்ப்பையும் மீறி “நீ தைரியமா அடிச்சிட்டு வா நான் பார்த்துக்கறேன் எவன் ஒன்னைக்குத்தம் சொல்றான்னு” என்று எனக்கு பிரச்சனையான நேரங்களில் அறிவுரை?? கூறுவார். கல்யாணம் வரை எந்த ஒரு விஷயத்திலும் எனக்கும் அவர்கும் முரண் வந்ததே இல்லை, நானே தேர்ந்தெடுத்த வரனில் அவர்க்கு சிறிதே அதிர்ச்சி இருந்தாலும் பிறகு தன்னை சமாதனம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பிறகும் அவர் உடல்நிலை காரணமாக அவரை தனித்து விடாதது மட்டுமே நான் அவருக்கென செய்ததாயிருக்கும். சகோதரிகளுக்குள் எந்த வேறு பாட்டையும் காண்பித்ததில்லை என்றாலும் நான் எப்போதுமே அப்பா செல்லம். அவர் இருந்த வரை நான் குழந்தையாகவே இருந்து வந்தேன் என்று சொன்னால் அது வெறும் வாய்வார்த்தை இல்லை. என் வீட்டுக்கதவின் சாவி எது? என் பையனின் சைக்கிள் பூட்டும் பூட்டு எது? முன் வாசல் கேட்டின் சாவி எது? இப்படி என் வீட்டின் பாதுகாப்பிற்கான எந்த முஸ்தீபுகளும் அவர் இருந்த வரை நான் அறியாதது.

இன்று நான் என் புதிய வீட்டிற்கு சென்றிருக்கும் வேளையில் எத்தனையோ விஷயங்களை அப்பா மட்டும் இருந்திருந்தால் என்று எண்ணுவதை தவிர்க்க முடியாத அளவிற்கு அவர் தனக்கான தடயங்களை எங்களோடே விட்டுச்சென்றிருக்கிறார்.

அப்பா .. இவர் பற்றி எழுத என்னில் ஆயிரம் கதைகளுண்டு. அப்பாவின் நினைவுகளை மேலதிகமாய் கிளர்த்தெழுப்பும் இன்னுமொரு நாள் வரும்வரை காத்திருக்கட்டும் அந்தக்கதைகள்