Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Monday, January 22, 2018

ஐயா வைகுந்தர் - சுவாமித்தொப்பு - ஆதி மூலத்தின் தரிசனத்தை நோக்கிய பயணம் - 20 - Jan-2018

அகவழிப் பயணங்களில் முதன்மையானது ஒப்புக் கொடுப்பது அதன் மூலமாகவே நாம் ஆற்றின் கரையில் இருந்து அதன் மைய நீரோட்டத்திற்கு இழுத்துச் செல்லப் படுகிறோம். பின் ஆற்றின் ஒழுக்கினோடே இயைந்து பயணம் செய்வதொன்றே வழி. நீரின் ஓட்டத்திற்கு எதிராகவோ, குறுக்கு மறுக்காகவோ அல்லது அந்த ஒழுக்கின் திசையோடோ நாம் முனைந்து நீந்த முற்படும் பொழுது விளைவுகள் எனும் வினைகளை சந்திக்க நேருகிறோம்.

அதுபோலவே 2016 துவக்கத்தில் இருந்தே மைய நீரோட்டத்தின் ஒழுக்கினோடே பயணிப்பதே வாழ்வென்றானது. குறிப்பாக பக்தி, மெய்யியல், மெய்ஞானம் சார்ந்த விஷயங்களில் தினசரி வாழ்வில் ஊடுபாவு போல ஒரு தனி இழையோடு பயணம் நடந்து கொண்டே இருக்கிறது.

அந்த தரிசன நீட்சியில் இந்த பயணத்தில் நான் சென்று நின்றது “ஐயா வைகுந்தரின்” வாசல். ஏகத்தை வலியிருத்தும் மற்றொரு மாற்று இந்து மதக் கோட்பாடுகளை உடைய மரபு. தந்தையின் பாதை, என்று பொருள் தரக்கூடிய “ஐயா வழி”.  My father blesses My father blesses  என்று சொன்ன யோகி ராம்சுரத்குமாரின் மாற்று வடிவம். எல்லா மாற்றுக் கோட்பாடுகளுக்கும் நேரும் சமூக ஒழுக்குகள் இந்த மரபிற்குள்ளும் நிகழ்வதைக் கண்கூட காண நேர்ந்தாலும் எவரோ சிலரின் உணர்தலுக்காக சாட்சியாக நிற்பதாக உணர்கிறேன் “சுவாமித் தோப்பில்” முதல் பதி என்றழைக்கபடும் இந்தப்  புனிதத்தலம்.

ஆதி உண்மையின் பரிணாமங்களைப் பேசும் எல்லா மாற்று இந்து மரபுகளையும் போல இங்கும் வருணாஸ்ரம நிராகரிப்பு, அத்வைதம், அகம்பிரம்மாஸ்மி, சமூக அக்கறை என்ற ஸ்ரத்தைகளை உள்ளடக்கி ஆதியில் உருவாக்கப் பட்டிருந்தாலும் காலப் போக்கில் பக்தி மரபின் ஒரு வாசலாக மாறியிருப்பதை உள்ளங்கை நெல்லிக் கனியாக காண முடிகிறது. இது சரியா தவறா என்று எழுந்த கேள்விக்கான விடையையும் மறு புலரியில் அருணனின் வரவுக்காக காத்திருந்த பொழுதுகளில் கிடைக்கச் செய்ததும் அதை மேலும் பேசிப் பேசி விரித்துக் கொள்ளும் சக உயிரினை தந்தற்குமான இந்தப் பிரபஞ்ச்சத்தின் உள் நோக்கத்தில் இருக்கிறது என் ஸ்வதர்மாவிற்கான பதில் என்று உள்ளுணர்வு சொல்கிறது.

வடக்கு வாசல் அவர் தவம் இருந்த இடமாக போற்றப் படுகிறது அங்கு ஒரு மர இருக்கையும் அதன் மேல் அமையப் பெற்ற கண்ணாடியும் உத்திராட்சமும். கண்டு அமர்கையில் உள்ளே எழும் ஓசையின் அளவுகள் தனித்து வேறு எதனோடோ லயிக்கிறது. பின் கிழக்கு வாசல் சென்றால் பள்ளியறை என்று அழைக்கபடும் ஐயாவின் சமாதி அறை உள்ளது அங்கு உள்ளே நுழையுமுன் அவரது தொண்டர்களின் அனுமதி பெற்று நெற்றியில் செங்குத்தாக ஒற்றை பட்டை தரித்து உள்ளே செல்ல வேண்டியுள்ளது.
அங்கும் அமர்ந்து தியானத்தில் ஒன்ற,  காணும் தரிசனங்கள் இன்னும் மைய நீரோட்டத்திற்கு அழகாக இட்டுச் செல்கிறது.



Thursday, June 19, 2008

கந்தர்வ நகரம் (கிராமம்) - பகுதி 2

சுமார் தரை மட்டத்தில் இருந்து 1300 அடி உயரம் வந்ததும் மிகப்பெரும் நிலப்பரப்பு, சுற்றிலும் மரங்கள், மரங்கள், மரங்கள் மற்றும் குத்துச்செடிகள், மருந்துக்கு கூட மனிதர்களோ ஆடு மாடுகளோ இல்லை. மனது சட்டென்று மிகப்பெரும் மவுனத்தில் ஆழ்ந்தது போலானாது. நன்பரின் சோலையை தற்போதுதான் தாயார் செய்துகொண்டிருக்கிறார் சுமார் 60 ஏக்கர் ஒரே தளத்திலும் மேலும் 60 ஏக்கர்கள் மற்ற இரண்டு பள்ளத்தாக்குகளிலும் இருப்பதாகக் கூறினார்.

போகும் வழியில் இரண்டு கிராமங்கள் ஓரோர் கிராமத்திலும் மொத்தமும் 11/12 வீடுகளே எல்லாம் கூரை வேயப்பட்ட தாழ்ந்த வாசல்களுள்ள வீடுகள் பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகள் அருகிருக்கும் ஊருக்குத்தான் வரவேண்டுமாம்। நாங்கள் சென்ற இடத்திலும் ஒரு கிராமம் மொத்தம் 12 வீடுகள் சுற்றிலும் மரங்கள் மற்றும் மேகங்கள் மேகங்கள் மட்டுமே காட்டிலாக அதிகாரிகள் கூட ஏதாவொதொரு நாள் மட்டுமே வந்து செல்வதுண்டாம்। இந்த மலயை சோலகிரி என்று அழைக்கிறார்கள்



நன்பர் அங்கே 700 சதுர அடியில் அஸ்பெஸ்டாஸ் கூரையுடன் ஒரு சிறிய வீடு கட்டியிருக்கிறார் அங்கு ஒரு குடும்பம் தங்குவதற்கான எல்லா வசதிகளும் செய்து வைத்துள்ளார்। உணவு அந்த கிராமத்தில் இருந்து ஒருவர் வந்து அந்த வீட்டில் செய்து தருவதாக ஏற்பாடு.


சுற்றுச்சூழலின் ஓசையற்று காற்று மட்டுமே இரவு பகல் பாராது பேசிக்கொண்டிருக்கும் இதுபோன்ற சூழல் எங்களுக்கு முற்றிலும் ஒரு புது அனுபவத்தை தந்தது। கடைபரப்புவதற்கு மனிதர்களோ கடைகளோ இன்றி பூக்களும், எலுமிச்சையும், சௌசௌ (பெங்களூர் கத்தரிக்காய் என்று சொல்வோமே)-வும், வெங்காயமும் காய்த்து தொங்கும் அந்த வனாந்தரத்தில் யாருமே இல்லையென்றாலும் நமக்கே அருகே யாரோ நிற்பது போன்றதொரு உணர்வு அங்கு வீசும் காற்றும் குளுமையான சூழலும் உணர்த்திக்கொண்டேயிருந்தது.


இரவு முழுவதும் அந்த கிராமத்து ஆட்கள் தப்பு (மேளம் போன்ற ஒரு இசைக்கருவி) அடித்துக்கொண்டே இருந்தார்கள். நன்பரிடம் கேட்டதற்கு கொம்பன் வரும் வழக்கமுண்டு எனவே இவ்வறு சப்தம் எழுப்பாவார்கள் எனவும் இந்தச்சத்தம் கேட்டால் யானைகள் வருவதில்லை என்று சொன்னார் என் இளைய மகனுக்கு தூக்கம் போனது. (அப்பா டிரம்ஸ் அடிக்கலையே யானை வந்துட்டா என்று இரவு முழுதும் கேட்டுக்கொண்டே இருந்தான்).



அதற்கும் 300 அடிமேலே மைசூர் மகராஜா 1917ல் அவர் வேட்டைக்கு வந்தால் தங்கி இளப்பாறுவதற்காக கட்டிய ஒரு சிறு வீடும் அவருடைய குதிரைக்காரர்கள் தங்குவதற்காக கட்டி இப்போது பாழடைந்து இருக்கும் ஒரு கட்டிடமும் உள்ளது.









அந்த முகட்டில் இருந்து பார்த்தால் மைசூர் அரண்மணையும் (வெகு தொலைவில் ஒரு புள்ளி வடிவில் தான்) மிக நீண்ட சரிகை பேப்பர் போன்று ஓடிவரும் காவிரியும் சுற்றிலும் பரந்திருக்கும் பள்ளத்தாக்கும் கண்கொள்ளா காட்சி.






நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மழை வெகு தூரத்தில் தரை இரங்கத்துவங்கியது பின் மெள்ள முன்னேறி எங்களையும் நனைக்கத்துவங்கியது. மழை நின்ற சிறிது நேரத்தில் எதிரே ஆட்கள் கூடத்தெரியாத அளவிற்கு எங்கும் மேகக்கூட்டம் மறக்கமுடியாத அனுபவம்.



இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்து விட்டு வரும்பொழுது அங்குள்ள கிராமத்து மக்களிடம் கொஞ்சம் பேசும் வாய்ப்பு கிடைத்தது (வாகன ஓட்டுநர் மொழிபெயர்த்துச் சொன்னார்).

அவர்கள் சோலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மைசூர் மன்னர்களுக்கு மலை சார்ந்த பொருட்களை கொண்டு செல்வதும் அவர் சார்பாக மலை வளைத்தை பாதுகாப்பதுமே அவர்கள் தொழிலாய் இருந்ததாம். தற்போது அவர்கள் தொழில் மலைக்குள் சென்று, தேன், எடுத்து வருவது, கம்பு (தானியம்), மூங்கில், வெங்காயம் போன்றவற்றை பயிரிடுவது, மூங்கிலால் செய்த கூடைகள் செய்து தளத்திற்கு விற்பனைக்கு அனுப்புவது இவைகள் தாம்। மருத்துவ உதவிக்காக இதுவரை ஒருவர் கூட மருத்துவ மனைக்கு சென்றதில்லையாம்। பிறப்பு இறப்பு எல்லாமே அங்கே தான்।

சிவனே முழு முதல் கடவுள். கோவில் என்று ஏதுமில்லை। சூலம் பதித்த ஒரு மரத்தடியும் அதன் அடியே புதைந்துள்ள கல்லுமே அவர்களின் கடவுள் அடையாளம்। ரிஷி ஆசீர்வதித்த மரமென்று ஒரு ஆலமரத்தைச் காட்டுகிறார்கள்। காரணம் ஆல மரத்தினடியில் வேறு எந்த மரமும் வளராதாம் ஆனால் இந்த மரத்தின் அடியில் ஒரு கருவேப்பிலை மரம் வளர்ந்து தழைத்தோங்கியுள்ளது। அங்கு பல வருடங்கள் கண்ட ஒரு பாம்பு வாழ்வதாகவும் நம்புகிறார்கள்। அந்த இடத்தில் பரவியிருக்கும் அமானுஷ்யமும், வெள்ளந்தியான அந்த மக்களின் வாழ்வும் மிகவும் சூட்சுமமான இடம் இது என்ற உணர்வையே தந்தது। இன்னும் தன்னை அகழ்ந்தாராய்ந்து கொள்ள அந்த இடம் மிகவும் ஏதுவானத இருக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

பௌர்ணமி இரவில் அந்த உச்சியில் தங்குவது இன்னும் சுகமான அனுபவமாயிருக்கும் என்று நண்பர் சொன்னதால் அப்படி ஓர் நாள் சீக்கிரமே கை கூடவேண்டும் என்ற எண்ணியபடி மலையை விட்டு கீழிறங்கி மக்கள் கூட்டத்தில் கரைந்து போனோம். பெங்களூருவில் வந்து இரண்டு நாட்கள் தங்கி விட்டு மல்லேஸ்வரத்தில் அலுமனா மற்றும் மெஜஸ்டிக் காமத் யாத்ரிநிவாஸ் போன்ற எங்கள் வழக்கமான இடங்களில் ஆஜர் கொடுத்து விட்டு சென்னை வந்தாச்சுங்கோ…

Wednesday, June 18, 2008

கந்தர்வ நகரம் - பகுதி 1

எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி தொடங்கியது அந்தப்பயணம், மகனின் பத்தாவது பரீட்சை ஆயத்தங்கள் இருந்ததால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வெளியூர் பயணங்களை தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தோம். பின் தேர்வுகள் முடிந்ததும் புது வீடு புகு மனைவிழா எல்லாம் கொண்டாடி வீடும் மாற்றியபின் கணவரின் அலுவலகம் மாற்றும் பணி தொடங்கியது. அத்தனையும் முடிந்தபின் எங்காவது சென்று வரவேண்டும் என்பது மட்டும் தான் மனதில் இருந்ததே தவிர வழக்கம் போன்றே எங்கு செல்வது என்ற குழப்படிகள் இருந்த நேரத்தில் ரங்கமணியின் நண்பருடன் பேசும் போது இதைப்பற்றி சொல்லியிருப்பார் போலிக்கிறது அவர் மிகவும் அக்கறையாக எல்லா ஏற்பாடும் செய்து விட்டு சொன்னபின் தான் எங்கள் பயணம் ஆரம்பித்தது.

மதியம் 2 மணிக்கு மேல் சென்னையில் இருந்து (உச்சிவெயில் மண்டைய பிளந்தது) கிளம்பி இரவு 8.30 மணிவாக்கில் எங்களின் மிகவும் அபிமான நகரமான பெங்களூரை அடைந்தோம். வேற எங்குமே போக வேண்டாம் என்று தோன்றுமளவிற்கு ஊர் மிகவும் குளுமையாகவும் இனிமையாகவும் இருந்தது. (ஆனால் ஆச்சரியம் மெஜஸ்டிக் அலங்கார் பிளாசால கூட்டமே இல்லை – மொத்த மெஜஸ்டிக் ஏரியாவுமே கூட்டமே இல்லாத மாதிரிதான் இருந்தது) அங்கயும் துணை நகரம் ஆரம்பிச்சிரலாம் போல இருக்கு பெங்களூருக்குள் உள்ளே நுழையும் முன்னரே (ஹோசூர் ரோட்டில்) பிரம்மாண்டமான மால்களும் மக்கள் கூட்டமும் சேர்ந்துவிட்டது.. பெங்களூர் மெல்ல இடம் மாறுகிறதோ…
மறுநாள் காலை ஜே।பி நகரில் எங்களுக்கு மிகவும் ப்ரியமான “தாவன்கரே தோசா” ஹோட்டலில் காலை உணைவை முடித்துவிட்டு (அங்கு தயாரிக்கும் தோசை பெங்களூருவில் பொதுவில் கிடைக்கும் ஜவ்வரிசிமா தோசை போலல்லாமல் மிகவும் மொறு மொறுவென்று வெண்ணை தடவி உருளைக்கிழங்கு மாசாலை வைத்து தொட்டுக்கொள்ள காரமாக (!!!) தேங்காய் சட்னியும் தருவார்கள் ஒரு தோசைக்கு மேல் சாப்பிட முடியாதென்றாலும் வழக்கமாய் ஆசைப்பட்டு இரண்டாவது தோசை ஆர்டர் செய்து வீண் செய்வது வழக்கம் - அவ்வளவு நல்லா இருக்கும்.)நண்பரின் சுமோவில் கனகபுரா என்ற ஊரை நோக்கி புறப்பட்டோம் அப்போது கூட நாங்கள் நினைக்கவில்லை அந்த இடம் இத்தனை அழகாய் அமைதியாய் இருக்குமென்று.

கனகபுராவைத்தாண்டி சாத்தனூர் என்ற இடத்தை அடைந்து பிராதனச்சாலையில் இருந்து மெல்ல பிரிந்து சில கிராமங்களைத்தாண்டி சுமோ கரடுமுரடான பாதைகளில் ஏறத்துவங்கியது. பாதை இப்படித்தான் இருந்தது…

இருப்பதிலேயே இது மிகவும் நல்ல பாதை 80 சதவிகிதப்பாதை இதைவிட கரடுமுரடாக இருந்தது பழக்கமுள்ள மற்றும் தாரளமனதுள்ளவர்களால் மட்டுமே இந்தப் பாதையில் காரை எடுத்துக்கொண்டு வரமுடியும்। பல இடங்களில் நாங்கள் சுமோவிட்டு இறங்கிக்கொண்டு நடந்து செல்ல வேண்டியிருந்தது। வண்டியோட்டி மட்டுமே காரை எடுத்துக்கொண்டு சில அடிதூரம் முன்னேறி பின்னர் நாங்கள் போய் சேர்ந்து கொள்வோம்.
பதிவு மிகவும் பெரிதாக உள்ள காரணத்தால் அடுத்த பதிவில் தொடர்கிறேன்