Friday, October 3, 2008
முகமூடிக்கவிதைகள் - 2
ஆசுவாசங்கள்
இடைவெளிகள்
பிறப்பு
இறப்பு
கண்ணீர்
கவலை
இவைகளின் இடையே
இன்றைய சந்தோஷம்
02. இலக்கியம் புடலங்காய்
கவிதை கத்தரிக்காய்
கதை அவரைக்காய்
கட்டுரை வெண்டைக்காய்
இவையெதையும்
செய்தது நானில்லை
பின்னெப்படி
உப்புக்கும் சுவைக்கும்
நான் பொறுப்பு???
03. சில
உணர்வுகள்
வார்த்தைகள்
எப்போதும் உடனிருக்கும்
அன்பு
காதல்
துரோகம்
இடைவெளி
சாவு
கோபி
சம்பத்
நிழல்கள்
நவீனன் போல
Thursday, September 25, 2008
Tuesday, September 23, 2008
பறவைகள் -இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், முதுகெலும்புள்ள (முள்ளந்தண்டுள்ள) புள் என்றும் குரீஇ எனும் வகையைச் சேர்ந்த, முட்டையிடும் விலங்குள்
அந்த அலுவலக அறையின் சன்னலை ஒட்டிய என் இருக்கையே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அதன் சன்னல் கதவுகளுக்குப்பால் தாழ்ந்து வளைந்திருந்த மரக்கிளையில் பறைவைகள் வந்து அமர்வது முதலில் எனக்கு ஆச்சர்யமாய் இருக்கும். இந்த செல்போன் டவர் காடுகளில் இப்போதெல்லாம் பறவைகளைப்பபர்ப்பதே அபூர்வமாகிப்போனது. ஆனாலும் தினமும் நான் வந்து அமர்ந்ததும் அந்த தாழ்ந்த கிளைகளில் குறைந்தது ஐந்து அல்லது ஆறு பறவைகளாவது வந்து அமர்ந்து கொள்ளும்.வெகு நாள் கவனித்தலுக்குப்பின் தான் நான் உணர்ந்தேன் அத்தனையும் வெவ்வேறு விதமான பறவைகள் அதனாலேயே ஆர்வமானேன்.
கொஞ்சம் கொஞ்சமாய் நன்பர்களுடனான அரட்டை குறைந்தது . பொட்டி தட்டும் நேரம் போக மற்ற நேரங்களை ஆக்ரமித்துக்கொண்டிருந்த தமிழ்மணமும், பதிவுலகமும் மெல்ல மெல்ல கண்முன் தேய்ந்து மறைந்து பறவைகளைப்பற்றிய தேடல் தொடங்கியது.
இதனிடையில் அம்மாவின் சுகவீனம் என்னை இரண்டு வார கட்டாய விடுமுறையில் வீட்டில் இருக்கவைத்தது. இணையம் இல்லாத கணணிபோல் மனமெல்லாம் பறவைகளைக்காண மெல்ல ஏங்கியது. காலை வேளைக்கான மருந்துகளை கொடுத்துவிட்டு அவளை மெல்ல தூங்கச்செய்துவிட்டு பலகனிக்கு வந்து வெகுநாட்கள் முன்பு விட்டுப்போன புத்தகத்தை வாசிக்கத்துவங்கியபொழுதில் தான் கவனித்தேன் எதிர்வீட்டு பலகனியில் அமர்ந்திருந்த அந்தப்பறவைகளை. புரண்டு வரும் வெள்ளி அலையென ஓட்டமாய் ஓடிப்போய் அம்மாவிடம் சொன்னேன் அம்மா அந்தப்பறவைகளைப்பார் என அவள் என்னைத்தான் பார்த்தாள் வித்யாசமாய்.
பின்னெப்போதும் கூடு திரும்பும் வேளைவரை சில பறவைகள் என்னோடு இருப்பதையும். சாலைகளில் வாகனக்கூட்டங்களுக்கு நடுவிலும் பறவைகள் கண்களுக்கு தனித்து தெரிவதையும் உணரத்துவங்கினேன்.
மொட்டை மாடியில் பறவைகளுக்கென நீர் கிண்ணங்கள் வைத்தாலும் வராத பறவைகள் இப்போதெல்லாம் என்னோடு நெருங்கிவந்து சம்பாஷிக்கத்துவங்கியது.
அப்போது சொன்னது ஒரு பறவை உன்னால் பறக்க முடியுமென, நகைத்து திரும்பிய நான் சொன்னேன் உன்போல் நானொன்றும் பறவையல்ல மனிதவர்க்கம் என்று. மீண்டும் சொன்னது அந்தப்பறவை உன் பூர்வீகம் பறவைதான் உனக்கும் இறக்கைகள் உண்டு உன் தோள்களுக்கு கீழே கூர்ந்து பாரென்றது. பயந்து போன நான் சன்னலை மூடிவிட்டு படுக்கைக்கு வந்தேன்.
ஆனாலும் ஆர்வம் யாரை விட்டது, மெல்ல உடைவிலக்கி தடவிப்பார்க்கையில் மெலிதாய் விரிந்தது அந்த சவ்வுப்படலம். திகிலில் ஓவெனக்கத்தி ஓய்ந்தேன். சன்னல் திறந்து பறவை தேட இப்போது புரிந்ததா நீ எங்கள் கூட்டமென்று ஒரு பறவைகூறும் மொழியுணர்ந்தேன். வடிவங்களற்ற வார்த்தைகளற்ற மொழியும் அன்று முதல் புரியலாயிற்று.
என் வீடே எனக்கு அந்நியமாயனது. எனக்கான இடம் இதுவெல்ல என ஒவ்வோரு நாளும் ஒதுங்கிப்போனேன். உணவும் பழக்கமும் மாறிப்போனது, வடிவோடு கூடிய எந்த மொழிகளும் செவியில் மரத்துப்போனது.
என்னவர் என்னை எங்கோ கட்டிடக்காட்டுக்குள்ளும், இயந்திரக்குப்பைகளுக்குள் அழைத்துச்சென்றார். ஏதேதோ மனிதர்கள் எதையெதையோ கேட்டனர், சோதனை சாலைகளில் என் ரத்தமும் மலமும் சோதிக்கப்பட்டது ஆனாலும் என்னுள் ஏதும் மாற்றமில்லை
எங்கு சென்றாலும் என் கூட்டத்தை தேடத்துவங்கினேன் அவைகளும் என்னோடு இடைவிடாது தொடர்பிலிருந்தது.
வசந்த காலம் முடியப்போகிறதென்றும் வேறு நீர்நிலை தேடிச்செல்லவேண்டும் என்றும் என்னோடு முடிவெடுத்து சொன்ன நாள், நான் என் தோள்களுக்கு கீழே இருந்த இறக்கைகளை விரித்து அந்த கட்டிடத்தின் 11 வது மாடியில் இருந்து பறந்து போனேன் மிகவும் சந்தோஷமாய் ஆனாலும் கட்டிடத்தின் கீழே மட்டும் இரத்தச்சகதியாய் யாரோவும் கூடவே அழுகையும் புலம்பலுமாய் ஒரு கூட்டமும்….
Wednesday, August 20, 2008
இளம் பிராயத்தின் மொழி
பேசும் மொழியின் பல சாத்தியக்கூறுகளை நமக்கு முன் கடை பரப்பிச்சென்றதான இளம் பருவங்கள் இப்போதைய நகரத்து இளம் தலை முறைகளுக்கு ஆட்பட்டுள்ளதா என்பது மிகப்பெரிய கேள்வி.
மொழி என்பதனை சம்பாஷானைகளுக்குண்டான கருவி என்று எடுத்துக்கொண்டால், உடல் மொழியும், அந்நிய பாஷைகளும் அதனதன் ஆதிக்கத்தை இளசுகளிடையே பதித்து வைத்திருந்தாலும் நாம் சிறு வயதில் கிராமப்புறங்களின் குளக்கரைகளில், தண்ணீர் தொட்டி அருகில், கோவில் வாசல்களில், பந்தடிகளில், பேசித்திரிந்த தமிழ் மொழியின் பல் வேறு பட்ட சாத்தியங்களை இவர்கள் அறிந்திருக்கவில்லைதான். அதற்கான ஆர்வங்கள் கூட அற்று இருப்பதும் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய அவலம்.
சிறு வயதில் பேசிப்பழகிய சில தமிழ் மொழியின் வடிவங்கள்.
லானா பஷை
நீ எங்க போற
நில் நீ எல் எங்க பொல் போற
நான் உன் கூட வரேன்
நல் நான் உல் உன் குல் கூட வல் வரேன்
அந்தப் புத்தகம் படித்தாயா
அல் அந்தப் புல் புத்தகம் பல் படித்தாயா
இது போன்ற வார்த்தை பிரயோகங்களை யார் உருவாக்கினார்கள், எங்களுக்கு கற்றுத்தந்தது யார், இன்று வரை யோசித்ததில்லை ஆனால் இப்போது கார்டூனும் நாட்ஜியோவும் பார்க்க சிறு பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கத்தேவையில்லாதது போலவே இது நமக்கு வழிவந்துள்ளது.
கானா பாஷை
நீ எங்க போற
கநீ கஎகங்கக கபோகற
நான் உன் கூட வரேன்
கநாகன் கஉகன் ககூகட கவகரேகன்
அந்தப் புத்தகம் படித்தாயா
கஅகந்கதகப் கபுகத்கதகககம் கபகடிகத்கதாகயா
மிக வேகமாக வந்து விழக்கூடிய இந்தச்சொற்கள் தரும் இன்பம் அன்றும் இன்றும் விவரிக்க முடியாததாகவே இருக்கிறது.
இது போன்ற மற்றுமொரு வழக்கமும் இருந்தது
திருப்பி
நீ எங்க போற
றபோ கங்எ நீ / நீ கங்எ றபோ
நான் உன் கூட வரேன்
ன்ரேவ டகூ ன்உ ன்நா / ன்நா ன்உ டகூ ன்ரேவ
அந்தப் புத்தகம் படித்தாயா
யாதாத்டிப ம்கதத்பு ப்தந்அ / ப்தந்அ ம்கதத்பு யாதாத்டிப
இப்படி பேசுவது பெரும்பாலும் ஆண் பெண் இரு பாலருக்கும் பொதுவாகவே இருந்தாலும், பெரும்பாலும் பெண்குழந்தைகளே இதை அதிகம் பிரயோகித்து பார்த்திருக்கிறோம். என் வீட்டில் இருவருமே பெண் பிள்ளைகள் என்ற காரணத்தில் ஆண்கள் உலகமும் அவர்கள் பிரத்யோக பாஷயும் எங்களுக்கு மிகவும் அந்நியமாகவே இருந்து வந்ததும் கூட ஒரு காரணமாயிருக்கலாம். இந்த வியப்பு இன்னும் என் இரு மகன்களின் சம்பாஷனையே கேட்க கேட்க விரிவடைந்து கொண்டே செல்கிறது. இப்போதைய பெண் பிள்ளைகளின் பேச்சும் இப்படித்தான் இருக்குமோ இதை அறிந்து கொள்வதற்காகான சாத்தியக்கூறும் இல்லாமல் போனதில் வருத்தம் தான்.
இப்போது இது போன்ற வார்த்தை பிரயோகங்கள் இன்னும் நம்முள் வாழ்ந்து கொண்டிருக்கிறதா, வார்த்தைகளை வேகமாக கையாளும் சாகித்யத்தை நாம் இன்னும் கொண்டிருக்கிறோமா என்று சோதித்துப்பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றுகிறது. அதற்காக நம் சிறு வயது தோழி தோழியர்களை சந்தித்து உரையாடவேண்டும் என்று ஊர் ஆசைகளையும் தோற்றுவிக்கிறது. பிறந்த கிராமங்களை குறித்த காதலுக்கு வெவ்வேறு வடிவங்கள்.
இந்த சிந்தனை என்னுள் எழும்ப காரணமான எஸ்.ராவின் கதைக்கான சுட்டி. இல்மொழி
Saturday, August 16, 2008
கதை சொல்லிக்கு புரிந்த கதை

இரண்டு பேரை மட்டும் வைத்து கதை சொல்ல முடியுமா, முடியும் என்று தான் தோன்றுகிறது ஏனெனில் என்னுடைய இந்த கதையில் சியாமளியும் அவள் அம்மாவும் மட்டும் தான் கதை மாந்தர்கள். அவள் கணவனோ, இல்லை குழந்தைகளை கதைக்குள் வரத்தேவையில்லை என முடிவு செய்திருக்கிறேன்.. கதை சொல்லியின் முடிவுகளாலாயே எல்லா கதைகளும் கட்டமைக்கப்படுகின்றனவா இல்லை படைப்பு அவனை மீறி படைத்துக்கொள்கிறதா முடிவை முடிவில் பார்த்துக்கொள்ளலாம். இப்போது கதைக்குள் செல்வோம்.
எல்லோராலும் மாதத்தில் எந்தெந்த தேதியை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளமுடியும், 1ம் தேதி, சம்பளநாள் என்பதால், 7 தேதி வேலைக்காரி, பேப்பர்க்காரன் பில் கொடுக்க வேண்டும் என்பதால், 10ம் தேதி ஆவின் பாலுக்கு பணம் கொடுத்து கூப்பன் வாங்க வேண்டும் என்பதால், 15ம் தேதி மின்சார கட்டணம் கட்ட வேண்டும் என்பதால், அப்புறம் ஒரு பத்து நாட்கள் விச்ராந்தியாக இருந்து விட்டு 25 தேதிக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாகத் தீர்ந்து போகும் மளிகை சாமன்களை வாங்கி நிரப்ப வேண்டியிருப்பதால் அடுத்த 5 நாட்களும் மொத்தமாக மாத கடைசி என்ற ஞாபகம் இருக்கும். 30 அல்லது 31ம் தேதி மாதாந்திர இலக்கை கணக்கு பார்த்து முடிக்க வேண்டியிருப்பதால் ஞாபகம் இருக்கும். ஆனால் சியாமளிக்கு 13ம் தேதியும் ஞாபகம் இருக்க வேண்டும், ஏனெனில் அவள் அம்மாவை மருத்துவரிடம் அழைத்துச்செல்லவேண்டிய நாள் அது. அன்று அவளுக்கு இரண்டே இரண்டு சாய்ஸ்தான் ஒன்று ஞாபகமாக அம்மாவை மருத்துவரிடம் அழைத்துப் போய்விட்டு அம்மா மருந்து மாத்திரை வாங்கி வரும் வரை மருந்து கடை வாசலில் கால் மாற்றி நின்று அழைத்து வரவேண்டும். இல்லையேல் சுத்தமாக மறந்து விட்டு அலுவலகத்தில் இருந்து தாமதாக வரவேண்டும், இத்யாதி இத்யாதி பிரச்சனைகளால் வரும் போதே மருத்துவரிடம் டோக்கன் எடுத்து வைக்க மறந்து வந்து விட்டு அதனால மருத்துவரிடம் பத்து மணி வரைக்கும் காத்திருக்க வேண்டுமே என்ற கடுப்பு தரும் பயத்தினால்
மருத்துவரிடம் போகமல் இருக்க ஏதோதோ உபாயம் செய்யவேண்டும். இதில் பிரச்சனை என்னவென்றால் இரண்டாவது பிரயோகத்தினால் கூடுதலாக அம்மாவின் அதிருப்திக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதன் விளைவுகளைச்சொல்வதிற்கில்லை இந்தக்கதை.
இப்படி மாசா மாசாம் மருத்துவரிடம் காட்டி மருந்து வாங்கிவந்தாலும் ஒவ்வொரு மாதமும் சில இடைப்பட்ட ஆஸ்பத்திரி தேவைகளும் இருக்கும், ஆனால் ஒன்றுதான் சியாமளிக்கு புரிந்து கொள்ள முடியாததாய் இருந்தது. அவ்வப்போது அம்மா மருந்து கடைக்குச்சென்று சில மருந்துகளை திருப்பிக்கொடுத்தும் சில மருந்துகளை அதற்குப்பதிலாய் வாங்கிக்கொள்வதும் எதற்கென்று அவளுக்கு புரிந்ததேயில்லை. மருத்துவரிடம் காட்டி அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை வாங்கிய பின் எதற்காக அதை திருப்பிக்கொடுக்க வேண்டும்??? வேறு மாத்திரைகளை ஏன் வாங்க வேண்டு, அவள் அம்மாவிடம் கேட்டதற்கு அந்த டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்து எதுவும் எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை அதனால் நான் பழைய டாக்டர் (சுமார் 10 வருடங்களுக்கு முந்தி) கொடுத்த மாத்திரையையே வாங்கிக்கொண்டேன் என்பாள். ஆனால் அடுத்த 13ம் தேதி மருத்துவரை சென்று பார்த்தேயாகவேண்டும்… இது எதற்கு? அவர் மேல், அவர் தரும் மருந்தின் மேல் நம்பிக்கை இல்லையென்றால் எதற்கு அவரிடம் செல்ல வேண்டும்?. ஆனால் அம்மாவோ உற்சாகமாக சில புதிய மாத்திரை பட்டைகளை வாங்கிக்கொண்டு வருவாள். 3 அல்லது 4 நாட்களுக்கு பிரச்சனை ஏதும் இல்லாமல் இருக்கும் பிறகு வழக்கம் போல அந்த டாக்டர் மருந்து எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை நான் ஒரு மாதத்திற்கு மாத்திரை வாங்கி வந்துவிட்டேன் என்று சொல்லி மாத்திரை மாற்றவேண்டிய படலம் ஆரம்பிக்கும். இதன் ஆணிவேர் என்ன என்பது சியாமளிக்கு புரியாமலே பல சமயம் குழந்தைகளிடம் அந்தக் கோபத்தை காமித்திருக்கிறாள். (இதுல மாத்திரையை கொஞ்ச நாளைக்கு மாத்திரம் வாங்கிட்டு அது ஒத்து வந்தா மீதம் வாங்கிக்கலாமே, வேற டாக்டரைப்பார்க்கலாமா, (எந்த டாக்டர் கிட்ட போனாலும் இது தான் கதைங்கறது வேற விஷயம்) போன்ற ஆலோசனைகளை எல்லாம் சியாமளியால் சொல்ல முடியாது சொன்னால் என்னால உன்னை இன்னோருதரம் தொந்தரவு பண்ணமுடியாது, நீயே பாவம் தினைக்கும் அலையறே அதனால நான் ஒட்டு மொத்தமா வாங்கிக்கறேன் இந்த தடவை ஒன்னும் பண்ணாதுன்னு டாக்டரே சொல்லியிருக்கார் போன்ற சமாதானமோ இல்லை வேறு சில எதிர்வினைகளோ வரும் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியதில்லை)
இந்த சூழ்நிலையில் தான் கதை சொல்லி அவளை சந்தித்தான் பிரச்சனையின் அடிவேரைத்தேடும் ஆர்வம் அவனுக்கும் வந்தது இலக்கியவாதியாயிற்றே!!!
மண்டையை முட்டி மோதி விடை காண எல்லா முயற்சிகளும் செய்துகொண்டிருந்தான் கிட்டத்தட்ட ஒரு மாதமாகியும் ஒன்றும் புலப்பட்டாதியில்லை। இதில் மற்றுமொறு 13ம் வந்து விட்டு போனது। வேறு கதையோ, கவிதையோ எழுதும் எந்த முயற்சியையும் செய்ய விடாது சதா இதுவே அவன் மனதுக்குள் குடைந்து கொண்டிருந்தது। அப்போதுதான் அவன்
இரு குழந்தைகளுக்கும் இடையேயான் சம்பாஷனையை கேட்க நேர்ந்தது
பையன் - ஏண்டி அப்பாகிட்ட நேத்திக்கு தானே பென்சில் வாங்கின இன்னக்கே எல்லாத்தியும் சீவிட்டு இப்ப பென்சில் இல்லன்னா என்ன அர்த்தம்
பெண் - போடா எனக்கிந்த பென்சில் பிடிக்கல ஒரே பட்டையா எழுதுது, அதனாலதான் வேற பென்சில் வாங்கனும்.
பையன் - ஏண்டி போன தடவை இதே பென்சில் தானே வாங்கினே நல்லாருக்குன்னு சொன்னியே.
பெண் - ஆமாம் இந்த தடவை நல்லாயில்ல அதுக்கென்ன இப்போ,
பையன் - ஏய் நீ ஏதோ திருட்டுத்தனம் பண்ற என்ன சொல்லிடு இல்லேன்னா இன்னிக்கு நாட்ஜியோ பார்க்கும் போது டீவியை அணைச்சுடுவேன்
பெண் - டேய் டேய் வேண்டாண்டா, பின்ன என்ன அப்பா உனக்கு மட்டும் இங் காலியாக காலியாக பேனா வாங்கி கொடுத்துட்டே இருக்காங்க, நான் வேற பென்சில் கேக்கலேன்னா இது முடியறமட்டும் எனக்கு வாங்கித்தரமாட்டாங்க நீ மத்திரம் புதுசு புதுசா பேனா வாங்கிப்பயாக்கும் அப்பா கூட இதுக்காக வண்டில உக்காந்து கடைக்கு போயிட்டேயிருப்பயாக்கும் நானும் அப்பா கூட கடைக்கு போகனும் அதாண்டா.. பிளீஸ்டா அப்பா கிட்ட சொல்லிடாதடா.
கதை சொல்லிக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது… என்ன உங்களுக்கும் புரிஞ்சுதா கொஞ்சம் சியாமளிக்கும் புரிய வையுங்களேன்.
(குறிப்பு, கதை சொல்லி நினைத்தபடி இரண்டு பேரை மட்டும் வைத்து கதை முடியவில்லை, கடைசியில் அவனும் அவன் பிள்ளைகளும் கூட அவனறியாமலே பாத்திரமாகிப்போனார்கள்… இதனால் யாவருக்கும் சொல்லவருவது என்ன வென்றால்……..)

