Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, February 12, 2011

முகமூடிக்கவிதைகள் - 12


இப்போதும் முகம் வெளிறிப்போகிறது
என்றோ கண்டுகொள்ளாமல் வந்த

அந்த சிகப்பு சட்டை மனிதனின் சடலமும

கூடவே கிடந்த அவன் வாகனமும்

மனவோரத்தில் நினைவுறும்போது


மனித நேயம் குறித்த எந்த ஒரு

விவாதத்திற்குப்பின்னாலும்

மவுனம் காக்க வைக்கிறதென்

மனநிழலில் கடந்து போகுமிந்த நிகழ்வு


**********************

முனைந்து செய்ய இயலாது
போனவைகளை
பட்டியலிடத் தேடத்

தொலைந்து போனதென்

எழுது கோலும் வெள்ளைதாள்களும்

பிறகென்ன

அத்தனை பாசாங்குகளுக்குள்ளும்

ஒளிந்து கொள்ள முயற்சிக்கிறது மனது



Thursday, May 6, 2010

மிக நீண்ட கவிதையொன்று.....


மிக நீண்ட கவிதையொன்று

எழுதப்பெறாமாலே முற்றுப்பெற்றது


நான் வரும் வழியில்

எப்பொழுதும் எரிந்து கொண்டோ

புகைந்து கொண்டோயிருக்கும்

மின்மயாணப்புகை போக்கி உணர்த்தும்

வாழ்வின் முடிவின்மையைச்

சொல்லியிருக்கலாம்


சூழலில் கலந்து வரும்

நிண வாடை கலந்த

சுவாசமுணர்த்தும்

நித்யத்தை சொல்லியிருக்கலாம்


மரத்தினடியில் சரிந்து விழுந்திருக்கும்

நாகலிங்கப்பூவின் குவியலை

கூட்டி வாரி குப்பையிலிடுவைதை

காணும் பொழுதுணர்த்தும்

வாழ்வின் அபத்தத்தை சொல்லியிருக்கலாம்


கண்கலங்கி சிரித்து

நா வரண்ட பொழுதும்

உள்ளே உறைந்து போயிருக்கும்

எத்தனையோ ரணங்களின்

இருப்பு உணர்த்தும்

வாழ்வின் இருமையை சொல்லியிருக்கலாம்


மிக நீண்ட இருப்புப்பாதைகளில்

வளைந்தும் நெளிந்தும் செல்லும்

புகைவண்டியின் ………..மற்றும்

குறுகிய சாலைகளில் குவிந்திருக்கும்

மக்களை மாக்களை

லாவகமாய்க்கடந்து செல்லும்

பேருந்துகளின்

சாயலுணர்த்தும் நீர்மையைச்

சொல்லியிருக்கலாம்


இவையத்தனையையும் தாண்டி

என் உள்ளுணர்வும் உணர்த்தும்

உன்னிருப்பை மட்டுமே

எழுத முற்பட்ட

மிக நீண்ட கவிதை

எழுதப்பெறாமலே முற்றுப்பெற்றது

வாழ்வின் எல்லா ருசிகளையும் போல.


Saturday, April 10, 2010

மனவெளியில் சில வார்த்தைகள்

ஊரெங்கும் பூத்திருக்கும்

மின்விளக்குகளை விட

எங்கோ ஓர் மூலையில்

மினு மினுக்கும்

ஒற்றை சிம்மினியின் ஒளி

மிக நெருக்கமாய்

உணர்த்துகிறது

தனிமையை

நிராகரிப்பை

மற்றும்

உன்னிருப்பை

**************************************

சொற்களில் வழிந்தோடுகிறது

களிப்பு, காமம் காதல் மற்றும் கடமை

சர்ப்பம் உரித்த சட்டை போல்

உள்ளே கேட்பாரற்றுக்கிடக்கிறது மனது

Sunday, December 27, 2009

பெண்பால் கவிதைகள் - 4


மிகப்பிரியமான இசையைப்போலவோ
ஆழ்ந்த வாசிப்பானுபவத்தைப்போலவோ
நிரம்பித்ததும்பும் கோப்பையின்
பொன்னிறத்திரவத்தைப்போலவோ
முகத்தில் மோதி விலகும் எதிர்காற்றின்
குளிர்வாடையை போலவோ
எப்போதோ தொலைபேசும்
உற்ற தோழமையை போலவோ
வசீகரத்துடனும் வாதையுடனும்
என்னுள் உன் ஞாபகங்கள்

எப்போதும் சுமக்க வழியோ மனமோ
இல்லையென்றபோதும்
ஏதோ ஓர் மூலையில்
சுகந்தமாய் மணம் வீசும்
குடும்பமாய குதூகலிக்கையிலும்...

Monday, June 15, 2009

முகமூடிக்கவிதைகள் - 8


ஆணுக்கான அடையாளமாய்
காமத்தையும்
பெண்மையின் குறியீடாய்
காதலையும்
சொல்லியாயிற்று

எதிரெதிர் துருவங்கள்
ஈர்க்குமென்பது மாறி
இணையெதிர் துருவங்களுக்கு
நிரூபிப்பதற்கும்
என்றாயிற்று


பொய்மையும் வாய்மையிடத்து
முகமூடிகளின் வாழ்க்கையில்
நன்மை பயக்குமெனில்....

Wednesday, April 8, 2009

முகமூடிக்கவிதைகள் - 7

அழு
ஆவேசப்படு
அடங்கு
அடுத்த வேளை
சோற்றுக்காக
அனுசரித்துப்போ

நின்று சிரித்து
வெளுக்கும்
மானுடத்தின் சாயம்

********************

மீண்டும் மீண்டும்
நுகரத்துடிக்கும்
பூவின் மணம் போல
எப்போதும்
பேசத்துடித்திருக்கும் மனது

எட்டிப்பார்த்து பின்
தட்டிக்கேட்டதும்
உள்ளடங்கிப்போகும்
உணர்வுகளின் வடிகால்
இசையாகவோ
கவிதையாகவோ
ஒரு சில நேரம்
சிடுசிடுப்பாகவோ
ஆகலாம்.

Tuesday, April 7, 2009

கண்ணாடி

வெகு ஆழத்தில்
உறைந்து கிடக்கும்
இன்றைய நாட்களின்
மவுனத்தை உடைத்தெறியவே
விரும்புகிறேன்...

ஆனாலும்

உள்நோக்கி பார்க்கவும்
உணர்ந்தறியவும்
ஏதோ உள்ளதென்ற
உந்துதலுக்கு செவிசாய்த்து
என்னுள் ஆழ்கிறேன்
மிக நீண்ட தனிமையில்.

Friday, February 20, 2009

காதலின் மீள்கடிதம்

பிப்ரவரி 14 எந்த ஒரு கவனிப்பும் இன்றி கழிந்து சென்றது என்னுள் கேள்வியை எழுப்பியது என்ன ஆச்சு எனக்கு? எனக்குள் காதல் செத்து விட்டதா.... தேடிப்பார்த்தேன் நல்லவேளை இல்லை.... ஆழப்புதைந்திருக்கும் உணர்வுகளில் ஒளிந்திருக்கும் உண்மை. மிக மெல்லிய காதல் கவிதை.


எப்போதும் கனவுகளில்

பார்த்தேயிராத தெருக்களில்
பயணித்திருக்கிறேன்

ஓட்டியே இராத கார்களின்
வட்டுவம் பிடித்து
மைல்கணக்காய்
காரோட்டியிருக்கிறேன்

பறந்து செல்லும்
பறவைக்கூட்டத்தினரோடு
நானும் பறவையாய்
பறந்திருக்கிறேன்

மிதந்து செல்லும்
ஆற்றின் சுழிகளில்
சுழன்று வீழ்ந்திருக்கிறேன்

தொலைந்து போன
பால்யத்தின் கதவுகளை
திறந்து பார்த்திருக்கிறேன்

அதோடு கூட


உன்னோடும் இருந்திருக்கிறேன்

Thursday, December 4, 2008

பெண்பால் கவிதைகள் - 2

நட்பு

எப்போதும் போலுணர்ந்தேன்
இரு பத்து வருடங்கள்
பின்பும்
அம்மா
மனைவி,
அதிகாரி
ஏதுமின்றி
நானாய்
நன்பனின் எதிரில்

சுயநலம்

நல்லவேளை
எனை வசீகரிக்கும்
பித்தனோ
ஞானியோ
பைத்தியக்காரனோ
என்
கணவரோ
மகனோ
மருமகனோ
சோதரனோ
இல்லை

காதல்

இருமகவோடு
இரவு கதைசொல்லும் நேரம்
நாம் காதலித்த பொழுதுகளின்
கதைகளை
சொல்லவா என்றேன்
புன்சிரித்துக்கேட்டான்
இறந்தகாலமென்று
எப்படி முடிவுசெய்தாய்???

Wednesday, November 19, 2008

முகமூடிக்கவிதைகள் - 5

ஜன்னல் கம்பிகளில்
சொருகிய
தீரைச்சீலையாய்
மனது சிக்கிக்கொள்கிறது
ஏதேனும் ஆழத்தில்

வார்த்தைகளை
உதைத்து உதைத்து
வெளிவருகிறது
மனம்



***********************

தவறாகப்புரிந்துகொள்ளப்படுமென்று
விழுங்கிய வார்த்தைகள்
விருட்சமானது

காய்களோ கனிகளோ
ஏன்
பூக்களோ இல்லாத
விருட்சத்திற்கு
நிழலுமில்லை.


*******************************


Friday, October 17, 2008

பெண்பால் கவிதைகள் - 1

பெண்ணியம்
என்
போதையின்
முகச்சாயைகளை
வெளிக்கிட வைத்தது

என் புகழ் போதை
என்னை
எல்லாவற்றையும்
எழுதவைத்தது
காதல், காமம்
மற்றும் என்
தூமை உட்பட.


**************

Thursday, October 16, 2008

முகமூடிக்கவிதைகள் - 4



இயலாமை

பரிதாபங்களை யாசித்தல்
கழிவிரக்கத்தை தறுவதாயிருக்கிறது.

இயலாமைகளை உரத்துச்சொல்வதை
தடுக்கிறது சுயமரியாதை

நடப்பின் இருப்புகளை
உதறவோ உடைக்கவோ முடியாத
இயல்பின் மனநிலையில்
கரம்நீட்டித்தரும்
உதவியின் கோப்பைகளை
உடைத்தெறியத்துடிக்கிறது மனது

ஏனெனில்
யாசித்தலின் எதிர்மறையாய்
இதையேனும் செய்வதில்
நிம்மதிக்கிறது "இயலாமை."

Friday, October 10, 2008

முகமூடிக்கவிதைகள் - 3



நடைமேடை தூண்களுக்கு

இடயே

தெரியும்

விரைத்த கால்களும்

அதை சுற்றி நின்ற

கால்களில் இருந்த

தயக்கங்களூம்

தரும்

அச்சத்தை

தாண்டியும்

மனம்

நிம்மதித்தது

அவர்

நமக்கு

தெரிந்தவரில்லை

என்பதில்


*******


வாழ்க்கை

மிகவும்

சிக்கலாகித்தான் போனது

வாழ்த்துக்களின்

தடமும்

புரிந்தபோது.




Friday, October 3, 2008

முகமூடிக்கவிதைகள் - 2

01. சமாதனங்கள்
ஆசுவாசங்கள்
இடைவெளிகள்
பிறப்பு
இறப்பு
கண்ணீர்
கவலை
இவைகளின் இடையே
இன்றைய சந்தோஷம்

02. இலக்கியம் புடலங்காய்
கவிதை கத்தரிக்காய்
கதை அவரைக்காய்
கட்டுரை வெண்டைக்காய்
இவையெதையும்
செய்தது நானில்லை
பின்னெப்படி
உப்புக்கும் சுவைக்கும்
நான் பொறுப்பு???


03. சில
உணர்வுகள்
வார்த்தைகள்
எப்போதும் உடனிருக்கும்
அன்பு
காதல்
துரோகம்
இடைவெளி
சாவு
கோபி
சம்பத்
நிழல்கள்
நவீனன் போல

Wednesday, August 13, 2008

போதை


பிரஞ்ஞையற்று கிடக்குது

உலகம்

விழுந்து கிடக்கும்

குடிகாரனைப்போல

சுற்றிலும்

குப்பை கூளம்

அவமானம் ஆக்ரமிப்பு

அன்பு அலட்சியம்

துரோகம் நட்பு

மற்றும்

காமம்.


Tuesday, August 12, 2008

சில கவிதை முயற்சிகள்




















பெரும் வனப்புக்களை

காட்டி கூட்டி

கூட்டி காட்டியும்

செய்யும் மதர்ப்புகள்

ஏதும் அறியாமலே

செல்கிறது வாழ்க்கை

மிகத்தெளிவாக.


*******************


நோய் வந்துணர்த்தியது

ஒவ்வொருவரும்

தனித்

தனி

என


*******************

திறந்து கிடக்கு

உலகம்

நம்

முன் அனுமானங்கள்

எல்லாம்

சாவித்துவாரத்தின்

வழியாக.

Tuesday, April 22, 2008

இரண்டல்லாதது.


பொய்-வாய்மையோடும்
இன்ப-துன்பத்தோடும்
சுக-துக்கத்தோடும்
பகலிரவோடும்
சந்திர-சூரியனோடும்
ஆண்-பெண்ணோடும்
இரண்டோடே வாழும்
த்வைதமான வாழ்க்கையில்
இரண்டல்லாத பிரம்மம் தேடி
அத்வைதம் காணும் வழி
உண்மையோடு உறவாடும்
உன்னதமான வாழ்வென்ற

பால பாடம் கற்றுக்கொள்ள
ஆயுளில் பாதியானதே….

Friday, April 18, 2008

கைகூடா தியானம்




குரங்கை நினையாது
மருந்தைக் குடியென்றார்
குப்பி திறக்குந்தோரும்
குரங்கின் நினைவு

உன்னில் வெளிகாண
உள்மூச்சு பாரென்றார்
அடிக்கடி
மறந்து போனதென் மனது

விதிகள் ஒன்றல்ல போலும்
மனதிற்கு

Friday, February 8, 2008

தனிமை - தன்னியல்பு - குரு - கடவுள் - காலம்


உன் தூர்ந்துபோன சிந்தனைகளோடான
வாழ்வியல் பார்வைகளை
மாற்றிக்காட்டுகிறேன் வா..

எந்த ..யிஸங்களின்
வர்ணப்பூச்சுக்களும் இன்றி
தன்னியல்போடு மட்டுமே
என்னோடு வா

முன்னெப்போதும் உண்டான
சாயல்களின் துணையின்றி
சார்புகளற்ற சிந்தனையோடு மட்டுமே
என்னோடு வா

உலர்ந்து போன உணர்வுகளை
இன்னும் சுமந்து திரியாது
இப்போதைக்கிப்போதே
வாழ்வோம் என்ற
எண்ணக்கிடைக்கையோடே
என்னோடு வா

கடந்தும் நடந்தும் போன
காயங்களின் சுவடின்றி
உன் கரம் பிடித்தழைத்துச் செல்ல
நானுண்டு இங்கே

ஆயிரமாயிரம் கரங்கள் பற்றி
நானெப்போதும் நடந்து செல்லும்
என் பாதைகளில்
உன் கால்கள்
பூக்களையும் முட்களையும்
சமமென பாவிக்கும்
அவதானிப்புக்களின் இரகசியங்களை
நானுக்கு கற்பித்து தருகிறேன் வா

எனக்கு குரு, கடவுள், காலம்
எனப்பெயர்கள் பலவுண்டு
என்னோடு சுமைகளின்றி
தனியனாய், தன்னியல்போடு வா

உன் தூர்ந்துபோன சிந்தனைகளோடான
வாழ்வியல் பார்வைகளை
மாற்றிக்காட்டுகிறேன்.