
அப்பா என் ஞாபக அடுக்குகளில் என்றுமே படர்ந்திருக்கும் ஓர் இனிமயான உறவு। சூரியனின் கதிர்கள் யாருடைய உத்தரவும் இல்லாமல் நம் பூட்டியிருக்கும் புத்தக அறைக்குள் நுழைவதுபோல் இந்த மூன்றெழுத்து வார்த்தை என்னுள் எப்போதும் திறந்து விடும் பல ஞாபகக்கதவுகளை என் உணர்வுகளின் அனுமதியின்று.
இரண்டும் பெண்களென்ற போது பெண்ணென்ற பேதமற்று என்னை எனக்கான எந்த ஒரு சுதந்திரத்திலும் இருந்து விலக்காது ஊக்குவித்தவர். என்னை பொது நூலகத்திற்கு கூட்டிச்செல்வார் அவர் படிப்பதோ தினசரிகள் நானோ அங்குள்ள சிறுவர்/பெரியவர் புத்தகங்களை முழுவதும் மேய்ந்து வரும் வரை மிகப்பொறுமயாக காத்திருப்பார். ஒரு நாள் கூட காத்திருத்தலுக்காக அலுத்துக்கொண்டதே இல்லை. என் சிறிய கிராமத்தில் 8 வயதுப்பெண் சைக்கிள் ஓட்டியதென்றால் அது நானாகத்தான் இருக்கமுடியும். அதுவும் அப்பாவின் சைக்கிளில் குரங்குப்பெடல் கவலையே படாமல் கடைத்தெரு வரைக்கும் சுற்றத்தருவார். (இது நினைவுக்கு வந்த நாளிலிருந்து தான் நான் என் மகனை நம்பி என் ஹோண்டா ஆக்டிவாவை குடுக்க ஆரம்பித்தேன்). பால்யம் தாண்டி வளர்ந்த பெண்ணாகிய போது கூட நானும் அப்பாவும் ஒன்றாகவே கடைத்தெருவில் சுற்றுவோம். மாரியப்பன் கடை அல்வாவும் அதன் தித்திப்பை சரி பண்ண கொஞ்சமே கொஞ்சம் காரபூந்தியோ மிக்சரோ கடை வாசலிலேயே சுடச்சுட அப்பாவும் பெண்ணுமாய் நின்றும் சாப்பிட்டவர்கள் நாங்களாய்த்தானிருப்போம்.
என் அம்மாவின் எதிர்ப்பையும் மீறி “நீ தைரியமா அடிச்சிட்டு வா நான் பார்த்துக்கறேன் எவன் ஒன்னைக்குத்தம் சொல்றான்னு” என்று எனக்கு பிரச்சனையான நேரங்களில் அறிவுரை?? கூறுவார். கல்யாணம் வரை எந்த ஒரு விஷயத்திலும் எனக்கும் அவர்கும் முரண் வந்ததே இல்லை, நானே தேர்ந்தெடுத்த வரனில் அவர்க்கு சிறிதே அதிர்ச்சி இருந்தாலும் பிறகு தன்னை சமாதனம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பிறகும் அவர் உடல்நிலை காரணமாக அவரை தனித்து விடாதது மட்டுமே நான் அவருக்கென செய்ததாயிருக்கும். சகோதரிகளுக்குள் எந்த வேறு பாட்டையும் காண்பித்ததில்லை என்றாலும் நான் எப்போதுமே அப்பா செல்லம். அவர் இருந்த வரை நான் குழந்தையாகவே இருந்து வந்தேன் என்று சொன்னால் அது வெறும் வாய்வார்த்தை இல்லை. என் வீட்டுக்கதவின் சாவி எது? என் பையனின் சைக்கிள் பூட்டும் பூட்டு எது? முன் வாசல் கேட்டின் சாவி எது? இப்படி என் வீட்டின் பாதுகாப்பிற்கான எந்த முஸ்தீபுகளும் அவர் இருந்த வரை நான் அறியாதது.
இன்று நான் என் புதிய வீட்டிற்கு சென்றிருக்கும் வேளையில் எத்தனையோ விஷயங்களை அப்பா மட்டும் இருந்திருந்தால் என்று எண்ணுவதை தவிர்க்க முடியாத அளவிற்கு அவர் தனக்கான தடயங்களை எங்களோடே விட்டுச்சென்றிருக்கிறார்.
அப்பா .. இவர் பற்றி எழுத என்னில் ஆயிரம் கதைகளுண்டு. அப்பாவின் நினைவுகளை மேலதிகமாய் கிளர்த்தெழுப்பும் இன்னுமொரு நாள் வரும்வரை காத்திருக்கட்டும் அந்தக்கதைகள்
இரண்டும் பெண்களென்ற போது பெண்ணென்ற பேதமற்று என்னை எனக்கான எந்த ஒரு சுதந்திரத்திலும் இருந்து விலக்காது ஊக்குவித்தவர். என்னை பொது நூலகத்திற்கு கூட்டிச்செல்வார் அவர் படிப்பதோ தினசரிகள் நானோ அங்குள்ள சிறுவர்/பெரியவர் புத்தகங்களை முழுவதும் மேய்ந்து வரும் வரை மிகப்பொறுமயாக காத்திருப்பார். ஒரு நாள் கூட காத்திருத்தலுக்காக அலுத்துக்கொண்டதே இல்லை. என் சிறிய கிராமத்தில் 8 வயதுப்பெண் சைக்கிள் ஓட்டியதென்றால் அது நானாகத்தான் இருக்கமுடியும். அதுவும் அப்பாவின் சைக்கிளில் குரங்குப்பெடல் கவலையே படாமல் கடைத்தெரு வரைக்கும் சுற்றத்தருவார். (இது நினைவுக்கு வந்த நாளிலிருந்து தான் நான் என் மகனை நம்பி என் ஹோண்டா ஆக்டிவாவை குடுக்க ஆரம்பித்தேன்). பால்யம் தாண்டி வளர்ந்த பெண்ணாகிய போது கூட நானும் அப்பாவும் ஒன்றாகவே கடைத்தெருவில் சுற்றுவோம். மாரியப்பன் கடை அல்வாவும் அதன் தித்திப்பை சரி பண்ண கொஞ்சமே கொஞ்சம் காரபூந்தியோ மிக்சரோ கடை வாசலிலேயே சுடச்சுட அப்பாவும் பெண்ணுமாய் நின்றும் சாப்பிட்டவர்கள் நாங்களாய்த்தானிருப்போம்.
என் அம்மாவின் எதிர்ப்பையும் மீறி “நீ தைரியமா அடிச்சிட்டு வா நான் பார்த்துக்கறேன் எவன் ஒன்னைக்குத்தம் சொல்றான்னு” என்று எனக்கு பிரச்சனையான நேரங்களில் அறிவுரை?? கூறுவார். கல்யாணம் வரை எந்த ஒரு விஷயத்திலும் எனக்கும் அவர்கும் முரண் வந்ததே இல்லை, நானே தேர்ந்தெடுத்த வரனில் அவர்க்கு சிறிதே அதிர்ச்சி இருந்தாலும் பிறகு தன்னை சமாதனம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பிறகும் அவர் உடல்நிலை காரணமாக அவரை தனித்து விடாதது மட்டுமே நான் அவருக்கென செய்ததாயிருக்கும். சகோதரிகளுக்குள் எந்த வேறு பாட்டையும் காண்பித்ததில்லை என்றாலும் நான் எப்போதுமே அப்பா செல்லம். அவர் இருந்த வரை நான் குழந்தையாகவே இருந்து வந்தேன் என்று சொன்னால் அது வெறும் வாய்வார்த்தை இல்லை. என் வீட்டுக்கதவின் சாவி எது? என் பையனின் சைக்கிள் பூட்டும் பூட்டு எது? முன் வாசல் கேட்டின் சாவி எது? இப்படி என் வீட்டின் பாதுகாப்பிற்கான எந்த முஸ்தீபுகளும் அவர் இருந்த வரை நான் அறியாதது.
இன்று நான் என் புதிய வீட்டிற்கு சென்றிருக்கும் வேளையில் எத்தனையோ விஷயங்களை அப்பா மட்டும் இருந்திருந்தால் என்று எண்ணுவதை தவிர்க்க முடியாத அளவிற்கு அவர் தனக்கான தடயங்களை எங்களோடே விட்டுச்சென்றிருக்கிறார்.
அப்பா .. இவர் பற்றி எழுத என்னில் ஆயிரம் கதைகளுண்டு. அப்பாவின் நினைவுகளை மேலதிகமாய் கிளர்த்தெழுப்பும் இன்னுமொரு நாள் வரும்வரை காத்திருக்கட்டும் அந்தக்கதைகள்