Tuesday, September 23, 2014

தூய்மையான இந்தியா – ஜெய விஜயி பவ


கிளீன் இந்தியா ப்ராஜெக்ட் அக்டோபர் இரண்டிலிருந்து ஆரம்பிக்கப் போகிறோம் என்று பெங்களூரில் மோடி உணர்ச்சி போங்க பேசிக்கொண்டிருந்தார்.  உண்மைதான் மிகவும் தேவையான ஒரு முயற்சி. நாம் மற்ற நாடுகளில்  பயணிக்கும் போது அங்குள்ள தெருக்களையும் சாலை ஓரங்களையும் காணும் பொது நம்முள் ஏதோ ஒரு தன்னிரக்கம் சுரந்து கொள்ளும். அதுவே நம் ஊரில் சில வெளிநாட்டவர்களோடு தெருவில் பயணிக்கும் போது மிகப்பெரிய கையாலாகதத் தனமாக மாறி  மிகவும் அருசியான உணர்வுகளை தோற்றுவிக்கும்..


வெளிநாடுகளின் இண்டஸ்ட்ரியல் பார்க் உண்மையில் ஒரு பூங்கா போல இருக்கும் ஆனால் எனக்குத் தெரிந்து இங்கு எந்த ஒரு இண்டஸ்ட்ரியல் பார்க்கும் சாதாரண பகுதியாகக் கூட இருக்காது ஏதோ கைவிடப்பட்ட குப்பைத்தொட்டி போல இருக்கும். சிப்காட் அதிகாரிகள் நம் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதில் ஏதோ அவர்கள் தன்மானம் குறைந்து போவது போல் நடந்து கொள்வார்கள். சில முக்கியமான வெளிநாட்டு வாடிக்கையாளர்களை நம் ஏரியாவிற்கு அழைத்து வரும் போது தான் இதுவரை நாம் தினமும் கடந்து வந்துகொண்டிருக்கும் அவலத்தின் மொத்த விஸ்தீரமும் உரைக்கும்.

தாமதமான நடவடிக்கை என்றாலும் தேவையான ஒன்று. எல்லா நல்ல திட்டங்களைப்போல இதுவும் தொடங்கி மறைந்து  விடக்கூடாது என்று இந்த நவராத்திரி நன்னாளில் எல்லா சக்திகளையும் வேண்டிக்கொள்கிறேன். J

ஜெய விஜயி பவ

Thursday, September 11, 2014

எவ்ளோ பெரிய நிம்மதி...

எந்த ஒரு விஷயத்தையும் ஆழ்ந்து அனுபவிக்கும்  போதே அது குறித்த பார்வையும் விமர்சனமும் எனக்குள்ளேயே  துவங்கி விடும். சில சமயம் அந்த விஷயங்களில் இருந்து என் முயற்சியில் வெளி வருவேன் சில சமயம் காக்கை உட்கார பனம் பழம் விழுவது போல் தானாகவே நடக்கும். சமீபத்தில் நடந்த இரண்டு விஷயங்கள்.
 
ஒன்று  - என்னுடைய விண்டோஸ் போனில் ஒரு வசதி, பேஸ் புக் அப்டேட் எல்லாம் அதற்குள் போகாமலே பார்த்து விட முடியும். என் பக்கத்திற்கு வரும் லைக், கமன்ட் எல்லாம் தனியாக மீ என்ற பக்கத்திலும்  எல்லா பதிவுகளும் பீப்புள் என்ற பக்கத்திலும் வந்து விடும்.  நான் பேஸ்புக் பக்கத்திற்கு வராமலே இதையெல்லாம் பார்த்து விடமுடியும். அதிலும் இந்த பகுதிகள் குறைந்த சிக்னல் இருந்தால் கூட வெகு எளிதில் லோட் ஆகிவிடும். நாங்கள் எல்லாம் ஆரம்ப கால கணணி பயன்பாட்டாளர்கள் என்பதால் டாஸ் பேஸ் லினக்ஸ் பேஸ் போன்ற அவுட்புட் மிகவும் பிடிக்கும்.  இதனால் கை சும்மாவே இருக்காது, எப்பொழுது பார்த்தாலும் போனை புரட்டியபடியே இருக்கும். ஒரு கட்டத்தில் எனக்கே என் மீது விமர்சனம் வர ஆரம்பித்தது.  அப்போது தான் வந்தது ஒரு விடிவு காலம்  சமீபத்திய விண்டோஸ் அப்டேட் செய்ததில் இந்த வசதியை எடுத்து விட்டு நேரடியாக பேஸ்புக் அப்ளிகேஷனுக்கு தொடர்பு கொடுத்து விட்டார்கள். இந்த இன்டர்பேஸ் முறையில் நோட்டிபிகேஷன் வந்து அதைத்  திறந்தால் அது நேரேடியாக நம் எப்.பி பக்கத்திற்கு எடுத்துச் சென்றுவிடும் ஆனால் சிக்னல் குறைவாக இருந்தால் எப்.பி பக்கங்கள் ஒப்பன் ஆக தாமதமாகும்  இது கொஞ்சம் எரிச்சல் ஊட்டுவதால் போனை உருட்டுவது கொஞ்சம்.. கொஞ்சம்தான்  குறைந்துள்ளது. ஒரு பக்கம் சந்தோஷம் மறு பக்கம் சிறு அசௌகரியமாக உணர்ந்தாலும் முள் கொஞ்சம் குறைந்த உணர்வு.
இரண்டாவது சனிக்கிழமை காலை ஒன்பது மணி முதல் பதினொன்றரை மணி வரை ஏசியா நெட்டில் வரும் மகாபாரத தொடர். அடுத்த வாரம் நாம் தமிழில் பார்க்கப்போகும் பகுதிகள் மொத்தமும் முதல் வாரமே இங்கு முடிந்து விடும்.  எனக்கு மலையாளம் மொழி மிகவும் பிடிக்கும் என்பதாலும் சில சமயம் வார நாட்களில் அலுவல் முடிந்து ஏழு   மணிக்கு முன் வீடு திரும்ப தாமதமாகிவிடும் என்பதாலும் தவறாமல் இந்த சனிக்கிழமை தொடரை பார்த்து விடுவதுண்டு. ஆனால் இப்படி இரண்டரை மணி நேரம் டீவி முன்னாடி கழிப்பது எனக்குள்ளேயே சில வாரங்களாக குற்ற உணர்வை தந்து கொண்டிருந்தது. வந்தது விடி மோசனம். போன வாரம் ஓணத்தை முன்னிட்டு மற்ற நிகழ்ச்சிகள் இருந்ததால் இந்த பகுதி கிடையாது. இதன் படி அவர்கள் நமக்கு ஒரு வாரம் பின் தங்கி விட்டார்கள் எனவே இனிமேல் பார்க்க வேண்டிய தேவை இல்லை... எவ்ளோ பெரிய நிம்மதி....

Friday, August 15, 2014

உரத்த சிந்தனை – உடை – என்ன செய்யப் போகிறோம்?



சிற்றாடை இடை உடுத்திய சின்னஞ்சிறு பெண் குழந்தைகளை இப்போதெல்லாம் கண்களால் காண்பதும் அரிது என்பது நாமெல்லாம் அறிந்த ஒன்றே. இனி கற்பனையில் கூட மனதில் காண முடியாது என்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கிறோம் என்பது  பத பதைப்பிற்கு உள்ளாக்குகிறது.

இப்போதிருக்கும் பெண்களில் மிகப்பெரும் சதவிகிதத்தினர்  சுடிதார் போன்ற உடைகளையே மிகவும் சௌகரியமாக எண்ணும் நிலை உள்ளது. இதற்கான காரணமாக நாம் பலவற்றைச் சொன்னாலும் அடிப்படையான காரணம் பள்ளி கல்லூரி காலங்களில் அதுவே சீருடையாக மாறியதும் ஒரு காரணம் என்பது என் எண்ணம். தொடர்ந்து ஒரே விதமான சௌகர்யமான விதத்தில் உடை அணிந்தவர்களுக்கு கொஞ்சம் அதிக கவனம் தேவைப்படும் வேறு மாதிரியான உடைக்கு (பாவாடை தாவணி, புடவை) மாறுவதில் சிரமம் கண்டிபாய் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்த அடிப்படை காரணத்தினாலேயே முப்பது முப்பத்தைந்து வயதிற்கு கீழ் உள்ள இப்போதைய பெண்கள் பெரும்பாலும் புடவை அணியும் வழக்கத்தை தவிர்த்து வருகின்றனர்.

இப்போதைய நவீன நகர்புறப் பள்ளிகள் நம்மை இன்னும் ஒரு படி பின்னுக்கு அல்லது முன்னுக்கு தள்ளுகிறார்கள்.  இது போன்ற பள்ளிகளில் இப்போதெல்லாம் மூன்றாவது வகுப்பு வரை ஆண் பிள்ளைகளைப் போல அரை கால் சராயும் காலர் வைத்த சட்டையுமே  சீருடையாக பெண் குழந்தைகளுக்கும் பின்பற்றப் படுகிறது. பின் மேல் வகுப்பு செல்லும் பொது அது  முழு கால் சராயாக மாறுகிறது. 

இந்தக்குழந்தைகள் இப்போதே கூட பட்டுப்பாவாடை சட்டை, ப்ராக், குட்டை பாவாடை போன்ற உடைகளை விரும்புவதில்லை. விசேஷ வீடுகளுக்கோ, கோவில்களுக்கோ செல்வதற்கு கூட அவர்கள் ஷார்ட்ஸ், டி ஷர்ட், பேன்ட்ஸ், போன்ற உடைகளை அணிவதையே விரும்புவதாக அநேக பெற்றோர்கள் கூற கேட்கிறேன். இந்த நிலை தொடர்ந்தால் இன்று பாவாடை தாவணி, புடவைக்கு நேர்ந்தது நாளை சுடிதாருக்கும் நேரும் என்பது என் எண்ணம்.

இது வெறும் உடை சம்பந்தமானது மட்டுமல்ல பெண்களின் நடை, மனம் குணம் மற்றும் அவர்களின் நளினம் சார்ந்ததும் கூட. நானும் கூட எல்லாவிதமான உடைகளையும் அணியும் வழக்கம் உள்ளவள் தான். அதனாலேயே உடை தரும் உள்ளம் மற்றும் உடல்மொழி  மாற்றங்களை வெகு தெளிவாக என்னால் யூகிக்க முடிகிறது.

இந்த பதிவை படித்து விட்டு என்னை பத்தாம் பசலியாகவோ இல்லை கட்டுப்பெட்டியாகவோ நினைக்கத் தோன்றினால் அவரவர் ஆழ் மனைதை கேட்டுப்பாருங்கள்  இந்தக் கவலை உண்மை எனச் சொல்வீர்கள்.

களவையும் கற்று மறக்கலாம் ஆனால் களவு மட்டுமே கற்கலாகதல்லாவா? பெண்மையும் அதன் நளினமும் தொலைந்து போவது ஏற்புடையது தானா? நாம் என்ன செய்யப்போகிறோம்??

Wednesday, August 13, 2014

உரத்த சிந்தனை – உறவுகள் – ஒரு சுய பரிசோதனையின் தேவை


காலம் காலமாய் நம்முள் கனன்று கொண்டிருக்கும் பெரு நெருப்பொன்றை கையாள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். அன்றைய கூட்டுக் குடும்ப காலகட்டமாகட்டும், இன்றைய தனிக்குடித்தன காலமாகட்டும் இரத்த சொந்தக்களுக்கிடையேயான பூசல்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

முகலோபனம் இல்லாத உறவுகளை இன்றும் எத்தனயோ வீடுகளில் நாம் மிகவும் வேதனையோடு எதிர் கொள்ளத்தான் செய்கிறோம். இதில் நம் தவறென்ன அவர் தவறென்ன என்பதை தாண்டி ஒரு சூல் உறவு என்பதை நாம் யோசிக்கின்றோமா? என்பது மட்டுமே நம் கேள்வி, இதையே நீர் அடித்து நீர் விலகுமா என்றும் கேட்பதுண்டு. 

ஒருகுடும்பம் ஒரு குழந்தை என்ற இன்றைய குடும்ப அமைப்பில் நம்மைத் தாண்டி அந்த குழந்தைகளுக்கு உருத்தானவர் யார்? பெரியப்பா, சித்தப்பா, அத்தை பெரியம்மா, சித்தி, மாமா, இவர்தம்  குழந்தைகளை உறவகாவும் உயிராகவும் நினைக்கும் அளவிற்கு நாம் நம் குழந்தைகளை வளர்த்திருக்கிறோமா? என்பது நாம் பதிலுறுக்க வேண்டிய ஒரு கேள்வி.

எழுபது என்பது வருடங்களுக்கு முன் ஒரே வீட்டில் பிறந்து நகமும் சதையுமாய் வளர்ந்து காலச்சூழலில் ஒருவருக்கு ஒருவர் அந்நியமாய் ஆனா சகோதர சகோதரியின் உறவு அவர்கள் இறப்பிலும் இணையவில்லை. இந்த விலகலின் காரணங்கள் மட்டும் கதை கதையாய் இருவர் குடும்பங்களிலும் பேசுவது தாண்டி உண்மையான காரணம் புரியாமலே இரு குடும்பமும் இன்று வரை தனித்திருக்கும் எத்தனையோ கதை நாம் அறிந்ததே. ஆனால் இருவரில் கடைசியாய் எஞ்சியவர் இறக்கும் தருவாயில் சொன்ன சில நெகிழ்வான வார்த்தைகளில் இன்றைய தலைமுறை உறவுகளை புதுப்பிக்க விழையும் சாத்தியக்கூறுகளும் நாம் அறிந்ததே. மிக்க சந்தோஷம், ஆனால் காலம் கடந்த இந்த ஞானத்தின் இடையில் நாமும் நம் தலைமுறைகளும் எத்தனை உணர்வு பூர்வமான  நிகழ்வுகளை,  சந்திப்புகளை இழந்திருப்போம்?  குறைந்த பட்சம் நாமாவது அந்த தவறை செய்யாதிருக்க என்ன செய்கிறோம்? நாம் சிந்திக்க வேண்டிய முக்கியமான கேள்வி இது.

உறவுகளை சுயலாபம் தாண்டிப் பார்க்கும் மனோபாவம் நம்மில் உள்ளதா? அதையும் தாண்டி கருத்து வேறுபாடுகள் எழும் சமயங்களில் அந்த கசப்புக்களை வரும் தலைமுறைக்குள்ளும்  செலுத்தாதிருக்கிறோமா? ஒருவருக்கொருவர் விலகாதிருக்கிறோமா? இவைகளுக்கான பதிலை நாம் யாரோடும் பகிர்ந்து கொள்ளத்தேவையில்லை ஆனால் நம்முள் ஒரு சுய பரிசோதனை மிகவும் அவசியம்.

Monday, August 11, 2014

உரத்த சிந்தனை – மொழி – எப்படி சரி செய்யப் போகிறோம்??


மதிய உணவு இடைவேளை என்பது சில சமயம் இயந்திரத்தனமாயும், சில சமயம் ஆசுவாசமாகவும் அமைவதுண்டு. நேற்றைய நாள் இரண்டாவது வகையைச் சார்ந்தது.

மதிய உணவை சில நண்பர்களோடு உண்ண நேர்ந்தது. பேச்சு அவர்கள் குழந்தைகளின் புத்திசாலித் தனங்களைப் பற்றியும், விளையாட்டைப்பற்றியும் போய்க்கொண்டிருந்தது. மெதுவாக பாடத்திட்டதைப்பற்றியும் திரும்பியது. எல்லோருமே அவரவர் குழந்தைகளை ICSE/CBSE பாடத்திட்டத்தில்  தான் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் இரண்டாவது மொழியாக பொதுவில் ஹிந்தியை எடுத்துள்ளார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அப்பா, அம்மா இருவருமே ஹிந்தி படித்திருக்கவில்லை ஒரு சிலர் பிள்ளைகளுக்காக தாங்கள் படிப்பதாகவும் சிலர் தனி வகுப்பில் சேர்த்திருப்பதாகவும் சொன்னார்கள்.

இதில் தெலுங்கர், தமிழர், மலையாளி என கலவையாக எல்லா மாநிலத்தவரும் இருந்தனர். வீட்டில் அவரவர் தாய் மொழியில் தான் பேசுகிறார்களாம். ஆனால் இரண்டாம் மொழிப்பாடமாக தாய்மொழியை எடுத்துக்கொள்வதில் தயக்கம் இருக்கிறது .  இதில் நாம் ஒத்துக்கொள்ள வேண்டிய ஒரு அம்சமும் இருக்கிறது. நம் மாநிலங்களில் உள்ள இது போன்ற பள்ளிகளில் அந்தந்த மாநில மொழியே பெரும்பாலும் இரண்டாவது மொழியாக இருக்கும். அந்த வகையில் மற்ற மாநிலத்தாருக்கு அதில் ஆட்சேபமும் அசௌகரியமும் இருக்க  வாய்ப்புண்டு.

ஆனாலும் இப்படியே போனால் நம் சந்ததியினர் அவரவர் தாய் மொழியில்  எழுதவோ படிக்கவோ தெரியாமல் பேச மட்டுமே தெரிந்தவராவர். இதுவே ஒரு மொழியின் அழிவின் ஆரம்பம் ஆகாதா? என் குழந்தைகளை எடுத்துகொண்டாலும் அவர்களின் வாசிப்பு முற்றிலும் ஆங்கிலத்திலேயே உள்ளது. பல தரப்பட்ட புத்தகங்களை வாசித்தாலும் அவை நம் தாய் மொழியில் இல்லை. இதில் மேலும் வருத்தம் என்னவென்றால் இருவருமே தமிழையே இரண்டாம் மொழிப்பாடமாக எடுத்தவர்கள்.

இன்றைய வணிக சூழலில் அவரவர் மாநிலங்களிலேயே வேலை செய்யும் வாய்ப்புக்கள் மிகவும் அரிது என்பதாலும், யாதும் ஊரே யாவரும் கேளீர் வாழ்வே மிகவும் சிறந்தது என்றாலும் எழுத்துக்களை தொலைக்கும் மொழியை நாம் எவ்வாறு காப்பது? அரிதாக அரிதாகி மறைந்து போன நம் எத்தனையோ குல/குடும்ப வழக்கங்களைப்போல நாம் நம் மொழியையும் தொலைத்து விடப்போகிறோமா? அந்நிய தேசங்களுக்குச் செல்லாமலேயே நாம் நம் மொழிக்கு அந்நியமாகிப்போகும் நிலைமையை எப்படி சரிசெய்யப் போகிறோம்??

இது போல இன்னும் சில கேள்விகள் உண்டு?......

Monday, April 7, 2014

பேசவும் கேட்கவும் திகட்டாத தெள்ளமுது – இசை அதன் பல்வேறு ரூபங்களுடன்


ஆங்கிலத்தில் வாசிக்கவும், எழுதவும், பின் பேசவும் ஆர்வம் கொண்டிருந்த எனக்கு ஆங்கில பாடல்களை கேட்பதில் ஒரு மிகப்பெரிய தயக்கம் இருந்தது. சரியான வழிகாட்டுதல் இல்லாததும் கூட ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். பகிர்ந்து கொள்ளக்கூடிய அளவில் நட்புகளும் இந்த வரிசையில் இல்லை. இந்த நிலையில்
Colonial Cousins -  by Hariharan and Leslie Lewis.  நான் முதல் முதலில் கேட்ட ஆங்கில ஆல்பம். கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்கள் முன்பு என்று நினைக்கிறேன் (1996), நவீன் (என் பெரிய பையனுக்கு நாலு வயதிருக்கும் ஆனால் எப்போதெல்லாம் இந்த இசைத் தொகுப்பை கேட்க நேருகிறதோ அப்போதெல்லாம்  நான் என் பதின் பருவத்திற்கு சென்று மீள்வேன். I used feel so much of love in me when I hear this album, மேலும் கடவுளையும் இசையையும் பற்றிய மிகப்பெரிய புதியதொரு புரிதலை தந்ததும் இந்தப் பாடல்கள் தான்.
அதிலும் கிருஷ்ணா நீ பேகனே பாரோ என்ற இந்த பாடல் ஒரு நேர்த்தியான கோர்வை. ஆங்கில இசையும், கர்நாடக இசையும் கலந்ததோடல்லாமல் இந்துஸ்தானியும், ஹரியின் குரலும் தரும் மயக்கம் எந்நாளும் தீராதது. ஒவ்வொரு பாடலும் தரும் இன்பம் ஒவ்வொரு வகையானது
 
 

இதன் பிறகு தான் ஜான் டென்வரும், லூசியானா சொசாவும், யானியும் கேட்கத்துவங்கினேன் ஆனாலும் இந்த தொகுப்பிற்குண்டான இடம் இன்று வரை மாறாதது. இன்று காலை கேட்கும் போது கூட மொத்த உலகையும் மிகவும் அன்போடும் காதலோடும் பார்க்கத்தூண்டும் இந்த பாடலை பகிர்ந்து கொள்வது என் ஆத்ம திருப்தி.

இவரது மற்றொரு தொகுப்பு காதல் வேதம், இதற்கு முன்பா இல்லை பின்பா ஞாபகம் இல்லை, ஆனால் அதுவும் இதுபோலவே பித்துக்கொள்ள வைக்கும் பாடல்களை கொண்டது...

Thursday, April 3, 2014

இசை எனும் காற்றழுத்த தாழ்வுமண்டலம் - இப்போது பாம்பே ஜெயஸ்ரீ

 
 

இசை என்னை ஆக்கிரமிக்கும் விதம் மிகவும் வித்யாசமானது. கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தன் மகவை மட்டுமே நினைப்பது போலவும், மழைக்காலத்திய இரவுகளில் இடைவிடாது நினைவுறுத்தும் குளிரைப்போலவும், கோடை காலத்தின் குளீரூட்டப்பட்ட அறைக்குள்ளும் உணர்த்தும் வெப்பத்தைப்போலவும், காதல் வயப்பட்ட மனதைப்போலவும் இடைவிடாது தன்னை நிலைநிறுத்தி என்னை முழுதுமாய் ஆக்கிரகிக்கும்.

சக்கரமணிந்த கால்களைப்போன்ற ஓட்டத்தினிடையேயும், உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் இசை ஒரு தனி ஸ்துலமாய் அரூபமாய் உடன்வரும்.  யாரும் அறியாமலும் சில சமயம் அறிந்தும் மனதுள் ஓடும் இசை கண்களின் வழியேயும்,  வார்த்தைகளினோடும் வழிந்தோடும். போதை கொண்ட மனதை நெருங்கிய சிலருக்கு அநேக நேரங்களில் கண்கள் காட்டிக்கொடுத்துவிடும்  மேலும் அந்த நேரங்களில் என் காதுகளில் நிரம்பியிருக்கும் இசை மற்றவர்களையும் கூட தொடக்கூடும். இது ஒரு காற்றழுத்த தாழ்வுமண்டலத்தைபோல தொடங்கி புயலாய் மாறும். பின் நிலைமை மாறும் மீண்டும் தாழ்வு மண்டலம் உருவாகும் இதுவரை இதன் பின்னிருக்கும் வேதியலை நான் அறிந்து கொள்ள முயற்சித்ததே இல்லை.
அதுபோன்ற தொரு இயற்கை சீற்றத்தில் தான் கடந்த சில நாட்களாக நான் பாம்பே ஜெயஸ்ரீ யுடன் வலம்வந்து கொண்டிருக்கிறேன்.

வாழ்க்கையின் அதிகமான பாடங்களை கற்றுக்கொண்டிருந்ததொரு காலமது. அதை முழுதாய் அனுபவங்களாய் மாற்றிக்கொள்ளவும் அன்றைய நிதர்சனங்களை பழகிக்கொள்ளவும் முயன்று கொண்டிருந்த காலகட்டத்தில் தான் நான் முதல் முதல் பாம்பே ஜெயஸ்ரீ யை கேட்க நேர்ந்தது.  அன்று முதல் இன்று வரை தியானத்திற்கு ஒப்பான நிமிடங்களை வாரி வாரி வழங்கும் ஒரு அட்சய பாத்திரம் அவரது குரல். பாடல் கேட்டுக்கொன்டிருக்கும் போதே மனம் மிக மிக ஆழத்தில் திம்மென்று அமர்ந்து விடும். பின்பு இது போலஏதாவது வெளியேற்றினாலன்றி நான் நானல்ல.

என்னை முதல் முதலாக வசீகரித்த பாடல்...