Tuesday, May 19, 2015

வெளிப்பாடு - உணர்வுக்குவியல்

கடலில் ஆழம் செல்லச் செல்ல அலையடிப்பதில்லை. அலையாடலில் களிகொண்ட மச்சம் விருந்தாகும் என்பதும் உண்மை.

மெளனம் மிக மெதுவாக உள்ளூருகிறது ஆனால் ஆழத்தில் சென்றமர்ந்து விடுகிறது

வெற்றி என்பது வெறும் வார்த்தையல்ல, சந்தோஷம் மற்றும் மவுனம் என்பதும்.

எதனுள்ளும் பற்றியிருக்காத ஒரு முனை அகத்துள்ளே தனித்து இயங்குகிறது. அது தன் ஒவ்வொரு அசைவிலும் உண்டு செரிக்கிறது எஞ்சிய மனதின் அத்தனை அடுக்குகளையும்.

உன் மூடிய கண்களுக்குள் என் முகம் தெரிகிறதா. கேட்டு கேட்டுச் சலித்து விட்டேன் இல்லையென்றாவது சொல்லிவிடு. நான் கேள்வியை மாற்றிக் கேட்கிறேன் உன் உண்மையை வெளிக்கொணர.

நான் கவிதையோ, கதையோ இல்லை கருத்தோ எழுதித் தொலைக்கிறேன்.
ஏனெனில் என் கைவசம் நேரமும் முகநூலும் இருக்கிறது.

ஏதோ ஒரு கணத்தில் கடந்து சென்று விடுகிறேன் உன்னிடம் பேசத்தோன்றும் விழைவை.
பின் அதைக் கவிதை எழுதி கரைத்தும் விடுகிறேன். எனக்குள் சொற்கள் மீதமிருக்கும் வரை நமக்குள் சொல்லாடல் இல்லை. சொல்லழியும் நாளுமுண்டு நினைவில் கொள்

கையிலிருக்கும் கோப்பையில் மிதக்கும் திரவத்திற்கு ஒப்பானதானது புத்தகங்கள். மெல்ல மிடறு விழுங்கி சுவை நரம்பின் கடைசி வாசலைத் தாண்டும் பொது உணறும் சுவைக்கு ஒப்பானது வாழ்க்கை. உள்ளிறங்கி ஊணுடன் முயங்கி வெளிப்படும் உணர்வினுக்கொப்பானது இசை.
தேர்ந்தெடுப்பதை மட்டுமே தெரிந்தெடுக்கமுடியும் என்ற உண்மையை உணர்ந்து கொள்வது வரை கசப்போ, இனிப்போ, புளிப்போ வாழ்வை கடந்துதானகவேண்டும்

No comments: