சிற்றாடை இடை உடுத்திய சின்னஞ்சிறு பெண்
குழந்தைகளை இப்போதெல்லாம் கண்களால் காண்பதும் அரிது என்பது நாமெல்லாம் அறிந்த
ஒன்றே. இனி கற்பனையில் கூட மனதில் காண முடியாது என்ற நிலைமைக்கு நாம்
தள்ளப்பட்டுக்கொண்டு இருக்கிறோம் என்பது பத பதைப்பிற்கு உள்ளாக்குகிறது.
இப்போதிருக்கும் பெண்களில் மிகப்பெரும் சதவிகிதத்தினர்
சுடிதார் போன்ற உடைகளையே மிகவும் சௌகரியமாக
எண்ணும் நிலை உள்ளது. இதற்கான காரணமாக நாம் பலவற்றைச் சொன்னாலும் அடிப்படையான
காரணம் பள்ளி கல்லூரி காலங்களில் அதுவே சீருடையாக மாறியதும் ஒரு காரணம் என்பது என்
எண்ணம். தொடர்ந்து ஒரே விதமான சௌகர்யமான விதத்தில் உடை அணிந்தவர்களுக்கு கொஞ்சம்
அதிக கவனம் தேவைப்படும் வேறு மாதிரியான உடைக்கு (பாவாடை தாவணி, புடவை) மாறுவதில்
சிரமம் கண்டிபாய் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இந்த அடிப்படை காரணத்தினாலேயே முப்பது முப்பத்தைந்து வயதிற்கு கீழ் உள்ள இப்போதைய
பெண்கள் பெரும்பாலும் புடவை அணியும் வழக்கத்தை தவிர்த்து வருகின்றனர்.
இப்போதைய நவீன நகர்புறப் பள்ளிகள் நம்மை இன்னும்
ஒரு படி பின்னுக்கு அல்லது முன்னுக்கு தள்ளுகிறார்கள். இது போன்ற பள்ளிகளில் இப்போதெல்லாம் மூன்றாவது
வகுப்பு வரை ஆண் பிள்ளைகளைப் போல அரை கால் சராயும் காலர் வைத்த சட்டையுமே சீருடையாக பெண் குழந்தைகளுக்கும் பின்பற்றப்
படுகிறது. பின் மேல் வகுப்பு செல்லும் பொது அது முழு கால் சராயாக மாறுகிறது.
இந்தக்குழந்தைகள் இப்போதே கூட பட்டுப்பாவாடை
சட்டை, ப்ராக், குட்டை பாவாடை போன்ற உடைகளை விரும்புவதில்லை. விசேஷ வீடுகளுக்கோ,
கோவில்களுக்கோ செல்வதற்கு கூட அவர்கள் ஷார்ட்ஸ், டி ஷர்ட், பேன்ட்ஸ், போன்ற உடைகளை
அணிவதையே விரும்புவதாக அநேக பெற்றோர்கள் கூற கேட்கிறேன். இந்த நிலை தொடர்ந்தால்
இன்று பாவாடை தாவணி, புடவைக்கு நேர்ந்தது நாளை சுடிதாருக்கும் நேரும் என்பது என்
எண்ணம்.
இது வெறும் உடை சம்பந்தமானது மட்டுமல்ல
பெண்களின் நடை, மனம் குணம் மற்றும் அவர்களின் நளினம் சார்ந்ததும் கூட. நானும் கூட
எல்லாவிதமான உடைகளையும் அணியும் வழக்கம் உள்ளவள் தான். அதனாலேயே உடை தரும் உள்ளம்
மற்றும் உடல்மொழி மாற்றங்களை வெகு தெளிவாக
என்னால் யூகிக்க முடிகிறது.
இந்த பதிவை படித்து விட்டு என்னை பத்தாம் பசலியாகவோ
இல்லை கட்டுப்பெட்டியாகவோ நினைக்கத் தோன்றினால் அவரவர் ஆழ் மனைதை
கேட்டுப்பாருங்கள் இந்தக் கவலை உண்மை எனச்
சொல்வீர்கள்.
களவையும் கற்று மறக்கலாம் ஆனால் களவு மட்டுமே
கற்கலாகதல்லாவா? பெண்மையும் அதன் நளினமும் தொலைந்து போவது ஏற்புடையது தானா? நாம்
என்ன செய்யப்போகிறோம்??