Tuesday, November 17, 2009

பெண்பால் கவிதைகள் - 3

உள்ளே கனன்று வரும்
பெரு நெருப்பை
அவ்வப்போது விசிறிவிடும்
ஏதோ ஒரு நிகழ்வின்
அடையாளம் தெரியாத
அல்லது
அறிந்து கொள்ள விரும்பாத
அறியாமையின் கணத்தில்
வாழ்கிறது
"பெண்ணென்னும் மாயப்பிசாசு"


**********************


நீவி உடுத்தி
அதரச்சாயமிட்டு
அடர்ந்து
மையெழுதியோ எழுதாமலோ
கண்ணாடி முன்நின்று
அழகிதானடி நீயென
ஒரு முறை பலமுறை
தனக்குள் சொல்லி
பின்
படர்கையில் யாரேனும்
பகர்கையில்
விழியால் செவியுறும்
"பெண்மையின் அழகு"


Saturday, November 14, 2009

கொற்றவை - ஒரு பகிர்தல் - பகுதி 1

"பரலோகத்திலிருக்கும் எங்கள் பிதாவே எங்கள் பாவங்களை மன்னித்தருள்வீராக"
சொற்களில் உறைந்திருக்கும் இறைஞ்சுதல்கள் வெளிப்படுத்தும் பாவனைகள் கண்கூடாக இப்பிரயோகத்தில் காணக்கிடைப்பது போல்
உள்ளே உணர்ந்து உறைந்து கிடைக்கும் எண்ணங்களை முழுவதும் காட்சிப்படுத்தும் ஆவலோடுதான் இந்தப்பதிவை
எழுதத்துவங்கியுள்ளேன்.

கடந்த வருட ஆரம்பத்தின் புத்தகத்திருவிழாவில் வாங்கிய கொற்றவையை உடனே படிக்க வேண்டும் என்ற ஆவலற்று அடுத்து இதைப்படிக்கலாமா அதைப்படிக்கலாமா என்ற எந்த அலம்பலகளும் இல்லது ஆர அமர இருந்த வெற்று மனநிலையின் ஒரு பொழுதில் வாசிக்கத்துவங்கினேன்

பொதுவாக எந்த முன்மதிப்பீடுகளுமற்று படைப்புகளை அணுகுவதே மிகச்சிறந்த வழியென்று அறிந்திருந்தும், பல சமயம் உணர்ந்திருந்தும், ஏனோ "கொற்றவை" யைக்குறித்த நன்பர்களின் விமர்சனங்களும், பொதுவில் எனக்கு அறியக்கிடைத்திருந்த அந்த புத்தகத்தின் மொழி வழக்கு பற்றிய எச்சரிக்கையும் என்னுள் சிறிய இனந்தெரியாத எதிர்பார்ப்புக் கொப்புளங்களை உருவாக்கித்தான் விட்டிருந்தது। கூடவே அப்படி என்ன சொல்லிவிட முடியும் சிலம்பைப்பற்றி? எத்தனை புத்தகங்களைப்படித்திருப்போம், மிகப்பிரியமான என் தமிழாசிரியர்கள் பாடத்திட்டத்தையும் தாண்டி எங்கள் தனிப்பட்ட விருப்பத்திற்கென விதம்விதாமய் எத்தனை சொல்லியிருக்கிறார்கள் இதைத்தாண்டி என்ன இருக்கப்போகிறது? என்ற எண்ணத்தோடும், ஏற்கனவே பார்த்திருந்த ஒரு திரைப்படத்தை மீண்டும் பார்க்கும் ஒரு மனோநிலையோடும் தான் வாசிக்க ஆரம்பித்தேன்

ஆனால் நடந்தது முற்றிலும் வேறுபட்ட அனுபவம். எதைப்பற்றியும் சிந்திக்கவொட்டாது படிக்கும் புத்தகத்தைப்பற்றி மட்டுமே காதலோடு யோசித்த நாட்களுண்டு, இதை இந்தக்கணம் சொல்லியே ஆகவேண்டும் என்ற தவிப்போடு பகிர்ந்து கொண்ட புத்தகங்களுண்டு, மனிதத்தின் மேன்மைகளை மென்மையாய் வருடி விட்டு கவித்துவமான சிந்தனைகளை கிளர்ந்தெழுத்திய புத்தகங்களுண்டு, இப்படிக்கூட சில சாதராண நடைமுறைகளை வெகு சுவாரசியமாக வடிக்கமுடியுமென்று கற்றுக்கொடுத்த புத்தகங்களுண்டு, சில புத்தகங்களை படித்து முடித்ததும் செய்யவேண்டியது இதுவென சில பட்டியல்களை இட வைத்த எழுத்துக்களுண்டு, சில புத்தகங்கள் அடுத்து எந்த புத்தகத்தையும் உடனே படிக்கவொட்டாது அசைபோட வைத்ததுண்டு.. ஆனால் இந்தபுத்தகம் என்ன செய்தது...

சொல்வதற்காகாத்தான் இந்த ஆரம்பம்...

ஏதேனும் எழுதி நாட்களாகிறது
பிரசவத்திற்கென
சுமந்திருக்கும் கருவென
உள்ளே ஊறிக்கிடக்கிறது
வார்த்தைகள்
....

மீண்டும் வருகிறேன்...